“என்ன நடந்துச்சுன்னு சொல்லாம இப்படி ஏன் அப்செட்டா இருக்கீங்க?” என்று ஸ்வேதா கேட்க, புகழ் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
ஆர்யன் வீட்டில் இருந்து கிளம்பி தன் வீட்டிற்கு வள்ளி தேவியும் புகழ் வேந்தனும் வந்து ஒரு மணி நேரம் தாண்டி இருந்தது. வள்ளிக்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக் கொண்டே இருக்க, புகழ் வேந்தனோ பேசும் மனநிலையே இன்றி அமர்ந்திருந்தான்.
“அதுக்குள்ள வந்துட்டீங்க? அண்ணே வீட்டுல விருந்தாடிட்டு நாலு நாள் கல்யாண வீட்டுல அக்கடானு உட்கார்ந்துட்டு தான் வருவீங்கனு நினச்சேன்?” என்றார் வந்ததும் நக்கலாய் சேகர்.
“ஒருவேளை உன் மருமகளையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தியா?” என்றும் கேட்க,
“இங்க பாருங்க! நானும் பேச கூடாது பேச கூடாதுன்னு அமைதியா போறேன். குட்ட குட்ட குனிஞ்சுட்டே இருப்பேன்னு நினைக்காதீங்க. மனுஷன் தான நீங்க? அங்க என்ன நடந்ததுன்னு தெரியுமா? அங்க பாருங்க என் பையன் எப்படி உட்கார்ந்து இருக்கான்னு!” என்று வேகமாய் கோபமாய் பேசினாலும் கண்களிலும் கண்ணீர் நிற்கவில்லை வள்ளி தேவிக்கு.
சேகர் அமைதியோடு சிந்தனையாய் இருக்க, “என்ன தான் த்த நடந்துச்சு? எதுக்காக இவர் இப்படி இருக்கார்? எனக்கு பயமா இருக்கு. நீங்களாவது சொல்லுங்களேன்!” என்றாள் ஸ்வேதா.
“குற்ற உணர்ச்சில கூனி குறுகி இருக்கவன் எப்படி இருப்பான்? இப்படி தான் இருப்பான். நீங்க பெரிய மனுஷன்னு வெளில சொல்லிக்காதீங்க. என் அண்ணனோட அவர் பையனும் தான் உங்களை விட ரொம்ப பெரிய மனுஷன்!” என்ற வள்ளியை சேகர் முறைக்க,
“உண்மை எல்லாம் கசக்க தான் செய்யும். வயசுல மட்டும் தான் நீங்க உயரம். ஆனா அங்க என் மருமகன் மனசளவுல உங்களை விட பல மடங்கு மேல போய்ட்டான்”.
“போதும் டி! ரொம்ப தான் அண்ணே, அண்ணே மகன்னு. விஷயத்தை சொல்லு. அப்படி என்ன பண்ணிட்டான்? மொத்த சொத்தையும் என் பேர்ல எழுதி தந்துட்டானா?” சேகர் எள்ளலாய் கேட்க,
“ஆமானு சொன்னா?” என்றவர் கேள்வியில் நம்ப முடியாத பார்வை அவர் பார்க்க,
“ஆமானு சொன்னா அவன் காலுக்கு கீழ தான் நீங்கனு ஏத்துக்குவீங்களா?” என்று கேட்கவும்
“என்னத்த சொல்றிங்க? நிஜமாவா சொல்றிங்க?” என்றாள் ஸ்வேதாவும் ஆச்சர்யத்தோடு சாத்தியமா எனும் அதிர்ச்சியோடும்.
“அது தான் நடந்தது. என் அம்மா மட்டும் இல்லைனா மொத்த சொத்தையும் இவர் கைக்கு குடுத்துட்டு ஆர்யா சாதாரணமா தான் இருந்திருப்பான். உன் மாமா என்னை எதிர்க்க ஆள் இல்லைனு ஊருக்குள்ள ஆட்டம் போட்ருப்பாரு!”
“அப்ப சொத்தை தரல அப்படி தான?” என்றார் அப்போதும் தனக்கு தேவையானது இல்லையோ எனும் பாங்கில்.
“சொத்து சொத்து சொத்து! எப்பவுமே அது மட்டும் தான் உங்களுக்கு முக்கியமா? எங்களை எல்லாம் நினச்சு கூடாது பார்க்க மாட்டிங்களா?” என்று கோபமாய் எழுந்திருந்தான் புகழ் வேந்தன்.
“ஒன்னும் தரலைனாலும் நல்லா பேச சொல்லி தான் அனுப்பி விட்ருக்கான் போல அந்த ஆளு!” என மேலும் மேலும் பேசிக் கொண்டிருந்தார் சேகர்.
“உங்களுக்காக தான டா இவ்வளவும்? இதையெல்லாம் நான் போகும் போது கொண்டு போகவா போறேன்? எல்லாம் உனக்காக தான? அந்த விஷ்வநாதனை நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு வர்றதை விட்டுட்டு என்னை வந்து கேட்டுட்டு இருக்க?” என்றார்.
“ப்ச்! நீங்கல்லாம் சொல்லி திருந்திறவங்க இல்லை” என்றவன் தான் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் இருந்து ஒரு பேப்பரை கொண்டு வந்து அவரருகில் எரிந்தான்.
“அம்மா சொன்ன மாதிரி ஆர்யா முழு ப்ரொப்பர்ட்டிஸையுமே என் பேர்ல எழுத சொல்லி தான் பாட்டிகிட்ட பேசினான். சத்தியமா நீங்க இங்க பேசின எதையுமே நான் சொல்லல. ஆனா அவன் எனக்காக பேசினான். அவன் அப்பாவை எதிர்த்து பேசினான்!”
“அதனால நீயும் உன் அப்பாவை எதிர்த்து பேசுற? அவனும் நீயும் ஒன்னா டா? அப்பன் பேச்சை கேட்காம எங்கிருந்தோ ஒன்னை இழுத்துட்டு….. “
“ப்பா…..!” என்றவனின் குரல் அறை முழுதும் கேட்க, சேகர் கொஞ்சம் திடுக்கிட்டுப் பார்க்க,
“வேணாம். இதுக்கு மேல அவன் பெர்சனல் விஷயத்துல நீங்க பேசாதீங்க. அதுக்கெல்லாம் நமக்கு தகுதி இல்ல. இல்ல பேசுவேன்னு சொன்னா நிச்சயம் நானும் ஒரு ஸ்டேஜ் மேல அமைதியா இருக்க மாட்டேன்!”
“என்ன செய்வேன்னு தானே பாக்குறீங்க? தனியா என் பொண்டாட்டியோட போயிட்டே இருப்பேன்!” என்றவனை மேலும் அதிர்ந்து பார்க்க,
“என் கல்யாணம் நீங்க பார்த்து நடத்தி வச்சதனால தான் இவ்வளவும் பேசுறீங்கன்னா அதுல இருக்குற உண்மைகள் உங்களுக்கு தெரியாதது தான் காரணம். தெரியாத வரைக்கும் தான் உங்களுக்கான மதிப்பும் கூட!” என்றவன் பேச்சு அவருக்கு புரியவே இல்லை.
“மாமாக்கும் சொத்தை பிரிக்குறதுல உடன்பாடு இல்ல. கேஸ் போடுவேன்னு கூட சொல்லி பார்த்துட்டாங்க. ஆனா ஆர்யா! உங்களுக்கு நான் ஒரே பையன் தானே? இருக்குறது வச்சு உட்கார்ந்து சாப்பிட்டாலே என் பேரன் பேத்திங்க வரை சாப்பிடலாம் தானே? அப்ப எனக்கு அது போதும். இனி நான் எனக்கு தேவையானதை சம்பாதிச்சுக்குறேன். இதுக்கு மேல இந்த பேச்சு வேண்டாம்னு முடிவா சொல்லிட்டான். அதையும் மீறி சொத்துக்காக பேசி என்னை இன்சல்ட் பண்ணாதீங்கனு சொல்லிட்டான்” என்று சொல்ல சொல்ல சேகர் முகம் மாறி இருந்தது. அதுவும் நல்லதாய் எல்லாம் இல்லை என்பதும் பார்த்ததும் புரிந்தது.
“பாட்டி சமமா எழுதி தான் வச்சிருக்காங்க. யார்கிட்டயும் சொல்லல போல. ஆர்யா வேண்டவே வேண்டாம்னு தான் சொன்னான். அப்பவும் நான் தான் ஆர்யாகிட்ட நீ என்னை இன்சல்ட் பண்ணாதனு சொல்லி அவனை கண்ட்ரோல் பண்ணேன்.” என்றவன்,
“அசிங்கமா இருக்கு பா. ஆர்யா சொன்னது தான் உங்களுக்கும். நமக்கு என்ன ப்பா குறை? எல்லாம் இருக்கு தானே? நிம்மதியா மட்டும் எங்களை விடுங்க. அது போதும். அம்மா பாவம் ப்பா. உங்களுக்கும் கூட பிறந்தவணுக்கும்னு பார்த்து பார்த்து ஓஞ்சு போய்ட்டாங்க. அவங்களை விட்டுடுங்க. பாட்டி என் பேர்ல எழுதினதை சீக்கிரமே உங்க பேர்ல கூட மாத்தி குடுத்துடுறேன். இனி சொத்து காசு பணம்னு தயவு செஞ்சு இந்த பேச்சு எதுவும் வேண்டாம். என்னால முடிஞ்சதை செஞ்சு என் பிள்ளையை நான் பார்த்துப்பேன்!” என்று கையெடுத்து கும்பிட்டவன், தன் அறைக்குள் நுழைந்து கொள்ள, இதைவிட யாரால் பதிலடி கொடுக்க முடியும் என்பதை போல வள்ளி தேவியும் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். ஸ்வேதாவும் கணவனை தேடி சென்றுவிட, தனித்து நின்றார் சேகர்.
****************
திகழ்மதியோடு ஆர்யன் பட்டம்மாளின் கால்களில் விழ, கண்கள் மின்ன கைகளால் ஆசீர்வாதம் செய்து மனம் குளிர பார்த்துக் கொண்ட பட்டம்மாவிற்கு ஆஸ்துமாவினால் மூச்சிரைப்பு பிரச்சனை இருக்க, அதிகமாய் இப்பொழுது எல்லாம் பேச முடியவில்லை. ஓரிரண்டு வார்த்தைகள் தான் எனினும் தெளிவாய் சொல்லிவிடுவார்.
ஆர்யன் பாட்டி கேட்பதற்கு முன்பே தன் திருமணம் பற்றி கூற, கேட்டவருக்கு அதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை போலும்!
“மஹாலக்ஷ்மி தான்!” என்று கூறி தன் மகிழ்ச்சியை தெரிவித்துவிட, அடுத்ததாய் சொத்து பிரச்சனைக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க தானே அதை பேச ஆரம்பித்து அதற்கொரு தீர்வையும் அப்பொழுதே கண்டு முடித்து வைத்திருந்தான் தந்தையை மீறி.
வீட்டிற்கு வந்ததும் பூஜையறைக்கு சென்று விளக்கேற்ற வைத்தது என்னவோ வள்ளி தேவி தான்.
“அண்ணி! அண்ணே பக்கத்துல வந்து நின்னு பசங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க!” என்று வள்ளி கூற, என்ன கோபம் இருந்தாலும் மகனின் வாழ்க்கை ஆகிற்றே! சத்தமே இல்லாமல் வந்து நின்றார் மீனாட்சி.
“பிளெஸ் மீ ம்மா!” என்றவன் கூடவே திகழ்மதியும் விழ, கடவுளை வேண்டியபடி இரு கைகளாலும் ஆசீர்வாதத்தை வழங்கி எழ வைத்தார்.
மீண்டும் மீண்டும் என ஆற்றாமை, ஆதங்கம் கூடவே ஆர்யனை பெருமை பொங்க என பார்த்து வைத்து “உன் மனசுக்கு நீ எப்பவும் நல்லா இருப்ப டா!” என்று ஆர்யனிடம் கூறி வள்ளி தேவி கிளம்ப தயாராக,
“என்ன டா உர்ருனு இருக்க?” திகழ்மதியை வள்ளி தேவி தனியே அழைத்து செல்லவும் புகழ் அருகே வந்து கேட்டான் ஆர்யன்.
“வேற எப்படி இருக்க சொல்ற? நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேன்ல? பின்ன எதுக்கு பாட்டி இப்படி பண்ணனும்? “ என்றான் கோபமாய்.
“அதுக்கு ஏன் டா என்கிட்ட மூஞ்சை தூக்கி வச்சுட்டு இருக்க? எனக்கே உன் புண்ணியத்துல இன்னைக்கு தான் ஒரு நல்ல வழி பொறந்திருக்கு!” என்றான் ஆர்யன்.
“சும்மா இரு டா. நானே கில்ட்டாகி நிக்குறேன். இப்ப வந்து உளறிக்கிட்டு!” என்றவனுக்கு இப்பொழுதும் ஆச்சர்யம் தான். எப்படி இப்படி கோடி மதிப்பில் வரும் சொத்தை ஒருவன் எந்த பாசாங்கும் இல்லாமல் மொத்தமாய் தாரைவார்த்து கொடுக்க தயாராய் இருக்க முடியும் என்று.
“நான் சொன்னது ஒன்னும் நடக்கலையே? பாட்டி பட்டியல் போட்டு சரிபாதியா பிரிச்சு வச்சிருக்காங்க. இப்ப தான் பொண்ணுங்களுக்கும் சம உரிமைனு இருக்கே டா. இதெல்லாம் வள்ளி அத்தைக்கு வர வேண்டிய ஒன்னு தான். லூசு மாதிரி பேசாம போய் அடுத்த வேலையை பாரு. நானும் திகழ்க்கு என் விருப்பத்தை புரிய வைக்குற வேலையை பாக்குறேன்!” என்றிருந்தான்.
“ஏதாச்சும் ஐடியா குடேன்!” என்று புகழ் வேந்தனை சமன்செய்ய நினைத்து ஆர்யன் கேட்க,
“என்ன ஐடியா? எதுக்கு?” என்றான் புகழ்
“அதான்! உன் சிஸ்டரை கரெக்ட் பண்ண. லவ் பண்றது எப்படினு சொல்லி குடு!” என்று ஆர்யன் கேட்க, அவன் நினைத்தது போல எப்பொழுதும் கலகலப்பான புகழ் வேந்தன் வெளிவந்திருந்தான்
“அடேய்! என்னை என்ன டா நினச்ச? நான் எம்பிஏ படிச்சவன்” என்றான் பதறி புகழ்.
“தெரியாததை சொல்லி குடுக்குறதுல என்ன தப்பு?” என்று நியாயமாய் கேட்க,
“எது உனக்கு தெரியாதா? அதான் வானம் மூடிடுச்சே! நைட்டு ரூம்க்கு வரவும் டான்னு கால்ல விழுந்து ஓகே பண்ணிடு!” என்று சொல்ல,
“ச்ச ச்ச! ஆர்யாக்கு அதெல்லாம் செட்டாகாது. மாஸ் சீன் எதாவது சொல்லு!” என்று கேட்டு அதற்கேற்ப தான் தயாராக ஆர்யன் சொல்ல,
“விட்டா என் தொழிலையே மாத்திடுவ. போ டா?” என்று சொல்லி கிளம்பி இருந்தான்.
ஆனால் முயற்சியின் முதல் படியில் மீனாட்சி பெரிய கல்லைப் போட, இதோ திகழ்மதி மீனாட்சியுடன் அவர் அறையில். ஆர்யன் தன் தந்தையுடன்.