நேசம் 4
காந்திபுரத்தில் உள்ள தங்களது ராமச்சந்திரா ஜவுளி நிறுவனத்தின் குடோனை பெரிதாக்கும் பணி நடந்து கொண்டிருக்க, அதை மேற்பார்வை பார்க்க செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான் ஆர்யன்.
அங்கே தான் அவர்களின் ஆரம்பம் என்பதால் அந்த ஜவுளிக்கடையும் பிரம்மான்டமாய் மற்றவற்றை விட தனித்துவம் வாய்ந்ததாய் தான் இருக்கும். குடோனுமே பெரியது தான் எனினும் இப்பொழுது சுற்றி உள்ள கிளைகளுக்கும் அங்கிருந்தே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு ஏற்பாடு செய்ய முடிவுக்கு வந்தது ஆர்யன் தான். விஸ்வநாதனுடன் அதை கலந்து பேச, அவரும் சில கணக்கிடுகளுக்கு பின் ஏற்றுக் கொண்டார்.
அவ்வளவு எளிதில் யார் பேச்சையும் கேட்டுவிடுபவர் அல்ல விஸ்வநாதன். ஆனாலும் முடிவு செய்துவிட்டால் எப்பாடு பட்டேனும் முடித்துவிட்டு தான் அமருவார்.
அதனால் தான் தன் திருமணத்தை அவர் கைகளுக்கு எட்டாதவாறு கழண்டு நழுவிக் கொண்டிருந்தான் ஆர்யனும்.
காதலிக்கும் பெண்ணின் வீட்டில் தாங்களே சென்று பேசுகிறோம் என்று சொல்லியும் மகன் கேட்கவில்லையே என்ற ஆதங்கத்திலும் கோபத்திலும் புகழ் திருமணத்தில் அனைத்தையும் அவசர அவசரமாய் தாய்மாமாவாய் அவர் முன்நிற்க, தனக்கு அதை சாதகமாக்கிக் கொண்டான் புகழும்.
கார் சாவியை எடுத்துக் கொண்டு ஆர்யன் தன் அறையைவிட்டு வெளியேற அவனது அலைபேசி அழைத்தது.
“ம்மா கிளம்புறேன்!” என்று சொல்லி பூஜை அறையில் மௌன விரதம் இருந்த அன்னையை கண்டவன் தலையசைத்துவிட்டு கிளம்பி அலைபேசியை காரில் இணைத்தான். லாவண்யா தான் அழைத்திருந்தாள்.
“சொல்லு லாவி எப்படி இருக்க? சந்தோஷ் எப்படி இருக்கார்?” என்று கேட்க,
“நாங்க நல்லாருக்கோம். உனக்கென்ன ஆச்சு?” என்றாள் எடுத்ததும்.
“ஏன் எனக்கென்ன?” என்றான்.
“உனக்கு ஒண்ணுமில்ல தான். ஆனா கல்யாணம் வேண்டாம்னு சொல்லுறியாமே! எத்தனை வருஷம் தான் இதையே சொல்ல போற?” லாவண்யா கேட்க,
“ஏன் பேசமாட்ட. அவரவர் கஷ்டம் அவரவரருக்கு. இப்ப என்ன சொன்னான் உன்கிட்ட உன் பாச மலர்?” என்று சரியாய் கணித்து ஆர்யன் கேட்டான்.
“மாமா உன் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் தான் டைம் குடுத்திருக்காராமே! அழுகாத குறை தான். என்னால தான் இப்ப அவன் மாட்டிக்கிட்டு தவிக்குறான்னு புலம்புறான்!” என்று புகழ் கூறியதை லாவண்யா சொல்ல,
“புலம்புனா மட்டும் ஆச்சா? அவன் சொல்லலைனாலும் அவனால தான். என்னை கோர்த்து விட்டு ஈசியா கல்யாணத்தை நடத்திகிட்டான். இங்க என்னை டார்ச்சர் பன்றாங்க. அப்பா வேற, சொன்னா அதுபடி தான் நிப்பாரு. பக்கு பக்குன்னு இருக்கு. அம்மா இன்னைக்கு மௌனவிரதம் எனக்காக. அதுவும் நாளைக்கு நான் வாயை திறக்கலைனா வீட்டுல என்ன நடக்கும்னு நினச்சு பார்க்கவே முடியல”
“புகழ் கேட்டதையே தான் நானும் கேட்குறேன் ஆர்யா. ஸ்கூல் காலேஜ்னு இவ்வளவு நாள் வராத லவ் இனி எங்க இருந்து வரும்னு நீ இவ்வளவு அடம் பண்ற?”
“லாவி! நீயுமா? அதெல்லாம் வரும் சட்டுன்னு மழை வர்ற மாதிரி. உனக்கு லக்கு சந்தோஷ் கிடைச்சுட்டான். எல்லாருக்கும் அர்ரேஞ் மேரேஜ்ல சேட்டிஸ்ஃபை ஆயிடுமா? எனக்கு லவ் பீல் வேணும்!”
“நீ வாய் வார்த்தையா மட்டும் சொல்லிட்டே இருந்தா போதுமா ஆர்யா? அதுக்கு என்ன ட்ரை பண்ணின? என்ன நம்பிக்கைல இன்னும் உன்னை மாமா விட்டு வைப்பாங்கனு நம்புற? நாளைக்கு ஈவினிங் நீ மாமாக்கு பதில் சொல்லணுமே!”
“நான் ஏன் சொல்லணும்? இவ்வளவுக்கும் காரணம் உன் அண்ணன் அந்த கடன்காரன் தான். கல்யாணம் முடியவும் எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேட்டு உண்மையை சொல்றேன்னு சொன்னான். அவன் சொல்லுவான்!”
“சரி அடுத்து?”
“அடுத்து என்ன? எனக்கு புடிச்ச பொண்ணை தேடுவேன்!”
“எவ்வளவு நாள்?”
“இப்படி கேட்டா நான் என்ன சொல்ல? நேத்து கூட நம்ம கடைல ஒரு பொண்ணை பார்த்தேன். ஹப்பா! அப்படி ஒரு பீல் லாவி!”
“பார்றா! அப்ப பிடிச்சிட்டியா?”
“எங்க? கண்ணை மூடி திறக்கும் முன்ன காணும். நானும் ரௌண்ட்ஸ் போற மாதிரி கடை முழுக்க தேடுனேன்.. ம்ம்ஹுமம்.. அவ்வளவு தான் என்னோட லக் எல்லாம். நான் என்ன பண்றது?”
“இப்படி இருந்தா எப்படி ஆர்யா? எனக்கு ஒன்னும் புரியல. புகழ் மட்டும் இதுல என்ன பண்ணுவான். சரி புகழ் உண்மையை சொல்லட்டும். அடுத்து மாமா எப்படியும் பொண்ணு பார்க்க கிளம்புவாங்க தானே?”
“நீ வேற பயத்தை கிளப்பாத லாவி. ப்ச்!” என்று ஆர்யன் சலித்துக் கொள்ள,
“உனக்கு பிடிக்காது தான் ஆனாலும் சொல்றேன். அர்ரேஞ் மேரேஜ்னா பெரிய கொலை குத்தம் மாதிரி பார்க்காத. உன் அப்பா பாக்குற பொண்ணு நேத்து நீ பார்த்த பொண்ணாவும் இருக்கலாம் இல்ல பார்த்த உடனே பிடிக்கலாம். நெக்ஸ்ட் மேரேஜ்க்கு டைம் கேளு. பேசி பழகலாம். உனக்கு பிடிக்க வாய்ப்பிருக்கு இல்ல!”
“பிடிக்க வாய்ப்பில்லைனா?”
“எதே?” என அதிர்ந்தவள்,
“ஏன் டா கொஞ்சம் கூட பாசிட்டிவா நினைக்க மாட்டியா?”
“நினச்சு நடக்கலைனா?”
“உனக்கு புத்தி சொன்ன என் புத்தியை சொல்லணும். இப்ப தெரியுது ஏன் புகழ் அவ்ளோ புலம்பினான்னு.”
“எனக்கு புத்தி சொன்னது போதும். மரியாதையா அவனை நாளைக்கு வீட்டுல வந்து பேச சொல்லு. அவன் மட்டும் நாளைக்கு வர்ல ஆர்யா யாருன்னு நாளைக்கு பார்ப்பான்.”
“உன்னை புரிஞ்சிக்கவே முடியல. என்னவோ பண்ணு. ஆனா மாமா கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல தயாராகிக்கோ!” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
இவனுக்கும் அந்த கவலை தான். அனாலும் ஒரு நம்பிக்கை. நாளை புகழ் வந்து உண்மையை கூறிவிட்டாள் தந்தை கைகாலில் விழுந்தாவது இன்னும் ஒரு வருடம் நேரம் வாங்கிவிட வேண்டும் என்று.
நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன? ஆர்யனின் தந்தையிடம் சொல்லிய பொய்யை உண்மையாக்க அல்லவா புகழ் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
************************
“இதோ பக்கத்துல வந்துட்டேன் அர்வி. அத்தை என்ன பன்றாங்க?“ கண் கலங்க திகழ்மதி கேட்க, அரவிந்த் கூறிய பதிலில் “பத்து நிமிசத்துல வந்துடுவேன்!” என்று சொல்லி வைத்துவிட்டு சொன்னபடி வந்து சேர்ந்த இடம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை.
அன்பரசனின் பெயரை சொல்லி அங்கிருந்த நர்சிடம் அவர்கள் இருக்கு அறையை கேட்டு தெரிந்து கொண்டு ஓடினாள்.
சனி ஞாயிறு விடுமுறை உடன் இரண்டு நாள் விடுப்பு எடுத்து அன்பரசன் தனது வீட்டிற்கு வந்திருந்த நேரம் கனகா அனன்யாவுடன் குடும்பமாய் வெளியே சென்று திரும்பும் நேரம் அவர்கள் சென்ற ஆட்டோ விபத்திற்கு உள்ளாகி இருக்க, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பு தான் திகழ் மதிக்கு தகவல் வந்தது.
உஷா மூலமாய் கோவையில் பிரபல ராமச்சந்திரா ஜவுளி நிறுவனத்தின் விளம்பர படத்திற்கான அட்ஷூட்டிங்கில் திகழ்மதி கடந்து இரண்டு நாட்களாய் சென்று கொண்டிருக்க, எப்பொழுதும் போல மொபைலை சைலன்ட் மோடில் விட்டுவிட்டு ஷூட்டிங் முடிந்து நான்கு மணி நேரம் கழித்து எடுத்த போது தான் அவளுக்கு விஷயமே தெரிய வந்திருந்தது.
பதறி ஓடி வந்தவளை மருத்துவமனை என்றும் பாராமல் கனகா வார்த்தைகளால் குத்தி கிழித்துவிட்டார்.
அரவிந்த் கல்லூரியில் இருந்து மகிழினியை அழைத்துக் கொண்டு திகழ்மதிக்கு முன் அங்கே சென்றிருந்தான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் அனன்யா தலையிலும் கையிலும் சிறு பேண்டேஜுடன் வர, மகிழினி அவளை பிடித்து அழுது கரைந்திருந்தாள். அதுவும் கனகா வெளிவரும் வரை மட்டும் தான்.
கனகாவை அறைக்கு மாற்றி இருக்க, அவருக்குமே பெரிதாய் அடி இல்லை என்றாலும் வலது கையை ஊன்றியதில் கம்பி கிழித்து விட்டிருக்க, அதற்கு சிறு கட்டுடன் இன்னும் விபத்தின் பயத்தில் அரண்டுப் படுத்திருந்தார்.
அனன்யா தாயிடம் பேச அறையின் ஓரத்தில் மகிழினி அமைதியாய் நிற்க, அரவிந்த் மட்டும் அருகில் சென்று விசாரித்தான். அதற்கான பதில் கிடைக்காவிட்டாலும் விசாரித்தவன் மீண்டும் மகிழினி அருகே சென்று நிற்க, அங்கே வந்து சேர்ந்தாள் திகழ்மதி.
“அத்தை!” என்றவளும் எதிர்பார்க்கவில்லை என்பதை போல அதிர்ந்து பார்த்தவள் அருகில் சென்று,
“என்னாச்சு த்தை? அய்யயோ ரொம்ப அடியா? அனு!” என்று அனன்யாவின் கன்னம் கைகளைப் பிடித்துப் பார்த்தவள் கண் கலங்கிவிட, நியாபகம் வந்தாவளாய்,
“மாமா? மாமா எங்க த்த? அனு மாமா எங்க?” என்று கேட்க, எதற்கும் பதில் சொல்லவில்லை கனகா.
“அர்வி மாமா எங்க? “ என்று தம்பியிடம் கேட்க,
“ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு க்கா. இன்னும் நாங்க யாரும் பார்க்கல.” என்றவன்,
“மாமாக்கு காலுல நல்ல அடியாம். நர்ஸ் தான் சொன்னாங்க!” என்றவன் திரும்பி அத்தையைப் பார்த்தான்.
“ஒரு நாள் தான? பாவம் டி. மகியை மட்டுமாவது கூட்டிட்டு போவோம்!” என்று அன்பரசன் காலையில் கேட்டிருக்க,
“இப்ப எங்களோட வர இஷ்டமா இல்லையா? எப்பவும் தங்கச்சி குடும்பத்தை சுமந்துட்டே இருக்கணுமா? எங்களுக்குன்னு அப்ப என்ன சந்தோசம் இருக்கு” என்று கேட்டிருந்தார் கனகா.
காலையில் எதிர்பாராத விதமாய் இதை கேட்டிருந்தான் அரவிந்த். ஆனால் யாரிடமும் சொல்லி இருக்கவில்லை. அவர்கள் கேட்டிருந்தாலும் மகிழினியை மட்டும் என அவர்களோடு அனுப்பி இருக்க மாட்டான் தான். மாமா அறியாமல் சுடு வார்த்தையில் வதைத்திருப்பார் தங்கையை என்று.
“அண்ணி! அப்பா காலுல பஸ் ஏறிட்டு. பயமா இருக்கு.” என்று அனன்யா அழ, கனகாவின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அனன்யா அருகில் சென்று அணைத்து சமாதானம் கூறிய திகழ்மதி கண்களிலும் கண்ணீர்.
காலையில் உஷா கூறியதை கேட்டதில் இருந்து அத்தனை கோபம் உஷா மீது திகழ்மதிக்கு. ‘என்னை என்னவென்று நினைத்துவிட்டாள்?’ என்று மருகி அந்த படப்பிடிப்பை முடிப்பதற்குள் அத்தனை பேசி இருந்தாள் திகழ்மதி உஷாவை.
“ஈசி மதி! பிடிக்கலைனா விட்டுடு. இதுவும் ஒரு வாய்ப்பு தானே?” என்ற உஷாவை மிரட்டலாய் ஒரு பார்வை திகழ்மதி பார்க்க, அதன்பின் உஷா வாய் கொடுக்கவே இல்லை அவளிடம்.
அங்கிருந்து கிளம்புவதற்குள் அடுத்த இடியாய் குடும்பத்தின் விபத்து செய்தி.
“பெரிய பிரச்சனை எதுவும் இல்ல” என்று ஆரம்பித்த மருத்துவரின் வார்த்தையில் கிடைத்த நிம்மதி அடுத்த செய்தியில் இருந்த இடம் தெரியாமல் போனது மொத்த குடும்பத்திற்கும்.
“கால் எலும்புல பலத்த அடி. ஆபரேஷன் பண்ணியே ஆகணும். குறைஞ்சது ஆறேழு லட்சம் ஆகும்!” என்று சொல்லி செல்ல, அனைவருமே அதிர்ந்திருந்தனர்.
கணவனின் நிலையில் கவலை இருந்த போதும் கூட அந்த நேரத்திலும் திகழ்மதியை வார்த்தைகளால் வதம் செய்துவிட்டார் கனகா.
திகழ்மதி ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை நோக்கி நகர காலம் முடிவு செய்திருக்க, அதை நோக்கிய பயணமும்.
காணலாம்..