திகழ்மதி ஆர்யனின் வீட்டில் இருந்து வந்து பத்து நாட்களை கடந்திருந்தது. அவளின் அன்றாட நாட்களுக்கு தான் இன்னமும் அவளால் பழக முடியவில்லை. எந்த வேலையை செய்தாலும் கண்முன் தோன்றும் ஆர்யனின் தான் கண்ட இறுதி நாளின் பார்வை வந்து அவளை சோர்வடைய செய்ய வைத்துக் கொண்டிருந்தது..
‘என்ன பார்வை அது?’ என்று நினைக்க ஆரம்பித்து அந்த பார்வை அவளுள் புகுந்து அவளுக்கே விளக்கம் கொடுத்து புரிய வைத்திருந்தாலும் தன்னை மாற்றிக் கொள்வதாய் மட்டும் இல்லை அவள்.
இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பான்? அன்னையை சமாதானம் செய்திருப்பானா? இயல்புக்கு திரும்பி இருப்பானா? நினைக்காதே என்றாலும் அவளுள் பெரும்பாலான நேரங்கள் இந்த கேள்விகள் தான் ஓடும்.
நிச்சயம் தன்னை மறந்து அவன் வாழ்க்கை யை பற்றி நினைக்க ஆரம்பித்து இருப்பான் என அதுவும் அவளின் எண்ணம் தான்.
பால் பொங்கி வரும் சத்தத்தில் கலைந்தவள் அடுப்பை அணைத்துவிட்டு தேநீர் தயாரிக்க ஆரம்பித்துவிட்டாள் திகழ்மதி. மீண்டும் சமையலறை அவளின் கைகளில். அமுதாவை வேலையில் இருந்து நிறுத்தி இரு வாரம் ஆகிறது.
வேலைக்கு திகழ்மதி செல்லவில்லை என்றதுமே வீட்டு வேலைகளை அவளிடம் தள்ளிவிட்டார் கனகா. அன்பரசன் மறுத்த போதும் “பரவாயில்லை மாமா. வீட்டுல தானே இருக்கேன். நான் பார்த்துக்குறேன்!” என திகழ்மதி யே கூறிவிட,
“என்னவோ நான் கொடுமைப்படுத்துற மாதிரி தான். அவ சமைச்சா அனு நாலு வாய் அதிகமா சாப்பிடுவா. உங்களுக்கும் தான் அவ செய்யுறது எல்லாம் பிடிக்குமே!” என்று போகிற போக்கில் சொல்லி செல்வார் கனகா.
முதல் நாள் காலை திகழ்மதியை கண்ட கனகா ஆச்சர்யமாய் விழித்தவர், “நீ எப்ப வந்த? கலங்காத்தால வீட்டு உள்ள இருந்து வர்ற? அப்ப நேத்தே வந்துட்டு தான் உன் மாமாவை கூட பாக்காம உள்ள ஒளிஞ்சு இருந்தியா?” என்று கேட்க,
“அக்கா அசதில தூங்கிட்டா அத்தை.. நான் தான் எழுப்பல. நீங்களும் வர நேரம் ஆகிட்டே அதான்!” என்று அரவிந்த் சொல்ல,
“கிளம்புறேன் ம்மா!” என்று மிக மெதுவான குரலில் தலையை குனிந்தபடி அன்னையிடம் மட்டும் சொல்லிவிட்டு தன்னை கண்டு கொள்ளாமல் கல்லூரிக்கு கிளம்பிய1 அனன்யாவை திகழ்மதி வினோதமாய் பார்க்க,
“இதெல்லாம் ஒரு காரணம்.” என்று சலித்துக் கொள்வது போல கூறியவர்,
“இனி என்னைக்கு போகணும்?” என்று கேட்க, திகழ்மதி பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.
“அவ்வளவு தான் அத்தை. ஷூட்டிங் முடிஞ்சிடுச்சாம். இனி அக்கா கொஞ்ச நாள் வீட்டுல தான் இருப்பாங்க!” என்றான் அரவிந்த்.
“அவ்வளவு தானா? இதுக்கா அம்புட்டு பணமும்?” என வாயை பிளந்தார் கனகா. தொண்டைக்குழி அடைத்து வந்தது திகழ்மதிக்கு. இவருக்கு மட்டும் உண்மை தெரிந்தால் என்று நினைக்கவே.
“மாமா தூங்குறாங்களா அத்தை?” என அரவிந்தே பேச்சை மாற்ற,
“ஆமா ஆமா! வீட்டுல தான இருக்கா. அப்புறமா பார்க்கட்டும்.. பின்னாடி பாத்திரத்தை வேற அப்படியே போட்டிருக்கேன்.” என்ற கனகா,
“இப்ப யாருகிட்ட சொல்லி எனக்கு உதவ போறா?” என்றபடி பின்னே செல்ல,
“க்கா! அவங்க பார்க்கட்டும்.. கண்டுக்காத. அமுதாக்கா தான் சமையல் கூட. சும்மா தான் இருக்காங்க அத்தை. அவங்களே பார்க்கட்டும். நீ போய் ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு தான் சென்றான் அரவிந்த்.
கனகா நினைத்தது போலவே அரவிந்த் சென்றதும் திகழ்மதி பின்பக்கம் வர, கனகாவும் பாத்திரத்தை கையில் எடுக்க, “நான் பாக்குறேன் அத்தை.. நீங்க மாமாவை பாருங்க!” என அனுப்பி வைத்தாள்.
கனகா உடனே எல்லாம் சென்றுவிடவில்லை. அவள் வேலை பார்ப்பதை பார்த்தபடி இரண்டு நிமிடம் நின்றவர்,
“ஆமா! அடுத்து எப்ப கூப்பிடுவாங்க?” என தூண்டிலை போட, ஒரு நொடி வேலையை நிறுத்திய திகழ்மதி,
“அவ்வளவு தான் த்தை. இனி கூப்பிடமாட்டாங்க!” என்று சொல்ல,
“என்ன அவ்வளவு சாதாரணமா சொல்ற? இதே மாதிரி இன்னும் வாய்ப்பு வரும் இல்ல? வந்தா இதே காசும் கிடைக்கும் இல்ல?” என்று கேட்க,
“வேற ஒரு நல்ல வேலைக்கு பார்த்துட்டு இருக்கேன் அத்தை!” என்றாள்.
“இதைவிட நல்ல வேலை வரிசைகட்டி தான் வரும் உனக்கு. லூசா நீ? உன் மாமா மாதிரி நீயும் பொழைக்க தெரியாதவளாட்டம் இருக்காத. கொஞ்சமாவது நினச்சு பாரு.. ஒரே மாசத்துல எத்தனை லட்சம்? எவன் தருவான்?” என்று சொல்ல, தொண்டை அடைக்க, மூச்சு வாங்கியது திகழ்மதிக்கு அதை நினைத்து.
செய்யும் பொழுதை விட இன்று இவர் வாய்மொழி கேட்க, உண்மை தன்னை கண்ணத்தில் அடித்ததை போன்ற வழி. பணத்திற்காக சென்றவள் என்ற பெயர் தானே?
உண்மை தெரிந்தாலும் பெரிதாய் அலட்டி க் கொள்ள மாட்டாரோ தன் அத்தை என்று தான் நினைக்க வைத்தது அவர் பேச்சு. காசு கிடைத்தால் போதும் அவருக்கு.
“மதிம்மா!” என்ற குரலில் வேகமாய் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு திரும்பினாள் திகழ்மதி. அன்பரசன் தான். தேகம் மெலிந்து முகத்தில் புன்னகையோடு அழைத்தவரை பார்த்ததும் மீண்டும் கண்ணீர் கரை உடைக்க, எழுந்து சென்று அணைத்துக் கொண்டாள்.
கனகாவிற்கு தான் எரிச்சலாய் போனது பேச்சு பாதியில் நின்றதில். எவ்வளவு பணம்? எங்கு கிடைக்கும் இதை போய் விட பார்க்கிறாளே என்றொரு ஆதங்கம். அதுவும் தான் எவ்வளவு அதில் தன் மகளுக்கு என கணக்கு போட நினைத்திருக்க, இப்படி பேசுபவளை எப்படியாவது பேசி பேசி கரைத்திட தான் நினைத்தார்.
“எப்படி டா இருக்க? எப்ப வந்த? பெரிய ஆள் ஆகிட்டியாம். இனி இந்த வீட்டுக்குல்லாம் வர மாட்டன்னுல்ல நினச்சேன்!” என்றார் அன்பரசன் அவள் தலைகோதி கிண்டலாய்.
“மாமா!” என்றவளுக்கு இன்னும் கண்ணீர் தான்.
“வந்ததும் வராததுமா வேலையை குடுத்தாச்சா உன் அத்த? அதான் அழுதியா?” என்று கேட்க, திகழ்மதி பதில் கூறும் முன்,
“இங்க பாருங்க! என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு? அவளா தான் நான் பாக்குறேன்னு வந்து நின்னா. சும்மா என்னையே வம்புக்கு இழுக்குறது. பட வேலை முடிஞ்சிருச்சாம். இனி கூப்பிட்டாலும் போகலையாம். வேற வேலை பார்க்க போறாளாம் உங்க மருமக!” என்று எரிச்சலாய் கனகா சொல்ல,
“அதுக்கென்ன? அவ விருப்பம் தான். அவளுக்கு என்ன தோணுதோ அதை செய்யட்டும்” என்று சொல்லிவிட்டார் அன்பரசன்.
மீண்டும் தோல்வி தான் கனகாவிற்கு. ஆனாலும் விட்டுப் பிடிக்க நினைத்து அப்போதைக்கு அந்தப் பேச்சைவிட்டார் அப்போதைக்கு.
இந்த பத்து நாட்களில் அவ்வபோது வேலையை பற்றி அவளிடம் கேட்பதும் உண்டு. அரவிந்த் இருக்கும் பொழுதுகளில் அவனே தான் சமாளிதான். சகோதரியை பேச விடவில்லை அவன்.
“கொஞ்ச நாள் போகட்டும் க்கா. உடனே எல்லாம் நீ வேலைக்கு போக வேண்டாம். அதான் மாமா வீட்டுல இருக்காங்க இல்ல. அத்தை எதுவும் சொல்ல போறதில்ல. அதுக்குள்ள நான் நல்ல வேலைக்கு போய்டுவேன்” என்று அரவிந்த் பேச பேச, அவன் வளர்ந்துவிட்டதை நினைத்து தனக்கே அறிவுரை சொல்வதை நினைத்தும் ஒரு பெருமை தான் சகோதரியாய் அவளுக்கு.
“இப்பவே உன் ஆட்டம் தாங்கல. வேலைக்கு போய்ட்டா ஓவரா பேசுவியே! ஆனா என்ன ஆனாலும் எனக்கு டெய்லி பேட்டா ஹன்ட்ரெட் வந்துடனும் பார்த்துக்கோ!” என்பாள் மகிழினி.
அனன்யா அவ்வபோது எதிரில் வருவது உண்டு. முன்பு போல மகிழினி, திகழ்மதியிடம் கூட பேசுவதில்லை அவள். அரவிந்த்தின் என் குடும்பம் என்ற வார்த்தை அவளை அதிகம் பாதித்திருக்க, அவளால் அவளை மீட்டெடுக்க முடியவில்லை அவனிடம் இருந்து.
அரவிந்த் அந்த நாளுக்கு பின் மறந்தும் கூட அனன்யா முகத்தை இதுநாள் வரை பார்த்ததில்லை. இவ்வளவு நாளும் திகழ்மதி, மகிழினிக்காக என தனக்கான அடையாளத்தை தேட ஆரம்பித்து இப்பொழுது இந்த இடத்தை விட்டே சென்றுவிட வேண்டும் ஒரு எண்ணம் வலிமையாய் அவன் மனதில் உண்டாகி இருக்க அனன்யா மட்டுமே காரணம்.
பாலை அனைவருக்கும் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளை திகழ்மதி செய்து கொண்டிருக்க, அனைவரும் கல்லூரி சென்ற பின் அன்பரசன் உறங்கும் நேரம் அவளருகில் வந்து பேச ஆரம்பித்தார் கனகா.
“என்ன முடிவு பண்ணி இருக்க? இப்படியே வீட்டு வேலை பார்த்தே நாளை ஒட்டிடலாம்னா? எல்லாரும் சும்மா இருந்தா சாப்பிட என்ன பண்ண? உன் தம்பி அவ்வளவு பேசுறான். என்ன பண்ண போறான்னு பார்க்க தான் போறேன்” என்று சொல்ல,
“இன்னும் காலேஜ் முடியலையே அத்த! அவனுக்கு புடிச்ச வேலையா கிடைச்சிட்டா அவனுக்கு நல்லது!” என்றவள்,
“நாளைக்கு நானும் ஒரு இன்டெர்வியூ போறேன்.” என்றாள் தகவலாய். திகழ்மதி மீண்டும் தம்பி தங்கை தன் குடும்பம் என வந்தாலும் அவனின் இந்த ஆர்யனின் நினைவை மட்டும் அவளால் ஒதுக்கவும் முடியவில்லை ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை.
அந்த நினைவில் கலங்கி தன்னை தானே திட்டி என காலையிலே தலைவலி யில் இருந்தவளை கனகாவின் பேச்சு எரிச்சலை கொடுத்தது.
“என்ன? இன்டெர்வியூவா? லூசா நீ? அவ்வளவு படிச்சு படிச்சு சொல்லிட்டு இருக்கேன்.. இன்டெர்வியூ போறேன்னு சொல்ற? படிச்ச திமிரா? சினிமால குடுக்குற மாதிரி எவன் தருவான்?“ என்று அதிர்ந்து கனகா கேட்க அது இன்னும் கோபத்தை தான் கொடுத்தது திகழ்மதிக்கு.
“அய்யோ அத்த! தானா வாய்ப்பு வந்தா தான் போகலாம்.. யார் காலை புடிச்சும் சினிமா உள்ள போயிட முடியாது. எது கிடைக்குமோ அது தான் கிடைக்கும். எனக்கு சினிமால விருப்பமும் இல்லை. ப்ளீஸ்! இனி அதையே சொல்லாதீங்க!” என சத்தமாய் கூறியவள் அந்த இடத்தை விட விட்டும் நகர்ந்துவிட, கனகா இவளை என்ன செய்வது என பார்த்தபடி நின்று விட்டார்.
அவருக்கு மட்டும் அல்ல திகழ் கூட அறியவில்லை அடுத்த இரண்டு நாட்களிலேயே அதற்கொரு வாய்ப்பை கொடுத்து புகழ் வேந்தன் மீனாட்சியோடு வந்து நிற்க போவது தான் விதி என்று.
எப்போதும் இப்படி பேசுபவள் இல்லை. ஆனால் இன்று அதிகமாய் பேசிவிட்டாள். எல்லாம் இந்த மனதின் ஆட்டம் தான். ஆர்யன் தன்னை மறந்திருப்பானா இல்லையா என்ற நினைவில் இவளை இவளே மறந்து கொண்டிருந்தாள்.
புது வேலைக்கான கடிதம் தனது மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருக்க பார்த்து மகிழ்ந்த அரவிந்த் அதே உற்சாகத்தோடு திகழ்மதியை காண வீட்டிற்கு வர, அங்கே கீழே தன் மாமாவுடன் அமர்ந்திருந்தாள் திகழ்மதி.
கனகாவும் உடன் இருக்க, அனன்யாவும் அன்பரசன் அருகில் இருக்க, தயக்கம் எல்லாம் சில நொடிகள் தான். மாமாவிடம் கூற அவர் அருகே செல்லவும் அனன்யா எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
எப்போதும் நடப்பது தான் என்றாலும் கனகாவின் குரலுக்கு பின் தான் அனன்யா எழுந்து கொள்வது வழக்கம். இப்பொழுது அதை யாரும் கவனிக்கவில்லை அரவிந்த்தை தவிர.