தான் பார்த்த காட்சி யில் மூச்சைடைத்து போக, கடைசி படியினில் ஆணி அடித்ததை போன்று நின்றுவிட்டாள் திகழ்மதி.
“ரொம்ப பசிக்குது.. அத்த வேற உப்மாவை தள்ளி விடும்.. வேகமா தான் நடையேன் டா!” என்று அரவிந்த்தை திட்டியபடி திகழ்மதி பின்னால் அரவிந்த்தும் மகிழினியும் வந்தவர்கள் திகழ்மதி நிற்பதை பார்த்து விட்டு சத்தம் கேட்ட பக்கம் பார்க்க, கனகா யாரையோ விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
‘யார் இது?’ என அரவிந்த் பார்த்து நிற்க,
“அர்வி! அர்வி!” என அவசரமாய் அவன் டிஷர்ட்டைப் பிடித்து இழுத்த மகிழினி,
“அன்னைக்கு அக்காவை இவங்களோட தான் டா பார்த்தேன்.. அந்த ராமசந்திரா ஷாப் ஓனர் வைஃப்.. ஆமா இவங்க என்ன பன்றாங்க இங்க? கூட வந்திருக்கிறது யாரு? அன்னைக்கு வேற ஒருத்தர் இவங்க பையன்னு சொன்னாங்க. எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா அத்தைகிட்ட?” என்று கேட்க, அரவிந்த்துமே இதை எதிர்பாராதவன் அதிர்ந்து திகழ்மதியைப் பார்த்தான்.
“அக்கா!” என்று அவள் அருகே அரவிந்த் வர,
“இதோ மதியே வந்துட்டா!” என்ற கனகா,
“வா மதி! யார் வந்திருக்காங்க பார்த்தியா?” என்று கேட்க, மூச்சுக்காற்று உள்ளே செல்ல தடைப்பட்டு இதயம் வேகமாய் துடிக்க, வியர்வை முத்துக்கள் அவளை நனைக்க,
“மதி!” என எழுந்த மீனாட்சி அவளுக்கு வெகு அருகேவே வந்துவிட்டார்.
“டென்ஷன் ஆகாத மதி! நான் எதுவும் சொல்லல!” என்று மீனாட்சி மெதுவாய் கூறிய போதும் அவள் பதட்டம் தணியவே இல்லை.
“நீங்க எப்படி இங்க?” என்று கேட்டது அரவிந்த் தான். மிரட்டல் செய்ய வந்திருப்பாரோ? பணத்தை திருப்பி கேட்க வந்திருப்பாரோ? என்றெல்லாம் அவன் உள்ளம் யோசிக்க ஆரம்பிக்க, பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் மோசமானவராய் தெரியாததில் தயங்கி நின்றான் அரவிந்த்.
“மதியை பார்க்க தான் வந்தேன். வேற எந்த பிரச்சனையும் என்னால நிச்சயமா வராது!” மீனாட்சி சொல்ல,
‘என்னால உங்களுக்கு எப்பவும் பிரச்சனை வராது!’ என்று நொடி நேரமானாலும் திகழ்மதி கண்முன் வந்து சென்றான் ஆர்யன்.
“என்ன அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? வந்து உட்காருங்க!” என்று மீனாட்சியை கூறிய கனகா,
“மதி உன்னை பார்க்க தான வந்திருக்காங்க? இப்படி பேய் அடிச்சதாட்டம் நிக்குற? வந்தவங்கள வாங்கனு ஒரு வார்த்தை சொல்லல?” என்று தேனாய் பேசிய அத்தை வேறு மண்டைக்குள் சுழன் றார் திகழ்மதிக்கு.
“மதிம்மா!” என்று அன்பரசன் அழைக்கவும் தான் தலையை உலுக்கிக் கொண்டு, புன்னகைக்க முயன்றவள்,
“எப்படி இருக்கீங்க ம்மா?” என்றாள் மீனாட்சியிடம். இன்னும் அவர் முகத்தை நன்றாய் பார்க்கவில்லை அவள். பார்க்கவும் முடியாமல் ஒரு அவஸ்தை தான் செய்து வைத்த வேலையில்.
“நாங்க எல்லாரும் நல்லாருக்கோம் டா. நீ எப்படி இருக்க?” என்று சாதாரணமாய் பேசியபடி அவளோடு வந்து அமர்ந்தவர்,
“நல்லாருக்கியா பாப்பா?” என்று மகிழினியிடம் கேட்க,
“ஹான்!” என்று விழித்த மகிழினி, “ம்ம்ம்ம்!” என்று தலையை மட்டும் அசைத்தாள்.
“அனு! உள்ள என்ன டி பண்ற? சீக்கிரம் வா!” என்றவர், அமைதியாய் வந்து நின்ற மகளை மீனாட்சியிடம் காட்டி,
“இது அனன்யா! என் ஒரே பொண்ணு!” என்றவர்,
“அனு! இவங்க யார் தெரியுமா? அந்த பெரிய கடை ராமசந்திரா இருக்குல்ல! அதுக்கு உரிமைப்பட்டவங்க!” என்றார்.
உண்மையை சொல்லவில்லை என்றால் என்ன சொல்லி இருப்பார் அத்தையிடம் என குழம்பி அமர்ந்திருந்த திகழ்மதியோடு அரவிந்த் கூட,
“ஓஹ்! பணத்துக்கு தான் இந்த மதிப்பும் மரியாதையுமா?” என்று நினைக்க,
“அதுமட்டும் இல்ல அனு! நம்ம மதி ஷூட்டிங் போச்சுல்ல? அந்த படத்துக்கு இவங்க தான் காசு போட்டதாம்.. பேர் என்னவோ சொன்னாங்க சரியா சொல்ல வரலை!” என்று அனைத்துப் பல்லையும் கனகா காட்ட,
“ப்ரோடயூசர் கனகா!” என்றார் அன்பரசன்.
“ஹா! அது தான் அது தான்! நம்ம மதிக்கு சம்பளம் முன்பணமா குடுத்தது எல்லாம் கூட இவங்க தானாம். படம் வெளில வர கொஞ்சம் நாளாகுமாம்!” என்றெல்லாம் கனகா சொல்லிக் கொண்டு இருக்க, விரித்த கண்களை மூடவே இல்லை திகழ்மதி.
‘புள்ளைக்கு அம்மானு நிரூபிச்சிட்டீங்க நீங்க!’ என்று தோன்றிய எண்ணத்தோடு செல்லமுறைப்பு ஒன்றை கொடுத்து அவள் பார்க்க, மீனாட்சி பெருமையாய் “எப்படி? “ என்று யாரும் அறியாமல் கண்ணாடித்ததில் மெல்லிய புன்னகை கூட வந்தது திகழ்மதிக்கு.
“ஓஹ்ஹோ! பார்த்தியா அர்வி! காசுக்கு தான் அத்தை வாய் இப்படி நாலா பக்கமும் திறக்குது போல. எம்புட்டு அகலம்!” என்ற மகிழினியை,
“ப்ச் மகி!” என்ற ஒற்றை பார்வையில் அடக்கினான் அரவிந்த்.
தான் நினைத்தது நடக்க போகிறது. அடுத்த படம் பற்றி தான் பேச வந்திருப்பாராய் இருக்கும். அன்பரசன் வீட்டில் இருப்பதை வைத்து அனன்யா திருமணம் வரை பேசி முன்பணமாய் அன்று போல கேட்டு தானே மொத்த பணத்தையும் தன் கைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது வரை கணக்கிட்டுவிட்டார் கனகா.
அன்பரசனுக்கு அவ்வளவு பெரிய மனிதர் தன் வீட்டில் வந்து சாதாரணமாய் அமர்ந்து பேசி இருப்பது சந்தோசம் தான் என்றாலும் எங்கே மீண்டும் திகழ்மதியை அழைக்க தான் வந்திருப்பாரோ என்ற நினைவில் சரியாய் அவரால் பேச முடியவில்லை.
இப்படி அவரவர் எண்ணத்தில் அமர்ந்திருக்க, பிரோட்யூசர் என்றதில் புகழுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. மீனாட்சி முறைக்கவும் சிரிப்பை அடக்கியவன்,
“பிரோட்யூசராமே!” என்று அவர் காதருகில் கூறியவன்,
“ஆமா ஆமா! ஆர்யாவை பிரோட்யூஸ் பண்ணினது நீங்க தானே!” என்றும் கூறி சிரிப்பை அடக்க,
“இதுக்கு தான் டா அவன் உன்கிட்ட பேச மாட்றான்.. வீட்டுக்கு வா தலையிலேயே கொட்டுறேன்!” என்று அடக்கி வைத்தார் மீனாட்சி.
“உஷா சொன்னதை வச்சு இந்தம்மாவை நான் என்னவோனு நினச்சேன்.. இவங்க நான் நினைச்சதை விடவும் கொஞ்சம் ஜாஸ்தி தான் பன்றாங்க!” என்று புகழ் சொல்ல,
“அமைதியா இரு புகழ். ஓவரா பேசி காட்டிக் கொடுத்துடாத. மதி பாவம். அவ பட்டதே போதும். நீங்க ஆரம்பிச்சு வச்சதை வச்சே நான் மதி ஆர்யா வாழ்க்கையை சரி பண்ண பாக்கறேன்.. இதுல எதுவும் விளையாடிடாதிங்க நீயும் அவனும்!” என்றவர் எழுந்து கொண்டார்.
“நம்ம வீட்டுல ஒரு ஃபன்க்ஸன். புகழ் வீட்டம்மாக்கு வளைகாப்பு வச்சிருக்கோம். நீ அவசியம் குடும்பத்தோட வரணும் மதி!” என்று பூ, பழம் அடங்கிய தாம்பூலத் தட்டை மதியிடம் நீட்ட,
“மாமா!” என்று அன்பரசனை கை காட்டினாள் திகழ்மதி.
அவரிடம் தட்டை கொடுத்தவர், “எல்லாரும் கண்டிப்பா வரணும்!” என்று புன்னகை கொடுத்து சொல்ல, புகழும் அவருக்கு இசைபாட்டு பாட,
“கனகா!” என்று அதட்டிய அன்பரசனுக்கு ‘யாராய் இருந்தால் இவளுக்கு என்ன? வந்தவர்களிடம் மரியாதையை குறைத்துக் கொள்கிறாளே’ என்ற எண்ணம்.
“என் நாத்தனார் பையன். என் பையன் மாதிரி தான்!” என்று அதே புன்னகையோடு மீனாட்சி கூறியவர் கிளம்புவதாய் சொல்லி எழுந்து கொள்ள,
‘அப்போ படத்துக்கு புக் பண்ண வரலையோ?’ என்று நினைத்தாலும், “புடிச்சிருக்க போய் தான அவங்க நாத்தனா வீட்டு விழாவுக்கு கூப்பிட வந்திருக்காங்க. அப்போ கண்டிப்பா அடுத்த படத்துல கூப்பிடுவாங்க!’ என்றும் தனக்கு தானே சமாதானம் ஆகிக் கொண்டார் கனகா.
“ரொம்ப எதிர்பார்ப்பேன் டா உன்னை.. கண்டிப்பா வரணும்!” என்றவர் கண்கள் கலங்கியது போல இருக்க, இன்னும் ஆச்சர்யமாய் பார்த்து நின்ற திகழ்மதி,
“உங்களுக்கு என் மேல கோவம் இல்லையா ம்மா?” என்றாள். தானாய் கண்கள் கலங்கி வந்தது. இப்படி தேடி வந்து அழைக்கும் அளவுக்கு தான் என்ன செய்துவிட்டோம் என்று.
“அதெல்லாம் நிறைய இருக்கு.. எங்க! காட்றதுக்குக்கு தான் நீ பக்கத்துல இல்லையே!” என்றும் மீனாட்சி சொல்ல, அரவிந்த் அவர்கள் பேசுவதை கேட்கும் வெகு அருகில் நின்றவனும் புரியாமல் தான் பார்த்து நின்றான்.
அவ்வளவு தான் அவர் சொல்லில் மீண்டும் ஆர்யனிடம் சென்றது மனது. ஏன் அவன் வரவில்லை என்ற கேள்வி கூடவே சின்ன எதிர்பார்ப்பு என தன் மன திசையில் தலையை உலுக்கிக் கொண்டவள்,
‘சொன்ன வேலையை கூட சரியா முடிக்கல.. நீ எல்லாம் அவங்க வரணும்னு நினச்சுப் பார்க்கலாமா?’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.
“எல்லாருமே காத்துட்டு இருப்போம்!” என்றவரின் அர்த்தம் அப்போது அவளுக்கு புரியவில்லை.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அவர்கள் பக்கம் வந்திருந்த கனகாவின் காதுகளில் கடைசி வார்த்தைகள் மட்டும் தான் விழுந்தது.
‘ஒருவேளை நடிக்க வர முடியாதுன்னு சொல்லி இருப்பாளோ. அதான் காத்துட்டு இருப்போம்னு சொல்லுறாங்களோ!’ என்று அவர் நினைக்க,
“வந்துடு மதி!” என்று புகழும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
அவர்கள் சென்ற பின்னுமே திகழ்மதி அப்படியே நின்றிருக்க, “சாப்பிட வா மதிம்மா!” என்ற அன்பரசனின் அழைப்பில் தம்பி தங்கையோடு அவள் சாப்பிட அமர, அனு உள்ளே சென்றுவிட்டாள்.
“இந்த அனுக்கு என்னாச்சு ன்னு தெரியல. பேசியே ரொம்ப நாள் ஆச்சு.. “ என்று மகிழினி சொல்வது கேட்டாலும் அரவிந்த் கேட்காதவனாய் அமர்ந்து கொண்டான்.
“எவ்வளவு பெரிய ஆளுங்க! நம்ம வீடு தேடி வந்திருக்காங்க. கண்டிப்பா நாம போனும்ங்க!” கனகா சொல்ல,
“சும்மா இரு கனகா. அவ்வளவு பெரிய ஆளுங்க சும்மா வருவாங்களா? அவங்களுக்கு எதாவது காரியம் ஆக வேண்டியது இருக்கும். நமக்கு எதுக்கு பெரிய இடத்து விவகாரம் எல்லாம். நம்ம பொண்ணு தான் அந்த படத்தை முடிச்சு கொடுத்துட்டா இல்ல. இனி அவங்களோட என்ன இருக்கு.. அதெல்லாம் போக வேண்டாம்..” என்று அன்பரசன் சொல்ல, அன்பரசனிடம் இருந்து இப்படி சொற்களை எதிர்பார்க்காமல் அதிர்ந்தது கனகாவோடு திகழ்மதியுமே தான்.
செல்வதை பற்றி அவள் இன்னும் யோசிக்கவே இல்லை. ஆனால் அன்பரசனின் வார்த்தைகள் அவளுக்கு அவர் எண்ணவோட்டாத்தை புரிய வைக்க, அமைதியாய் உண்டு முடித்தாள். சகோதரியிடம் தனியாய் பேச காத்திருந்தான் அரவிந்த்.
இன்று சென்னை சென்று தங்கும் இடம் முதல் வேலைக்கு செல்லும் இடம் என சிலவற்றை பார்த்து பேசி அரவிந்த் முடிவு செய்து வருவதாய் தான் இருந்தது. மகிழினியும் உடன் வருவதாய் அடம்பிடிக்கவே உடனே செல்ல முடியாமல் இன்று மாலை தான் இங்கிருந்து கிளம்ப முடிவு செய்திருந்தான் மகிழினியோடு.
மகிழினிக்கு அரவிந்த் வேலைக்கு செல்வதில் எவ்வளவு மகிழ்ச்சியோ அதே அளவு வருத்தமும் கூட. அவன் செல்வதையே ஏற்று கொள்ள முடியாமல் இருந்தவளை திகழ்மதியையும் அழைத்து சென்று சில நாட்கள் அங்கே இருக்க சொல்ல போவதாக சொல்ல, முதலில் மறுத்தவள் பின் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டாள்.
“இங்க பாரு க்கா! அத்தை உன்கிட்ட மாதிரி என்கிட்ட வேலை எல்லாம் சொன்னா போடி இவளேன்னு சொல்லுவேன்.. ஒரு மாசம் தான்.. அவ்வளவு தான் கனகா கூட எனக்கு குப்பை கொட்ட முடியும். அதுக்குள்ள வந்துடனும். இப்ப அவன் கூட வீடு பார்க்க நானும் போவேன்!” என பல கட்டளைகள் சொல்லி தான் மாலை அவனோடு செல்ல இருக்கிறாள்.