“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்
மு.வ விளக்க உரை: கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.”
மங்கை தனது அப்பத்தாவின் கரம் பற்றிக் கொண்டவளாய் அவரது காலடியில் அமர்ந்து கொண்டாள்.
“அழாத அப்பத்தா..”
“இவுக எல்லாரையும் விட எனக்கு உன்னைய அம்புட்டு பிடிக்கும் டி. உன் அப்பன் சொல்ற மாதிரி அந்த மீனாட்சியா உன்னை பார்க்குறதினால் இல்ல. எம்மவ பார்வதியோட நிறமும் ஜாடையுமா நீ இருக்குறதுனால.”
“அப்பத்தா!!!”
“எம்மகளை பிரிஞ்சு நான் படுறபாடு இங்கே யாருக்குலே தெரியும். அப்போ இவரு சாதி சங்கத்து தலைவரு அப்படிபட்ட இவர் பொண்ணு வேற சாதி பையனை கல்யாணம் பண்ணினானு தெரிஞ்சா இவருக்கு அவமானமாம்.
என் கண்ணு முன்னாடி எம்மவளை துடிக்கத் துடிக்க இங்கேயிருந்து அனுப்பினாங்க.
எம்புள்ளை என்னை அவ்வளவு ஏக்கமா பார்த்து போனப்போ நான் செத்தே போனேன் தெரியுமா? அதைப் பத்தி இவங்க யாருக்காவது கவலை இருந்துதா?
இவ்வளவு கௌரவம் பார்க்குறவுக வீட்டுப் பொண்ணுகிட்ட அவ வயசுக்கு வந்தப்பறம் தன்னோட சுய ரூபத்தை காட்டிப்புடணும்.
இங்கேரு ஆத்தா நாங்க எல்லாம் சிரிச்சு கொஞ்சி பேசிக் கிடக்குறதால நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இருக்க நினைச்சுறாத.
எங்களுக்கு மக, கூடப் பிறந்தவ இதை எல்லாத்தையும் விட கௌரவம்தேன் முக்கியம்னு சொல்லி வளர்த்துருக்கணும்.
அதெப்படி! எம்மவளுக்கு நான்னால் அம்புட்டு உசுரு. அவகிட்ட போய் கண்டதைப் பேசினால் எம்பிள்ளை என்னப் பத்தி என்ன நினைக்கும்னு எண்ணம்.
இவுக கொண்டாடுற சாதியைப் படைச்ச அதே சாமி தானே காதலையும் படைச்சாரு.
எம்மவ என்ன கனவா கண்டுருக்கும் இப்படி ஒருத்தரை தனக்கு துணையா நினைப்போம்னு.
உன் அப்பனை கெஞ்சி காலில் விழாத குறையா இந்த மனுசன்கிட்ட பேச வைச்சு எம்மவ எங்கேயோ போய் உயிரோடயாவது இருக்கட்டும்னு அனுப்பி வைச்சேன்.
இதோ உட்காந்துருக்கானே உன் சித்தப்பன் எம்மவளை வெட்டிப் போடணும்னு சொன்னான். பெத்த வயிறு எப்படி கலங்கிருக்கும். அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டா எம்மவ மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு முறையா பெத்தவரு உங்ககிட்ட தான வந்து சொன்னா?
பெரிய மனுசனா என்ன பண்ணிருக்கணும் அந்த பையனையும் கூப்பிட்டு பேசி என்ன ஏதுனு பொறுமையா யோசிச்சுருக்கணும். அத்தனை மனக் கஷ்டத்துலேயும் எம்மவ இந்த வீட்டு படியைத் தாண்டலையே. அதுக்கு அவளுக்கு கிடைச்சது..
அவன் யாரு என்ன, குடும்பமென்ன எதுவுமே தெரியாது. இங்கே இருந்து பிடிக்காதவனை கட்டிகிட்டு எம்மவ சீரழியுறதுக்கு எங்கேயோ போய் வாழட்டும்னு நினைச்சேன்.
அப்பறம் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆச்சு பேரப் பிள்ளைகளை பார்க்கும் போதெல்லாம் மனசு கிடந்து அடிச்சுக்கும்.
அம்புட்டு ஏன் இப்போ வந்த உன் சிநேகிதன் அந்த கேரளத்து பையனைப் பார்க்கும் போது அதுவும் உங்க கூட எல்லாம் அவன் ஒண்ணும் மண்ணா பழகும் போது தோணும் எம்மவளுக்கும் இந்த வயசில் பிள்ளை இருக்குமே!
இப்படி எல்லாருமா கூடி இருக்குற நாள் கிழமையில் அவங்களும் இருந்தா இப்படி தானே இருக்கும்னு நினைச்சு ராத்திரியெல்லாம் அழுவேன்.
அவ்வளவு தான் கட்டுன சீலையோட போன எம்மவளைப் பார்த்து முப்பது வருசம் ஆகப் போகுது. நான் சாகுறதுக்குள்ளே அவ உயிரோட தான் இருக்கானு தெரிஞ்சா கூட போதும் நிம்மதியா கண்ணை மூடுவேன். ம்ம் இத்தனை வருசத்து வேண்டுதல் இப்போ மட்டும் அந்த மீனாட்சி காதை எட்டிட போதா என்ன?
அவளும் ரோசக்காரி ஒரு தடவை கூட வந்து பார்க்கவே இல்லையே. அதுக்கும் இவர் தான் காரணம். வந்தா வெட்டிடுவேன் கொன்னுடுவேன்னு பயமுறுத்தினா அவளும் எப்படி வருவா?! எங்கே இருக்காளோ என்ன பண்ணுறாளோ!!!”, என்று நிற்காமல் வழிந்த நீரை அழுந்தத் துடைத்துக் கொண்டார் பூங்கோதை.
தன் அழுகையை கட்டுப்படுத்தியவளாய் எழுந்து சென்று தன் கைப்பேசியை எடுத்தவள் பார்வதியோடு எடுத்த புகைப்படத்தை அவரிடம் நீட்டினாள்.
பலராம் மனைவியின் தோள் மீது கைப்போட்ட வண்ணம் நிற்க இருபுறமும் முகுந்தனும் கிருஷ்ணணுமாய் நிற்க அவர்களுக்கு முன்னே நின்று மங்கை எடுத்த செல்பி அது.
பூங்கோதைக்கு ஒரு நொடி இதயமே நின்று விட்டதைப் போன்று இருந்தது. விரல்கள் நடுங்க மகளின் புகைப்படத்தை வருடியவர் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தார்.
கனியன் கைப்பேசியை வாங்க முற்பட்ட சட்டென அதை வாங்கி அணைத்து வைத்தவளாய் மங்கை அவரையே தீர்க்கமாய் பார்த்தாள்.
பூங்கோதை பேத்தியை நோக்கி கை நீட்ட அவசரமாய் அவரருகில் அமர்ந்தவள் தன் தாயிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினாள்.
“ஏய் கிழவி போட்டோவை பார்த்ததுக்கே போய் சேர்ந்துராத. இன்னும் எம்புட்டு பார்க்க வேண்டியது இருக்கு. தண்ணியைக் குடி”, என்றவள் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“அது.. அது..”
“அது உன் மவளே தான். எல்லாம் சொல்றேன் கொஞ்ச நேரம் இரு.”, என்றவள் அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் நடுவில் வந்து எதிரே நின்றாள்.
“நான் ஒருத்தரை காதலிக்குறேன் பா. அவரை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்.“, என்று நிதானமாய் கூற இனியன் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டிருந்தார்.
திருமாவும் மாறனும் தங்கையின் அருகில் வர கன்னிகாவும் விஜயலட்சுமியுமாய் இருவரையும் பிடித்துக் கொண்டனர்.
“விளையாடாத பாப்பா!”
“மத்த நாளா இருந்தா கண்டிப்பா உன்னோட எல்லாம் விளையாடி பார்த்துருப்பேன் மாறாண்ணே. இன்னைக்கு நான் அந்த நிலைமையில் இல்லை.”
“பாப்பா இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது”, என்ற இனியனை கூர்மையாய் பார்த்தவள்,
“இதே வார்த்தையை தான் உங்க அப்பா உங்க தங்கச்சிக்கு சொன்னாரு. ஆனால் இப்போ அவர்கிட்ட கேளுங்களேன். ஆகுமா ஆகாதானு?”
“…”
“என்ன தாத்தா சொல்லு இப்பவும் உன் மகளுக்கு சொன்ன அதே பதில் தான் உன் பேத்திக்கும் சொல்லுவியா?”
“…”
“இதில் முதல்ல பேச வேண்டியது என்னைப் பெத்தவரு. சொல்லுப்பா நீ ஏன் அமைதியா இருக்க?”
“ஏலே நீ எதோ கோபத்திலேயும் வருத்ததிலேயும் பேசுற. போய் தூங்கி எழுந்துரு எதுவாயிருந்தாலும் நாளைக்குப் பேசலாம்.”
“கோபமா?? வருத்தமா?? அதெல்லாம் இல்லப்பா என்னை.. என்னை மட்டும் இல்ல உங்க பிள்ளைங்க அத்தனை பேரையும் ஏமாத்திருக்கீங்க அது எவ்வளவு வலிக்கும்?
எனக்கு அம்முக்கு அண்ணன்களுக்கு எல்லாம் இந்தக் குடும்பம்னால் பாசம் ஒற்றுமை சந்தோஷம் இது மட்டும் தான் தெரியும். ஒரு வகையில் இவங்க எல்லாருக்குமாவது காலேஜ் படிக்கும் போதே அரசல் புரசலா விஷயம் தெரிஞ்சுருக்கு.
எனக்கு எல்லாம் அதுவும் கிடையாது. கடைசி வரை பைத்தியக்காரியாவே உங்க மேல எல்லாம் வைச்ச அன்பு தான் உண்மைனு நம்பியே வாழ்ந்துருவேன்னு நினைச்சுட்ட தானப்பா?”
“கண்ணு அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நீ அம்மாகிட்ட வந்துரு வா பாப்பா..”
“ம்மா நான் பேசலைனு வை இப்போ அப்பத்தா அழற மாதிரி தான் ஆயுசுக்கும் நீ அழணும் பரவாயில்லையா மா?”
“!!!”
“இங்கே பாரு பாப்பா நீ பேசுறது எல்லாம் சரியாவே இருக்கட்டும். இங்கே இப்படி தான்.
ஊருக்குள்ளே பெரிய குடும்பம், கௌரவத்தை பார்க்காம வாழ முடியாது. உன் மனசில் இருக்குறதை தூக்கி போட்டுட்டு போய் வேலையைப் பாரு”, என்ற மாறனைப் பார்த்தவளுக்கு விரக்தி புன்னகை எழுந்தது.
தன் தாத்தாவைப் பார்த்த வண்ணம், ”பார்த்துக்கோ உன் குடும்பத்து வாரிசுக்கு என்ன சொல்லி வளர்த்துருக்கனு நல்லா பார்த்துக்கோ. கூட பிறந்தவளோட சந்தோஷம் வேண்டாம் அவளோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாம்.
இந்தக் குடும்பத்து பேரு தான் முக்கியமாம். உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை மாறாண்ணே. நல்ல வேளை அம்முக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. இருந்துருந்தா நீயும் சித்தப்பாவுமா சொல்லாம கொள்ளாம கொன்னே போட்டுருப்பீங்க இல்ல?”
“நீ ஏன் அமைதியா இருக்க திருமாண்ணே. நீயும் உன் பங்குக்கு எதாவது சொல்லு.”
“பாப்பா வேண்டாம் டா பேச்சை வளர்க்காம இத்தோட விடு. நிறைய நடந்து போச்சு.”
“என்னால முடியலை ண்ணே. கடந்த பத்து நாளா உள்ளுக்குள்ளேயே போட்டு மருகிட்டு கிடக்கேன். இவங்க யாரோடையும் பேசக் கூட பிடிக்கலை. உள்ளே ஒண்ணு வைச்சு வெளியில் சாதாரணமா என்னால இருக்க முடியலை.”
“….”
“ப்பா..”
“முகுந்தனை தான் எனக்கு பிடிச்சுருக்கு. அவருக்கும்.
உன்னை மாதிரியே அவர் எனக்கு முக்கியம். ஒரு பொண்ணுக்கு அப்பாவுக்கு அப்பறம் அன்பான புருஷன் கிடைச்சுட்டா வாழ்க்கையே ஜெயிச்சுட்ட மாதிரி.
முகுந்தன் என்னை கண்டிப்பா அப்படி தான் பார்த்துப்பார். இதெல்லாம் உன்கிட்ட சொல்லிடணும்னு ஒரு மாசமா தவியா தவிச்சேன். இருந்தாலும் பிரச்சனை ஆகுமோனு பயந்து தான் சொல்லலை. ஆனால் இப்போ ஏன் சொல்றேன் தெரியுமா?”
“??”
“நான் காதலிக்குறது உன்னோட தங்கச்சி பையனை. நீங்க எல்லாம் யாரை இந்தக் குடும்பத்திலேயே இல்லைனு உங்களுக்கு நீங்களே நம்ப வைச்சுகிட்டீங்களோ அந்த பார்வதியோட பையனை தான் நான் கல்யாணம் பண்ணிக்க நினைக்குறேன்.
இன்னைக்கு தான் இந்த விஷயம் எனக்குத் தெரியும்.
இதையும் மனசுக்குள்ளேயே வைச்சுட்டு நடிக்க எனக்கு வராதுப்பா.”, என்றவள் பார்வதியின் புகைப்படத்தை தந்தையிடம் காட்ட கம்பீரமானவரின் கண்கள் கலங்குவதை முதல்முறையாய் பார்த்தாள்.
“எங்க பெரிய மாமா அவரு பொண்டாட்டியை ராணி மாதிரி நடத்துறார். அரண்மணை மாதிரி வீடு அன்பான புருஷன் சிங்கக்குட்டி மாதிரி இரண்டு புள்ளைங்கனு உன் பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லா வாழுறா கிழவி. இனிமேல் எப்பவும் நீ அழக் கூடாது.
உனக்கு அவங்களைப் பார்க்கணும்னால் சொல்லு நான் கூட்டிட்டு போறேன்.”, என்றபடி தந்தையின் அருகில் வந்தவள் அவரை இறுகக் கட்டிக் கொண்டாள்.
“இது எதுக்கு தெரியுமா? உனக்கும் கோபம் இருந்துருக்கும். ஆனால் அப்போ கூட நீ உன் தங்கச்சியை அடிக்கவே இல்லையாம்.
அப்பறம் அவங்களோட சர்டிபிகேட்டெல்லாம் நீ தான் கொடுத்தியாம். எங்கப்பா எப்பவும் ஹீரோ தான்னு பெருமையா இருந்துச்சு.
ஆனால் அவங்களை நீயும் இத்தனை வருஷம் ஒதுக்கி வைச்சுட்டியேனு தான் உன் மேல ரொம்ப ரொம்ப கோபம் வந்துருச்சு பா.”, என்றவளைப் பார்த்த பூங்கோதைக்கு புன்னகை அரும்பியது.
யாருக்கும் பயப்படாமல் அவள் நினைத்ததையெல்லாம் பேசிவிட்டு அதிலும் தான் ஒருவனை விரும்புவதாக பெற்றவனிடமே கூறிவிட்டு இப்போது தந்தையைக் கட்டி நிற்ப்பவளை என்னவென்று சொல்ல?
மங்கை அனைவருக்கும் அந்தப் புகைப்படத்தைக் காட்டினாலும் கனியனுக்கும் இனியனுக்கும் மட்டும் காட்டவில்லை.
அதிலும் தகப்பனாய் கனியனின் முகத்தில் அதைப் பார்க்க வேண்டி ஆர்வம் அப்பட்டமாய் தெரிந்தாலும் முரண்டு பிடித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார். இனியனோ ஒன்றும் பேசாமல் அவரறைக்குள் சென்றுவிட பெருமூச்சு எழுந்தது மங்கைக்கு.