பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்துத் தயாராகி தலையில் கட்டியிருந்த துண்டோடு கீழே இறங்கி வந்தவளை அம்மு வழக்கம்போல் தன்னுடைய ஆராய்ச்சி பார்வையால் தொடர்ந்தாள். நொடிக்கொரு தரம் நேரத்தைப் பார்த்தவளாய் அனைவரோடும் பேசிக் கொண்டிருந்தாள் மங்கை.
சரியாய் ஏழு மணியளவில் முகுந்தன் வந்திருந்தான்.
வாசலுக்கேச் சென்று வரவேற்றவள் ஒரு மாத பிரிவை ஈடுகட்டும் விதமாய் தன்னவனைக் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாள்.
அவளை விட ஆயிரம் மடங்கு காதலை கண்ணில் தேக்கி வைத்தவனாய் கையசைத்தான் முகுந்தன்.
“மலரே. சுகமானோ?!”
“ம்ம்.. நீ எப்படியிருக்க தங்கம்.”
“மலரை பார்த்ததில் ரொம்ப ரொம்ப நலம்.”, என்றவனைப் பார்த்து புன்னகைத்தவளாய் உள்ளே அழைத்துச் சென்றாள்.
வீட்டில் அனைவரும் அவனை உற்சாகமாய் வரவேற்க திருமா, மாறன் மற்றும் கார்த்திகேயன் அவனைக் கட்டிக் கொண்டனர்.
வீட்டிலிருந்த மற்ற உறவினர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஒவ்வொருவரய் அவனை மங்கையின் தோழன் என அறிமுகப்படுத்தினர்.
“ஹீரோ இது தான் என் அக்கா அமுதினி. நெடுமாறனோட தங்கச்சி. இது அவளோட ஹஸ்பெண்ட்”
“ம்ம் என்கிட்டேயே அக்டிங்கை போடாத தங்கம். போயிட்டு வா. ஒரு வகையில் அவங்க உன்னோட ஜாலியா மூவ் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.”, எனும்போதே முகுந்தனுக்கு பின்னால் இருந்து வசந்தின் குரல் கேட்டது.
“மங்கை..”
“ஹே வாடா. இது தான் வசந்த்”, என்றதில் முகுந்தன் புன்னகை முகமாய் அவனோடு கைகுலுக்கிக் கொண்டான்.
“வாழ்த்துக்கள் மச்சான்.”, என்றதில் விழித்தவன் மங்கையைப் பார்க்க அவள் உறவுமுறைப்படி அவன் அழைப்பதை விளக்கினாள்.
அதைக்கேட்டு இன்னுமாய் முகம் மலர்ந்தவனாய் வசந்திற்கு நன்றியுரைத்து விட்டு சில நொடிகள் பேசிவிட்டு தயாராகி வருவதாய் கூறி உள்ளே செல்ல மங்கையும் வசந்தும் கீழே வந்தனர்.
“இப்போ தான தெரியுது உன் மூஞ்சி பளபளப்பா இருக்குறதுக்கு காரணம்.
மச்சான் கலருக்கு வந்துரணும்னு பார்க்குற?!”
“பெரிய கலரு போடா. நான் பண்றது ஜஸ்ட் ஸ்கின் கேர்”, என்றதில் வசந்த் அவளது தலையில் தட்டிச் சென்றான்.
“அடுத்த ஒரு மணி நேரத்தில் காலை உணவை முடித்து ஆண்கள் மூவருமாய் வெளியே கிளம்ப வசந்தையும் உடன் அழைத்துச் சென்றனர்.
அதற்காகவே காத்திருந்தவளாய் அமுதினி மங்கையை அழைத்துக் கொண்டு அவளது அறைக்குள் சென்றாள்.
“அம்மு எதுக்கு இப்படி இழுத்துட்டு வர?”
“மங்கை உண்மையை சொல்லு?”
“என்ன அம்மு?!”
“உனக்கும் முகுந்தனுக்கும் நடுவில் என்ன இருக்கு?!”, என்றதில் ஒரு நொடி அதிர்ந்தவளாய்,
“ஒண்ணுமில்ல. ஏன் இப்படியெல்லாம் பேசுற?!”
“இந்த வீட்டில் எல்லாருக்கும் நீ செல்லமாய் இருக்கலாம்.
ஆனால் எந்த ஒளிவு மறைவுமில்லாம நல்ல ப்ரெண்ட்ஸா இருக்குறது நாம தான். எனக்கு என் மங்கையைப் பத்தி நல்லாவே தெரியும்.”
“…”
“சொல்லு அவரை விரும்புறியா?!”
“!!!”
“மங்கைக்கு உள்ளே ஒண்ணு வைச்சு வெளியில் வேற மாதிரி நடக்கவோ பேசவோ வராது டி.
உன்னோட இந்த தடுமாற்றமே எனக்கான பதிலை சொல்லிடுச்சு. சொல்லு மங்கை.”
“எந்த தைரியத்தில் நீ இப்படி ஒரு முடிவு எடுத்துருக்க மங்கை. நம்ம வீட்டில் இதுக்கு ஒத்துக்குவாங்கனு நினைக்குறியா?!”
“…”
“ரொம்ப கஷ்டப்படுவ டி.”, என்றவளுக்கு குரல் நடுங்கியது. அதைப் பார்த்தவள் பதட்டமாய் அமுதினியின் கரங்களைப் பற்றி கொண்ட வண்ணம்,
“அம்மு என்ன பிரச்சனை வந்தாலும் நான் சமாளிப்பேன். அப்பா எனக்காக என்னோட விருப்பத்துக்காக கண்டிப்பா சம்மதிப்பார்.”
“குழந்தை மாதிரி பேசுற டி. இங்கே நாம எல்லாம் சுதந்திரமா இருக்குறதா நீ நினைச்சுட்டு இருக்க. நமக்குனு அவங்க போட்டு வைச்சுருக்க கோட்டுக்குள்ளே நாம இருக்குற வரை தான் அதெல்லாம். கட்டுபாடுகளை உடைக்க நினைக்குறோம்னு தெரிஞ்சா…”
“அம்மு!!!”
“புரிஞ்சுக்கோ மங்கை..”
“எனக்கு எல்லாமே புரியுது ஆனால் சத்தியமா அவர் இல்லாம ஒரு வாழ்க்கைனு யோசிக்க முடியலை அம்மு”, என்றவள் கண்கலங்க அமுதினி ஆதரவாய் அவளது தோள்பற்றிக் கொண்டாள்.
“அழகு அந்தஸ்து இப்படி எதுவுமே இந்த காதலுக்கு காரணம் கிடையாது அம்மு.
ஒரு நொடியில் இவர் தான் எனக்கு எல்லாம்னு ஒரு எண்ணம். அவருக்கும் அதே தான். நாங்க யாரு என்னனு ஒருத்தருக்கு ஒருத்தர் முழுசா தெரியுறதுக்கு முன்னாடியே..
இதை விதினு சொல்றதைத் தவிர வேற என்ன சொல்றதுனு எனக்குத் தெரியலை அம்மு.
இவங்களுக்கு இவங்க தான்னு கடவுள் முடிவு பண்ணி தான் எங்களை சந்திக்க வைச்சுருக்கார்னு முழுசா நம்புறேன். ஆனால் அதோட பின் விளைவுகள் எப்படியிருக்கும்னு எனக்குத் தெரியலை டி.”
மங்கையிடமிருந்து இப்படி ஒரு தீர்க்கமான பதிலை அமுதினி எதிர் பார்த்திருக்கவில்லை.
எதோ ஒரு வித ஈர்ப்பினால் இருவரும் இப்படி இருக்கலாம். அதிலும் முகுந்தன் சினிமா பிண்ணனியில் இருக்கும் ஒருவன் என்பதால் பொழுதுபோக்குக்காக கூட இருக்கலாம் என்றெல்லாம் தோன்றியது.
ஆனால் மங்கையின் திடமும் தெளிவும் முகுந்தனின் இயல்பையும் அல்லவா எடுத்துக் காட்டுகிறது.
மங்கையைப் போன்ற ஒரு பெண் நிச்சயமாய் விளையாட்டு மனப்பாங்கில் பேசும் ஒருவனோடு தன் வாழ்வை இணைத்துக் கொள்ள நிச்சயம் நினைக்க மாட்டாள்.
என்று ஏதேதோ யோசித்தவளுக்குப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. மங்கையின் கரங்களை அழுத்திப் பற்றிவளாய்,
“சரி ஒருவேளை இதுதான் விதினு இருந்தால் அதை நான் மாத்த போறது இல்லை.
தைரியமா இரு மங்கை. நான் இருக்கேன். எதுவானாலும் எனக்கு போன் போடு என்ன?!”
“தேங்க்ஸ் அம்மு. என் மேல கோபமெல்லாம் இல்லை தான?”
“அதெல்லாம் இல்லை டி. நீ நல்லாயிருந்தா அதை விட எனக்கு வேற என்ன வேணும் சொல்லு?”, என்றவளைக் கட்டிக் கொண்டாள்.
வெளியில் சென்றவர்கள் ஒரு மணியளவில் உள்ளே வர மங்கை நால்வரையுமாய் முறைத்து நின்றாள்.
“உன் பிரெண்டை நாங்க ஒண்ணும் தூக்கிட்டு ஓடிட மாட்டோம் டி. பசங்கனால் ஆயிரம் இடம் போவோம் அதெல்லாம் உனக்கு எதுக்கு?”, என்ற மாறனை முறைத்து நின்றாள்.
“மலரே அழகர்கோயில் பழமுதிர்சோலை நூபுரகங்கை எல்லாம் போயிட்டு வந்ததில் லேட் ஆயி.”
“இவரு என்ன பெரிப்பாவை விட மோசமா இருக்காரு. இப்படியா உடனே இவகிட்ட சரண்டர் ஆவீங்க”, என்றதில் கோபம் மறைந்து சிரித்திருந்தாள் மங்கை.
தனது பைகளை மாடியில் வைத்துவிட்டு வருவதாய் கூறி முகுந்தன் செல்ல மற்ற மூவரும் உணவு உண்ண அமர்ந்தனர்.
நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க மாலை அனைவருமாய் ரிசெப்ஷனிற்கு தயாராக ஆரம்பித்தனர்.
தொழில்முறை கூட்டங்கள் எல்லாம் இன்றுதான் வருவார்கள் என்பதால் ஆண்கள் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க பெண்கள் அனைவருமாய் தங்களை அலங்கரிப்பதில் பிசியாகி விட்டிருந்தனர்.
மங்கை தனக்கு லெஹன்கா வாங்கியிருந்தாள். இதுவே முதல் முறை என்பதால் அமுதினியிடம் பார்க்கும் இடத்திலெல்லாம் பின் குத்தி விடுமாறு கூறி கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.
அன்று மங்கை முழுவதுமாய் அமுதினியின் பொறுப்பு உடை அதற்கு ஏற்ற சிகையலங்காரம் முக அலங்காரம் என அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து விட்டிருந்தாள்.
“ஐயோ அம்மு என்ன டி இவ்வளவு மேக்கப் போட்டுருக்க!!”
“ஒழுங்கா இப்படியே போய் மேடையில் நில்லு சொல்லிட்டேன். அண்ணன் கல்யாணத்தில் இப்படி கூட இல்லைனால் எப்படி?”
“ஒரு மாதிரி இருக்கு அம்மு.”, என்றவள் அதிருப்தியாய் சிணுங்க செல்லமாய் அவள் தலையில் கொட்டியவளாய்,
“உங்க ஆளுக்குப் பிடிக்குற மாதிரி தான் டி இருக்க ரொம்ப பண்ணாத..”
“அம்மு!!!”
“அதான் பார்த்தனே அவரு உன்னை அப்படி பார்க்குறாரே.
பிரச்சனையெல்லாம் தாண்டி ஒண்ணு சொல்றேன். ஜோடி பொருத்தம் சூப்பர்”, என்றதில் அமுதினியைக் கட்டிக் கொண்டாள்.
“நிஜமா தான் சொல்றியா?”
“உண்மையா தான் சொல்றேன். இப்போ ஓகே தான வா போலாம்.”, என்றவளோடு கீழே இறங்கினாள்.
“ம்மா இவளை பாரு எப்படியிருக்கா?”, என்ற குரலில் திரும்பிய விஜியும் குணவதியும் மகள்கள் இருவரையும் பார்த்து முகம் மலர்ந்தனர்.
ஒரே மாதிரியான லெஹன்கா வேறு வேறு நிறத்தில் எடுத்திருந்தனர் மங்கைக்கும் அமுதினிக்கும்.
“பிள்ளைக எம்புட்டு அழகாயிருக்கு”, என்ற குணவதி இருவருக்குமாய் திருஷ்டி கழித்தார்.
“பாப்பா உனக்கு இதுக்கு ஒத்துப் போற மாதிரி ஒரு நகை அமுதினி வாங்கிட்டு வந்தாளே அதை எங்கே?”
“சித்தி அது என்னவோ கழுத்தில் கல்லை கட்டி விட்டது மாதிரி வெயிட்டா இருக்கு வேண்டாம் சித்தி.”
“இப்படி தான் மா எல்லாத்துக்கும் எதாவது சொல்றா. பெரியம்மா எப்படி இவளை சமாளிக்குறீங்க.
விட்டால் கல்யாணத்துக்கும் ட்ராக் பேண்ட் போட்டுட்டு வருவா போல இருக்கு.”, எனும்போதே பூங்கோதை அங்கு வர,
“இவ தான, அவ கல்யாணத்துக்கே அப்படி போய் நின்னாலும் நிப்பா.
பொம்பளை பிள்ளைக எல்லாம் உடைக்கும் நகைக்கும் ஆளா பறக்கும்ங்க. இவ ஏன் தான் இப்படி இருக்காளோ.”