இரவு எல்லாம் தன் நிலா பெண்ணோடு கனவிலும், பல்வேறு சிந்தனைகளும் ஆட்கொண்டதில், நேரம் கழித்து உறங்கி இருந்த போதிலும், மனதின் உற்சாகமோ என்னவோ காலையில் வழக்கமான நேரத்திற்கே எழுந்து விட்டான் வசீகரன்.
அவன் தயாராகி வெளியே வர, உமையாளோ இன்னும் அவளின் அறையில் இருந்து, வெளி வந்த பாடு இல்லை.
இன்று ஊர் சுற்றி பார்க்க போவதால், நண்பர்கள் மூவரும், உமையாளுடன், ஒன்றாக இங்கிருந்து கிளம்பி செல்வதாக தான் திட்டம்.
பின்பு நட்சத்திர விடுதிக்கு சென்று, அவர்களின் விருந்தினர்களை அழைத்து கொண்டு, இவர்கள் சென்ற காரை அங்கு நிறுத்துவிட்டு, அங்கு தயாராக இருக்கும் வாகனத்தில் அனைவரும் செல்வதாக தான் ஏற்பாடு.
வசீகரன் உமையாளிடம் பேசுவதற்காக காத்திருக்க, அவள் தயாராகி வரும் முன், பாலா அவனை தொடர்ந்து கிருஷ்ணாவும் இவனின் வீட்டிற்கு வந்து விட்டனர்.
வசீகரனும்,”சரி பாப்பு எங்க போக போறா, பொறுமையா பேசிக்கலாம், பார்த்துக்கலாம்”, என்று மனதில் நினைத்து கொண்டு, தன் நண்பர்களை வரவேற்று, அவர்களுடன் அளவளாவ ஆரம்பித்தான்.
[the_ad id=”6605″]
வசீகரனின் முகத்தில் இருந்த பொலிவில் கிருஷ்ணாவின் புருவங்கள் உயர, அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருந்தான் அவன்.
பாலாவோ வெளிப்படையாகவே வசீகரனை குறுகுறுவென்று பார்த்தவன், எழுந்து வந்து அவனின் முகத்தை கைகளால் பிடித்து, இப்படியும், அப்படியும் திரும்பி பார்த்து கொண்டே,
“என்ன மச்சான் பேஸ் இவ்ளோ க்ளோவா இருக்கு, நேத்து ஈவ்னிங் கூட இப்படி இல்லையே, நைட் தான் என்னமோ நடந்து இருக்கு, உண்மையை சொல்லு, நடந்தது என்ன” என்று கேட்க, வசீகரனோ,
“ஒன்னும் இல்லடா” என்று அவனை சமாளித்தாலும், மனமோ “அவ்வளவு அப்பட்டமாக தெரிகிறது” என ஆராய்ந்து கொண்டிருந்தது.
அப்போது தான் கிருஷ்ணாவின் பார்வையை உணர்ந்த வசீகரன், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், அவனை பார்த்து கண்களை சிமிட்ட, கிருஷ்ணாவின் பார்வையோ இன்னும் கூர்மையானது.
வசீகரனின் பதிலை நம்பாத பாலாவோ,
“சொல்ல மாட்ட அப்படி தானே, விடுறா விடுறா கத்திரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும், அப்போ ஒரு கை பார்த்து கொள்கிறேன் உன்னை” என பழமொழி சொல்ல, வசீகரனோ அதற்கும் தன் சிரிப்பையே பதிலாக தந்தான்.
அதன் பிறகு, பாலா பொதுவாக வேறு பேச ஆரம்பிக்க, வசீகரன் மற்றும் கிருஷ்ணா இருவரும் அவனுக்கு செவி சாய்த்தாலும், இருவரின் மனமும் எங்கோ பறந்து கொண்டிருந்தது.
வசீகரனின் மனம் முழுக்க அவனின் நிலா பெண்ணை பற்றி யோசிக்க, கிருஷ்ணாவோ வசீகரனை பற்றி யோசித்து கொண்டு இருந்தான்.
ஒரு வழியாக உமையாள் தயாராகி வர, கிருஷ்ணாவின் கண்கள் வழக்கம் போல, அவளை விட்டு நகரமாட்டேன் என சண்டி தனம் செய்ய ஆரம்பித்தன.
சிறிது நேரம் நயனங்களை அதன் போக்கில் அனுமதித்தவன், சில நொடிகளில் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
இப்போது எல்லாம் உமையாள் விஷயத்தில், மனம் அவன் இடும் அத்தனை கட்டுப்பாட்டையும் தகர்ப்பதை உணர்ந்து தான் இருந்தான் கிருஷ்ணா.
அவன் அவனின் காதலுக்கு தடையாக, தளைகளாக அவனை பிணைத்து இருப்பதாக, அவன் நினைத்தது எல்லாம் வலுவிழந்து கொண்டே வருவது போல தோற்றம் அவனுக்கு.
எங்கே தன்னையும் மீறி தன் காதலை, பார்வையாகவோ அல்லது செயலாகவோ உமையாளிடம் வெளிப்படுத்தி விடுவோமோ என்ற பயமும் அவனை ஆக்கிரமித்து இருந்தது.
நேற்றில் இருந்து வசீகரனில் தெரியும் மாற்றம் வேறு, அவனை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்து கொண்டிருக்கிறது.
[the_ad id=”6605″]
கிருஷ்ணாவின் நிலமை பற்றி அறியாத வசீகரனோ, உமையாள் மீது பொய்யாக கோபம் எனும் முகமூடி போட்டு கொண்டு, அவளை பார்த்து,
“எவ்வளவு நேரம் உனக்கு கிளம்ப” எனும் விதமாக தன் பார்வையிலே அவளை கேள்வி கேட்க, அவனின் பார்வையில் இருந்த கேள்வியை உமையாளும் சரியாகவே புரிந்து கொண்டாள்.
அவனை சமாதானப்படுத்தும் விதமாக, தலை சாய்த்து, பாவம் போல முகத்தை வைத்து கொண்டு,”சாரி” என்று வாயசைக்க, அதற்கு மேல் வசீகரனும், எப்படி தான் கோபத்தை இழுத்து பிடிப்பான்.
வசீகரனும் தன் பொய் கோபத்தை விட்டுவிட்டு, ஒரு சிரிப்புடன் “வா பாப்பு” என்று அவளை அழைத்து கொண்டு, நண்பர்களுடன் தங்கள் காரை நோக்கி சென்றான்.
இவர்கள் நட்சத்திர விடுதி செல்ல, அங்கு ஸ்டீபன் மற்றும் அவனின் படையும் தயாராக இருக்க, அங்கேயே தங்களின் காலை உணவை முடித்துவிட்டு அனைவரும் ஊரை சுற்றி பார்க்க கிளம்பினர்.
பத்து பேர் அமர கூடிய அந்த பெரிய வாகனத்தில், முதலில் ஏறிய வசீகரன், இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து, அவனின் பாப்புவையும் உடன் அமர்த்தி கொண்டான்.
உமையாளின் பின்னோடு ஏறிய ஸ்டீபன், வசீகரனின் அருகில் அமர்ந்திருந்த உமையாளை பார்த்து, “வட போச்சே” எனும் விதமாக பார்த்து வைக்க, பாலாவுக்கோ அவனின் பாவனையில் எழுந்த குபீர் சிரிப்பை கட்டுப்படுத்துவதே பெரும் பாடாக இருந்தது.
நட்சத்திர விடுதியில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா வழிகாட்டியுடன், மைக்கேலும் இணைந்து கொள்ள, அவர்களின்
பயணம் ஆரம்பித்தது.
வழியில் இருந்த “புலி குகை” பார்த்துவிட்டு, அங்கு “லயன் கிங்” எனும் ஆங்கில படத்தில் வரும் “பிரைட் ராக்” போலவே இருக்கும் பாறையின் அருகில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
அதன்பிறகு, அவர்கள் நேராக சென்றது உலக பாரம்பரியகளங்களில் ஒன்றான, சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாமல்லபுரத்திற்கு தான்.
கல்லிலே செதுக்கப்பட்ட சிற்பங்களும், பாறைகளை குடைந்து நிர்மாணிக்க பட்ட, கோவில்களும் எல்லா வெளிநாட்டவர்களையும் கவர்ந்து இழுப்பது போல, நம் நண்பர்களின் விருந்தினர்களையும் கவர்ந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறவில்லை.
ஸ்டீபன் கூட உமையாளின் மீது இருந்த கவனத்தை, ஒவ்வொரு சிற்பமாக விளக்கி கொண்டிருந்த, சுற்றுலா வழிகாட்டியின் விளக்கத்தில் செலுத்தி ஆழ்ந்து விட்டான்.
அவனின் கவனம் உமையாள் மீது இருந்து விலகியதுமே, இலகுவான மனநிலைக்கு வந்த கிருஷ்ணாவும், வசீகரனும் கூட, அந்த சுற்றுலாவில் உற்சாகமாக தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.
“ஒருமுறை நரசிம்மர், தனது தந்தையும், மன்னருமான மகேந்திர வர்மருடன் உலா சென்ற போது, ஒரு பாறையின் மீது யானையின் படத்தை வரைந்தாராம், அதைப் பார்த்த பிறகு தான் அவரின் தந்தைக்குப் பாறைகளில் அழியாக் கோவில்கள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாம், பல்லவ மன்னர் நரசிம்மர் மல்யுத்தத்தில் சிறந்த வீரர், அதனால் அவரை மா-மல்லர் என்று அழைத்தார்கள், அவரின் அப்பெயரையே, இந்த நகருக்கு சூட்டி விட்டார்களாம்”
என இந்த பகுதிக்கு ஏன் மாமல்லபுரம் என்று ஏன் பெயர் வந்தது என சுற்றுலா வழிகாட்டி சுவாரசியமாக விளக்க, அனைவருமே ஆர்வமுடன் கேட்டுக்கொண்டனர். அந்த சுற்றுலா வழிகாட்டியோ, கூடுதலாக,
“அமரர் கல்கி அவர்களின் புதினமான “சிவாகமியின் சபதம்” கதையின் நாயகனும், “பார்த்திபன் கனவு” எனும் மற்றொரு புதினத்தின் முக்கிய கதாப்பாத்திரமும், இந்த மாமல்லர் நரசிம்மர் தான்” என்று உபரி தகவல் தர, உமையாளோ, கொஞ்சம் உணர்ச்சிகளின் பிடியிலே, அந்த இடங்களை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.
கற்பனையில் நாம் ரசித்த கதாபாத்திரங்கள், உண்மையில் இரத்தமும், சதையுமாக உலாவிய இடத்தில், நாமும் நடந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிய, புத்தகங்களின் காதலியான அவளின் பரவசத்தை வார்த்தைகளால் வடிக்க முயல்வது எல்லாம் முட்டாள் தனம்.
மாமல்லபுரத்தில் இருக்கும் முழுதாக கட்டப்பட்ட ஏழு மண்டபங்கள், ரதங்கள், ரத கோவில்கள், பாறைகளை குடைந்து கட்டப்பட்ட கடற்கரை கோவில்கள், அதற்கு நேர்மாறாக கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிச் கட்டப்பட்ட கட்டுமானக் கோயில்கள், கலங்கரை விளக்கம் என எல்லாவற்றையும் பொறுமையாகவே சுற்றி பார்த்தனர்.
[the_ad id=”6605″]
நண்பர்களின் வெளிநாட்டு விருந்தினர்கள், அவர்கள் நாட்டின் நேரத்திற்கும், இந்திய நேரத்திற்கும் இடையில் கொஞ்சம் தவித்தாலும், இயல்பிலே சுற்றி பார்ப்பதில் ஆர்வம் கொண்ட அவர்கள், ஓரு குழந்தையின் ஆர்வத்துடனே அனைத்தையும் கண்டு ரசித்தனர்.
அதற்குள் மதிய உணவுக்கான நேரம் வந்திருக்க, அருகில் இருந்த, வெளிநாட்டவர் அதிகம் பயன்படுத்தும், உயர்தர உணவகத்திலே உணவை முடித்தனர் அனைவரும்.
மாமல்லபுரத்தின் மிகவும் புகழ் வாய்ந்த
கிருஷ்ணாவின் வெண்ணை பந்து எனப்படும் பெரிய பாறை, அர்ச்சுனன் தபசு புடைப்பு சிற்பம் எனப்படும் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என எதையும் தவறவிடாமல் கண்டு ரசித்தனர்.
இதை எல்லாம் விட, பாலா தனியாக மீனவர்களிடம் சொல்லி வைத்திருக்க, அவர்கள் பத்து பேர் பயணம் செய்ய கூடிய, அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் கொஞ்சம் பெரிய அளவிலான படகுகளை கொண்டு வந்து, கடற்கரையில் காத்திருந்து, இவர்களை கடலுக்குள் அழைத்து சென்றனர்.
கடலுக்குள் ஒரு சிறு படகு பயணம் என எல்லாரும் நினைக்க, மாமல்லபுரம் கடற்கரையில் இருந்து சற்று உள்ளே சென்றதும், தென்பட ஆரம்பித்தன கடலால் ஆட்கொள்ள பட்ட கோவில்கள்.
தாங்கள் சென்ற படகுகளில் இருந்து பார்க்க, அவர்களுக்கு காண கிடைத்தது எல்லாம், முன்பொரு காலத்தில் நிலத்தில் நிர்மானிக்கப்பட்டு, பிற்காலத்தில் கடலால் தன்னகத்தே எடுத்து கொள்ளப்பட்ட, பல்லவ கால கோவில்களின் கோபுரங்கள் தான்.
எல்லாரும் ஆச்சர்யத்தில் விழிவிரிக்க, கப்பல் இன்னும் உள்ளே செல்ல, அதே போல இன்னும் இரண்டு, மூன்று கோவில்கள் காணக் கிடைத்தன.
எல்லாருக்கும் இது வித்தியாசமான அனுபவமாக இருக்க, இந்த அந்த சுற்றுலா வெற்றிகாரமாகவே முடிந்தது.
நேற்றே தொழிற்சாலையை பார்வையிட்ட போதும், அதற்கு பிறகான கலந்தாய்விலும் முழு திருப்தி கொண்டிருந்த வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், இந்த சுற்றுலாவில் இவர்களின் விருந்தோம்பல் மிகவும் பிடித்து போக, நண்பர்கள் போலவே இயல்பாக இவர்களுடன் உரையாடினர்.
சுற்றுலா முடிந்து தங்களின் வெளிநாட்டு விருந்தினர்களை அவர்கள் தங்கி இருந்த நட்சத்திர விடுதியில் சென்று சேர்க்க, நாளை அவர்களுக்கு அவர்களின் நாட்டிற்கு விமானம் என்பதால் முறையாக இவர்களிடம் விடைபெற்றனர்.
அனைவரும் விடைப்பெற்று செல்ல, உமையாளின் அருகில் வந்த ஸ்டீபன், அவளிடம் தனியே பேச வேண்டும் என அழைக்க, இவர்களிடம் இருந்து சற்று தள்ளி நின்று பேசினர் இருவரும்.
வசீகரன் பல்லை கடித்துக்கொண்டு நிற்க, கிருஷ்ணாவோ ஸ்டீபனுடன் உரையாடும் உமையாளின் முக உணர்வுகளை உற்று பார்த்து கொண்டு இருந்தான்.
ஒரு வழியாக ஸ்டீபனும் உமையாளிடம் விடைபெற்று செல்ல, மைக்கேல் இவர்களின் காரை எடுக்க, நால்வரும் வசீகரனின் இல்லத்தை நோக்கி கிளம்பினர்.
எல்லாரும் அமைதியாக வர, பாலாவோ, “அந்த ஸ்டவ் உமா கிட்ட அப்படி என்ன பேசி இருப்பான்” என தீவிரமாக யோசித்து கொண்டு வந்தான்.
அவனின் யோசனைக்கு எந்த பதிலும் கிடைக்காமல் போக, ஒரு முறை எல்லாருடைய முகத்தையும் பார்த்த பாலா, “பேசாம உமா கிட்டவே கேட்ட என்ன” என்று நினைத்தவன்,
“உமா, அந்த ஸ்டவ் தனியா போய் என்ன பேசுனான் உன்கிட்ட” என கேட்க, உமையாளோ அருகில் அமர்ந்திருந்த வசீகரனை மறந்து,
“அது ஒன்னும் இல்ல அண்ணா, அவனுக்கு என்ன பிடிச்சு இருக்காம், அதான் டேட் பண்ணலாமானு கேட்டான்” என்று சொன்னவள், அப்போது தான் அருகில் இருந்த வசீகரனின் நியாபகம் வர,
“ஸ்ஸ்ஸ்ஸ்” என்று நாக்கை கடித்தவள், பரிதாபமாக பாலாவை பார்த்து வைக்க, அவனோ இவளின் முகபாவத்தை கணக்கில் கொள்ளாமல்,
“எவ்ளோ தைரியம் இருக்கணும் அவனுக்கு, உன்கிட்ட இப்படி கேட்க” என அவனும் வசீகரனுடன் சேர்ந்து, தன் பங்குக்கு பல்லை கடிக்க, உமையாளோ நொந்து போன குரலில்,
“அண்ணா “டேட்” இந்த படத்தில் எல்லாம் காட்ற மாதிரியோ, நீங்க நினைக்கிற மாதிரியோ தப்பான வார்த்தை இல்ல, வெளிநாட்டுல எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தரை பிடிச்சி இருந்தா, வெளிய போகலாமானு தான் கேட்பாங்க, அப்படி போகும் போது, பேசி,பழகி பிடிச்சா கல்யாணம் பண்ணுவாங்க, இல்லையா பிரின்ட் அஹ பாய் சொல்லிட்டு போய்டுவாங்க, இது தான் டேட்டிங், இங்க தான் அதுக்கு தப்பான அர்த்தம் சொல்லி வச்சி இருக்காங்க” என, அவனுக்கு விளக்கினால் உமையாள்,
“நீ என்ன தான் சொன்னாலும், இது எல்லாம் நமக்கு செட் ஆகாது” என பாலா விடாப்பிடியாய் சொல்ல,
“அது நமக்கு செட் ஆகும்னு நான் எப்போ சொன்னேன், கோவப்படுற அளவுக்கு பெரிய விஷயம் இல்லைனு தான் சொன்னேன்” என உமையாள் விளக்கம் கொடுக்க, அதில் ஓர் அளவுக்கு சமாதனம் ஆன பாலா,
“சரி, அவன் கேட்டதுக்கு நீ என்ன சொன்ன” என்று அவளின் பதிலை தெரிந்துகொள்ள கேட்க, உமையாள் கொஞ்சம் தயங்கினாலும்,
“நான்……. எனக்கு விருப்பம் இல்லைனு சொல்லிட்டேன்” என முடிக்க, பாலாவும் தலையசைத்து கேட்டு கொண்டான்.
[the_ad id=”6605″]
இவ்வளவு நேரம் இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டு இருந்த வசீகரனின் முகம் ஆரம்பத்தில் இறுகினாலும், அந்த ஸ்டீபன், நாசுக்காக அவனின் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்க, இவளும் அதே போல மறுப்பு தெரிவித்து இருக்கிறாள் என்பது புரிய கொஞ்சம் அமைதியானான்.
ஆனால் இதற்கு நேர் மாறாக கிருஷ்ணாவோ, “அந்த ஸ்டீபன் கூட அவனின் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறான், ஆனால் நான் ஆயிரம் காரணங்களை எனக்கு நானே கற்பித்து கொண்டு, அவளிடம் இருந்து காதலை மறைத்து கொண்டு இருக்கிறேன்” என தன்னை பற்றி சுய அலசலில் இறங்கினான் கிருஷ்ணா.
இப்படியாக இவர்கள் வசீகரன் வீட்டை வந்து சேர, சோர்வாக இருப்பதாக சொல்லி பாலா உடனே தன் வீட்டிற்கு கிளம்ப, தானும் கிளம்ப போன கிருஷ்ணாவை வசீகரன், அவனின் கையை பிடித்து நிறுத்தினான்.
வசீகரனின் பிடியில், அவன் ஏதோ பேச நினைப்பதை புரிந்து கொண்ட கிருஷ்ணா அவனுடன் வீட்டின் உள்ளே நுழைந்தான். அதேநேரம் வசீகரனோ, உமையாளிடம்,
“பாப்பு” என்று பேச அழைக்க, அவளோ “இன்று அந்த ஸ்டீபன் பண்ணிய வேலையில், இவனிடம் மாட்டினால் அவளோ தான்” என மனதிற்குள் நினைத்தவள், வெளியே,
“எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு கரன், எனக்கு தூங்கனும், நாம நாளைக்கு பேசுவோமா”என பாவம் போல கேட்க, வசீகரனோ,
“சரி வா, வந்து இங்க உட்காரு” என்று உணவு மேசையை காட்ட, “விட மாட்டான் போலவே” என முனகி கொண்டே வந்து அமர்ந்தாள் உமையாள்.
வசீகரனோ அமைதியாக சமையலறையின் உள்ளே சென்று, மூவருக்கும் பால் எடுத்து கொண்டு வந்து கொடுக்க, மூவரும் மறு பேச்சில்லாமல் அமைதியாக பருகினார்கள்.
முதலில் வேக வேகமாக பாலை பருகிய உமையாள், வசீகரன் வேறு ஏதும் பேசும் முன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் அவளின் அறைக்குள் நுழைய, உள்ளே சென்ற அவளை ஒரு நிமிடம் பார்த்த வசீகரன், தனக்கு தானே ஏதோ யோசித்து கொண்டு தலையாட்டி கொண்டான்.
பின்பு தன் நண்பனை அழைத்து கொண்டு, அவனின் ஆஸ்தான இடமான தோட்டத்திற்கு சென்றவன், நேற்றைக்கு போலவே கையை தலைக்கு கொடுத்து அந்த புல்வெளியில் படுத்து கொண்டான்.
தன் காதல் பற்றியும், அந்த காதலுக்கு சொந்தமான காரிகை பற்றிய சிந்தனையிலும் மூழ்கி இருந்த கிருஷ்ணாவும், வசீகரனை பின்தொடர்ந்து வந்தவன், அவனை மாதிரி படுக்காமல், அவனின் அருகில் அந்த புல்வெளியில் அப்படியே அமர்ந்தான்.
கிருஷ்ணா அருகில் அமர்ந்தது தெரிந்தும், வானில் உலா வந்து கொண்டிருந்த நிலவில் கண்களை நிலைக்க விட்டிருந்த வசீகரன், கனவுலகில் சஞ்சரிக்கும் குரலிலே பேச ஆரம்பித்தான்.
“கிருஷ்ணா நீ காதலை பற்றி என்ன நினைக்கிற” என அவனிடம் கேட்க, கிருஷ்ணாவோ அவனின் கேள்வியில் முகம் விகசிக்க அமர்ந்து இருக்க, அவனின் பதிலை எதிர்பார்க்காமல், வசீகரன் தொடர்ந்து,
“அது ஒரு மேஜிக்டா”, என்ன ஒரு சிலாகிப்பு அவனின் குரலில், அவனின் குரலில் அதில் விரவி இருந்த பாவத்தில், தன் எண்ணத்தில் இருந்து வெளிவந்த கிருஷ்ணா, யோசனையுடன் வசீகரனை பார்க்க, அவனோ தொடர்ந்து,
“என்னோட லைப்லையும் அப்படி ஒரு மேஜிக் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா” என வசீகரன் பேச பேச, அவன் சொல்ல வருவது புரிய, கிருஷ்ணா அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க, வசீகரனோ,
“என்னோட நிலா பொண்ணு” என அவனின் காதலியை நினைத்து உருக, இன்னும் கிருஷ்ணா அவனை தான் பார்த்து கொண்டிருந்தான்,
“என்னால இந்த காதலோடு கணம் தாங்க முடிலடா, எப்போ அவ கிட்ட சொல்லுவேனு இருக்குடா” என சொல்ல, கிருஷ்ணா அவனின் திருவாய் மலர்ந்து,
“எப்போடா உணர்ந்த உன்னோட காதலை” என கேட்க, வசீகரனோ உதட்டில் உறைந்த புன்னகையுடன்,
“நேத்து நைட்” என ஒரு சிரிப்புடன் சொல்ல, கிருஷ்ணா அவனை இன்னதென்று விளங்காத பார்வை பார்த்தவன்,
“ஒருவேளை நீ காதலை சொல்லி அவங்க அக்ஸ்ப்ட் பண்ணலைனா”,என வழக்கத்திற்கு மாறாக அடுத்த கேள்வியையும் கேட்டான் கிருஷ்ணா, வசீகரனோ அசராமல்,
“காதலுக்கு சரி சொல்லலைனா வீட்டுல பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டியது தான், அவ மனசுல யாரும் இல்லாத போது எப்படியும் யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ண போறா, அது நானா இருந்துட்டு போறேன், நான் இப்போவே அவளை லவ் பண்றேன், அவ கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பொறுமையா லவ் பண்ணட்டுமே” என கிருஷ்ணாவின் கேள்விக்கு பதில் அளித்தான்.
[the_ad id=”6605″]
அவனின் பதிலை கிருஷ்ணா அசைப்போட, சிறு இடைவெளி விட்டு வசீகரன், மீண்டும் தொடர்ந்து,
“ரெண்டு வீட்டுலையும் பெரியவங்களை பேசி சம்மதிக்க வைக்கணும், கொஞ்சம் கடினமான வேலை தான், ஆனால் காதலுக்காக இந்த அளவுக்கு கூட போராடலைனா, அப்புறம் அந்த காதலுக்கு என்ன மரியாதை சொல்லு” என அவனை நோக்கி ஒரு கேள்வியையும் வீசினான் வசீகரன். மீண்டும் அவனே,
“என்னமோ காதலை யாருகிட்டயுமே சொல்லாம இருந்தது, ஒரு மாதிரியா இருந்தது, அதான் உன்கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன், சரி வா நேரம் ஆச்சு கிளம்பலாம்” என்று புல்வெளியில் இருந்து எழுந்தவன், கை கொடுத்து கிருஷ்ணாவையும் எழுப்பி விட்டான்.
வசீகரன் அவனின் நிலா பெண்ணின் மீதான காதலை நண்பனிடம் வெளிபடுத்திய நிறைவில், அவன் காதலியின் நினைவில், அவனும் அவனின் நிலா பெண் யார் என்று சொல்லவில்லை, வசீகரனின் காதலை பற்றி கூற்றில், கிருஷ்ணாவும் அந்த பெண் யார் என்று கேட்கவில்லை.
தான் கிருஷ்ணாவிடம் பேசிய பேச்சுகள் என்ன, என்ன எல்லாம் விளைவிக்க போகிறது என்று அறியாமல் தனது அறைக்கு சென்றான் வசீகரன்.
தனது அறைக்கு வந்த கிருஷ்ணாவோ, இன்று முழுவதும் நடந்த, தான் கேட்ட எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு இருந்தான்.
அந்த ஸ்டீபன் அவனின் மனதை வெளிக்காட்டிய தைரியத்தில், இப்போ வசீகரன் காதலை பற்றிய பேச்சில் என, கிருஷ்ணாக்கு தான் தன் காதலுக்கு நியாயம் செய்ய வில்லையோ என்றோ எண்ணம் எழுவதை தடுக்கவே முடியவில்லை.
தனக்கு இருக்கும் தளைகள் எல்லாம், அவர்கள் இருவருக்கும் இல்லை என்பது புரிந்தாலும், அவனின் மனம் ஏனோ சமாதானம் ஆக மறுத்தது.
வசீகரன் சொல்லிய “காதலுக்காக இந்த அளவுக்கு கூட போராடலைனா, அப்புறம் அந்த காதலுக்கு என்ன மரியாதை” என்ற வாதம் அவனை வெகுவாக அலைக்கழித்தது.
தன் காதலுக்காக, தன்னுடனே போராடும் கிருஷ்ணா, இப்போது தன் காதலியிடமும் போராடினால் தான் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.
இந்த யோசனையில் விளைவு என்னவாக இருக்கும்????????
காதல் கொள்வோம்……………..