“எதுக்கு அவ்வளவு நீங்க யோசிக்கணும். இவ்வளவு தூரம் வந்த நான் இதையெல்லாம் யோசிக்காமலா இருப்பேன். என்னோட வாழ்க்கைல நடக்குறது நடக்க போறதுன்னு எதுவுமே உங்களோட வாழ்க்கையை பாதிக்காது. என்னோட வாழ்க்கையை பாதிக்குற எதையும் நான் செய்யவும் மாட்டேன். என்னோட குடும்பத்துக்காக இந்த குடும்பத்துக்குள்ள வந்திருக்கேன். அவ்வளவு தான்!” என்று கூறிய திகழ்மதி முகத்தில் சிறு புன்னகை. அதில் திரும்பி அவளைப் பார்த்தவன்
“நான் உங்களுக்காக மட்டும் தான் கேட்டேன். தப்பா எடுத்துக்க வேண்டாம்.” என்றவனுக்கு அவள் பதில் சிறு குழப்பத்தை கொடுத்தாலும் அவள் குடும்பம் மட்டுமே அவள் சிந்தனை என்பது அவ்வப்போது அவள் பேச்சிலும் வெளிப்படுவதைக் கண்டு தானே உணர்ந்தான் சிலவற்றை.
ஏற்கனவே உஷா அவளின் தம்பி தங்கை என ஆரம்பித்து திகழ்மதி அதை தடுத்து நிறுத்தி இருந்ததும் நியாபகத்தில் இருந்தது. அதற்கு முன்பும் யாரோ ஒருவரின் மருத்துவ செலவுக்கு என உஷா பேசியதும் நியாபகத்தில் நிற்க, திகழ்மதியின் மனது ஓரளவுக்கு புரிந்தது.
“என்ன அமைதியாகிட்டிங்க?” திகழ்மதி கேட்க,
“நத்திங்! என்னோட வாழ்க்கைனு சொன்னிங்களே! அதை தான் யோசிச்சுட்டு இருந்தேன்!” என்றான்.
“உங்களுக்கு என்ன ப்ரோப்லேம் எதுக்காக என்னை இந்த ட்ராமாக்கு கொண்டு வந்திங்க எதுவும் தெரியாது. நீங்க சொல்லணும்னு அவசியமும் இல்லை. எதுவா இருந்தாலும் உங்களுக்கு இந்த டைம்குள்ள எல்லாம் சரி ஆகணும். நீங்க நினைச்ச வாழ்க்கை உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்!” என்று கூறி புன்னகைக்க,
“தேங்க்ஸ் திகழ்! நானும் நம்புறேன். நடக்கும்!” என்று சொல்லி புன்னகைக்க, சிறு தலையசைப்புடன் திரும்பிவிட்டாள் கீழே.
அவள் சென்ற சில நிமிடங்கள் அங்கேயே நின்றவனுக்கு திகழ்மதியை முழுதாய் நிறைவாய் பிடித்துப் போனது. அவளை பார்த்ததும் விரும்ப ஆரம்பித்து தான் இப்பொழுது வரை செல்வது என்றாலும் அவளின் ஒவ்வொரு பேச்சுமே இப்பொழுது பிடித்தத்தை அதிகரித்தது. தன் மனம் முழுதாய் அவள் நிறைந்து விட்டதை அவனால் உணர முடிந்தது.
அவளிடம் புகழ் கூறிய கேள்வியை கேட்பதற்குள் இப்படி மூச்சு முட்டிப் போகும் என அவனே நினைத்திருக்க மாட்டான்.
“இவனை!” என சொல்லிக் கொண்டு உடனே மொபைலை எடுத்து புகழுக்கு அழைக்க, அங்கே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த புகழ்,
“ஹெலோ!” என்றான் தூக்க கலக்கத்தோடு. அவ்வளவு தான் அவன் நியாபகத்தில் இருந்தது. வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி திட்டி தீர்த்தவன்,
“உனக்கு உன் பொண்டாட்டிக்குன்னு இனி ஏதாவது சந்தேகம் வந்தது… தொலைஞ்சிங்க.” என்று சொல்லி ஆர்யன் பேச,
“ஏன் டா இதுக்கா இந்த அன்டைம் கால் பண்ணின? “ என்றான் இன்னும் தூக்கம் கலையாமல் புகழ்.
“இல்ல. உனக்கு இன்னொரு வேலை!” என்றவன் தன் திட்டத்தை சொல்ல,
“அவ்வா! போடாங்க… இதுக்கு என்னை நீ கிணத்துல குதிக்க சொல்லி இருக்கலாம். அம்மாவும் அத்தையும் இப்ப தான் உன் கல்யாணத்துனால கொஞ்சம் பேசிக்குறாங்க. இப்ப அதையும் கெடுக்க பாக்குற நீ. ஆளை விடு டா சாமி!” என்றான் முற்றிலும் துடைத்து எடுக்கப்பட்ட தூக்கத்தை விட்டு வெளிவந்து.
“உனக்காக நான் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துட்டு இருக்கேன். எனக்காக நீ இதை கூட பண்ண மாட்ட இல்ல?” என்றான் ஆர்யன்.
“இதெல்லாம் ஓவர் டா. எனக்காக ரிஸ்க் எடுத்தியா? நூலை தான் புடிச்சேன். நீ தான் கோர்த்துகிட்ட. இன்னும் என்னவெல்லாம் நான் அனுபவிக்கணுமோ?“ என்றவனை பேசி சம்மதிக்க வைத்து நிம்மதியாய் உறங்க செல்ல, உறக்கம் கெட்டு போனது புகழ் வேந்தனுக்கு தான்.
ஆர்யன் அப்பொழுது தான் கிளம்பி கீழே வந்திருந்தான் கோவிலுக்கு செல்வதற்காக.
“ம்மா! காஃபி!” என்ற குரலுக்கு பட்டுப் புடவையோடு முல்லை சூடிய மலர் ஒன்று காபியை கொண்டு வந்து தர, இமைக்க மறந்து போனான் ஆர்யன்.
“ஆர்யா சார்!” என்று காதுக்குள் சத்தமாய் கேட்ட பின் தான் தெளியவே செய்தான்.
“சுகர் ஓகேவா பாருங்க. ஆண்ட்டி வேலையா இருக்காங்க. நான் தான் காஃபி போட்டேன்!” என்று சொல்ல,
“ஓஹ் மை காட்!” என்ற ஆர்யன் கப்பை கீழே வைத்துவிட்டான்.
“என்னாச்சு சார்?” திகழ்மதி கேட்க,
“ம்ம்ஹும்” என்றவன் தொண்டையை செருமிக் கொண்டான்.
“காஃபி குடிச்சிட்டிங்கனா கிளம்பலாம். சுகர் ஓகேவா பார்த்துக்கோங்க. நான் ஆண்ட்டிகிட்ட சொல்லிட்டு வர்றேன்!” என்றவள் உள்ளே செல்ல,
“உஃப்!” என மூச்சை இழுத்து விட்டவன் பார்வை மீண்டும் அவள் சென்ற பக்கம் நீள, தலையை உலுக்கிக் கொண்டான்.
காதுக்குள் இப்பொழுது புகழ் குரல் அசரீரி போல. ‘முதல்ல வாங்கோனும். அப்புறம் தோண்டோனும். அப்புறம் தான் காட்டோனும்’ என்று கேட்க,
“ஆர்யா! தப்பு டா. ரொம்ப தப்பு. அடி வாங்கிடாத!” என தனக்கு தானே சொல்லிக் கொண்டு புன்னகைத்து அந்த நேரத்தை மட்டும் நினைத்து ரசித்து காஃபியைப் பருகிக் கொண்டு இருக்க, காலை எட்டு மணிக்கெல்லாம் ஆர்யாவின் வீட்டு வாசலில் நின்றிருந்தான் புகழ் வேந்தன்.
“நீ போ மதி! அவன் கிளம்பிட்டான் பாரு!” என்று மீனாட்சி சொல்ல,
“வெளில போறிங்களா அத்தை?” என்றான் புகழ்.
“இல்லை டா. உன் பிரண்ட்டை தான் கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னேன்!” என்றார் மீனாட்சி.
“ஓஹ்! நானும் அதை தான் சொல்ல வந்தேன் த்தை! அம்மாவும் அவங்க அக்காவும் புதுசா ஒரு ஜோசியரைப் போய் பார்த்தாங்களாம். அங்க ரொம்ப நல்லா ஜாதகம் எல்லாம் பாக்குறாங்களாம். நீங்க நேத்து ரொம்ப கவலைப்பட்டிங்களாமே! அதான் அம்மா அங்க போய்ட்டு வாரீங்களானு கேட்டாங்க?” என்றான் ஆர்யன் கூறியதை அப்படியே.
“அப்படியா? நான் கூட இன்னைக்கு போகணும்னு தான் இருந்தேன். அப்ப நானும் வள்ளியும் அவ சொல்ற இடத்துக்கே போய்ட்டு வர்றோம். இரு உன் அம்மாகிட்ட நானே பேசுறேன்!” என்று மொபைலை எடுக்க போக,
“அம்மா இன்னைக்கு வீட்டுல இல்ல அத்தை. அவங்க ஒரு ஃபன்க்ஷன்க்கு போய்ட்டாங்க. அம்மா சொல்ற இடம் எனக்கு நல்லா தெரியும். வேணும்னா நான் கூட்டிட்டு போகவா?” என்றான் அடுத்ததாய்.
“அதுவும் சரி தான். பொண்டாட்டி கூட வெளில போறான். எப்ப வர்றானோ. நான் உன்கூடவே வர்றேன்!” என்று சொல்ல,
அவனுக்கும் வருத்தம் தான் என்றாலும் அன்னையிடம் சட்டென உண்மையை சொல்லிவிடவும் முடியவில்லை. இதோ இந்த நேரம் அருகில் முல்லை மலர் வாசத்தோடு தன் அருகில் இருப்பவளை இத்தனை ரசிப்போம் என நினைக்கவில்லையே ஆர்யனும்.
“இந்த சாரீ ஆண்ட்டியோடது. அவங்க கம்பல் பண்ணதால தான்… நான் எவ்வளவோ சொன்னேன். அவங்க மருமகளுக்குன்னு சொல்லி வேற வழி இல்லாம நானும் வாங்கி… ப்ச்!” என்றாள் என்ன நினைப்பானோ எனும் பதட்டம், கவலை, பயம் போன்ற உணர்வோடு.
“கூல் திகழ். நம்ம ரிலேஷன்ஷிப் வச்சு அம்மா செய்யுற எதையும் நீங்க வேண்டாம்னு மறுக்க வேண்டாம். இதெல்லாம் அவங்க பக்கம் பார்த்தா சாதாரணம் தானே? நான் என்ன நினைப்பேன்னும் நீங்க நினைக்க வேண்டாம். எனக்கு ஓரளவு உங்களை புரிஞ்சுக்க முடியுது. என்னோட வைஃப் அப்டின்ற உங்க கேரக்டர்க்கு அம்மா இதெல்லாம் செய்யலைனா தான் அதிசயம். நீங்க நார்மலா இருங்க ஓகே!” என்ற ஆர்யனை திகழ்மதி பார்த்தபடி இருக்க,
“அம்மாக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு போல. என்ஜாய் பண்ணுங்க.” என்றான் இன்னும் அதிகமாய் புன்னகைத்து. அதில் துளியும் கலக்கம் இல்லை. எந்த எதிர் குணமும் இல்லை. அவன் அவனாய் இருக்க, திகழ்மதி அதை சிந்திக்க,
“அவ்வளவு சீக்கிரம் இவ்வளவு கிளோஸ் ஆக மாட்டாங்க!” என்றான் அவள் பார்வை உணர்ந்து.
“இது எனக்கான இடம் இல்லை. உங்க மனைவின்ற பேருக்கான இடம்!” என்றாள் திருத்தி.
“இருக்கலாம். ஆனா உங்களை புடிக்காம இருக்க வாய்ப்பில்லை தானே?” என்றவன் அவள் மறுக்கும் முன்,
“கோவிலுக்கு போக சொன்னாங்க அம்மா. உங்களுக்கு ஓகேனா போலாம். இல்லைனா வேண்டாம். அண்ட் ஸ்டோர் கூட்டிட்டு போக சொன்னாங்க இல்லையா?“ என்றும் கேட்க,
“அம்மாக்காக உங்க வேலை எல்லாம் விட்டு என்னை சுமந்துட்டே இருக்கணும்னு விதி பாருங்களேன்!” என அதிலேயே வந்து நின்றாள் பெண்.