“ஆர்யா சார் எதுவும் திட்டினாரா? ஏன் இவ்வளவு டல்லா இருக்க நீ?” உஷா கேட்க, திகழ்மதி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“இல்ல அந்த புகழ் சார் எதுவும் பேசினாரா? அன்னைக்கே அவரால தான் பிரச்சனை. என்னென்னவோ உளறினார். கோவத்துல நானும் அவர் பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டேன்!”
“எனக்கு அங்க இருக்கவே கஷ்டமா இருக்கு உஷா!” என்றாள் தலையில் கைவைத்து திகழ்மதி.
“ஏன்மதி அப்படி சொல்ற? நீ போய் ஒரு வாரம் தான் ஆகுது. இன்னும் மூணு வாரம் இருக்கே?” என பயந்தாள் உஷா.
“சமாளிச்சு தான் ஆகணும். ஆனாலும் அங்க இப்ப எனக்கு என்னவோ தனியா இருக்குற ஒரு பீல். முதல் நாள் கூட நான் இவ்வளவு பீல் பண்ணல. கஷ்டப்படல. ஆனா இப்ப ஏதோ ஒன்னு என்னை உறுத்துது!”
“அது எப்பவும் இருக்குறது. இது புதுசா ஒன்னு. சொல்ல தெரியல. நீ நேத்து முன்னாடி கால் பண்ணினப்ப கூட நான் நல்லா தான் இருந்தேன். இந்த ஆர்யா சார் இப்பலாம் சரியே இல்லை!” என்றாள் குழப்பம் கோபம் ஏமாற்றம் என கலந்து.
“சரி இல்லையா?” என பதறிய உஷா,
“என்ன சொல்ற மதி? ஓஹ் காட்! அப்ப புகழ் சொன்ன மாதிரி ஆர்யா வேற எதுவும் பிளான் பன்றாரா?” என நொடிக்குள் அதிகமாய் யோசிக்க,
“அய்யோ அந்த மாதிரி தப்பா சொல்லல உஷா!” என அவள் பேச்சை நிறுத்திய திகழ்மதி,
“நீ என்கிட்ட சோன்ன அப்புறம் ஆர்யா என்கிட்ட என்னவோ பேச வந்தார். ஆனா நான் அதை கேட்கல. என்னென்னவோ சொல்லிட்டேன். அதுக்காக தப்பா எல்லாம் எதுவும் பேசல. என்கிட்ட இனி எதுவும் நீங்க பேச இல்ல. என் வேலையை மட்டும் நான் பாக்குறேன்னு தான் சொன்னேன். அதுக்கப்பறம் அவர் என்னை அந்த வீட்டுல நான் ஒருத்தி இருக்குறதாவே நினைக்குறது இல்ல. அது சரி தான். ஆனா அது எனக்கு நிம்மதி இல்லாம பண்ணுது. கஷ்டமா இருக்கு. கில்டியா இருக்கு. நான் தப்பு பன்றேனோனு எனக்கே குழப்பமா இருக்கு!” என்றாள்.
“என்ன சொல்ற நீ? அவர் உன்னை அவாய்ட் பண்ணினா நல்லதுன்னு நினைச்சுக்கோ. அவங்க அம்மா அப்பா முன்னாடி மட்டும் பேசிக்கோ. ஏன் ரொம்ப திங்க் பண்ற?” உஷா கேட்க,
“அதான் எனக்கும் தெரியல. அவங்க என் பேமிலி பத்தி விசாரிக்குறது அதுவும் எனக்கு தெரியாம விசாரிக்குறது நிச்சயமா தப்பு தான். எதுக்காக அதை பண்ணனும்? என்னை என்னனு நினச்சு வந்த ஒரு வாரத்துல பிடிக்கும்னு எல்லாம் சொல்லி…” என்றவள் ஒன்றும் புரியவில்லை என்பதை போல தலையைப் பிடிக்க,
“ஹேய்! மதி! இதெல்லாம் என்கிட்ட சொன்னது புகழ் தான். ஒருவேளை ஆர்யாக்கு தெரியாம கூட இதெல்லாம் நடந்திருக்கலாம் இல்ல? ஸ்வேதா பக்கத்துல இருக்கிறதா தான் புகழ் சார் சொன்னாங்க. ஆர்யா சார் அப்ப பக்கத்துல இல்ல”. என்ற உஷா, மீண்டும் நியாபகம் வந்தவளாய்,
“அண்ட் அன்னைக்கு பார்க்ல நீ வர்றதுக்கு முன்னாடி கூட ஆர்யா புகழை அடிச்சார். இந்த ட்ராமாக்கு ஒத்துக்கவே இல்ல. ஆனா திடீர்னு இதை ப்ரோஸஸ் பண்ணுவோம்னு சொன்னார்! நேத்து புகழ் சாரும் சொன்னார் திகழ்மதி இல்லாம வேற ஒருத்தர் அந்த இடத்துல வந்திருந்தா நிச்சயமா ஆர்யா இந்த ட்ராமாக்கு சம்மதிச்சிருக்க மாட்டான் அப்படின்னு.” என்றவள்,
“உனக்கு எதாவது இதுல புரியுதா?” என்று திகழ்மதியிடமும் கேட்க, தலையை இட வலமாய் அசைத்தாள் அவள்.
“மதி! ஆர்யா சார் ஒதுங்கி போறார்னு எனக்கு தோணுது. உனக்கு பிடிக்கலைனு!” என்று சொல்ல,
“என்ன சொல்ற உஷா?” என்றாள் திகழ்மதி.
“இதுல என்னவோ இருக்கு. நீ ரொம்ப எல்லாம் குழப்பிக்காத மதி. இது நல்லதுக்குன்னு கூட நினைச்சுக்கோ. ஆர்யா சாரோட எண்ணம்…” என்ற உஷாவிற்கு ‘ஆர்யாவிற்கு திகழ்மதி மேல் காதல் தானோ?’ என்று புரிய தொடங்க, அது மதிக்கு எவ்விதத்திலும் நல்லதாய் இருக்குமா என்று புரியவில்லை. அதை சொல்லி ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவளை குழப்பவும் மனதில்லை.
“என்னவாவும் இருக்கட்டும். கண் முன்னாடி அதுவும் அவங்க அம்மா அப்பா முன்னாடி நீ இருக்குற. அதனால தப்பா அவர் உன்னை எங்கேயும் யூஸ் பண்ணிக்க வாய்ப்பில்லை!” என்று உஷா சொல்ல,
‘என்னை யூஸ் பண்ணிக்க நினைக்காதீங்க!’ என ஆர்யனிடம் தான் கூறியது நியாபகத்தில் வந்து மனதை குத்தியது திகழ்மதிக்கு. கூடவே ‘கோவில்லேர்ந்து அவன் எப்படி வந்தான் தெரியுமா? பார்க்கவே முடியல என்னால!’ என்ற மீனாட்சியின் வார்த்தைகளும் வந்து மனதை தைத்தது.
“உனக்கு தெளிவா சொல்லணும்னா என்கிட்ட டீடெயில்ஸ் கேட்டது புகழ் சார். எனக்கு தெரிஞ்சு அது ஆர்யா சார்க்கு தெரிய வாய்ப்பில்லை. ஆர்யா சார் எண்ணம் எதுவா இருந்தாலும் அது நமக்கு தேவை இல்லை. அவர் கெட்டவரும் இல்லை. பேமிலிக்காக இதை முடிக்க வேண்டிய கடமை இருக்கு உனக்கு. வேற எந்த கில்டி ஃபீலும் உனக்கு வேண்டாம்!” என்றாள் அவளுக்கு புரியும்படி.
“நான் சொல்றது உனக்கு புரியுதா மதி?” உஷா கேட்க, எல்லாம் புரிந்தது போல தலை சாய்த்தவளுக்கு நிஜமாய் சில விஷயங்கள் உஷா மறைமுகமாய் கூறியதும் விளங்கியது. ஆனாலும் எப்படி சாத்தியம்? தன் நிலைமை என்ன அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என ஒரு நொடி நினைத்தவள் பின் அந்த நினைவு கூட வேண்டாம் என விட்டுவிட்டாள்.
அனைத்தும் சரி என்று ஆனாலுமே தனக்கு ஏன் இந்த ஒரு கோபமும் ஆற்றாமையும் எதிர்பார்ப்பும் என்று சிந்திக்க தோன்றவில்லை.
அடுத்த ஒரு மணி நேரத்தில் திகழ்மதி கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தாள். மீனாட்சி அவளைப் பார்த்ததும் முறைப்போடு திரும்பிக் கொள்ள, இப்பொழுது மனம் தெளிவானதால் தெளிவாய் புன்னகை வந்தது திகழ்மதிக்கு.
“அவங்க வந்துட்டாங்களா அத்தை?” என்றபடி மீனாட்சியின் வெகு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து பேச ஆரம்பித்தாள் திகழ்மதி.
“எவங்க? ஏன் புருஷன் வந்துட்டார். வேற யாரையும் நான் பார்க்கல!” கோபமாய் மீனாட்சி சொல்ல,
“இன்னுமா கோவமா இருக்கீங்க?”
“என்கிட்ட நீ பேசாத. நீ அவனை விட மோசம். அவனை விட அழுத்தமும். சரியா தான் புடிச்சிருக்கான் ஜாடிக்கு மூடியை!” என்றவர் முகத்தை திருப்பி அமர்ந்து கொண்டார்.
“எம்புட்டு பாசமா பார்த்து எதுக்கு? என்ன இருந்தாலும் மருமக தானே? மக ஆயிடுவாளா? மகளா இருந்தா செவில்ல ரெண்டு குடுத்து என்ன பிரச்சனைனு கேட்கலாம். எனக்கு தான் அதுக்கு குடுத்து வைக்கலையே!” என்று புலம்பலையும் விட்டபாடில்லை.
“ம்மா!” என்ற அழைப்பில் சட்டென மீனாட்சி திரும்ப, அழைத்தது திகழ்மதி தான்.
“எனக்கு அம்மா இல்ல.. உங்களுக்கு பொண்ணு இல்ல. நீங்க அம்மா நான் பொண்ணு. அப்படி தோணலையா உங்களுக்கு?” என்று கண் கலங்கி கேட்டவள் கேள்வியில் உருகிவிட்டார் மீனாட்சி.
“என்னை அழ வைக்குறதே உனக்கும் உன் புருசனுக்கும் வேலையா போச்சு. அம்மா இல்லையாம்? அப்போ நான் யாரு டி? ஆனாலும் நல்லா நழுவுற. நான் எதுக்கு கோவமா இருக்கேன்னு தெரிஞ்சும் அதை மட்டும் சொல்லாம என்னலாம் பேசுற?” என முறைக்க,
“புருஷன் பொண்டாட்டி சண்டைனு சொல்றிங்க இல்ல. அதை வெளில சொன்னா நான் விட்டு குடுக்குறதா ஆகாதா? நானே சரி பண்றேன். சீக்கிரம் சரி ஆகிடும் போதுமா ம்மா?” என்றவள் பதில் அவருக்கு திருப்தி அடைய போதாது தான் என்றாலும் இந்த அளவுக்கு பதில் சொல்ல தெரிந்தவளுக்கு சமாதானம் அடைய தெரியாமலும் இருக்காதே என புரியாமல் இல்லை.
“இப்ப சொல்லுங்க. அவங்க வந்தாங்களா ம்மா?” என்று மீண்டும் திகழ்மதி கேட்க,
“எவங்களும் வர்ல. மதியம் வெளில சாப்பிட்டுக்குவேன்னு போன் மட்டும் வந்துச்சு!” என்றார் புன்னகைக்காமல்.
“ஈவ்னிங் ஆயிடுச்சே! சாப்பிட்டாங்களானு போன் பண்ணிங்களா இல்லையா?” என்று அதட்டல் கொண்டு திகழ்மதி கேட்க,
“ஆமா எனக்கு ரொம்ப தேவை தான் பாரு. யாருக்கு வேணுமோ அவங்க தான் கேட்கணும். இப்ப நான் இங்க தான் இருக்கேன். இருப்பேன். நீ போன் பண்ணு. சாப்பிட்டானானு கேளு. அம்மானு சொன்ன இல்ல. இப்ப நீ கேட்குற. இல்ல!” என்று முறைத்தவர் தீவிரம் புரிந்து தானே மாட்டிக் கொண்டதில் விழித்தவள் வேறு வழியின்றி அழைத்தாள்.
“டேய்! சத்தியமா இவ்வளவு ஆகும்னு நான் நினைக்கல டா!” என ஆர்யனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் புகழ் வேந்தன்.
கருமமே கண்ணாய் தான் செய்து கொண்டிருந்த வேலையை தொடர்ந்த ஆர்யன் புகழை கவனிக்காதது போலவே இருக்க,
“ஆர்யா! உனக்காக உன் நல்லதுகாக நான் நினச்சு பண்றது எல்லாம் அப்படியே ஆப்போசிட்டா மாறுது டா. அது என் நேரமா உன் நேரமா….” என்றவன் முடிக்கும் முன் ஆர்யன் தான் திருப்பிக் கொண்டிருந்த லெட்ஜரை அறைந்து மூட பட்டென பெரிய சத்தம். அதில் புகழும் பேசுவதை நிறுத்தி இருந்தான்.
“ஆர்யா?” என்று புகழ் பாவமாய் அழைக்க,
“நான் கேட்டேனா? என் வாழ்க்கைக்கு விளக்கேத்துன்னு நான் கேட்டேனா?” என்று ஆர்யன் எழுந்தபடி கேட்க, புகழ் மௌனமா ய் நின்றான்.
“என் கோவம் கொஞ்சமும் குறையல…. ஆனா நேத்து நீ என் கையில கிடைச்சிருந்தா முழுசா வீடு போயிருக்க மாட்ட. இப்பவும் அதே வெறி இருக்கு. ஆனா யோசிச்சு பார்த்தா என் தலைவிதி இது தான்னு இருக்கும்போது யாரை சொல்லி என்ன ஆக போகுதுன்னு அமைதியா இருக்கேன்”
“நீ இப்படி பேசுறது தான் டா எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு!” புகழ் சொல்ல,
“கஷ்டமா இருந்தா போய் ஆத்துலயோ கிணத்துலையோ குதி. மறுபடியும் என் உயிரோட விளையாடாத. மனுஷனாவே இருக்க மாட்டேன்!” என்று ஆர்யன் சொல்ல, “ஆர்யா!” என்று அதிர்ந்து நின்றான் புகழ் உயிர் என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்து.
“என்னால முடியல. எனக்கு திகழை எப்படி ஃபேஸ் பண்றதுன்னு தெரியல டா. அசிங்கமா இருக்கு. திகழ் என்ன நினச்சு என்னை அப்படி ஒரு வார்த்தை சொன்னா? நான் அப்படிப்பட்டவனா? சராசரி ஆம்பளைன்றா, நோக்கம் என்னனு கேட்குறா. இதையெல்லாம் விட நான் யூஸ் பண்ணிக்குறேன்னு சொல்றா. தாங்க முடியல டா.” என்றான் அங்கிருந்த மேஜையில் கைகளை ஊன்றி முகம்தனை கீழ் நோக்கி.
“எனக்கே ஆச்சர்யமா இருக்கு. எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு திகழை. ஏன் எதுக்கு எப்படினு எந்த கேள்விக்கும் என்கிட்ட அன்ஸர் இல்ல. ஆனா நல்லா பேசிட்டு இருந்தவ சட்டுன்னு இப்படி ஒரு கேள்வி கேட்டதுல மனசெல்லாம் வலிக்குது டா. ஆனா அந்த வலி தான் எனக்கு உண்மையையும் சொல்லுது எனக்கு திகழ்னா எவ்வளவு பிடிக்கும்னு!” என்று அரற்றவே ஆரம்பித்திருந்தான் ஆர்யன்.
“ஆர்யா! என்ன டா நீ? அவங்ககிட்ட நீ பேசு டா. எடுத்து சொல்லு. நிச்சயமா புரிஞ்சுப்பாங்க!” புகழ் அவன் பேச்சின் வேதனை புரிந்து சொல்ல,
“ஹான் இப்ப வந்து சொல்லு இதை. எங்க டா சொல்ல விட்ட நீ? அதான் எல்லாத்தையும் குழி தோண்டி புதைக்க வச்சுட்டியே!” என்று பாய்ந்த ஆர்யன் அடிக்க வரும் முன் அவன் அலைபேசி அழைக்க,
‘ஒன்னும் இல்ல டா புகழு! உயிரோட தான் இருக்க!’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டு இதயத்தை நீவிவிட்டுக் கொண்டான் புகழ்.
என்ன செய்கிறான் என புகழ் பயந்து திரும்பி ஆர்யனைப் பார்க்க, கண்களில் அத்தனை மின்னல் வெட்ட, ஒளி கூடிய முகம் கொண்டு இரு நாட்களாய் தொலைத்திருந்த புன்னகை மீண்டிருக்க, ஆசையாய் அலைபேசியில் தெரிந்த அந்த பெயரை ஆர்யன் உச்சரித்தான் “திகழ்” என்று.