பாரதியின் தேம்பாமை தந்த திடத்தில் மறுநாள் விடியும் போதே பழைய எண்ணங்களில் மீண்டும் வீழ்ந்து விடாமலிருக்க மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள் மஹிமா. விடியலில் எழுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையிலிருந்து வெளியில் வர அப்பொழுத்தும் சுசீந்திரன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
அவனருகில் சென்று நெற்றியில் கை வைத்துப் பார்க்க காய்ச்சல் வெகுவாய் குறைந்திருந்தது. சற்றே நிம்மதியுடன் சமையலைக்கு சென்றவள் மிளகு மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்த பாலுடன் மீண்டும் வர அவனும் விழித்திருந்தான்.
“சுசி இப்ப ஓகேவா? இந்தா இந்த பால குடி. (redzer.tv) ” என்றபடி கொடுத்துவிட்டு நகர்ந்தாள். மீண்டும் சமையலறைக்கு வந்தவள் காலை உணவை தயார் செய்யத் தொடங்கினாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் அவனின் சாய்விருக்கையின் அருகே அலைபேசி தொடர்ந்து ஒலி எழுப்ப எட்டிப் பார்த்தாள். அவன் அங்கு இல்லை எனத் தெரியவும் அருகில் வந்து பார்த்தவளுக்கு சுதனின் பேரை பார்க்கவும் ஏனோ அழைப்பை ஏற்கப் பிடிக்க வில்லை.
அன்று அவன் மனைவியின் பேச்சில் வந்த கோவம், அதற்கு சுதன் எதுவும் செய்ய இயலாதே. ஆனாலும் மஹிமாவின் கோபம் குற்றம் செய்யாதவன் மேலும் பாய்ந்து விடுமோ என எண்ணியே சுதனின் அழைப்பைத் தவிர்த்தாள்.
சினத்தின் கேடென முண்டாசுக் கவி சொன்னது போல கோபத்தால் இவள் ஆற்றிய எதிர்வினைகள் எல்லாம் இவளுக்கு கவலையைத் தானே தருகிறது.
அன்றும் அவன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லியவைகளுக்கு அவனிடம் விளக்கம் கேட்டிருந்தால், சினத்தால் இன்னும் இன்னும் இவள் செய்த சிக்கல்களை தவிர்த்திருக்கலாமே.
அவனின் தவறுக்கு தண்டனை என எண்ணி தான் செய்தவைகள் எல்லாம் அபத்தங்களோ என எண்ணினாலும் நடந்து முடிந்தவைகளுக்கு இனி வருத்தப் பட்டு எதுவும் செய்ய இயலாதே.
அவன் ஏன் தவறினான்? நாம் எங்கு தவறினோம்? ஏன் எனக்கு எங்கள் காதலின் மீது கூட சந்தேகம்? என கேள்விகள் பல பிறக்க விடை தேடத் துவங்கும் மனதை சற்றே அடக்கி சாதாரண சிக்கலை இடியாப்ப சிக்கலாகும் எண்ணங்களை எல்லாம் ஓரம் கட்டினாள்.
இன்று முயன்று பழைய நினைவுகளை மறக்க நினைக்க சுதனின் இந்த அழைப்பு மீண்டும் நடந்தவைகளை நினைக்க வைக்கும் எனத் தோன்ற அழைப்பையும் ஏற்காமல் வைத்துவிட்டாள். கீழே கைபேசியை வைத்துவிட்டு திரும்பி ஒரு அடி எடுத்து வைக்கும் போதே, “என்ன மஹி, யாரு போன்?” எனும் குரல் அருகில் கேட்க, சட்டென திரும்பியவள் அவன் மீதே மோதி தடுமாறி விட்டாள்.
தடுமாறியவள் விழப் போக அவளை தாங்கிப் பிடிக்க நினைத்து சுசீந்திரன் இடையில் கைகொடுத்து நிறுத்த அதில் அவள் கூச்சம் கொண்டு இன்னும் தடுமாற இருவரும் அவன் படுக்கையாய் பயன்படுத்தும் சாய்விருக்கையில் மொத்தமாய் விழுந்திருந்தனர்.
அவன் மேலே அவள் விழுந்திருக்க இடையோடு அவளை அணைத்திருந்தான். நாட்கள் பல கடந்த பின்பான இந்த நெருக்கம் இருவரையும் எளிதில் விலக விடாமல் கட்டிப் போட்டது.
அவளின் மென்மைகளின் அழுத்தம்கூட அவன் மேல் வன்மையாய் படிந்திருக்க அவன் கை விரல்கள் கண்டுவிட்ட அவளின் இடை வெளியின் வெப்பம் வேறு அவனின் உடலின் வெப்பத்தை அதிகரிக்க அவளின் மூச்சுக்கு காற்று அவனின் நுரையீரல் நிரப்பியது.
சுசீந்திரன் அப்பொழுதுதான் குளித்து வந்திருப்பான் போலும். அவனது வழலையின் வாசம் வழக்கத்துக்கும் அதிகமாகவே அவளைக் கிறங்கடிக்க கண் மயங்கி அவன் அணைப்பில் அடங்கி இருந்தாள் அவனின் காதல் கண்ணம்மா. கால்ச்சட்டை மட்டுமே அணிந்து படி வெற்று மார்புடன் அவளை இறுக அணைத்திருந்தான். அலைபேசியின் சத்தத்தில் அவசரமாய் வந்தான் போலும், அங்கமெல்லாம் சிறு சிறு வைரமாய் நீர்த்துளிகள்.
விழுந்த வேகத்திலும் ஒருவரை மற்றவர் கண்கள் அளவிட ‘அடேய், சும்மாவே பாத்துக்கிட்டிருக்கப் போறதுன்னா என் மேல இருந்து எந்திருச்சு, அங்குட்டு தள்ளி போயி தரையில விழுங்கடா. போங்கடா போங்க. ச்ச, சரியான நைண்டீஸ் கிட்ஸ். இவனுங்களுக்கெல்லாம் காதலும் வேஸ்ட் கல்யாணமும் வேஸ்ட்.
அவனே தெரியாதுன்னு சொன்னாலும் இவ சொல்லிக் கொடுக்காம எனக்கும் தெரியாதுன்னு சொல்லி நல்ல ரொமான்ஸ் சீன மொக்க சீனா ஆக்கப் போறாங்க. மர மண்டைகளா நீங்கல்லாம் வேலைக்காக மாட்டீங்க. உங்களுக்கெல்லாம் பத்திக்கவும் பத்தாது, உங்க பஞ்சாயத்தும் தீராது. எந்திருச்சுப் போய் பொழப்பப் பாருங்க.’ என மூச்சடக்கி அவர்கள் கிடந்த சாய்விருக்கை நீண்ட வசனம் பேசிக் கொண்டிருக்க அதன் மேலோ ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ நிலை மட்டுமே இருவரிடமும்.
நொடிகள் பல கடந்து காற்றில் கரைய, கட்டி அணைத்தவனின் கைகள் மெல்லிடை மேனியில் தவழ சட்டென அதிர்ந்தவள் கூச்சத்தில் நெளியத் தொடங்க தன் உணர்வுக்கு மீண்டவன் இன்னும் இன்னும் அவளுக்கு கூச்சமூட்ட அவளின் சிரிப்பொலியில் அந்த வீடே அதிர்ந்தது.
‘சொன்னேன்ல, இவனெல்லாம் இதுக்கு சரிப்பட மாட்டான்னு’ என தலையில் அடித்துக் கொண்டது அந்த சாய்விருக்கை.
அவளின் சத்தமான சிரிப்பொலி அவன் மனதை நிறைக்க, “இன்னுமா மஹி உனக்கு என் கை கூசுது. ஃபஸ்ட் நைட்ல சிரிச்ச ஓகே. இப்பதான் பல நைட் பல பகல் ஆகிடுச்சே இன்னமுமா சிரிக்கிற?” என கேட்டவனை சிரித்தபடி பார்த்தவளுக்கு முதல் இரவின் போது தான் செய்த அலப்பறைகள் எல்லாம் நினைவில் வர முகம் செந்தாமரையின் வண்ணம் பூசிக் கொண்டது.
காலம் அவர்களை பிரித்து வைக்க, ஆண்டுகள் காத்திருந்து கண்டதும் கைகூடிய காதல் அவர்களது. அதற்கும் மேலும் காத்திருக்க அவளின் கவி பாரதிக்கு கசந்துபோக மின்னல் வேகம் தான் அவர்களின் திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது.
இரு வீட்டிலும் சுசீந்திரன் மட்டுமே பேசினான். எங்கும் மஹிமாவை இழுக்கவில்லை அவன். அதைத் தானே அவளும் விரும்பி கேட்டுக் கொண்டாள் அவனிடம். எங்கு, யாரிடம், எப்படி, என்ன சொன்னால் இந்த திருமணம் எந்த பிரச்சனையும் இன்றி நடக்குமோ அப்படிப் பேசி சம்மதம் வாங்கிவிட்டான் சுசீந்திரன். திருமண பேச்சுக்கள் எல்லாம் அலைபேசியில் மட்டுமே. தவறியும் இவன் நேரில் பேச என இந்தியா செல்லவில்லை. அவளையும் அனுமதிக்க வில்லை.
நவீன் நிஷா துணையிருக்க அவனின் கண்ணம்மாவையும் சமாளிக்க அவனுக்கு சிரமம் இருக்கவில்லை. திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்க இருவரும் ஒன்றாகவே பயணித்தனர் இந்தியாவிற்கு. பயண நேரமெல்லாம் அவளின் பயத்திற்கு பதில் சொல்லி அவளை தயார் செய்யவே அவன் தன்னை தயார் செய்து கொண்டு வந்திருந்தான்.
“சுசீ சொல்லு டா, அத்தை கேட்டாங்கல்ல. ரெண்டு பெரும் இப்படி ஆளுக்கு ஒரு இடத்துல இருக்கீங்கன்னு என்ன சொன்ன? திட்டுனாங்களா?” என்றாள் மெதுவாக.
“ஹ்ம்ம், மஹி இதெல்லாம் எல்லார் வீட்லயும் கேக்குறது தான். நீ ஆகஸ்ட்ல இருந்து வேலை விட்டுட்டு செப்டம்பர்ல படிக்க மான்செஸ்டர் வந்துருவ. நானும் ஒர்க் பிளேஸ் ட்ரான்ஸ்பெர் பண்ணீட்டு உன் கூட வந்துடுவேன். அது வரைக்கும் தனியா தான் இருப்போம்ன்னு ஒழுங்கா உண்மை சொல்லி இருக்கேன்.
இதுல திட்ட என்ன இருக்கு? எல்லாருக்கும் கல்யாணம் ஆகும் போது வேற வேற ஊர்ல இருந்தா ஒன்னா ஒரு இடத்துக்கு வர கொஞ்சம் டைம் ஆகும்தானே. சும்மா எல்லாத்துக்கும் என்னையவே கேட்காத. நீயே பதில் சொல்லு கண்ணம்மா. உண்மை பேச பயம் தேவை இல்ல மஹி.” என்றான் அவளின் கை பிடித்து அழுத்தமாக.
ஆனாலும் அந்த கடைசி வரியை சொல்லும் போதே இந்த திருமணத்திற்காக ஆதி முதல் அந்தம் வரை அவன் சொல்லிய பொய்களை எல்லாம் நினைத்துப் பார்க்க மனதில் சிறு கலக்கம் எழுந்தது. ‘ஹும்ம்,ஆயிரம் பொய் சொல்லலாம் ஒரு கல்யாணத்திற்கு. எனக்கு இன்னும் குறைஞ்சது தொளாயிரத்து தொன்னுத்தி மூணாவது மிச்சம் இருக்கும்.’ என்று தன்னைத் தானே தேத்திக் கொண்டான்.
அடுத்த அரை மணி நேரம் கூட சென்றிருக்காது அடுத்த கேள்வியை தொடுத்துவிட்டாள் அவனின் காதல் கண்ணம்மா. “சுசீ, இப்போ எல்லாரும் கேப்பாங்களே நீங்க ரொம்ப நாளா லவ் பண்றிங்களான்னு. என்ன சொல்ல? அம்மா அப்பாகிட்ட சொன்ன மாதிரியே நீ கேட்ட நான் ஓகே சொல்லிட்டேன்னு சொல்லவா? ஆனா நம்புவாங்களா?” என்றாள் பாவமாக.
“அடியே என்ன கோவப் பட வைக்காத மஹி. இதென்ன எல்லாத்துக்கும் நான் பதில் சொல்லிக் குடுக்கணுமா. ஏன் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா? சும்மா தொனத்தொனன்னு தொல்லை பண்ணிட்டே இருக்க.
உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு. நீ என்ன இன்டெர்வியூக்கா போறா. நம்ம கல்யாணதத்துக்கு தானே போற. என்ன பயம் உனக்கு? பொதுவா பொண்ணுங்களுக்கு வெக்கம் வரும். முகம் எப்பவும் சிவந்து சிரிப்போடு இருக்கும்ன்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா நீ எப்படி இருக்க பாரு?
நீ ஒரு தப்பும் செய்யல. காதல் தப்பில்ல. காதலுக்காக பொய் சொன்னாலும் தப்பில்ல. உன்ன மாதிரி மக்கு மண்ணும்மா எல்லாம் காதல் கண்ணம்மாவா மாறும்ன்னு தெரிஞ்சு தான் ‘காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்ன்னு’ ஏற்கனவே சொல்லிட்டு போய்ட்டாரு பாரதி.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனின் கைகளை அழுத்திப் பிடித்தவள்,
“ஆனா எனக்கு அந்த கருமமெல்லாம் வரல பாரதி. நான் நானா தான் இருப்பேன். கல்யாணத்தன்னைக்கும் ஏன் உனக்கு வெக்கம் வரலன்னு நீ கேட்க கூடாது. கல்யாணம் ஆனாலும் நான் மஹிமா வேணுகோபாலன் தான். சும்மா என்ன இப்படி இரு அப்படி இருன்னு எல்லாம் சொல்லக் கூடாது.” என்றாள் கட்டளையாக.
“அதெல்லாம் நீ ஒன்னும் பண்ண வேண்டாம். எப்பவும் போல நீ இரு மஹி. உனக்கு வெக்கம் எப்படி வராம இருக்குன்னு நான் பார்க்கிறேன்.” என்றவனின் கள்ளச் சிரிப்பில் புரிந்தும் புரியாமலும் தலையை ஆட்டி வைத்தாள்.
ஒரு வழியாக அவளை கொஞ்சி கெஞ்சி தேற்றி இருவரும் கோயம்பத்தூர் வந்திறங்க அதன் பிறகான நேரமெல்லாம் அவர்களிடம் இல்லை. பெற்றோர் உறவினர் என பலரும் வழிகாட்ட செய்முறைகள் சடங்குகள் என நேரம் பறக்க, அவர்களின் கனவு அழகாய் அங்கு காட்சியாகியது.
வெண்ணிற பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் அவனிருக்க, அவனருகே அவளின் ஆசை நிறமென அவள் விரும்பிக் கேட்ட தக்காளி சிவப்பில் அன்னமும் கொடியும் மலரும் உடல் முழுவதும் சூழ்ந்திருக்க அதை உடுத்தியவளின் உள்ளமெல்லாம் உவகை பூத்திருக்க முகம் கொள்ளாப் புன்னகையோடு அவனின் விழி பார்த்து அவன் கரங்களில் தாங்கியிருந்த மாங்கல்யத்தை அவன் அணிவிக்க, அன்று வரை மகளாய் மட்டுமே இருந்தவள் மன்னவன் மனம் நிறைந்த மனைவியாகிப் போனாள்.