“சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்
மு.வ விளக்க உரை: எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.”
விருந்தினர்கள் எல்லாம் மண்டபத்திற்கு கிளம்பியிருக்க பெண்கள் பெரியவர்கள் என அனைவருமாய் வரவேற்பறைக்கு வந்து விட்ட போதும் சிறியவர்களை மட்டும் இன்னும் காணவில்லை.
அதற்கு மேல் பொறுமையிழந்தவளாய் மங்கை மாடியை நோக்கி குரல் கொடுத்தாள்.
“கார்த்தி மாமா. மாறாண்ணே என்ன பண்றீங்க வரலையா இன்னும்?”
“வந்துட்டோம் வந்துட்டோம் கத்தாத டி மாமங்கை.”, என்ற மாறனின் குரலில் திரும்பியவர்கள் முகம் ஆச்சரியத்தில் மிளிர்ந்தது.
திருமா அவனது சந்தன நிற ஷெர்வானியில் நடுவில் வர இருபுறமும் அரக்கு வண்ண குர்தாவில் முகுந்தன் மாறன் கார்த்தியோடு வசந்தும்,
அமுதினியின் கணவனும் இறங்கி வந்தனர்.
“ஏலேய் நல்லாயிருக்கு. எப்படி எல்லாரும் ஒண்ணு போல போட்டுருக்கீங்க?”
“காலையில் வேற என்ன வேலை முகுந்தனுக்கும் வசந்துக்கும் துணி எடுக்குறது தான் முதல் ப்ளான்.
மாப்பிள்ளைத் தோழர்கள்னு நாங்க எல்லாம் கெத்தா இருக்க வேண்டாமா?
போட்டோகிராபர் வேற போட்டோக்கு ஆள் வேணும்னான் அதான் ஹீரோவையும் உள்ளே இழுத்தாச்சு.”
மாறன் பேசிய எதுவுமே அங்கு மூவரின் காதில் விழவில்லை. ஒன்று மங்கை, முகுந்தனை தன் குடும்பத்தில் ஒருவனாய் பார்க்க பார்க்க மனமெல்லாம் ஒருவித பரவச ஆர்பரிப்பாய் இருந்தது.
மற்ற இருவரும் கனியனும் பூங்கோதையும். முகுந்தன் தன் பேரப் பிள்ளைகளோடு சுற்றுவதைப் பார்க்கும் போதெல்லாம் இனம் புரியா ஒருவித தவிப்பு அந்த பெரியவர்களுக்கு.
முகுந்தனின் பார்வை மொத்தமும் அவனது மலரிடத்தில் தான். சுற்றம் உணர்ந்து அமைதி காத்தவனின் கண்களின் பாஷையை மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டிருந்தது.
குணவதி அவசரமாய் சமையலறைக்குள் சென்றவர் உப்பும் மிளகாயும் கை நிறைய எடுத்து வந்தார். மங்கையோடு அமுதினி மற்றும் அவளது கணவரையும் சேர்த்து நிற்க வைத்து மொத்தமாய் திருஷ்டி சுத்தி கொல்லைப் புறத்திற்கு ஓடினார்.
சந்தோஷமாய் முகுந்தனைப் பார்த்து கண்சிமிட்டியவளாய் மங்கை தனது கைப்பேசியை எடுத்து, “சே சீஸ்”, என்று குரல் எழுப்ப கொண்டாட்டமான செல்பியோடு தொடங்கியது திருமாவின் வரவேற்பு.
திருமண மண்டபத்திற்கு வந்த பின்பு யாருக்கும் நிற்கக் கூட நேரமில்லால் நேரம் கழிய போட்டோகிராபர் மணமக்களோடு நண்பர்களையும் வைத்து விதவிதமாய் தனது கேன்டிட் ஷாட்ஸை ஆரம்பித்தார்.
பெண்களில் அமுதினி மங்கையோடு கன்னிகாவின் உறவு வழிப் பெண்கள் இருவரும் இருந்தனர்.
மங்கை சும்மா இருக்காமல் போட்டோகிராபரிடம் திருமாவையும் கன்னிகாவையும் நெருக்கமான புகைப்படங்களை எடுக்குமாறு கூற அனைவருமாய் மணமக்களை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர். மற்றவர் கண்களை உறுத்தாத வண்ணம் வசந்திடம் தனது மொபைலைக் கொடுத்து முகுந்தனையும் தன்னையுமாய் புகைப்படம் எடுத்துத் தரக் கூறினாள் மங்கை.
மணமக்கள் மேடையேறியது தான், பரிசுப் பொருட்களைக் கொடுக்க விருந்தினர்கள் வரிசையாய் வர ஆரம்பித்திருந்தனர்.
சற்று நேரம் அடக்க ஒடுக்கமாய் அண்ணனுக்கு அருகில் நின்ற மங்கையால் அதற்கு மேல் முடியாமல் கீழே ஓடியிருந்தாள்.
அண்ணனோடு படித்தவர்கள் கடையில் வேலைப் பார்ப்பவர்கள் என தெரிந்தவரோடெல்லாம் பேசிவிட்டு வந்தவள் முகுந்தனைத் தேட வாசலில் கார்த்தியோடு நின்று சில விருந்தினர்களின் செல்பிக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.
வந்ததில் இருந்து இருவரும் பேசுவதற்கான வாய்ப்புகளே கிடைக்காமல் போக இருந்தும் அவனின் இருப்பே பெண்ணவளுக்கு அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
டீஜே தனது திறமையை ஆரம்பிக்க திருமாவின் கல்லூரித் தோழிகள் சிலர் மங்கையை அழைத்தனர்.
இசை வெள்ளத்தில் நனைந்து போனவளாய் தமிழ்நாட்டின் குத்துப் பாட்டிற்குள் ஒன்றி விட்டிருந்தாள் மங்கை.
நடனமெல்லாம் கற்றுக் கொள்ளவில்லை ஆனாலும் இது போன்ற ஆட்ட பாட்டங்கள் அவளுக்கு அத்தனை பிடித்தம்.
அமுதினி கல்யாணத்தில் போட்ட ஆட்டத்தில் நான்கு நாட்கள் சிக்கன்குனியா வந்த கோழி போன்று தான் நடந்து கொண்டிருந்தாள்.இருந்தும் ஆசை யாரை விட்டது என்பதாய் இப்போதும் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தாள்.
திடீரென உள்ளே சலசலப்பும் விசில்களும் அதிகமானதை உணர்ந்து கார்த்தி வசந்தோடு முகுந்தனும் உள்ளே வர தன்னவளின் நடனத்தைப் பார்த்து விழி விரித்து நின்றிருந்தான்.
“எந்தா கார்த்தி இது!!”
“ஹா ஹா இப்படி ஒரு மங்கையை நீங்க பார்த்துருக்க மாட்டீங்க. ஆரம்பிச்சுட்டால இனி நிறுத்த ரொம்ப நேரம் ஆகும் முகுந்தன்.”
வசந்த் மெதுவாய் அவனது காதில், ”அவசரப்பட்டு ஏமாந்துட்டீங்களே மச்சான்.
என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாம்ல.”, என்றதில் சத்தமாய் சிரித்திருந்தான்.
தற்செயலாய் திரும்பியவள் இவர்களைப் பார்த்து மூவரையும் தன்னருகில் சேர்த்துக் கொண்டாள்.
ஸ்பீக்கர் சத்தத்தில் ஒருவரோடு ஒருவர் பேசுவது கேட்காமல் இருக்க முகுந்தன் மங்கையிடம்,
“என்ட சக்கர பொன்னு மல்டி பெர்ஸ்னாலிட்டி மட்டும் இல்லாம மல்ட்டி டேலண்டடோ”
“இதெல்லாம் என்ன தங்கம் சும்மா தோணுறதை ஆட வேண்டியது தான்.”, என்றவள் கார்த்தி எதோ கூறியதில் அவனோடு சேர்ந்து ஆட ஆரம்பித்திருந்தாள்.
உண்மையில் முகுந்தன் வாழ்க்கையில் பங்குபெறும் முதல் திருமணம். அதாவது நெருங்கிய உறவுத் திருமணம்.
அதனாலேயே அவனுக்கு ஒவ்வொன்றும் அதிசயமாய் ஆச்சரியமாய் இருந்தது.
இத்தனை பெரிய குடும்பம் ஒருவருக்கொருவர் அன்பாய் பாசமாய் அதோடு திருமணத்தையே ஏதோ திருவிழா போன்று கொண்டாடுவதெல்லாம் அத்தனை பிடித்தமாகிப் போனது அவனுக்கு.
ஒரு வழியாய் மகளை அடக்கி முத்துப் பாண்டி அமர வைக்க அப்படியாய் சோர்ந்து போயிருந்தாள் மங்கை.
குணவதி கையில் ஜுஸோடு வர அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்தவளாய் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.
“கழுத இப்படியா ஆட்டம் போடுவ. எல்லார் பார்வையும் உன் மேல தான்.”
“ம்மா அண்ணன் கல்யாணத்தில் இது கூட இல்லாம எப்படி மா. நீயும் வந்துருக்கலாம்ல?”
“வெளங்கிடும் போடி அங்கிட்டு.”, என்றவர் மேடைக்கு விரைந்தார். கூட்டம் குறைந்து உணவு முடிந்து சிறியவர்கள் அனைவருமாய் மொட்டை மாடிக்குச் சென்றனர்.
சீட்டுக்கட்டில் தொடங்கி அந்தாக்ஷரிக்குப் போய் வெட்டிக் கதைகள் ஆயிரம் பேசி என கூட்டம் கலைந்த போது மணி நள்ளிரவு இரண்டு.
மற்றவர்கள் கீழேயிறங்க முகுந்தனோடு மங்கையும் வசந்தும் பின் தங்கினர்.
அனைவரும் சென்று விட்டதை உறுதிப் படுத்தியவனாய் வசந்த் கீழே படியில் சென்று அமர்ந்து கொள்ள அந்த இரவும் நிலவும் அவளுமாய் முகுந்தனுக்கு மனம் லயித்திருந்தது.
மெதுவாய் அவனது கரத்தை நீட்ட அத்தனை நேரத்து ஆட்டமும் அடங்கி பெண்மை விழித்துக் கொள்ள வெட்கத்தோடு படபடப்புமாய் தனது கரத்தை அவனிடம் ஒப்படைத்தவளாய் அவனருகில் சென்றாள்.
“பொன்னு மலரே..”
“ம்ம்..”
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணிணேன்.”
“நானும்.”
“பட பட பட்டாசு மலர் எங்கே போயி?”, என்றவனின் குரலில் கேலியிருந்தது.
“…”
“பயமோ?”
“இல்ல.. ரொம்ப ரொம்ப பாதுகாப்பா இருக்கேன்.”
“என்ட பாரியாக்கி(மனைவி) தூக்கி போகணும் போல் உண்டு. இப்போவே இந்த நொடியே..”
“…”
“சக்கரே..”
“ம்ம்..”
“அச்சன் அம்மே தம்பி எல்லாவருக்கும் மலரை வலரே ஆகர்ஷிகமானு (ரொம்ப பிடிச்சுருக்கு).
“தங்கமே!!!!!”
“சத்தியம். போன வாரம் ஊருக்கு போயிருந்தேன். எனக்கு மறைக்கத் தோணலை. விவரமா எல்லாம் சொல்லல.
உன் போட்டோ காட்டினேன் ஐ திங் இட்ஸ் ஹெர் அம்மேனு சொன்னேன்.
பயங்கர ஷாக். பட் வேற ஒண்ணும் சொல்லல. நான் சொன்னேன் அவ கிரிக்கெட்டில் நிறைய சாதிக்கணும். அப்பறம் தான் கல்யாணம். ஆனால் உங்ககிட்ட அவ்வளவு நாள் மறைக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்னு சொன்னேன். புரிஞ்சுகிட்டாங்க.”
முகுந்தன் பேசுவதை எல்லாம் கேட்க கேட்க மனதை ஏதோ மகிழ்ச்சி மிகுதியில் அடைத்தது போன்ற உணர்வு மங்கைக்கு.
ஒன்றும் கூறாமல் பக்கவாட்டில் மெதுவாய் அவனது தோள் சாய்ந்து கொண்டாள்.
“லவ் யூ உன்னியேட்டா..”
“கேட்டில்லா சத்தமா பரையு..”
“ஞான் நின்னை பிரேமிக்கின்னு உன்னியேட்டா.”, என்றவள் லேசாய் நிமிர்ந்து அவனைப் பார்க்க முகம் கொள்ளா புன்னகையோடு அவளது நெற்றியில் லேசாய் இதழ் பதித்தான்.