“மகி! அக்கா கால் பண்ணிருக்காங்க பேசினியா? என்ன சொன்னாங்க? பெங்களூர்ல எங்க தங்கி இருக்காங்களாம்? சாப்பிட்டாச்சானு கேட்டியா? “ என்று அரவிந்த் மகிழினியிடம் கேட்க,
“அக்கா சேஃப் தான். அதை விடு. நீ எங்கேயோ லாக் ஆகி இருக்கியே. அந்த கதையை முதல்ல சொல்லு!” என்றவள் அவனது பையில் இருந்து எடுத்த பரிசுப் பெட்டியை தன் உள்ளங்கைகளுக்குள் உருட்டிக் கொண்டே கேட்டாள்.
“என்ன டி உலர்ற? “ என்றவன் திகழ்மதி எண்ணை எடுத்து அவளுக்கு அழைக்க, முழு அழைப்பு சென்றும் ஏற்கப்படாமல் இருந்தது.
“ப்ச்! அக்கா பிக் பண்ணலை!” என்றவன் அப்பொழுது தான் மகிழினி கைகளில் இருந்த பரிசுப் பெட்டியைக் கண்டான்.
“என்ன இது?“ என்றவன் சொல்லிய வேகத்தோடு பெட்டியையும் தன் கைகளில் கொண்டு வந்திருந்தான் அவள் கைகளில் இருந்து.
“பிரிச்சு பார்த்தா தானே தெரியும்? இது நாலாவது டைம். உன் பேக்ல இன்னைக்கு மார்னிங் கிடைச்சது!” என்று சொல்ல, வாங்கியப் பெட்டியை பிரித்தவன் கைகள் அப்படியே நின்றது.
“கேட்டா யார்னே தெரியாதுன்னு சொல்லுவியே! சரி சரி பிரி! என்ன இருக்குன்னு பார்த்துடுவோம்!” என்றும் மகிழினி சொல்ல, எரிச்சலோடு அந்த பரிசினைப் பிரித்தான்.
இத்தோடு நான்காவது முறை. முதல் முறை ஒற்றை ரோஜாப் பூ. அதுவும் காய்ந்த நிலையில் தான் எடுத்திருந்தான் அவன் கல்லூரி பையில் இருந்து. எப்பொழுது யார் வைத்தார்களோ இவன் பார்க்கும் பொழுது காய்ந்து சருகாய் மாறி இருந்தது .
இரண்டாவது அன்று திகழ்மதி கையில் மகிழினி எடுத்து கொடுத்த ஒற்றை ரோஜா பொக்கே! மூன்றாவது குட்டி குட்டி பிளாஸ்டிக் வண்ணப் பூக்கள் ஒன்றோடு ஒன்று கோர்த்து மிக சிறிய ஒரு பொக்கே.
“யார் இது? வேற வேலை இல்லையா?” என்று தான் நினைத்திருக்கிறான் இது வரை அரவிந்த்.
இன்று நான்காவது முறையாய் அதுவும் கையடக்கப் பெட்டியில். இதுவும் ரோஜாவாக தான் இருக்கும் என்று தோன்றினாலும் என்ன இது பைத்தியக்காரத்தனம்? யார் பார்க்கும் வேலை என்ற கேள்வி தான் மனதுக்குள்.
எதிர்பார்த்தது போல பூவே தான். கூடவே ஒரு காகிதமும். வைட் ரோஸ் உனக்கு. வைட் பேப்பர் எனக்கு!” என வேகமாய் பிடுங்க, அதையும் நீயே வச்சுக்கோ!” என்று பூவையும் கொடுத்தவன்,
“இனி பேக் கொண்டு போக கூடாது போல!” என்று சொல்லி விலகி செல்ல, பிரித்துப் பார்த்தவள் கண்கள் சுருங்கி புருவம் ஏறி இறங்கியது.
“லவ் லெட்டரா இருக்கும்னு நினைச்சேன். வேஸ்ட்.” என்று சொல்லி அரவிந்த் பின்னோடு சென்று அந்த காகிதத்தை அவன் முன் விரித்துக் காட்டி நின்றாள்.
ஒற்றை ஸ்மைலி பொம்மை. அதுவும் வருத்தமாய் இருப்பது போல.
“இதுக்கு அர்த்தம் என்னவா இருக்கும் அர்வி?” தீவிர சிந்தனையோடு மகிழினி கேட்க,
“அங்க அக்கா என்ற பன்றாங்களோனு நான் யோசிச்சுட்டு இருக்கேன். இது இப்ப தேவையா? கிழிச்சிப் போட்டு போய் வேற வேலையை பாரு!” என்றான் எரிச்சலோடு.
“அய்யோ பாவம்! தொடர்ந்து முயற்சி பன்றாங்க. இந்த அர்வி கொஞ்சம் கூட கண்டுக்க மாட்றான். யாரா இருக்கும்?“ தனக்கு தானே மகிழினி கேட்டுக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தாள்.
******************
“அவியல் பிடிக்கும். ஆனா சாம்பார்ல காய்னா பிடிக்காது. எல்லாமே சாப்பிடுவான். ஆனா அது அதுக்கான பக்குவமும் இருக்கனும். நல்லாருக்கு நல்லா இல்லைனு எல்லாம் சொல்ல மாட்டான் அவன் சாப்பிடுறதை வச்சு தான் நாம தெரிஞ்சிக்கணும்!” மகனைப் பற்றி மீனாட்சி சமையலறையில் திகழ்மதியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அத்தனை கவலையாய் இருந்தது.
எவ்வளவு ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து கவனித்து அதை மருமகளுக்கும் சொல்லிக் கொடுத்து என அவரை நினைக்க பாவமாய் இருந்தது.
இப்பொழுதும் ஒரே எண்ணம் தான், ‘இந்த ஆர்யன் சார் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாமே!’ என்று.
“அவங்க அப்பா தான் ரொம்ப கோவக்காரர். அதுல கொஞ்சமும் மகனுக்கு கிடையாது. கோபம் வந்தா கூட அமைதியா கடந்து போயிடுவான். இல்லைனா அதுக்கான தீர்வு என்னனு யோசிக்க ஆரம்பிச்சுடுவான். எனக்கு தெரியாம என் மகன் எதுவுமே செய்ய மாட்டான்னு ஒரு கர்வம் எனக்கு இருந்துச்சு!” என்று சொல்லி மருமகள் முகம் பார்க்க, அவள் சங்கடமாய் தவித்து நின்றாள்.
“திகழ்!” வெளியில் கேட்ட ஆர்யன் குரலில், “போய் பாரு!” என்றவர்,
“நான் இன்னும் அவன்மேல கோவமா தான் இருக்கேன்!” என்றும் சொல்ல, சிரித்துக் கொண்டவள், தலையசைத்துவிட்டு வெளியே வந்தாள்.
திகழ்மதி இருக்கும் அறை பார்த்து ஆர்யன் பார்வையை வைத்து பார்த்திருக்க, “சொல்லுங்க சார்!” என்று அருகில் வந்து நின்றவளைப் பார்த்தவன் புன்னகைத்துவிட்டு,
“அம்மா கூட என்னை புரிஞ்சிப்பாங்கனு வச்சுக்கோங்களேன். பட் என் அப்பா!” என்று வாய்ப்பில்லை என்பதாய் தலையசைத்தவன்,
“ஒரு கட்டத்துக்கு மேல அப்பா சொல்றதை தான் அம்மாவும் கேட்க வேண்டியதிருக்கும். அப்ப நான் பாவம் இல்லையா? என் ஆசை, கனவு?“ என்று கேட்டு கைகட்டி அவன் பார்க்க, இதுவும் நியாயம் என்றே தோன்றியது திகழ்மதிக்கு.
“சாரி! ரொம்ப பேசிட்டேன்!” திகழ்மதி சொல்ல,
“தப்பில்லை!” என்றவன்,
“அம்மா ஹர்ட் பண்ற மாதிரி எதாவது சொன்னாங்களா?” என்றான்.
“இல்ல இல்ல! எல்லா மாமியாரும் மருமகளுக்கு சொல்லி கொடுக்குறது தான். மகனுக்கு புடிச்சது புடிக்காதது. அவங்க கேரக்டர்னு” என்றவள் சிரிக்க,
“கத்துக்கிட்டிங்களா?” என்றான் அவனும் சிரித்தபடி.
“ம்ம்! ஒரு மாசத்துக்கு தேவையான அளவுக்கு!” என்றவளுக்கு இன்னும் புன்னகை அதிகமாக, கேட்டவன் புன்னகை கொஞ்சம் குறைந்து பின் மீண்டது.
ஆர்யனை நினைத்து முதலில் சிறு பயம் உள்ளுக்குள் இருந்தது என்னவோ உண்மை திகழ்மதிக்கு. அவன் வீட்டிற்கு வந்து அவன் அன்னையுடன் பழகி அவர்கள் குடும்பத்தை அறிந்த பின் ஆர்யனையும் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை.
இரவு உணவினை மீனாட்சி எடுத்து வந்து வைக்க தானும் அவருடன் இணைந்து கொண்ட திகழ்மதி, “நீங்க அவங்களோட சாப்பிடுங்க ஆண்ட்டி! நான் சேர்வ் பண்றேன்!” என்றாள்.
விஷ்வநாதனும் வந்துவிட அவர் குளித்துவிட்டு வருவதாய் சொல்லி செல்லவும், “எல்லாரும் எடுத்துக்கலாம். நீயும் சாப்பிடு!” என்று அமர சொல்ல, அமர்ந்தவளுக்கு உணவு நேரம் மட்டும் என்று இல்லாமல் அங்கே ஒவ்வொன்றும் அதன் ப்ரம்மாண்டாமும் தன் சகோதரா சகோதரிகளின் நியாபகத்தை தான் அதிகமாய் நினைவுபடுத்தி மனதை வருத்தியது.
தனக்கு என கொடுத்திருக்கும் அந்த அறை மீனாட்சி விஸ்வநாதன் அறை. மிக பெரிதாய் இருக்க, உணவு உடை என அனைத்தும் இங்கே மாறுபட்டு தான் இருந்தது.
“போய் பேசிட்டு வா. நான் பேச கூடாதுன்னு சொன்னேனா? அப்பவே சொன்னேன் இது கூட கேட்டுட்டு பண்ணனுமான்னு” என்று மீனாட்சி சொல்ல, போ என்பதாய் தலையசைத்தான் ஆர்யனும்.
“ம்மா!” திகழ்மதி சென்றதும் ஆர்யன் அழைக்க, மீனாட்சி கண்டு கொள்ளவில்லை.
“ம்மா! அவகிட்ட மட்டும் கோவமானாலும் பேசுறீங்க. என்கிட்ட மட்டும் என்ன?” என்று கேட்க,
“என்ன பண்றது? மருமகளா போய்ட்டாங்க!” என்று மட்டும் கூறினார்.
“ம்மா என் பிரச்சனையை நான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள பல சிக்கல். எல்லாம் இந்த புகழ் பார்த்த வேலை. என்னால அதை சொல்ல கூட முடியலை ம்மா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!” என்றான் கெஞ்சலாய்.
“நான் தான் எதுவும் கேட்கலையே. பின்ன என்ன விளக்கம் சொல்லிக்கிட்டு. நீ பார்த்த வேலைக்கு புகழை குறை சொல்லாத” என்றார்.
“அதான் ம்மா சொல்றேன். எல்லாம் இப்ப சொல்ல முடியாத சிட்டுவேஷன். ஒரு நாள் நான் சொல்லுவேன். அப்ப நீங்க தான் நான் பாவம்னு முதல்ல சொல்ல போறீங்க பாருங்க!” என்றான்.
“நாளைக்கு ஜாதகம் பார்க்க போறேன். கூட வரணும்.” அவன் பேசியதை விடுத்து இதை மட்டும் சொல்ல,
“இப்ப வேண்டாம். கொஞ்ச நாள் இப்படியே போகட்டும்!” என்றான்.
“எல்லாமே உங்க இஷ்டம். அப்ப நாங்க எதுக்கு? எதுவும் நான் சொல்ல கூடாது அப்படி தானே? “ என மீண்டும் மீனாட்சி குறை போல சொல்ல,
“உங்களுக்காக தான் சொல்றேன். பின்ன எல்லாம் தெரியும் போது நெஞ்சைப் புடிச்சிட்டீங்கன்னா?” என்றவன் இதழ்களுக்குள் சிரிக்க, விஷ்வநாதனும் திகழ்மதியும் வந்தனர்.
“கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து எதுக்கு? இப்படி என்கூட தங்க வைக்கவா? அப்பா நாளைக்கு திண்டுக்கல் போறாங்களாம். நீ என் கூட வர்ற! அவ்வளவு தான்!” என்று சொல்ல, திகழ்மதியைப் பார்த்தவன் தோள்களை குலுக்கிக் கொண்டான்.
“அப்புறம் இந்த அங்கிள் ஆண்ட்டி எல்லாம் வேண்டாம். அத்தை மாமானு உன் பொண்டாட்டிகிட்ட சொல்லி குடு. நாளைக்கு காலைல நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்ட்டு வாங்க. அப்புறமா ஜாதகம் பார்க்க போகலாம். வந்து மதியை நம்ம கடைக்கு கூட்டிட்டு போ! வேண்டியதை வாங்கிக்கட்டும்” என்றார் வரிசையாய்.
தினமும் புடவை என்பது தாய் தந்தைக்கு பின் கனகாவிடம் தஞ்சமடைந்து வந்துவிட்ட பின் கனகாவின் சொல்லுக்கிணங்க மாற்றிக் கொண்டது. புடவை மட்டுமே எந்நேரமும் அவளின் உடை. அவளுக்கு பிடித்ததோ இல்லையோ. கனகா இப்படி தான் நீ இருக்க வேண்டும் என சொல்லி தன்னை மாற்றிக் கொண்ட பின் வேறு உடைகளை பற்றி எல்லாம் நினைத்தது இல்லை திகழ்மதி.
இப்பொழுது வரும் பொழுது கையில் ஒரு பெட்டியுடன் மட்டுமே அவள் வந்திருக்க, ‘அங்கு என்ன நிலைமையாகவும் இருக்கட்டும். அவள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இங்கே வந்திருக்கட்டும். இங்கு வந்த பின் தன் மருமகளாய் அவளுக்கென செய்வது தங்களின் கடமையும் கூட!’ என்று உணர்ந்தே திகழ்மதியை தங்களது கடைக்கு அழைத்து செல்ல கூறினார் மீனாட்சி.
விஷ்வநாதன் எதற்கும் பதில் பேசவில்லை. சாப்பிட்டு அமைதியாய் எழுந்து சென்றுவிட்டார். இன்னமும் மகன் சேகருக்கு விட்டு கொடுத்ததும் தாய் பாதி பாதி என பங்கு வைத்ததையும் அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை.
“ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது அக்கா. மாமா அப்செர்வேஷன்ல தான் இருக்காங்க. நாளைக்கு ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவாங்களாம்!” அரவிந்த் கூறியதை சிந்தித்துக் கொண்டிருந்த திகழ்மதி மீனாட்சியின் பேச்சினை சரியாய் கேட்டிருக்கவில்லை.