பாப்புவின் கண்ணீர் குரலில் உறைந்து நின்ற வசீகரனின் மனம், அவனின் தாய் இந்நேரம் இங்கு இருந்து இருந்தால், நன்றாக இருக்கும் என்று நினைப்பதை தவிர்க்க முடியவில்லை.
அவரை வற்புறுத்தி சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தவன் இவன் தானே.
வசீகரனின் தந்தை வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட, இவன் அவனின் தாயையும் சேர்த்து அனுப்பி, அப்படியே ஒரு ஆறுமாசம் ஐரோப்பிய நாடுகளை சுற்றிபார்த்துவிட்டு வருமாறு சொல்லி, வற்புறுத்தி அனுப்பு வைத்திருந்தான்.
வசீகரனின் தந்தை எங்கு இருந்தாலும், தொழில்களை தன் விரல் அசைவில் ஆட்டிவைப்பார்.
அவர் இருக்கும் போது எப்படி அலுவலகம் நடக்குமோ, அப்படி தான் அவர் ஊரில் இல்லாத போதும், தொய்வின்றி வேலைகள் நடக்கும்.
அதையும் மீறி, ஏதேனும் அவசரம் எனில், தான் சென்று பார்ப்பதாக வாக்குறுதி அளித்தே அவர்களை சுற்றுலா அனுப்பி இருந்தான் வசீகரன்.
ஏனோ இவனையும், இவனின் தந்தையும் தாண்டி யோசிக்க தெரியாத, அவனின் தாய்க்கும், வியாபாரத்தை மட்டுமே உயிர் மூச்சாக நினைக்கும் தந்தைக்கும், அவர்களுக்காக பிரத்தேயக நேரம் வேண்டும் என்று நினைத்து, இருவரையும் சமாளித்து அனுப்பி இருந்தான்.
ஒருவேளை பாப்பு வருவதை, ஒரு வாரம் முன்னரே தெரிவித்து இருந்தால், இவனின் அம்மாவே சுற்றுலா என்று கிளம்பி இருக்கவே மாட்டார்.
ஜெயந்தி இருந்து இருந்தால், அதட்டியேனும் அவனின் பாப்புவை சமாதானப்படுத்தி இருப்பார் என்பது உண்மையே. ஆனால் அவனின் பாப்பு, அப்பொழுதும் அவரிடம் ஆறுதல் தேடி இருப்பாளா என்பது கேள்வி குறி தான்.
வசீகரனால் எதிர் கொள்ளமுடியாத ஒன்று அவனின் பாப்புவின் கண்ணீர். ஏனோ அது வெறும் நீராக இல்லாமல், அமிலமாக அவனை தகிப்பது போல எப்போதுமே அவன் உணறுவது உண்டு. (Provigil)
இப்போதும் அவனின் பாப்பு, கண்களில் கண்ணீர் கரைகட்டி அழுகையை முழுங்கி நின்ற கோலம், அவனுக்கு சொல்லவென்னா வலியை தர,
“என்னோட பாப்பு, தைரியமான பொண்ணாச்சே, இப்படி எல்லாம் அழ மாட்டாங்களே” என, இப்போ அப்போ என கரைத்தாண்ட துடித்த கண்ணீரை காட்டி சொல்ல,
அவனின் பாப்புவோ, கண்களை அகல விரித்து, கண்ணீரை இமைதாண்ட விடாமல் தடுக்கும் முயற்சியினுடே,
“பாட்டி எவ்ளோ ஸ்ட்ரிக்ட்னு உனக்கு தெரியும் தானே, அம்மா தானே எனக்கு எல்லாம், அவங்க போனதுக்கு அப்புறம், என்னால அங்க மூச்சு…….., மூச்சு.………..” விட முடியாமல் என சொல்ல வந்தவள், உண்மையில் மூச்சுக்கு தவிக்கலானாள்.
அவளின் நிலை கண்டு பதறிய வசீகரன், “பிரீத் பண்ணு பாப்பு, பிரீத் பண்ணு, நல்லா மூச்சை இழுத்துவிடு” என சொல்லியவாறே, அவளுடன் சேர்ந்து தானும் ஆழ மூச்செடுத்து விட்டவாறே, அவளின் முதுகில் தடவி அவளை ஆசுவாசப்படுத்தினான்.
பெண்ணவள் மூச்செடுத்து சுயம் திரும்பப்பெற எடுத்த அந்த சில நிமிடங்களில், வசீகரன் தன் சுயம் தொலைந்து, முழுவதும் பதட்டத்தின் வசம்.
உமையாள், வசீகரன் சொல்லியபடி, உண்மையில் மிகவும் தைரியமான பெண் தான்.
பாட்டியின் கட்டுத்திட்டங்களில் மூச்சுமுட்டி, திணறும் அவளுக்கு, தலைகோதி, முகம் வருடும் தென்றல் அவளின் தாயார் தான்.
அவரின் மறைவு அவரை மனதளவில் பாதித்து இருக்க, மனைவியின் நினைவில் அலுவலக பொறுப்புகளை தந்தை கவனம் செலுத்தாதல், இவளுக்கு வந்த அதிக பொறுப்பு என இன்னும் சோர்ந்துவிட்டாள் பெண்.
வசீகரனின் பாப்பு, சமநிலைக்கு திரும்பியதும், வசீகரன் எழுந்து சென்று, குளிர்ந்த நீரை எடுத்து வந்து, அவள் கைகளில் திணிக்க, அவளும் அமைதியாக குடித்து, தன்னை முழுதும் நிலைப்படுத்தி கொண்டாள்.
வசீகரன் மீண்டும் அந்த பேச்சை எடுக்க விரும்பவில்லை தான், ஆனாலும் அவனின் பாப்பு வந்த விவரம் முழுதும் அறியவேண்டிய கட்டாயம் இருப்பதால், முடிந்தளவு அவனின் அத்தை பற்றிய பேச்சை தவிர்த்து,
“ஆமா, நீ பாட்டுக்கு கிளப்பி வந்துட்டா, பிசினஸ் எல்லாம் யாரு பார்ப்பா, நீ இங்க வரேன்னு சொல்லிட்டு தான் வந்தியா, உன்னோட பாட்டி எப்படி அலோ பண்ணாங்க” என கேட்க,
“அப்பா தான் பார்க்கணும், நான் மனசு சரி இல்லை, கொஞ்ச நாள் அத்தை, மாமா கூட இருந்துட்டு வரட்டுமானு கேட்டேன், அப்பா சரினு சொல்லிட்டாரு, அந்த தாய்கிழவி கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்கலை நானு, இன்போர்மேஷன் தான் சொன்னேன் ” என்று நிலைமையை விலக்கினாள் உமையாள்.
வசீகரனுக்கு புரிந்தது, அத்தையின் இறப்பினாலும், உமையாள் கவனித்துக் கொள்வதாலும், வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கும் மாமாவை, அவருக்கு பிடித்த வியாபாரத்தில் கவனம் செலுத்தி, அவரை மீட்டெடுக்க தான், இவள் முழுப்பொறுப்பையும் அவரின் வசம் விட்டு இங்கு விஜயம் செய்து இருக்கிறாள் என்று.
அதுமட்டும் இல்லாமல், தாயின் ஏக்கத்ததோடு சேர்த்து, அந்த சிறைவாசமும் அழுத்தம் தர, சுதந்திர பறவையாக பறந்து, அவளின் தாயின் உறவுகளை நாடி வந்து இருக்கிறாள்.
இவள் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதத்தில், சூழ்நிலையை அங்கு இருந்தே சரி செய்யாமல், ஆறுதல் தேடி இங்கு வந்ததையே, தன் கோழைத்தனமாக கருதுகிறாள் என்பதையும் வசீகரனால் புரிந்துகொள்ள முடிந்தது.
“தாய் கிழவி” என்ற விளிப்பிளே, அவள் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பது புரிய, முழுதும் அவளை சகஜமாக்கும் பொருட்டு,
“ஆமா, இந்த வீட்டில் தான் நான் இருக்கேன்னு, உனக்கு எப்படி தெரியும்” என கேட்டு அவளின் சோகத்தை, கோவமாக மாற்றும் முயற்சியை செவ்வனே செய்தான்.
அவனின் கேள்வியில் கடுப்பான அவளோ,
“கேள்வி கேட்கிறியாடா பக்கி, நான் கிளம்பிட்டு, சரி வரத சொல்லிடலாம்னு, உனக்கு போன் பண்ணா நீ எடுக்கவே இல்லை, அப்புறம் அத்தைக்கு போன் பண்ணேன், அவங்க தான் சொன்னாங்க, அவங்க அப்படிக்கா கிளம்பினதும், நீ இப்படிக்கா வந்துட்டனு”என்று, அவளின் முறையில் நீட்டி முழக்கினாள்.
வசீகரன் தற்போது வாசம் செய்யும் இந்த வீடு, விலைக்கு வரவும், கிருஷ்ணாவின் அடுத்த வீடு என்பதால், வசீகரன் அவனின் தந்தையிடம் பேசி, வீட்டை வாங்கி, அவனுக்கு பிடித்த விதத்தில் மாற்றம் செய்திருந்தான்.
தாய், தந்தை இல்லாமல் அங்கு இருக்க பிடிக்காது போக, இந்த வீட்டிற்கு வந்து இருந்தான் வசீகரன். ஆக அவனின் தாயார் தான் இவன் இருக்கும் தகவலையும், விலாசத்தையும் தந்து இருக்க வேண்டும் என்று புரிந்தது.
“ஆமா, வாட்ச்மேனை என்னடி பண்ண, எப்படி அவரு உன்னை உள்ள விட்டாறு” என கோவத்தை, வெறியாக்கும் நோக்கோடு கேட்க, அவளோ,
“எருமை மாடு, யாருனு கூட கேட்காம நீ போனை வச்சிட்டே, அப்படியே சென்னை ஸ்டைலில் வூடு கட்டி, ஒரு காட்டு காட்டலாம்னு தான் நினைச்சேன், அவரு வேற வயாசன ஆளா, அதும் இல்லாம இவ்ளோ பெரிய பங்களா முன்னாடி வூடு கட்டுனா, நல்லா இருக்குமா சொல்லு, இருக்காதுல்ல அதான், நல்ல பிள்ளையா அத்தைக்கு போன் பண்ணி வாட்ச்மேன் கிட்ட பேச வச்சு, உள்ள வந்தேன்டா என் மங்கிசங்கி” என கையை, தலையை ஆட்டி, அவள் உள்ளே வந்த கதையை சொன்ன தினுசில் வசீகரனுக்கு குபீர் சிரிப்பு.
சிரித்துக்கொண்டே,” சரியான சொர்ணாக்கா” என வாய்க்குள் முணுமுணுத்தவன், நேரத்தை பார்த்துவிட்டு,
“நான் இந்த ரூம் யூஸ் பண்றேன், நீ அந்த ரூம் அஹ எடுத்துக்கோ, ரொம்ப நேரம் ஆச்சி, போ, போய் தூங்கு, ரொம்ப டையர்ட் அஹ இருப்ப, போ டா” என தரைத்தளத்தின் வரவேற்பறையின் வலது பக்க அறை அவன் உபயோகப் படுத்துவதாகவும், இடது பக்க அறையை அவளை எடுத்துக்கொள்ளவும், வாஞ்சையுடன் சொல்ல,
இத்தனை நாட்களில் மனதில் உள்ளதை, வசீகரனிடம் பகிர்ந்துகொண்டதே ஒரு பாரம் விலகிய உணர்வு தர, நீண்ட பயணத்தின் விளைவாக உடல் ஓய்வுக்கு கெஞ்ச,
“சரிடா, குட் நயிட்” என்று உரைத்துவிட்டு,அவன் குறிப்பிட்ட அறையினுள், மைக் சோபாவிற்கு பின் வைத்துவிட்டு சென்ற தனது பெட்டியை எடுத்துக்கொண்டு நுழைந்து, உடை மாற்றிவிட்டு படுக்கையில் விழுந்தவள் அடுத்த நிமிடம் நித்ரா தேவியின் வசம்.
அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்த வசீகரன், “நீ இங்கேயே இருந்துடேன் பாப்பு, நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் ” என வாய்விட்டே பேசியவன், நன்கு அறிவான், இதை அந்த சொர்ணாக்காவிடம் நேரில் சொல்லவிட முடியாது என்று.
வசீகரன் சொல்லியது மட்டும், அவள் காதில் விழும் பட்சத்தில், அவளை பார்த்துக்கொள்வதாக சொல்லிய இவனை, நான்கு பேர் பார்த்து கொள்ளும் படி செய்துவிடுவாள் அந்த ராட்சசி.
அந்த பிரம்பாண்டமான வரவேற்பறையில் தனியே நின்று, இப்படி ஒரு வசீகரன், அதரங்கள் மட்டும் அல்லாமல், அவனின் அழகிய நயனங்கள் புன்னகையில் முக்குளிக்க, முகமும், அகமும் மலர,
அவன் சிந்திய புன்னகை காண நிச்சயம் கண் கோடி வேண்டும்.
தன்னை நோக்கி, இப்படி ஒரு புன்னகையை சிந்த மாட்டானா என பல பெண்கள் ஏங்கியிருக்க, வசீகரனோ அங்கு இருந்த அஃறிணை பொருள்களை பார்த்து தன் புன்னகை புரிந்துகொண்டு இருந்தான்.
“குறைந்தபட்சம் பாப்பு, இங்கு இருக்கிற வரைக்குமாவது, அவளை எவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள வேண்டும்” என தனக்கு தானே சொல்லிக்கொண்டு, அவனின் அறைக்கு சென்றான். அவளின் நிரந்தர வாசமே இங்கு தான் என்பதை அறியாமல்.
அனைவரும் நிம்மதியாக உறங்க, அங்கு கிருஷ்ணாவோ, மிகவும் சாதாரணமான தனது இரவு உடையில், உறங்கும் நேரத்திலும், காலையில் அவன் எவ்விதம் முடிந்தானோ, அவ்விதம் அப்படியே இருந்த சிகை காற்றில் அசைந்தாட தீவிர சிந்தனை வசம்.
கிருஷ்ணா, வசீகரன் வீட்டில் இருந்து வந்தவுடன், அவன் சென்றது அவனின் தந்தை அறைக்கு தான்.
அவர் உறங்குவதை உறுதி செய்து கொண்டவன், வெளியே வரவும், வீட்டோடு தங்கி வேலை செய்யும் வேலையாளான மருது இவனுக்காக காத்திருந்தார்.
இவன் அவரை பார்த்ததும், நேரத்தை பார்க்க, அவரோ,
“பெரிய ஐயா, சாப்பிட்டுட்டு, மாத்திரையும் சாப்பிட்டுப் படுக்க போய்ட்டார்” என அவன் கேட்காமல் பதில் சொல்ல,
அவரை உறுத்து விழித்தவனின் பார்வையில், வாராவாரம் வயதான அவர், தனக்காக காத்திருந்து, உறங்க செல்லும் செயலினால் உண்டானா அப்பட்டமான எரிச்சல்.
அவரோ அவனின் எரிச்சலை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல்,
“உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரவா” என கேட்டு வைக்க, அவனின் பதிலோ, மறுப்பான ஒரு தலை அசைப்பு தான்.
அந்த தலை அசைப்புடன் அவர் விடைப்பெற, மாடியில் இருந்த தனது அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டவன், இரவு உடைக்கு மாறி, அலுவலக வேலையை பார்க்க, தனது மடிகணியை எடுக்கவும், சிரிப்பொலி அவனின் செவியை நிறைக்கவும் சரியாக இருந்தது.
மாடியில் இருந்த தனது அறையின் சாளரத்தின் வழியாக பார்க்க, வசீகரனின் தோட்டம் தெரிய, அங்கு ஓடிவிளையாடிய மூவரும், அவர்களின் முகத்தில் இருந்த சிரிப்பும் காணகிடைக்க அப்படியே நின்றான் கிருஷ்ணா.
அவன் எப்போது இப்படி வாய்விட்டு சிரித்தான் என யோசிக்க, அப்படி ஒரு நிகழ்வு நடந்த நினைவே இல்லை அவனுக்கு.
பாலா கலகலவென பேசுவான் என்றாலும், நண்பர்கள் மூவரும் கூடும் இடத்தில், பெரும்பாலும் தொழிற்சாலை சம்பந்தமான விவாதங்கள் தான் நடைபெறும்.
அங்கு வேடிக்கை பேச்சுக்கு இடமே இருக்காது, என்றேனும் விவாதங்கள் நெடு நேரம் நடக்கும் போது, இடையில் புத்துணர்ச்சிகாக பாலா எப்போதாவது நகைச்சுவையாக பேசுவான், இன்று வசீகரனுக்கு கற்பனை காதலியை உருவாக்கிய மாதிரி.
அப்போது எல்லாம் கிருஷ்ணா, அவன் பேசுவதை செவிமடுப்பானே தவிர, சிரிக்க வேண்டும் என்றோ, சிலாகிக்க வேண்டும் என்றோ தோன்றியது இல்லை.
ஆனால் இன்று அவன் நண்பர்களான இருவரும், வாய்விட்டு சிரித்து கொண்டு இருக்க, ஒருவேளை அப்போது தான் அங்கு இருந்தாலும், அவர்களுடன் கலந்து மகிழ்ந்து இருப்பேனா??? என மிக பெரிய வினா அவன் முன்னே தோன்ற, யோசிக்கலானான் கிருஷ்ணா.
நண்பர்களை பார்த்து நிச்சயம் அவனுக்கு பொறாமை எல்லாம் இல்லை, அவனை பற்றிய ஒரு சுய அலசல் மட்டுமே.
ஏனோ இந்த பறந்த உலகத்தில் தான் மட்டும் தனித்து, எல்லோரிடம் இருந்தும் அந்நியப்பட்டு நின்று, எதற்கென்றே தெரியாமல் ஒரு வாழ்க்கையை வாழ்வதாக தோன்ற, அவனுக்குள் கட்டுக்கடங்காத கோவம் கிளர்ந்தது.
முகவரி இல்லாத கோவம் எல்லாம் அப்படியே உமையாள் மேல் தான் திரும்பியது. அவளின் வருகையால் தான், அவளால் அவன் நண்பர்கள் சிந்திய அந்த புன்னகையால் தான் என்றும் இல்லாமல், இன்று இப்படி எல்லாம் இவனின் சிந்தனை இலக்கின்றி பறப்பதாக தோன்றியது.
அடுத்த கணமே, அவனின் நியாயமனம் விழித்துக்கொள்ள, “உன்னால் வாய்விட்டு சிரிக்க முடியவில்லை என்பது உன் பிரச்சனை, அதற்கு அந்த பெண்ணை காரணகர்த்தாவாக ஆக்காதே” என இடித்துரைக்க, ஒரு பெருமூச்சை விட்டான் கிருஷ்ணா.
இப்படி சிந்தனையின் ஊடே இவன் நிற்க, கிழே சத்தம் கேட்க, பாலா வந்துவிட்டது புரிய, கிழே சென்று அவனுக்கு அறை ஒதுக்கி கொடுத்துவிட்டு மீண்டும் தன் அறைக்கு வந்தான்.
வேலை பார்க்கும் மனம் இல்லாமல் போக, படுக்கைக்கு சென்றவனை, ஏனோ தேவையில்லாத சிந்தனைகள் எல்லாம் அலைகழிக்க, அன்று நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் இல்லாமலே போனது கிருஷ்ணாக்கு.
மறுநாள் உறக்கம் கலைந்து எழுந்த உமையாள், நேரத்தை பார்க்க, அதுவோ நண்பகலை நெருங்கி கொண்டு இருந்தது.
நேரத்தை பார்த்த அந்த புண்ணியவதி கொஞ்சம் கூட பதறாமல், “பச் என்னடி, இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்” என்று தன்னை தானே திட்டிக்கொண்டு குளியலறையில் புகுந்து கொண்டாள்.
அவள் தயாராகி வெளியே வரவும், சமையலறையில் இருந்து நல்ல மனம் வரவும், அதோடு அரவமும் கேட்க, அவளின் கால்கள் அவளின் அனுமதியின்றியே சமையலறையை நோக்கி சென்றது.
அங்கே வசீகரன் பரபரப்பாக சமைத்து கொண்டு இருக்க, இவளோ சுவாதினமாக சென்று ஒரே தாவக தாவி, சமையலறை திண்டில் ஏறி உட்கார்ந்தாள்.
இவளை பார்த்தா வசீகரன், ஒரு புன்னகையுடன்,
“என்னடா சீக்கிரமா எழுந்துட்ட” என கிண்டலுடன் கேட்க, அவளோ படு தீவிரமாக,
“தூக்கம் கலஞ்சிடுச்சிடா” என இன்னும் மிச்சம் இருந்த தூக்க கலக்கத்தோடு பேச, வசீகரன் அவளின் கரம்பற்றி ஒரு பெரிய கோப்பையை திணித்தான்.
அந்த கோப்பையை, பார்க்கவும் தான் பசி தெரிய, ஒரு மூச்சில் அந்த பாலை குடித்தவள்,புதிதாக முளைத்து இருந்த, வெள்ளை மீசையை இடது கரத்தின் புறங்கையால் துடைத்தவாறே, வசீசரனை பார்த்து,
“நான் வளர்கிறேன் மம்மி” என பாவனையோடு சொல்ல, வசீகரன் அவளின் தலையை ஒரு புன்னகையுடன் கலைத்து விட்டான்.
இவள் வந்து இன்னும் முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் எத்தனை புன்னகைகளை பரிசளித்துவிட்டாள் என்று யோசித்தவாறே, முடியும் தருவாயில் இருந்த இறாலை வறுவலை கவனிக்க, இவளோ வாணலை எட்டிபார்த்து, வாசம் பிடித்தவாறே,
“என்ன மெனு கரன் இன்னைக்கு” என ஹோட்டலில் கேட்பதை போல கேட்டு வைக்க வசீகரனும் அசராமல்,
“மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரான் வறுவல்” என அடுக்க, அவனின் பாப்பு,
“போதும் போதும் நிறுத்து, லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது, இவ்வளவும் தனியா ஏன்டா செஞ்ச, என்ன எழுப்பி இருக்கலாம் இல்ல” என பாசத்துடன் சொல்ல, அதை உண்மை என்று நம்பி வசீகரனும்,
“எழுப்பி இருந்தா, என்ன பண்ணி இருப்ப, கூட சேர்ந்து சமைத்து இருப்பியா” என கொஞ்சமே, கொஞ்சம் நம்பிக்கையோடு கேட்க, அவளோ அவனின் நம்பிக்கையில் லாரி, லாரியாக மண்ணை கொட்டியாவறே,
“ச்ச இல்லடா, நான் முன்னாடியே வந்து, இதே மாதிரி உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்து இருப்பேன், நீ நான் பேசிறதை கேட்டுகிட்டே, அலுப்பு இல்லாம சமைத்து இருக்கலாம் பாரு” என்று அவளின் முறையில் விடைபகர்ந்தாள்.
பாப்புவை பற்றி தெரிந்தும், ஒரு நப்பாசையில் கேட்ட தன் தலையில் தானே வசீகரன் அடித்துக்கொள்ள, அதை எல்லாம் கணக்கிலே கொள்ளாமல்,
“ஏன்டா நம்ப ரெண்டு பேருக்கு, எதுக்கு இவ்ளோ” என அவன் சமைத்து முடித்து வைத்திருந்த பாத்திரத்தை எல்லாம் பார்வையிட்டவாறே கேட்க,
“இல்ல, பாலா, கிருஷ்ணா ரெண்டு பேரையும் லன்ச்க்கு நம்ப கூட ஜாயின் பண்ண சொல்லி இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவானுங்கனு தான் நினைக்கிறேன்” என வசீகரன் சொல்லி முடிக்கவும், பாலா வரவும் சரியாக இருந்தது.
வாசம் பிடித்துக்கொண்டே உள்ளே வந்த பாலா, தன் நண்பன் வேர்வை சிந்தி சமைப்பதையும், உமையாள் ஜாலியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதையும் பார்த்து பொங்கி,
“ஏன் உமா, கரன் ஒரு ஆம்பிளை பிள்ளை இப்படி தனியா சமைக்கிறான், நீ வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க, பெண் பிள்ளையா லட்சணமா அவனுக்கு உதவி செய்யலாம் இல்ல” என்று கேட்டது தான் தாமதம், உமையாள் தான் அமர்ந்து இருந்த திண்டில் இருந்து ஒரு குதியாக குதித்து அவன் முன் நின்றாள்.
வசீகரனோ பாலாவின் நிலையை நினைத்து “மகனே நீ இன்னைக்கு செத்தடா” என குதுகளித்தான்.
உமையாளின் பெண்ணியத்தை பற்றி நமக்கு தான் தெரியுமே, பாலா நீ நிஜமாகவே பாவம் தான்டா.
காதல் கொள்வோம்………….