“குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
மு.வ விளக்க உரை: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.”
அடுத்த சில நிமிடங்கள் முகுந்தனின் வீட்டில் அமைதியே நிலவியது. சட்டென முகுந்தனின் கோபமும் குரல் மாற்றமும் மங்கைக்கு அந்நியப்பபட்டதாய் கூட தோன்றியது.
பார்வதியின் கரங்களை விடுவிக்காதவளாய் அவரது தோளிலேயே சாய்ந்து அமர்ந்திருந்தாள் மங்கை.
“எந்து பிரஷணம் அம்மே. இப்போவாவது பரா..”, என்ற கிருஷ்ணனைத் தொடர்ந்து முகுந்தனுமே தாயின் விளக்கத்திற்காக காத்திருந்தான்.
“நானும் அச்சனும் ஒரே காலேஜ். இவர் என் சீனியர். அப்போ எல்லாம் பொண்ணுங்க காலேஜ் போறதே ரொம்ப பெரிய விஷயம் தான். நானும் அழுது அடம் பிடிச்சு தான் இன்ஜினியரிங் சேர்ந்தேன்.
ராமும் நானும் பேசினோம் பழகினோம் பிடிச்சது.
காலேஜோட கடைசி வருஷம் ராமோட அப்பாக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு. இவர் வீட்டுக்கு ஒரே பையன். அதனாலேயே அவரோட அம்மா அப்பா பிடிக்கலைனாலும் ஒத்துக்க முயற்சி பண்ணிணாங்க.
ஆனால் சொந்தகாரங்க எல்லாம் அவங்களை குழப்பி பிரச்சனைகள் வர ஆரம்பிச்சது.
படிப்பில் கவனம் குறைய ஆரம்பிச்சது. இதை இப்படியே விட்டால் சரி வராதுனு எங்க வீட்டிலேயும் சொல்லலாம்னு முடிவு பண்ணினேன்.
சொல்லப் போனால் ஒரு மாதிரியான குருட்டுத் தைரியம். படிக்கவே அனுமதி வாங்கிட்டோம். இதில் என்ன ஆகிற போதுனு நினைச்சேன்.
அப்பாகிட்ட விஷயத்தை சொன்னப்போ ஒரு வார்த்தை கூட பேசாம என் கன்னத்திலேயே ஒரு அடி அடிச்சார். என்ன நடந்ததுனு புரியவே நேரம் எடுத்தது எனக்கு. அம்மா அவங்க பங்குக்கு அடிச்சாங்க. திட்டினாங்க.
பெரிய அண்ணன் பொறுமையா பேசி புரிய வைச்சுரலாம்னு நினைச்ச வகையறா. ஆனால் இரண்டாவது அண்ணன் முன்கோபி. அவர்கிட்டேயும் உடம்பு தடிக்குற அளவு அடி வாங்கினேன்.
எனக்கு அப்பறம் தங்கச்சி இருக்கா எல்லார் வாழ்க்கையும் கெட்டுப் போகும்னு என்னென்னவோ சொன்னாங்க.
அவரோட குணம் சரியில்லை குடும்பம் சரியில்லை என் வாழ்க்கை மேல இருக்குற அக்கறை இப்படி என்ன காரணம் சொன்னாலும் நானே கூட பின் வாங்குறதைப் பத்தி யோசிச்சுருப்பேன்.
ஆனால் கண்ணை மூடிகிட்டு அவங்க இந்த காதலை மறுத்தத்துக்கு ஒரே காரணம் அவங்களோட சாதிக்காக.
நாளைக்கு சாதிக்காரன் சப்போர்ட் இருக்காது. எல்லாரும் அசிங்கமா பேசுவாங்க.
தலைகுனிஞ்சு நிக்கணும். குடும்ப கௌரவம் போயிடும். இதெல்லாம் தான் சொன்னாங்க. அதுவே என்னோட பிடிவாதத்தை அதிகப்படுத்துச்சு.
பெத்து வளர்த்து ஆளாக்கின பிள்ளையை விட சாதியும் சாதிக்காரனும் தான் பெருசானு கேட்டா எங்கப்பா யோசிக்காம ஆமானு சொன்னார்.
என்னால தாங்கிக்கவே முடியலை. என்னோட உறுதி அவங்களை பயமுறுத்துச்சு.
அடுத்ததா ராமை கொலை கூட பண்ணிடுவோம்னு மிரட்டினாங்க. எனக்கு வெளியில் என்ன நடக்குதுனு தெரியலை. பேசவோ கேட்கவோ ஆளில்லை.
என் அம்மா என்னை நினைச்சு அழுவாங்களே தவிர அப்பாவை மீறி ஒரு வார்த்தை கூட பேச மாட்டாங்க. அவசர அவசரமா மாப்பிள்ளை தேடினாங்க யாருக்கும் தெரியாம வீட்டிலேயே வைச்சு கல்யாணத்தை முடிக்கலாம்னு முடிவு பண்ணிணாங்க.
அதுக்கு மேல என்னால அமைதியா இருக்க முடியலை. செத்து போயிடுவேன்னு பயமுறுத்தினேன். அப்பா ஒரே வார்த்தை தான் சொன்னார்.
“இதை நீ எப்பவோ பண்ணிருக்கலாம். அதை விட்டுட்டு தேவையே இல்லாமல் அடம் பிடிச்சுட்டு இருக்கனு.”
பெத்த பொண்ணை செத்து கூட போக சொல்ற மனுஷன்கிட்ட இதுக்கு மேல என்னத்தை எதிர் பார்க்குறதுனு மனசே விட்டுப்போச்சு.
எந்த வீட்டில் ராணி மாதிரி சுத்தி வந்தேனோ அங்கேயே பிச்சைக்காரி மாதிரி இருந்தேன்.
அவர் சொன்னதுக்காகவே செத்துப் போயிடக் கூடாதுனு ஒரு வைராக்கியம்.
இவங்க முன்னாடி எல்லாம் என் ராமோட நல்லா வாழ்ந்து காட்டிரணும்னு ஒரு வெறி.
கடைசி முயற்சியா என் பெரிய அண்ணன், அதான் இவளோட அப்பா வந்தான் என்கிட்ட பேசுறதுக்கு.
நீ நினைக்குறது நடக்கவே போறதில்ல. ஏன் வீணா உன் உடம்பையும் கெடுத்து அம்மாவையும் கஷ்டப்படுத்துற. அவர் சொல்றது படி நடந்துக்கோனு சொன்னான்.
உன்னை அண்ணனா இல்ல இந்த நிமிஷம் என்னோட சாமியா நினைச்சு கேட்குறேன், என்னை ராமோட வாழ விடுனு அவன் காலைப் பிடிச்சு கெஞ்சினேன்.
சரி நான் அப்பாகிட்ட பேசுறேன் நீ அந்த பையனையே கல்யாணம் பண்ணிக்கோ ஆனால் அதுக்கு அப்பறம் இந்த வீட்டுக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது.
நாங்க யாரும் செத்தா கூட நீ பார்க்க வரக் கூடாது. நீ செத்தாலும் நாங்க யாரும் வர மாட்டோம். அதை தான் நீ விரும்புறியானு கேட்டான்.
என்னால இதுக்கு உடனே சரினு சொல்ல முடியலை. இப்படி பண்ணாதண்ணே என்னை தயவுசெஞ்சு வாழவிடுனு கெஞ்சினேன்.
அவன் போய் அப்பாகிட்ட என்ன சொன்னானோ எனக்குத் தெரியாது. அழுதழுது மயங்கிப் போன என்னை நடு ராத்திரியில் எழுப்பினாங்க. என்ன ஏதுனு ஒண்ணும் புரியலை. என் அம்மா என் கழுத்தில் காதில் இருந்த தங்கத்தை எல்லாம் அழுதுட்டே கழட்டினாங்க.
கட்டின தாவணியோட என் பெரிய அண்ணன் என்னை வாசலுக்கு இழுத்துட்டு போனான். அப்போ அப்பா சொன்னார்,
“ஊரைப் பொருத்தவரை என்னோட ஒரு பொண்ணு தற்கொலை பண்ணி செத்துப் போயிட்டா. எனக்கு மூணே பசங்க தான்.”, அப்படினு சொல்லிட்டு தலை முழுகிட்டார்.
“என் குடும்பத்தோட அடுத்தத் தலைமுறைக்கெல்லாம் இப்படி ஒருத்தி இருந்ததே தெரியப் போறது இல்லை. உன் சம்மந்தப்பட்ட சிறு துரும்பு கூட இங்கே இருக்காது.
இதை மீறியும் யாருக்காவது தெரியுற நிலைமை வந்தாலும் அவங்களுக்கான தப்பான உதாரணமா காட்டுறதுக்கு தான் உன்னை பத்தி சொல்லுவாங்க.
எவனை நம்பி நீ எங்க எல்லாரையும் தூக்கியெறிஞ்சுட்டு போறியோ அவனை நம்பி நடுத்தெருவில் தான் நிற்கப் போறனு சொல்லி தான் வெளியே அனுப்பினார்.
அவரை சமாதனப்படுத்த ஒரு அடி எடுத்து வைச்சேன்.
அப்படியே தடுத்துட்டார். இந்த கதையிலேயோ சினிமாவிலேயோ வர்ற மாதிரி நாளைக்கே குழந்தையா குடும்பமா வந்து நின்னால் நான் மனசு மாறிடுவேன்னு எல்லாம் நினைச்சுறாத.
இன்னொரு தடவை என் கண்ணில் பட்டால் அது தான் உனக்கும் உன் புருஷனுக்கும் கடைசி நாள்னு மிரட்டி அனுப்பிட்டார்.
சின்ன அண்ணனோ கலைச்செல்வியோ என்னைக் கடைசியா ஒரு தடவை பார்க்க கூட இல்லை. கொஞ்ச தூரம் போனதும் அண்ணன் அவனோட சட்டைக்குள்ளே ஒளிச்சு வைச்சு இருந்த என்னோட சர்டிபிகேட்டெல்லாம் எடுத்துக் கொடுத்தான்.
கூட பிறந்த பாவத்துக்கு இதை பண்றேன். அடுத்த ஜென்மத்திலேயாவது புத்தி மாறி போகாம ஒண்ணா ஒரே குடும்பமா இருக்க அந்த சாமி விதியை எழுதட்டும்னு சொன்னான்.
ஊர் எல்லையில் ராம் எனக்காக காத்துட்டு இருந்தார். அவரோட முகத்துலேயும் சின்ன சின்ன காயம். இவங்க தான் பண்ணிருகாங்கனு புரிஞ்சுது.
அழுகையைத் தவிர வார்த்தை எதுவுமே வரலை.
உன் அப்பா அங்கிருந்து திரும்பி கூட பார்க்காம கிளம்பி போயிட்டான். அன்னைக்கு என்னை இந்த தோளில் தாங்கினவர் முப்பது வருஷமா என்னை அவர் மகளா மனைவியா அம்மாவா எல்லாமுமா பார்த்துக்குறார்.
ஒரு பக்கம் என்னை வேண்டாம்னு ஒதுக்கின நீங்களும் எனக்கு வேண்டாம்னு தான் இப்படி இருக்கேன்.
அதைவிட எனக்குத் திரும்பி போற தைரியமே வரலை.
அவங்களோட கொடூர முகத்தைப் பார்த்த அப்பறம் அவங்க நிச்சயமா எதுவேணாலும் செய்வாங்கங்கிற பயம்.
என்னைப் பத்தின எதுவுமே தெரியாம என் பசங்களை வளர்த்தேன். மதுரைனு பேரைக் கேட்டாலே அடி வயிறு கலங்கும். அதிலும் முகுந்தன் மதுரையைப் பத்தி பேசினாலே எதாவது சொல்லி தடுத்துருவேன்.
என்னோட அழுகை கோபம் ஏக்கம் எல்லாமே எங்க அறையில் நாலு சுவத்துக்குள்ளே இவர்கிட்ட மட்டும் தான்.
சொந்தகாரங்களை சரி கட்டி இவரோட அம்மா அப்பா கல்யாணம் பண்ணி வைச்சாங்க.
ஆனாலும் யாரும் இவங்களோட பழகலை. என் மாமனார் ஒரு கட்டத்தில் ஒதுங்கவும் செஞ்சுட்டார். எனக்கும் என்ன டா சொந்தமும் பந்தமும் நம்மை கஷ்டப்படுத்தி குத்திக் காட்டி பேச தான் இருக்காங்கனு தோணிச்சு.
யாருமே வேண்டாம் என் பிள்ளைகளுக்கு நாங்களே போதும்னு நினைச்சு மனசைத் தேத்திப்பேன். ஆனால் எந்தக் குடும்பத்து கண்ணில் என் பிள்ளை படவே கூடாதுனு நினைச்சேனோ அதே குடும்பத்தோட உறவாடி வந்துருக்கான்.
எனக்கு பயமா இருக்கு ராமேட்டா. இந்த விஷயம் அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சால்?!”
“தெரிஞ்சா என்ன பண்ணிடுவாங்க? என்னை கொலை பண்ணிடுவாங்களா?”
“தங்கம்!!”
“முகுந்தா!!!”
“இதெல்லாம் நீ முன்னேயே பரைஞ்சுருக்கலாம் அம்மே.
நான் அந்த ஊர் பக்கமே போயிருக்க மாட்டேன். இல்லை, போய் அங்கே எல்லாரையும் நிக்க வைச்சு கேள்வி கேட்டுருப்பேன்.
இப்போ அவங்க வீட்டு பொண்ணு என்னை விரும்புறாளே. இப்போ என்ன பண்ணிடுவாங்களாம்?
இவளையும் வீட்டை விட்டு துரத்திடுவாங்களா?”, என்றவனின் கேலி எதோ ஒரு விதத்தில் மங்கைக்கு வலிக்கச் செய்தது.
அவன் தாய் மீதான பாசத்தில் பேசிய வார்த்தைகள் தான் எனினும் அதன் இன்னொரு பொருள், உன் வீட்டு பெண் என்னைப் பிடித்து வந்திருக்கிறாளே இப்போது யார் என்ன செய்வீர்கள் பார்க்கலாம் என்பதாய் இருந்தது.
மங்கையின் முகம் சுருங்கிய விதத்தில் பலராம் மனைவிக்கு ஜாடை காட்டிய படி மகனின் பேச்சை நிறுத்தினார்.
“சரி விடு மங்கை. நீ வா நான் உன்கிட்ட நிறைய பேசணும்.”, என்றபடி தன் கையைப் பிடித்த பார்வதியை விட்டு நகர்ந்தவளாய்,
“நான் ஊருக்கு போகணும்.”
“மோளே எதுவானாலும் காலையில் பேசலாம்.”
“இல்லை நான் இங்கே இருக்குறது சரி வராது. நான் கிளம்புறேன்.”
“மலரே.. எந்தா இது அவங்களைப் பத்தி தெரிஞ்சும்??!”
“அதுக்காக?? என்ன ஆனாலும் அது என் குடும்பம். என் காதல் எனக்கு உயிர் போல ஆனால் அதை தாங்கிப் பிடிக்க இருக்குற இந்த உடம்பு அந்தக் குடும்பம் கொடுத்தது.”
“மங்கை…”
“நீங்க சொன்ன எல்லாமே சரி ஆனால் உங்களோட ஆசையை அடையுறதுக்கு நீங்க இன்னும் அடம் பிடிச்சுருக்கணும்.
உங்களோட சூழ்நிலை என்னவோ அது தெரியாமல் நான் பேசக் கூடாது தான்.
என் கல்யாணம் என் அத்தை மகன் உன்னி முகுந்தனோட என் மொத்த குடும்பத்தோட ஆசீர்வாதமும் கிடைச்சு மட்டும் தான் நடக்கும். நடத்திக் காட்டுவேன்.”
“மலரே!!!”
“என்ன இருந்தாலும் அந்தக் குடும்பத்து ரத்தம் தான அவங்களை விட எனக்கு ரோஷமும் கோபமும் அதிகமா தான் இருக்கும் தங்கமே.
நேத்து வரை நான் இங்கே இருந்ததில் எந்த தப்பும் தெரியலை. ஆனால் இப்போ இத்தனைக்கும் பிறகு யாருக்கா இருந்தாலும் நீங்க சொன்னது போல தான் நினைக்கத் தோணும். நான் வரேன்.”
“!!!”
“கிச்சு என்னை ஏர்போர்ட்டில் விட்டுங்க ப்ளீஸ்.”, என்றவள் மாடிக்கு தனது உடைமைகளை எடுக்கச் சென்றிருந்தாள்.