கிருஷ்ணா பல எண்ணங்களுக்கு நடுவில் மருத்துவமனையில் உழன்று கொண்டு இருக்க, வீட்டிற்கு சென்ற உமையாளும், வசீகரனும் கூட திரும்பி வந்து விட்டனர், ஆனால் இன்னும் ஜெயவர்மர் கண் விழிக்க வில்லை.
என்ன தான் மருத்துவர்கள் இனி பயம் இல்லை என்று கூறிவிட்டாலும், அவர் கண் திறந்து, ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டால் நிம்மதி என்ற நிலையில் தான் அமர்ந்து இருந்தனர் நால்வரும்.
சில மணிநேர காத்திருப்புக்கு பிறகு, ஜெயவர்மர் மயக்கம் தெளிந்துவிட்டதாக கூறிய செவிலியர், அவருக்கு சில சோதனைகள் செய்து, அவரின் நலத்தை உறுதி செய்த பிறகு, இவர்களுக்கு பார்க்க அனுமதி அளிக்க, நால்வருமே உள்ளே நுழைந்தனர்.
கிருஷ்ணாவும், உமையாளும் அடுத்தடுத்து உள்ளே நுழைய, அவர்களை பார்த்த ஜெயவர்மரின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு, நிம்மதி.
கிருஷ்ணா அவரின் கைகளை பிடித்து நலம் விசாரிக்க, அவரோ உமையாளை கண்களினாலே அருகில் அழைத்து, அவளின் கைகளையும் சேர்த்து பிடித்து கொண்டார்.
அதற்பிறகு மற்றவர்களின் பொதுவான நலவிசாரிப்புகளுக்கு பிறகு, அதிக நேரம் எல்லோரும் மருத்துவமனையிலே இருந்து விட்டதால், கிருஷ்ணாவே மற்ற மூவரையும் கிளம்ப சொன்னான்.
கிருஷ்ணாவின் அருகில் வந்த உமையாள், அவனிடம் எந்த தயக்கமும் இல்லாமல்,
“கிருஷ்ணா அந்த பேக்ல உங்களுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் இருக்கு, ட்ரெஸ்ம் இருக்கு சேன்ஜ் பண்ணிகோங்க, அப்புறம் இதுல உங்களுக்கு சாப்பாடு இருக்கு, மறக்காம சாப்பிடுங்க” என்று ஆணையிடும் குரலில் கூற, கிருஷ்ணாவும் தலை அசைத்து கேட்டு கொண்டான்.
[the_ad id=”6605″]
வசீகரன், கிருஷ்ணாவின் சட்டையை பிடித்து சண்டை போட்டதோடு சரி, அதன் பிறகு ஒரு வார்த்தை கூட இன்னும் பேசவில்லை அவன்.
கிருஷ்ணா அங்கு தங்க, மருதும் உடன் இருக்க, தானும் உடன் இருக்கிறேன் என்று சொன்ன பாலாவை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான் கிருஷ்ணா.
உமையாள் அமைதியாக வலம் வர கிருஷ்ணா தான், அவளின் இந்த அமைதிக்கு பின்னால் என்ன புயல் வருமோ என்ற பீதியில் இருந்தான்.
இங்கு கிருஷ்ணா உமையாளை பற்றி தீவிர சிந்தனையில் இருக்க, அங்கு மைக்கேல் கார் ஓட்ட ,அவருடன் பயணித்து கொண்டு இருந்த வசீகரனும்,உமையாளும் ஒரு வார்த்தை கூட பேசி கொள்ளாமல், அவர் அவர்களின் எண்ணங்களில் மூழ்கி இருந்தனர்.
வீட்டிற்கு வந்ததும் உமையாள் உள்ளே செல்ல போக, அவளை தடுத்த வசீகரன்,
“பாப்பு உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வா” என்று இன்னதென்று விளங்கா குரலிலே அழைக்க, தன் சிந்தனையில் இருந்து வெளி வந்த உமையாள் அவனை பின் தொடர்ந்து சென்றாள்.
அவர்கள் இருவர் செல்வதையும் பார்த்து கொண்டிருந்த மைக்கேலுக்கு, உமையாளின் தந்தையிடம், இந்த திருமணத்தை மறைப்பது சரியா என்ற எண்ணம் தான்.
இங்கு வசீகரனின் வீட்டிற்கு, உமையாள் கிளம்பும் போது, உடன் கிளம்பிய தன்னிடம் அவளின் பாதுகாப்பு பற்றி அவளின் தந்தை பேசியது அவருக்கு நினைவு வந்தது.
என்ன தான் வேலையாள் என்பதை தாண்டி தெரிந்த மனிதர் என்றாலும், அங்கு திருமணம் நடந்த இடத்தில், இவரே இருந்து இருந்தாலும், அதில் இவர் எப்படி தலையிட்டு இருக்க முடியும்.
முடிவு என்பது எப்போதும் உமையாளை எடுப்பது அல்லவா, இப்போதும் உமையாள் இந்த திருமணத்தை பற்றி அவளின் தந்தையிடம் உரைக்க வேண்டாம் என்று சொல்லி இருக்க, அவளின் முடிவுக்கு இவர் கட்டுப்பட்டு தானே ஆகவேண்டும்.
இன்று மதியம் உமையாளும், கிருஷ்ணாவும், பாலாவுடன் அவசரமாக காரில் ஏறி செல்ல, நிலைமையின் அவசரம் புரிந்த மைக்கலும், அவர்களை தடுக்காமல், உமையாளின் பயன்பாட்டிற்கு என வசீகரன் கொடுத்திருந்த காரில் ஏறி அவளை பின்தொடர்ந்தார்.
பொதுவாகவே வசீகரன் அவனுடனும், அவனின் நண்பர்களுடனும் உமையாள் இருக்கும் போது, இவரை சற்று தொலைவிலே நிற்க தான் பணிப்பான்.
அதனால் இன்றும், மருத்துவமனையில் மைக்கல் சற்று தள்ளி, உமையாள் பார்வையில் படும் தூரத்திலியே, அதேநேரம் அவளுக்கு உதவி தேவைப்பட்டால் சட்டென்று நெருங்கும் தூரத்தில் நின்று, அவளை தான் பார்த்து கொண்டு இருந்தார்.
ஜெயவர்மர் அனுமதிக்கப்பட்டு இருந்த அறையின் உள்ளே சென்று வரும் போது, அவளின் முக இறுக்கத்தில் இவர் துணுகுற்று பார்க்க, வசீகரன் வரவும் தான் புரிந்தது அவருக்கு, உமையாளுக்கு திருமணம் முடிந்து விட்டது என.
நாளை இந்த திருமணத்தை பற்றி உமையாளின் தந்தை அறியும் பட்சத்தில், இதை அவர் எப்படி எடுத்து கொள்வார், அவரின் பிரதிப்பளிப்பு எப்படியாக இருக்கும் என்று யோசித்து பார்க்கவே முடியவில்லை மைக்கேலால்.
அங்கு வசீகரனோ தோட்டத்தில் இருந்த மர இருக்கையில் அமர, உடன் உமையாளும் அமர்ந்தாள்.
[the_ad id=”6605″]
“என்ன முடிவு பண்ணி இருக்க பாப்பு” அதே இன்னதென்று விளங்கா குரலில் கேட்க, உமையாளோ அந்த குரலை எல்லாம் கவனிக்காமல்,
“எதை பத்தி”, என்று கேட்டு வைக்க, வசீகரன் இழுத்து பிடித்த பொறுமையுடன்,
“இந்த கல்யாணம் பத்தி தான்” என்று கேட்க, உமையாள் ஒரு பெருமூச்சுடன்,
“நான் யோசிக்கனும் கரன்” என்று சொல்ல, அவளின் இந்த பதிலில் அவளை கூர்ந்து பார்த்தவன், சிறிது நேரத்திற்கு ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.
அவனின் மனமோ, “தன்னை மாதிரி, இவளுக்கும் இது அதிர்ச்சியான விஷயம் தானே, ஆனால் அவளே அதை, அந்த அதிர்ச்சியை விழுங்கி விட்டு, அடுத்து என்ன என்று யோசிக்கும் போது, நானும் அவளை தொல்லை செய்யாமல் அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுப்பது தானே அழகு, இந்த நேரத்தில் அவளுக்கு என்னுடைய அரவணைப்பு அவசியம் அல்லவா” என்று யோசிக்க ஆரம்பித்தது.
உமையாளை நெருங்கி, ஆதரவாக அவளை தோளோடு அணைத்த வசீகரன் வாஞ்சையான குரலில்,
“பாப்பு, சாரிடா நானும் என்ன முடிவு பண்ணி இருக்க, என்ன முடிவு பண்ணி இருக்கனு கேட்டு, உன்னை டென்ஷன் பண்ணிட்டேன், நீ பொறுமையா யோசி, யோசிச்சி முடிவு பண்ணு”
என்று ஒரு இடைவெளி விட்டவன்,
“இந்த விஷயத்துல நீ என்ன முடிவு பண்ணாலும், என்னோட முழு சப்போர்ட் உனக்கு இருக்கும், நான் இருப்பேன் உன் கூட, இன்னைக்கு நிறைய அலைச்சல், அதிர்ச்சி, அதோடு யோசிக்க வேண்டாம், போ போய் தூங்கு, மார்னிங் எழுந்து தெளிவா யோசிக்கலாம்” என்று ஆதுரத்துடன் சொல்ல, உமையாள் ஆதரவாக அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
பேச்சில்லா பேரமைதி அங்கு வியாபித்து இருக்க, சில நிமிடங்களில் தன்னை தேற்றி கொண்டு தெளிந்த உமையாள், வசீகரனை பார்த்து,
“சரி கரன் நான் போய் தூங்றேன்” என்று உரைத்துவிட்டு நிற்காமல் சென்று விட்டாள். அவளின் கண்களில் நீரின் பளபளப்பு இருந்ததோ????
செல்லும் அவளையே பார்த்து கொண்டிருந்த வசீகரனோ இன்னுமே சிந்தனையின் வசம் தான் இருந்தான்.
ஓய்ந்து போய் அமர்ந்திருந்த நண்பனின் தோற்றம் கண் முன்னே வர, சக்தி எல்லாம் வடிந்தது போல இருக்கையிலே இன்னும் தளர்ந்து அமர்ந்து விட்டான்.
கிருஷ்ணாவுக்கு காதல், கல்யாணம் இதில் எல்லாம் விருப்பம் இல்லை என்பது இவன் அறிந்த ஒன்று தான்.
இன்று அவனின் தந்தைக்காக என அவனும், அந்த சூழ்நிலையின் காரணமாக தன் பாப்புவும், திருமணம் செய்து கொண்டிருக்க, இந்த திருமணத்தின் எதிர்காலம் அவனை மிரட்டியது.
தன் பாப்புவின் கழுத்தில் மாங்கல்யத்தை பார்த்ததும், கோவத்தில் சட்டென கிருஷ்ணாவின் சட்டையை பிடித்து விட்டான் தான்.
அந்நேரம் அவனுக்கு அவர்கள் வீட்டு பெண், அவனின் பாப்பு மட்டுமே கண்ணுக்கு தெரிய, கோவத்தில் நிதானம் இழந்து விட்டான்.
அதிலும் கிருஷ்ணாவோ இவனை தடுக்காமல், இவனிடமிருந்து விடுப்பட போராடாமல்,”நான் செய்தது தவறு, அதனால் நீ என்னை என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்து கொள்” என்று தன்னை ஒப்புக்கொடுத்து நின்ற விதம், இவனின் கோவத்தை இன்னும் தான் அதிகப்படுத்தியது.
முதலில் “தன் பாப்புக்கு, யாரை கேட்டு தாலி கட்டினான்” என்று ஏறிய கோவம், அவனின் செய்கையில், “என்னுடைய பாப்புவை மணந்ததது, உனக்கு அவ்வளவு பெரிய தவறாகவா இருக்கிறது” என்று இன்னும் எகிறியது.
வசீகரனுக்கு அவனின் மனநிலை முன்னுக்கு பின் முரணாக இருப்பது நன்றாக புரிந்தது. ஒருவேளை நடந்த நிகழ்வுகளின் தாக்கமோ என்னவோ அவனுக்கு புரியவில்லை.
அதன் பிறகு பாலா, திருமணம் நடந்த முறையை விளக்கும் போது, யாரு மீது, எதற்கு கோவப்படுவது என்றே தெரியவில்லை இவனுக்கு.
தன் பப்புவுடனான திருமணத்தை தவறு என நினைக்கும் கிருஷ்ணா, இதோ இப்போது கண்ணீரின் பளபளப்புடன் செல்லும் உமையாள் என அவனின் எண்ணம் முழுவதும் நடந்த திருமணத்தை பற்றி தான்.
அவனை பொறுத்தவரை காதல் இல்லாமல், முழுக்க முழுக்க சூழ்நிலை காரணமாக நடந்த இந்த திருமணம், எந்த அளவுக்கு சரியாக வரும் என்றும் விளங்கவில்லை.
உமையாள்,கிருஷ்ணா, அவர்களின் திருமணம் என்று யோசித்து கொண்டிருந்த அவனுக்கு, அந்நேரம் அந்தரத்தில் ஊசலாடி கொண்டிருந்த அவனின் காதலை பற்றிய எண்ணம் துளி கூட இல்லை போலும்.
அதற்கு அடுத்தடுத்த நாட்கள், உமையாள், தான் சொல்லியபடி பகல் முழுவதும் ஜெயவர்மரை பார்த்து கொண்டாள், என்ன கிருஷ்ணாவும் அவளுடனே இருந்தான்.
இரவில் கண் விழித்து அவரை பார்த்துக் கொள்ளும் கிருஷ்ணா, உமையாள் வந்ததும், வீட்டிற்கு சென்று சற்று ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் தயாராகி மருத்துவமனைக்கு வந்து விடுவான். தன் நேரத்தில் பெரும்பான்மையை தன் தந்தையுடனும், உமையாளுடனுமே கழித்தான் அவன்.
அவசியத்தை தவிர உமையாளும், கிருஷ்ணாவும் பேசிக்கொள்ள வில்லை. இடையில் வசீகரன், பாலா என வந்து ஜெயவர்மரை நலம் விசாரித்து விட்டும் சென்றார்.
வசீகரன் இன்னும் கூட கிருஷ்ணாவிடம் பேசவில்லை. அவர்களின் திருமணத்தை பற்றிய அவனின் முடிவு தெரியாமல், அவனோடு இயல்பாக உரையாட முடியும் என்று தோன்றவில்லை வசீகரனுக்கு.
இந்த திருமணத்தால், ஏனோ அதிக பாதிப்பு அவனின் பாப்புக்கு தான் என்ற எண்ணம் அவனுக்கு.
[the_ad id=”6605″]
நாட்கள் இப்படி சென்று கொண்டிருக்க, தந்தையின் திடீர் உடல்நல குறைவால், அவர் மருத்துவமனையில் இருக்க, இவனும் அவரை பார்த்துக்கொள்ளவென அலுவலகம் செல்லாததால், நிறைய வேலைகள் நிலுவையில் இருந்தன.
நெஞ்சில், தொடையில் என ஏகப்பட்ட தையல் போடப்பட்டு இருக்க, ஒரு வாரம் சென்று இருந்த நிலையில் மருத்துவர்கள் இன்னும் ஒரு வாரம் அவரின் மருத்துவமனை வாசத்தை அதிகப்படுத்தி இருந்தனர்.
கடந்து சென்ற ஒரு வாரத்தில் ஜெயவர்மர் மருத்துவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தேறி இருக்க, இனி எந்த பயமும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பிறகு, கிருஷ்ணா அலுவலகம் செல்ல ஆரம்பித்து இருந்தான்.
இரவு மருத்துவமனையில் பார்த்துக்கொள்ள செவிலியர்கள் இருந்த போதிலும், கிருஷ்ணாவுக்கு ஏனோ நிம்மதியான உறக்கமே இல்லை. அடிக்கடி எழுந்து தூங்கும் தந்தையை பார்த்து கொண்டிருப்பான்.
இரவு உறக்கம் இல்லாதது, அலுவலகம், மருத்துவமனை என மாறி மாறி அலைவது, சரியாக உணவு எடுத்து கொள்ளாதது, அதோடு சேர்த்து அலுவலகத்தில் கழுத்தை நெறிக்கும் வேலைகள் என மிகவும் சோர்ந்து தான் விட்டான் கிருஷ்ணா.
அவர்களின் தொழிற்சாலை வேலைகளை நண்பர்கள் பார்த்து கொள்வதால் அந்த கவலை மட்டும் இல்லை இவனுக்கு.
உமையாளோ அதன்பிறகு வேலைக்கே செல்லவில்லை. பகல் பொழுதில் ஜெயவர்மருடன் இருப்பவள், கிருஷ்ணா வந்ததும் அவனுக்கு இரவு உணவை கொடுத்துவிட்டு, சற்று நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுவாள்.
அந்த இரவு உணவு உமையாள், அவளே பரிமாறி இவனை உண்ண வைப்பது கூட, இவனின் கலைத்த தோற்றத்தினால் தான் என்பது கிருஷ்ணாவின் யூகம்.
அன்றும் அலுவலகத்தில் வேலை முடித்து கிருஷ்ணா அரக்கப்பரக்க மருத்துவமனை வர, மணி அப்பொழுதே ஒன்பதை நெருங்கி கொண்டு இருக்க, அங்கு உமையாளுடன் வசீகரனும் இருந்தான்.
கிருஷ்ணா உள்ளே வரவும், அவனை பார்த்துக்கொண்டே வசீகரன்,
“பாப்பு நீ வீட்டுக்கு போகும் போது, உன் கூட கிருஷ்ணாவையும் கூட்டிகிட்டு கிளம்பு, இன்னைக்கு நான் தான் இருக்க போறேன் அங்கிள் கூட, என்ன அங்கிள்” என்று உமையாளிடம் ஆரம்பித்து, ஜெயவர்மரிடம் முடித்தான்.
அவன் நேரடியாக தன்னிடம் பேசவில்லை என்றாலும், அவனின் அக்கறை தித்திப்பாய் இனிக்க தான் செய்தது கிருஷ்ணாவுக்கு.
அதன் பிறகு சற்று நேரம் அனைவரும் உரையாடி கொண்டு இருந்தனர். இன்னும் சகஜமாக உரையாடி கொள்ளாத இளையவர்கள் தங்களின் பிணக்கை ஜெயவர்மருக்கு தெரியாதவாறு, அவரை மையமாக வைத்தே பேசி கொண்டு இருந்தனர்.
இன்று கிருஷ்ணா வந்ததே தாமதம், அதிலும் பேசி கொண்டு இருந்ததில் நேரம் அதிகம் ஆகி இருக்க, இரவு உணவுக்கு அவர்களை அழைத்த உமையாள் கிருஷ்ணாவுக்கும், வசீகரனுக்கும் சேர்த்தே பரிமாறி, தானும் உண்டாள்.
ஜெயவர்மருக்கு மருத்துவமனையிலே அவரின் உடல்நிலைக்கு ஏற்ப ஏற்கனவே உணவு கொடுக்கப்பட்டு இருக்க, இப்போது உண்ட மாத்திரையின் விளைவால் அவர் உறங்கவும் ஆரம்பித்து விட்டார்.
எனவே மருதுவை வசீகரனுடன் இருக்க சொல்லிவிட்டு, அவனிடம் விடைபெற்று அவர்கள் கிளம்பும் நேரம், வசீகரன் அவனின் பாப்புவிடம்,
“பாப்பு நாம வந்த காரை இங்க விட்டுட்டு, நீங்க ரெண்டு பேரும் கிருஷ்ணாவோட கார்லையே கிளம்புங்க, நீங்க டிரைவ் பண்ண வேண்டாம், மைக் அஹ டிரைவ் பண்ண சொல்லு” என்று சொல்ல, உமையாள் தலையாட்டி விட்டு கிளம்பினாள்.