கண்கள் அங்கும் இங்குமாய் அலைபாய அதனை கட்டுக்குள் வைக்கவே பெரும்பாடாய் போனது திகழ்மதிக்கு. சுத்தமாய் நம்பிக்கை இல்லை புகழ் வேந்தன் வீட்டு விழாவில் பங்கேற்போம் என்று அவளுக்கு. கனகா அப்படியே விடுபவர் இல்லையே!
இதோ விழா நடைபெறும் அன்று காலை முதல் பேசி பேசி அன்பரசனை சம்மதிக்க வைத்து திகழ்மதியோடு தானுமாய் இருவர் மட்டும் வந்திருந்தனர் வளைகாப்பு விழாவிற்கு.
அரவிந்த்தோடு மகிழினியும் சென்னை சென்று இரு நாட்கள் ஆகிறது. இன்று தான் அவர்களும் அங்கிருந்து மாலையில் கிளம்புகின்றனர். காலையில் இருவரும் வந்துவிடுவர். அரவிந்த்திடம் திகழ்மதி அலைபேசியில் வளைகாப்பிற்கு செல்வதாய் சொல்ல,
“உனக்கு ஓகேன்னா போய்ட்டு வா க்கா. அத்தைக்காக போகாத!” என்று சொல்லிவிட்டான். அவளும் அவருக்காக ஒன்றும் செல்லவில்லையே!
அனன்யாவை எவ்வளவோ அழைத்துப் பார்த்தார் கனகா. அதில் நாட்டமில்லை என அவள் சொல்ல, கூடவே அன்பரசனும் வேறு “அவ எதுக்கு அங்க எல்லாம்?” என்றதும், எங்கே தன்னையும் போகாதே என தடுத்துவிடுவாரோ என்ற பயத்தோடு சத்தமில்லாமல் கிளம்பி வந்துவிட்டார்.
“ஹப்பா எவ்ளோ பெரிய மண்டபம் இல்ல? நம்ம அனு கல்யாணம் கூட இந்த மாதிரி ஒரு பெரிய மண்டபத்துல தான் வைக்கணும்!” என்று மண்டபம் வாசலில் காலை வைத்ததும் கனகா ஆரம்பித்துவிட, அவரைப் பற்றி தெரிந்த திகழ்மதியும் கண்டுகொள்ளவில்லை.
அதான்விட அவள் அதை கண்டு கொள்ளும் மனநிலையிலும் இல்லை. மனதில் அத்தனை படபடப்பு. இப்பொழுது அவனைப் பார்த்து விடுவோம் தானே? நேராய் வந்து பேசுவானா? கோபத்தில் இருப்பானோ? மறந்திருப்பானோ? என்றெல்லாம் நினைவுகள் ஓட,
“வளைகாப்புக்கு எல்லாம் அவன் வருவானா என்ன? அவன் வேலையை பார்க்க சென்றிருந்தால்?” என்ற எண்ணம் எழவும் தானே ஒரு சோர்வு வந்தமர,
“மதி!” என அவளைப் பார்த்த புகழ் அவளருகில் வந்துவிட்டான்.
“உள்ள வாங்க! நீ வர மாட்டியோனு நினச்சுட்டே இருந்தேன். அத்தை இங்க தானே இருந்தாங்க.. எங்க போனாங்க!” என்றவன்,
“நான் போய் கூட்டிட்டு வர்றேன்!” என அவர்களை அமர வைத்துவிட்டு மீனாட்சியை அழைக்க அவன் செல்ல,
“வெளில விட உள்ள இன்னும் அழகா இருக்கு. என்ன ஒரு ஒரு லட்சம் இருக்குமா வாடகை? ஹ்ம்ம்!” என்று ஒரு ஏக்கப் பெருமூச்சோடு சுற்றிலும் பார்த்தார் கனகா.
“இப்ப வந்திடுறேன் அத்த!” என சொல்லிக் கொண்டு திகழ்மதி எழுந்து செல்ல,
“இரு டி நானும் வர்றேன்!” என சொல்லும் முன் வேகவேகமாய் சென்றிருந்தாள் திகழ்மதி.
மனது அலைபாய்ந்து கொண்டிருக்க, ஆர்யனைப் பார்த்துவிட மாட்டோமா என அவள் மனமும் பரிதவிக்க கண்கள் சுற்றி வர, பட்டாம்மாளை கண்டவள் யோசிக்காது எழுந்து அவரை நோக்கி சென்றுவிட்டாள்.
“பாட்டி!” என அவர் முன்னே சென்று நின்றவள் அவர் காலிலும் விழுந்து எழ,
“இதெல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா நீ இப்படி பண்ணி இருக்க கூடாது. விஷ்வநாதன் யாரு எந்த இடத்துல இருக்கான்னு தெரிஞ்சும் நீ இப்படி செஞ்சு இருக்க கூடாது.. அப்படி என்ன பொம்பள புள்ளைக்கு அவ்வளவு வீராப்பு?”
நல்லவேளை அவர் தனியாய் அமர்ந்திருந்தார். அருகில் யாரும் இருந்தால் கூட்டம் நிச்சயம் கூடி இருக்கும். திகழ்மதி அவர் பேச்சில் தான் சட்டென உணர்ந்து உறைந்து எழுந்து நிற்க, அவர்கள் அருகில் கிட்டத்தட்ட ஓடி தான் வந்திருந்தார் மீனாட்சி.
“அத்தை!” என்ற சொல்லோடு.
“இனியாவது புத்தி சொல்லு. சீக்கிரமே இவங்களுக்கு ஒரு அறிவிப்பு வச்சிடனும்!” என்ற பட்டம்மாள் திகழ்மதி இப்பொழுது சமாதானமா கி விழாவிற்கு வந்திருப்பதாக நினைத்து அவ்வாறு சொல்ல,
“நீ எப்ப வந்த மதி? உனக்காக தான் இவ்வளவு நேரமும் வாசல்லேயே நின்னேன். நீ மட்டுமா வந்த?” என்று கேட்க கேட்க, அவள் விழித்து நிற்பதை பார்த்து,
“அத்தைக்கு எதுவும் தெரியாது மதி” என்று கூறியவர்,
“அது… நீயும் ராஜாவும் சின்ன கோவத்துல பிரிஞ்சு இருக்குறதா நினைச்சுட்டு இருக்காங்க!” என்று சங்கடமாய் சொல்ல, அதில் இன்னும் விழி விரித்தாள்.
தான் முடிந்து விட்டதாய் நினைத்ததும் முடித்து வைத்துவிட்டதாய் நினைத்ததும் இன்னும் மாறாமல் இருக்கிறதா என்று அதிர்ந்து அவள் பார்க்க,
“கண்டுக்காத மதி! இங்க யாருக்குமே தெரியாது. சிலர் உங்க கல்யாணம் நடந்ததை பேசுவாங்க.. சிலர் பிரிஞ்சதா பேசுவாங்க.. எதுக்கும் பதில் சொல்ற டைம் இது இல்லையே!” என்றும் சொல்ல,
“அப்படினா?” என்றாள் திகைப்போடு புரியாமல்.
“அப்படினா அப்படி தான்.. எதுவும் பண்றதுக்கு இல்ல. ராஜாவோட அப்பா பொண்ணு பாக்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்கார்.. எப்ப தான் எல்லாம் சரியாகுமோ?” என்று புலம்பல் போல அவர் சொல்ல,
“அட உங்களை பார்க்க தான் ஓடி வந்தாளா? என்னை விட்டுட்டு வந்துட்டியே மதி!” என்று வந்துவிட்டார் கனகா.
“வாங்க! நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்!” என்று சொல்லி மீனாட்சி அவரிடம் பேச, திகழ்மதி சொல்லத் தெரியாத உணர்வில் உழன்று நின்றாள்.
“ஹாய் மதி!” என்று அவள் தோள்களை யாரோ தட்டவும் அவள் கனவு கலைவதை போல விழித்துப் பார்க்க, உஷா வந்திருந்தாள்.
சில நிமிடமிகளில் விழா ஆரம்பம் ஆக, கனகா மீனாட்சியிடம் தான் இன்னும் பேசியபடி இருந்தார்.
“உங்க அத்தை என்ன ஓவரா மேக்கப்ல வந்திருக்காங்க?” என்று உஷா கிண்டல் செய்ய, புகழ் வேந்தனின் தாய் வந்து இரு நிமிடம் நின்று திகழ்மதி அருகில் வந்து நின்று பேசி செல்ல, அதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தார் கனகா.
“என்ன டி நெர்வஸா இருக்க?” என்று உஷா கேட்கவும்,
“ப்ச் ஒண்ணுமில்ல!” என்ற திகழ்மதிக்கு நேரம் கடக்க கடக்க, அவன் வரவில்லை வர போவதும் இல்லை என்று புரிய ஒரு வித எரிச்சல் சூழ ஆரம்பித்தது.
இதில் மீனாட்சி கூறியதை போல சிலர் பார்வை எல்லாம் வேறு அவளை துளைத்தெடுக்க , அவளால் எளிதாய் அமர்ந்திருக்க முடியவில்லை.
“அதுக்குள்ள என்ன டி அவசரம் உனக்கு? நீ இரு நான் போய் வளையல் போட்டுட்டு வர்றேன்.. “ என்று சொல்லி முடிக்கும் முன்,
“மதி வா! வந்து வளையல் போடு!” என்று கிட்டத்தட்டதிகழ்மதியை இழுத்து சென்றிருந்தார் புகழ் தாயார். உஷா கனகாவோடு பேச்சுக் கொடுத்து அமர வைத்துவிட்டாள்.
“அய்யோ அவ சின்ன பொண்ணு.. அவ போய்…. “ என்று சொல்ல வந்த கனகாவின் குரல் எல்லாம் யார் காதுகளிலும் கேட்டதாகவே தெரியவில்லை.
நல்லவேளையாய் மீனாட்சி சபையில் திகழ்மதி கைகளில் தங்க வளையல்களைக் திணித்து அதிர்ந்து பார்த்தவளை மிரட்டாத குறையாய் ஸ்வேதாவிற்கு போட வைத்ததை எல்லாம் கனகா பார்க்கவில்லை.
படபடப்போடு வந்து கனகா அருகில் திகழ்மதி அமர்ந்து மூச்சை சீராக்க பாடுபட, “பெரிய இடத்துல எல்லாம் கல்யாணம் ஆகாத பொண்ணுங்க கூட வளையல் போடலாம் போல.. சரி இரு நான் போய் ஆசீர்வாதம் பண்ணிட்டு வர்றேன்!” என்று கனகா எழுந்து செல்ல,
“என்ன டி பயந்துட்டியா?” என்று உஷா சிரிக்க,
“அதான் ராஜா வந்துட்டான் இல்ல.. இவளையும் மனையில உக்கார வைக்க வேண்டியது தான?” என்று பட்டம்மாள் வந்து நின்றார் திகழ்மதி அருகே.
இருந்த கொஞ்சநஞ்ச உயிரும் அவர் வார்த்தைகளில் போய்விட, அவர் சொல்லில் இந்த பாழாய் போன மனம் மட்டும் முதல் வார்த்தைகளான ராஜாவானவனை தேடி விழிகளை சுழற்ற, அவனில் பதிந்து விலகி மீண்டும் அவனில் நிலைத்து நின்றது பெண்ணவளின் கருவிழிகள்.
தேட வேண்டிய அவசியமே இல்லாது அவளை மட்டும் பார்த்தபடி ஒற்றை காலினை சுவற்றில் ஊன்றி, கைகளைக் கட்டி கொண்டு அவளுக்கு நேர் எதிரில் தூரமாய் நின்றவனின் முழு பார்வையும் வஞ்சியிடம் மட்டும் தான்.
சிரிப்பதா வேண்டாமா? பேசுவானா மாட்டானா? என்று எண்ணங்கள் ஓடினாலும் அவள் பார்வையும் அவனிடம் தான் இருக்க, அவன் பேச முயற்சிக்கவில்லை என்பதில் கொஞ்சம் வாடியவள்,
“பாதில விட்டுட்டு போன தான? போய் பேசினா குறைஞ்சு போய்டுவியா?” என்று தோன்றிய நொடி கனகா எல்லாம் தன் எண்ணத்தில் இல்லவே இல்லை.
“கூட்டிட்டு போய் மனைல வை மீனா!” என்ற பட்டாம்மாளின் குரலில் திகழ்மதி விழி திருப்ப, பட்டாம்மாளை என்னவோ சொல்லி சமாளித்து அழைத்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.
“தேவை இல்லாத பிரச்சனைகள் கிளம்பும். முதலில் மதியை முறையாய் அறிமுகப்படுத்துவோம் பின் இதை பார்த்து க் கொள்ளலாம்!” என பட்டாம்மாளை சமாளித்து அழைத்து போனார் மீனாட்சி.
மீண்டும் ஆர்யன் பக்கம் திகழ் மதி திரும்ப, துளி அசைவில்லாது அவனின் பார்வை மொத்தமும் இவளிடம் மட்டும் தான். இப்பொழுது அதில் சிறு கூச்சமும் வர, அதற்குமேல் தாமதிக்காமல் தானே அவனை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
அவ்வளவு நேரம் இருந்த படபடப்பு, இயலாமை, வருத்தம் எல்லாம் எங்கோ சென்றிருக்க, ஆவலும் தயக்கமுமாய் அவனை நோக்கி முன்னேற, பார்த்தவன் இன்னமும் பார்த்தபடி அசையாமல்.
அருகே வந்து திகழ்மதி புன்னகைக்க பதிலுக்கு புன்னகை கொடுத்தவன் வாய் திறக்காமல் இருக்க மனம் சிணுங்கியவள் பேசவும் தயங்கினாள்.
“எப்படி இருக்கீங்க திகழ்!” என்று வார்த்தைகளில் அத்தனை வெளிச்சம் அவள் கண்களில்.
வந்த இருபது நிமிடம் மொத்தமும் அவளை மட்டும் தானே கவனித்து நிற்கிறான் அவன். தான் தேடியவளை கண்களில் நிரப்பி தன் உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத நிலையில் தன்னை கொஞ்சமேனும் தேடுவாளா என உருகியவனின் கண்களுக்கு விருந்தாய் அவளின் ஒவ்வொரு அசைவுகளும்.
கூடவே தன்னைப் பார்த்து மகிழ்ந்து சிரித்து, பின் அதை அடக்கி, பேசவா வேண்டாமா என தயங்கி, தன் முன் வந்து நிற்பதற்குள் தான் எத்தனை முக பாவங்கள் அவளிடம் என பார்த்து நின்றவனுக்கு உள்ளுக்குள் அத்தனை அத்தனை ஆர்ப்பாட்டம் இருந்த போதும் அமைதியான பார்வையோடு அவளை எதிர்கொண்டான்.
அதற்கு மேலும் அவளை சோதிக்க மனமில்லை என்று அவனே ஆரம்பித்து வைத்தான் பேச்சை.
“அவங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடும் அண்ணி. பார்த்தீங்க இல்ல.. ரெண்டு பேருமே தயங்கி தயங்கினாலும் ஒருவழியா பேசுறாங்க.. சமாதானம் ஆகிடுவாங்க. மதி அவங்க அத்தை கூட தானே வந்திருக்கா.. நீங்க பேசி பொண்ணை விட்டுட்டு போக சொல்லுங்க.. இனி இப்படி பிரச்சனை வராது நாங்க பாத்துக்குறோம்னு சொல்லுங்க!” என்று புகழ் தாய் வள்ளி மீனாட்சியிடம் காதுக்குள் ரகசியம் போல சொல்ல, இவ்வளவு நேரம் சமாளித்த மீனாட்சிக்கு இதன் அடுத்தக்கட்டத்தை சட்டென சிந்திக்க முடியவில்லை.
“நான் வேணா ஹெல்ப் பண்ணவா?” என புகழ் வந்து அவரருகே நிற்க, அதே நேரம் சரியாய் கனகாவும் மதி ஒரு ஆணிடம் தனியே பேசிக் கொண்டு நிற்பதை கண்டுவிட்டார்.