“டேய்! ஏன் டா இப்படியெல்லாம் பண்ற. அநியாயம் டா!” என்ற புகழ் புலம்பலில்,
“நான் என்ன டா பண்ணேன்?” என்றான் சாதாரணமாய் ஆர்யன்.
இதோ வீட்டு வாசலின் முன் ஆர்யாவும் புகழும் இறங்கி நிற்க, திகழ்மதி இன்னும் காரினுள்.
“என்ன பண்ணியா? வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றவன் எவன் டா தங்கத்துல தாலி பண்ணுவான். அதுவும் குடும்ப வழக்கம்னு அம்புட்டு கரெக்ட்டா பார்த்து உங்கம்மா செயின் மாதிரியே வாங்கி குடுத்துருக்க. நேத்து மட்டும் தான டா நான் உன்னை பாக்கல. அதுக்குள்ள இந்த வேலையை எப்ப பார்த்த? அதுவும் நீ அந்த பொண்ணுக்கு ட்ராமா சொல்லி குடுக்குறதை எல்லாம் பாக்கும் போது நிஜமாவே ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா லவ் பண்ணி இந்த பிளான் பண்ணின மாதிரியே தோணுது!” என்று புகழ் அடுக்கிக் கொண்டே போக, ஆர்யனின் முகத்தில் புன்னகை.
“சிரிக்காத டா. எத்தனை திட்டு எத்தனை பேருகிட்ட வாங்கியிருக்கேன் தெரியுமா? அதை கூட விடு. எனக்கே அவ்வளவு கில்டியா இருந்தது நம்ம கல்யாணத்துக்காக இவன் வாழ்க்கையை சிக்கலாக்கி விட்டுட்டோமோனு. இப்ப நீ பண்றதை பார்த்தா தான் எனக்கு பயமா வருது.”
“புகழ்! பண்றதை தெளிவா பண்ணனும். மஞ்ச கயித்துல கட்டினா தான் தாலியா? அப்படி நம்ம வீட்லயோ இல்ல ரிலேட்டிவ்ஸ் யாராச்சும் போட்டு நீ பாத்துருக்கியா? இல்லைல? அதான் வாங்குனேன். அப்புறம் திகழ்கிட்ட சொன்னதும் அப்படி தான். நம்புற மாதிரி சொல்லணுமே!” என்றான் ஆர்யா விளக்கமாய்.
“நீ மத்தவங்க நம்புறதுக்காக சொல்ற மாதிரியும் செய்யுற மாதிரியும் இல்ல. அடேய் எப்பா! அந்த பொண்ணை நான் பத்திரமா ஒப்படைக்கனும் டா”
“இப்பவும் பத்திரமா தான் என்கிட்ட ஒப்படைச்சு இருக்க!” என்றதும்,
“டேய்!” என்ற புகழ் அதிர்ந்துவிட,
“எனக்கென்னவோ இப்ப கொஞ்சம் தோணுது நான் தேடின பொண்ணு திகழா இருக்குமோன்னு!” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் பேச்சு வாசலில் கேட்ட அன்னை சத்தத்தில் நின்றுவிட,
“இதுவும் என் கணக்கு தானா டா?“ என்ற புகழுமே தன் குழப்பம் அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டு வாசலைப் பார்த்தான்.
“ராஜா! வள்ளி சொல்றதெல்லாம் உண்மையா? அப்படி எதுவும் இல்லையே? விளையாட்டுக்கு தான அப்படி சொன்ன? உங்கப்பா உள்ள தான் டா இருக்காங்க. இல்லனு சொல்லு ஆர்யா. நாங்களே கல்யாணம் பண்ணி வைக்குறோம். அந்த பொண்ணு வீட்டுல சம்மதம் சொல்லலைனாலும் பரவாயில்ல. கூட்டிட்டு வா நாம கிராண்ட்டாவே பண்ணலாம் டா!”
வள்ளி சொல்லும் அனைத்தும் உண்மை இல்லை என்று மகன் சொல்ல வேண்டுமே என்னும் பரிதவிப்புடன் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
“திகழ்!” என்று அழைத்ததோடு கார் கதவையும் அவன் திறக்க, உள்ளே ஒரு பெண் என்பது வரை பார்த்த மீனாட்சிக்கு மூச்சைடைத்து வந்தது.
“இறங்கு!” என்று கண்ணசைத்தவன் வார்த்தைகளாகவும் கூற, ஒரு தயக்கதோடு இறங்கி அவனருகில் நின்றாள்.
“ராஜா!” என்ற மீனாட்சியின் கண்களில் தெளிவாய் திகழ்மதியின் கழுத்தினில் புதிதாய் மின்னிய மாங்கல்யம் விழுந்து கண்களை நிலைக்குத்தி நிற்க வைத்தது.
“அண்ணி!” என்று வள்ளி மீனாட்சி அருகே நிற்க,
“அத்தை!” என்று புகழுமே அவர் அருகில் சென்றுவிட்டான் மீனாட்சி லேசாய் தளர்வதைக் கண்டு.
“ம்மா!” என்ற ஆர்யனும் அருகே வர நினைக்க, அன்னையின் பார்வையில் அவனால் நகர முடியவில்லை.
“அத்தை ப்ளீஸ்! அவங்களை உள்ளே கூப்பிடுங்க. பெரிய இஷ்யூக்கு அப்புறம் தான் இப்படி ஒரு முடிவு பண்ணினது. நீங்களே புரிஞ்சிக்கலைனா எப்படி?“ புகழ் சொல்ல,
“எவ்வளவு துணிச்சலா இப்படி ஒன்னை பண்ணிட்டு வீட்டுக்கு வருவான்? அவனை எப்படி உள்ள கூப்பிட முடியும்? அம்மானு நான் ஒருத்தி இருக்கேனே! என்கிட்ட கூட சொல்லாம…” என்றவர் கண்கள் நிறைந்துவிட,
“ம்மா!” என்று அதை காண சகிக்காமல் ஆர்யன் அவர் அருகில் வந்து கைகளைப் பிடிக்க, சட்டென மீனாட்சியின் கால்களில் விழுந்திருந்தாள் திகழ்மதி.
யாரும் எதிர்பாராது நிற்க, மீனாட்சி ஓரடி விலகி இருக்க, “ப்ளீஸ் ஆண்ட்டி! அவங்க பாவம். எதுவும் சொல்லாதீங்க!” என்றாளே பார்க்கலாம்.
ஆர்யனே ஒற்றைப் புருவத்தை ஏற்றி வியப்பாய் பார்க்க, அவன் அறியவில்லை தாய் ஸ்தானத்தில் இருப்பவரின் இத்தகைய ஆற்றாமை நிலையை காண அவளால் தாங்க முடியவில்லை என்று. கூடவே அன்னையை இப்படி ஏமாற்றுகிறானே என ஆர்யன் மீது வருத்தமும்.
“என்னால தான் இதெல்லாம். எங்க வீட்டுல கொஞ்சம் ப்ரோப்லேம். நிச்சயமா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. வெயிட் பண்ண டைமும் இல்லை” என்று திகழ்மதி கூற,
“ம்மா! நீங்களே என்னை புரிஞ்சிக்கலைனா எப்படி?” என்றான் ஆர்யனும்.
“புகழ்! போய் மாமாவை கூட்டிட்டு வா!” வள்ளி சொல்ல, புகழ் தலையசைத்து நகரவும்,
“எந்திரிச்சு நில்லு மா” என்றார் திகழ்மதியிடமும்.
மீனாட்சி எதுவும் பேசவில்லை. ஆனாலும் மகன் செய்ததை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
“பாருங்க! என்ன பண்ணிட்டு வந்திருக்கான் பாருங்க!” என்று கண்ணீரோடு மீனாட்சி.
“உன்கிட்ட என்ன சொன்னேன்? நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க? நான் பேசுறேன் பேசுறேன்னு சொன்னேனே! அப்படி என்ன டா அவசரம் உனக்கு? உன் கல்யாணம் எப்படி நடக்கணும்? எத்தனை பேச்சு வரும்? எதாவது யோசிச்சியா நீ?” என்றவர்,
“அவனுக்கு எல்லாம் தெரியும். அவன் பார்த்துக்குவான்னு சொன்ன. இப்ப பாரு உன் மவன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான்னு!” என்று மீனாட்சியை திட்ட ஆரம்பித்துவிட்டார்.
“ப்பா ப்ளீஸ் போதும்!” என்ற ஆர்யனின் சத்தத்தில் கோபமாய் இருவரும் பார்க்க,
“கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு தானே இவ்வளவு நாளும் டார்ச்சர் பண்ணீங்க? நீங்க கேட்டதை தானே பண்ணிட்டு வந்திருக்கேன்? “ என்றவன் நியாயத்தில் புகழே தலையில் அடித்துக் கொள்ள,
“அவ்வளவு திமிரா போச்சா உனக்கு? ராஜா ராஜானு செல்லமா வளத்து விட்டதுக்கு தானே இப்படி ஒரு காரியம் பண்ணி வச்சிருக்க?” விஷ்வநாதன்.
“ப்பா இன்னுமா புரியல? அவ்வளவு ஆசை உங்களுக்கு என் கல்யாணத்துக்கு இருக்குன்னு தெரிஞ்சும் நான் இப்படி வந்து நிக்குறேன்னா அதுக்கு ரீசன் இருக்கும்னு நீங்க புரிஞ்சிக்க வேண்டாமா?” என்ற ஆர்யா,
“ம்மா! ஊர் கூட்டி பண்ற நிலைமை இல்ல திகழ் பேமிலில. ஏன்னு கேட்காதீங்க. சொல்ற நிலைமையும் இல்ல! நமக்கு சொசைட்டில இருக்குற பேருக்கு நிச்சயம் என்னோட மேரேஜ் மீடியா எல்லாம் வைரல் ஆகும். அது வேண்டாம்னு தான்” என்றான்.
‘எப்படி சமாளிக்குறான் பாரேன்!’ புகழ் வாய் திறந்து பார்த்து நிற்க,
“நீங்க தானே சொல்லுவீங்க அண்ணி! என் பையன் எது பண்ணினாலும் அர்த்தம் இருக்கும். ரொம்ப அறிவாளினு. அவன் இவ்ளோ சொல்லுறான் கொஞ்சம் யோசிங்க. நீங்க தானே அண்ணனுக்கு எடுத்து சொல்லணும்?” என்றார் வள்ளியும்.
“மாமா! ஆர்யா காரணம் இல்லாம எதுவும் பண்ண மாட்டானே மாமா. நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்!” பவ்யமாய் புகழ்.
“நீ என்ன அவனுக்கு சப்போர்ட்டா?”
“அண்ணே! முதல்ல பசங்கள உள்ள கூப்பிடுங்க. வேலைக்காரங்க எல்லாம் இருக்காங்க!” என்றார் வள்ளி.
சுற்றிலும் பார்த்த விஷ்வநாதன் மற்றவர்கள் பேச்சில் கொஞ்சம் நிதானித்து அழைக்காமல் உள்ளே செல்ல,
“நீங்க உள்ள கூப்பிடுங்க அண்ணி!” என்றார் வள்ளி தேவி.
“ஏன் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தவனுக்கு உள்ளே கூட்டிட்டு வர தெரியாதா? வருவான்” என்றவர் மகனை முறைத்துவிட்டு திரும்ப,
“அப்படி எல்லாம் வர முடியாது. திகழ் ஃபர்ஸ்ட் டைம் வர்றா நம்ம வீட்டுக்கு. ஆரத்தி சுத்த சொல்லுங்க அத்தை. அம்மா தான் சுத்தணும். அப்ப தான் உள்ள வருவேன்!” என்றான் அடமாய்.
‘அடேய்! உரண்டையை கையைப் பிடிச்சு இழுக்கிறானே!’ என்று புகழ் எண்ணம் குரல் எழுப்ப,
“அண்ணி! நம்ம பையன் வாழ்க்கை. உங்களுக்கு சொல்லனுமா நான்!” என்ற வள்ளி உள்ளே சென்றவர் குங்குமம் கரைத்து வெற்றிலை சேர்த்து கொண்டு வர, இருவருக்குமாய் சேர்த்து மீனாட்சி சுற்றிவிட்டு வள்ளி கையில் கொடுக்க, அவர் வெளியே கொண்டு செல்லவும் மீனாட்சி பின்னோடு ஆர்யா திகழ்மதி வலது கால் வைத்து உள்ளே நுழைய, விஷ்வநாதனும் ஹாலில் தான் இருந்தார்.
“சத்தியமா இது பொய் கல்யாணம் எல்லாம் இல்லைனு எனக்கே தோணுது டா. நீ முடிவு பண்ணிட்டு தான் ஒவ்வொண்ணும் பண்ற. ஆனா அதை என்னை வச்சு பண்ற பாத்தியா அது தான் டா தாங்க முடியல!” என்றான் புகழ் ஆர்யனிடம்.
“நானும் பிளான் பண்ணி பண்ணல. ஆனா திகழ் அம்மா கால்ல விழுந்ததாகட்டும், அம்மா எங்களை ஏத்துகிட்டுஆரத்தி எடுத்ததாகட்டும், இப்ப ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள ஒன்னா உள்ள வந்ததாகட்டும். அவளுக்கு எப்படியோ ஆனா நான் முடிவு பண்ணிட்டேன். இப்ப சொல்றேன். திகழ் இந்த வீட்டு மருமகளா வந்தது வந்தது தான். நிஜமா என்னால நினச்சு கூட இப்ப பார்க்க முடியல இன்னொரு பொண்ணு கூட இதே மாதிரின்னுலாம்!” என்றான் அத்தனை உறுதியாய் ஆர்யன்.
“எல்லாம் சரி தான். அப்பவும் அம்மா ஏத்துகிட்டு பண்ணினாங்கனு சொல்ற பார்த்தியா. உனக்கு மன தைரியம் ஜாஸ்தி தான் டா இப்படி எல்லாம் பேச. எல்லாம் நீயே நினச்சு நடக்க வச்சுக்கிட்ட. மைண்ட் இட்!” புகழ் சொல்ல,
“சோ வாட் மேன்? நமக்கு வேணும்னா நாம தானே ரிஸ்க் எடுக்கணும்? அண்ட் இதெல்லாம் ரிஸ்க் இல்ல. இனி திகழை ஒரு மாசத்துல…”
“ஒரு மாசத்துல?” என்று புகழ் பதற,
“ஒரு மாசத்துல என்னை அவளுக்கு புரிய வைக்கணும். என்னை புடிக்க வைக்கணும்னு சொல்ல வந்தேன் டா. எப்ப பாரு லொள்ளு பேசிகிட்டு..” என்றான் ஆர்யன்.
“எது நான் லொள்ளு பேசுறேனா? அப்படி தானோ? நான் தான் பேசுறேனா?” என தனக்கு தானே புகழ் புலம்பவே ஆரம்பித்துவிட்டான்.
“ம்மா! நான் போய் பாட்டியை பார்த்துட்டு வர்றேன்!” ஆர்யன் சொல்ல,
“எங்களுக்கே இன்னும் நீ பதில் சொல்லல!” என்றார் விஷ்வநாதன்.
“ப்பா! நடந்ததை சொல்லிட்டேன். உங்க கோபம் நியாயம் தான் எனக்கு புரியுது. ஆனா என் லைஃப் முக்கியம் இல்லையா ப்பா? இன்னும் ஒரு மாசம் போகட்டும். அதுக்குள்ள அவங்க பேமிலிகிட்ட பேசிடுறேன். அப்புறமா ரிசெப்சன் கிராண்டாவே வச்சுக்கலாம்.” தெளிவாய் அத்தனை திட்டமிட்டு அவன் பேசுவது போல தெரிய, அதற்கு மேலும் கோபமாய் அவனிடம் பேசிட முடியவில்லை யாராலும்.
“எப்படி டா இப்படி பேசுற? அவ்வா! உன்னை போய் என்னலாம் நினச்சுட்டேன். அந்த பொண்ணு தான் டா பாவம். ஒரு குடும்பத்தை ஏமாத்துறோம்னு நினைச்சுட்டு கவலைல இருக்கும். நீ ஆனா அதை தான் ஏமாத்த போற!” புகழ் சொல்ல,
“சில விஷயங்கள்ல சான்ஸ் கிடைக்கும் போதே யூஸ் பண்ணிக்கணும் புகழ். இப்ப விட்டுட்டா நான் அவ பின்னாடி சுத்தி லவ் ப்ரொபோஸ் பண்ண நாங்க ரெண்டு பேருமே டீன் ஏஜ் இல்ல. அண்ட் திகழை பார்த்தா அந்த மாதிரி கேரக்டர்க்கு சரியா வரவும் மாட்டா. ஏன் ஏமாத்துறேன்னு நினைக்கனும்? எனக்கான டைம்னு வச்சுக்கலாம்!” என்றான் ஆர்யா.
“என்னவோ சொல்ற! உனக்கு நல்லதா நடந்தா எனக்கும் சந்தோஷம் தான் டா. ஆனா இனி என் பேரை சொல்லாத இதுக்கெல்லாம் காரணம் நான்னு. அடி வயிரெல்லாம் கலங்குது எப்படி சிக்கி இருக்கேன் பாருன்னு!” என்று சொல்ல, சிரித்தவன் திகழுடன் அன்னையை அழைக்க, அனைவருமே அடுத்த வீடான பட்டம்மாள் வீட்டை அடைந்தனர்.