காலம் என்றுமே எதற்கும் காத்திருப்பதில்லை. ஆனால் காத்திருப்புகள் காலம் போகப் போக கரைந்து விடுமோ? சுசீந்திரன் காத்திருக்கத் தொடங்கி வாரம் கடந்து விட்டது. புது வருடம் தொடங்கியும் தொடங்காமல் இருந்தது அவர்களின் உறவு.
மஹிமாவிடம் அன்று அவன் பேசிய பிறகும் பெரிதாய் மாற்றங்கள் இல்லை என்றாலும் மீண்டும் பேசத் தொடங்கி இருந்தாள். முன்பை விடவும் சற்றே உரிமையாக அவனின் உறவாக மாற முயல்கிறாள். ஆனாலும் அவளுக்குள்ளும் யோசனையின் பிரதிபலிப்புகள்.
இன்று அவன் வீட்டிலிருந்துதான் வேலை செய்கிறான். மஹிமாவிற்கும் இன்று பல்கலைக் கழகம் செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அவனுடன் தனியே இருக்கவும் யோசனைகள் தடுக்க வழக்கம் போல் பூங்காவிற்கு நேரத்தைக் கடத்த சென்றுவிட்டாள்.
தனிமையில் நேரத்தைக் கடத்தியவனுக்கும் அதற்கு மேல் இயலாமல் போக வேலைகளை சற்றே ஒதுக்கி விட்டு அவளைத் தேடிச் செல்லத் தாயாரானான்.
மான்செஸ்டர் நகரம் மலைகள் சூழ்ந்த வருண பகவானின் வாசஸ்தலம் ஆயிற்றே. அன்றைய வெப்பநிலையை தனது ஐபோனில் பார்த்தவன் இன்னும் சில மணி நேரங்களில் மழைத் தூறல் என வானியல் அறிக்கை சொல்ல, நீர் நனைக்காத மழைக்கும் பொருத்தமான குளிர்கால உடையையை அணிந்து அவளைக் காண பிலிப்ஸ் பார்க் நோக்கி புறப்பட்டான்.
குளிர் காலத்திலும் வெயில் சிந்தும் இனிய நண்பகல் நேரம். எப்பொழுதும் போல மஹிமா இன்றும் அவளின் ஆஸ்தான மெட்லாக் நதிக்கரை தேடி ஓடி வந்து விட்டாள். பூங்காவில் உள்ளே மரங்கள் பல சூழ நடு நாயகமாய் இருக்கும் இந்த குளக்கரை தான் அவளின் பல கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் போதி மரம் என்ற எண்ணம் சில நாட்களாய் அவளுள்.
அன்றொரு நாள் இல்லையில்லை பல நாள், இங்கு அமர்ந்து காதல் கண் கொண்டு அவள் நோக்கும் போதெல்லாம் அந்த வானம் அவளின் கண்களில் வண்ணம் பல தூவி வானவில்லைக் காட்டியது. அது ஒரு அழகிய மழைக் காலம்.
ஆனால் இன்று மேகம் இல்லா இந்த நீல வானம், கதிரவனின் இளவெயில் தாங்கி காலையிலும் மஞ்சள் நிறம் பூசி நிற்கிறது. ஆம் இன்று அவள் வாழ்விலும் கூதிர் காலம்.
அன்று அவள் விழியில் விழுந்த வானவில்லின் மற்ற நிறங்கள் எங்கே? வர மறுத்து அவளை மறந்து மரித்துப் போனதோ? இல்லை இன்று இவள் காணும் இந்த மஞ்சள் மட்டும் தான் வாழ்வின் வண்ணமோ?? அவர்களின் உறவின் நிஜமா?
வாய்ப்புகள் இல்லையே, இன்னும் சில மணித்துளிகள் மரணிக்கும் போது இரவின் இருள் வந்து சூழும் முன் மஞ்சள் வானம் மொத்தமும் வெம்மை சூழ்ந்து வெளிறிப் போகுமே?
இதில் எது நிஜம்? மனம் இதை எண்ணும் போதே, இல்லை ‘இவை எல்லாம் வெறும் தோற்ற மயக்கங்களா?’ எனத் தோன்றியது அவளுக்கு. ‘தோற்ற மயக்கங்கள்??’ அந்த ஒற்றை வார்த்தையில் அவள் மனதின் ஓரம் மீண்டும் அவன் குரல். அவளின் கவி பாரதியின் குரல். அந்தக் காதல் கண்ணனின் குரலிசையில் அவள் செவிகளில் உலகத்தை நோக்கி வினவிய பாரதியின் காட்சிப் பிழையின் வரிகள் நினைவில் வந்து அவளின் மனதையும் ஆட்கொண்டது.
ஆம் ஆம் இவை எல்லாமே காட்சிப் பிழைதான். கானலின் நீர் தான். மனம் மேலும் சஞ்சலத்தில் ஆழப் புதைந்து போனது.
இப்பொழுது மனதில் மறுபடியும் அதே கேள்வி. அவன் உண்மையில் என்னை காதலித்தானா? அன்பு கொண்டவனால் என்னை இப்படி எல்லாம் பேச முடியுமா? ஒருவேளை அன்பே இல்லையா? அன்பு இல்லாதவனால் என்னிடம் இப்படி இருக்க முடியுமா? இதில் எது நிஜம்?
ஆய்ந்து அறிந்து அவள் விடை அறியும் முன், அவள் மனம் உண்மை உணரும் முன், மங்கை அவள் மனம் தெளியும் முன் அந்தக் கள்வன் கணவனாகி காலமெல்லாம் அவள் வாழ்வின் அர்த்தமாகிப் போனானே.
அந்த அர்த்தங்கள் எல்லாம் அனர்த்தங்கள் ஆகவும் அவனே காரணம் ஆகிப் போனானே. யோசிக்க யோசிக்க விடையில்லை, கேள்வியாய் வாழ்க்கை நீண்டு கொண்டே போகிறது.
கண் மூடி மனம் குவிக்க மீண்டும் பழைய நினைவுகள். அன்றொரு நாள், வருடம் பல கடந்து அவனைக் கண்டதும் சுற்றும் காட்சிகள் மறந்து மனம் மயங்க அவனைக் கட்டி அணைத்து இமை மூடி அவன் இதழ் முத்தம் பருகினாளே.
பருகிய அந்த இதழ் முத்தத்தின் ஈரத்தில் இருவரும் சுயம் மறந்திருக்கக் காட்சிப் பிழைகளின் சாட்சியில் அன்று இது காதல் காதல் எனக் காதல் அவள் கண்களை மறைத்து விட்டதோ?
அந்த காட்சிகள் பிழையா? அவை காலத்தின் பிழையா? இல்லை அவள் காதலே பிழையா? அன்று கண்ட வானவில்லின் வண்ணங்கள் எல்லாம் நடந்த அந்த நிகழ்வின் வெறும் தோற்ற மயக்கங்களோ?
அவள் மனம் அவனை மாங்கல்யம் சூட்டிய மணவாளனாய் நெஞ்சில் நிலைக்கும் முன்னமே அவசரக்காரன் அவன் தவறை அவளிடம் தவறி சொல்லிவிட்டானே.
இனி அவள் என்ன செய்ய? அவன் தவறுகளை மறக்க வழி தெரியவில்லை அவனை மறுக்கவும் மார்கங்கள் இல்லை. சொல்லப் போனால் மனமும் இல்லை.
இன்று இந்தப் பிரிவை அவன் உடைக்க பாடுபடும் அவசரமெல்லாம் ஏன்? அவன் அன்று செய்த பிழையின் திருத்தங்களா? ஆனால் அவனின் அந்த சிறு பிழை இன்று அவர்களின் உறவைப் பிழைத்துச் சிதைத்து விட்டதே.
மீண்டும் அதே காட்சிப் பிழையின் கேள்விகளும் கோபங்களும் கொப்பளிக்க பாரதியின் தாக்கம் அதுவும் அவன் குரலில்,
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
…
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ
அவனின் குரலிசை அவள் செவிகளை மறுபடியும் சரணடைந்தது. அந்தக் காலமும் காட்சிகளும் பொய்யாய் போக காதலெனும் மெய் இப்பொழுது மெய்யாய் தெரிய விழிகளில் நீர் நிறைய நின்றிருந்தாள்.
அவளின் விழி நீர் வழியாமல் உள்ளிழுத்துக் கொண்டவள் பார்வை மலர மீண்டும் காட்சிகள் தெளிய இன்று அவளின் மனமும் தெளிந்தது.
நதிக்கரையின் தெளிவற்ற பிம்பங்களின் பின்னே தெரிந்த அந்த தெளிந்த காட்சியைப் போல் மனம் இன்று அவனை அவளின் காதல் கணவனாய் காட்டியது.
நிழல்களின் நடுவே நீண்டு வளர்ந்த நிஜமாய் அவன், ஆம் அவன் தான் அவளின் கணவன். அவளைத் தேடி அவளின் அருகே வந்து நின்றிருந்தான்.
“என்ன சுசி ஆபீஸ் டைம்ல இங்க, எல்லாம் ஓகே தானே?” என்றாள் அவனைப் பார்த்து ஆராய்ச்சியாய்.
“ஹ்ம்ம், சும்மா நீ இங்க தான் இருப்பன்னு தெரியும் அதான் வந்தேன். என்ன யோசனை மஹி. இன்னும் உன் கோபம் தீரலயா? எவ்வளவு நாள் மஹி இதையே யோசிப்ப?” என்றான் ஆற்றாமையாய்.
“தெரியல சுசி. இன்னும் உன் மேல கோவமான்னு கேட்டா, நிஜமா இல்ல. ஆனா அந்த வருத்தம் இன்னும் இருக்கு. அது கொஞ்சமும் குறையவே இல்ல.” அவளின் வருத்தம் அவள் குரலில் தெரிய, அவளின் வலக் கையோடு தனது இடது கையை இணைத்துக் கொண்டவன் அவனது கட்டை விரலால் அவளின் கட்டை விரலை நீவி அவளை சமாதானம் செய்ய முயன்றான்.
“நான் செய்யும் தப்புக்கு நான் தான் பொறுப்பு ஆனா என்னோட பிறப்போ இல்ல என் பாடி ஷேப் இதெல்லாம் என் கைல இல்லை தானே. எல்லாருக்கும் ஆசை இருக்கும் தான் உலக அழகியா இருக்கனும்ன்னு.
ஆனா அது எப்பவும் சாத்தியமில்லையே. மத்தவங்க கண்ணுக்கு அழகா இல்லைன்னாலும் நான் என்னை லவ் பண்றேன் சுசி. கடவுள் கொடுத்த கிப்ட்ட நான் எந்த குறையும் இல்லாம ஏத்துக்குறேன். அதையே உங்க கிட்டையும் எதிர் பார்க்கிறது தப்போ? உனக்கும் கூட நான் இப்படி இருக்கேன்னு வருத்தமா இருக்கா சுசி?” என அவள் கேட்கும் போதே முன்னரே அவள் அணையிட்டிருந்த விழி நீர் அவளையும் மீறி பெருகி வழிந்து அவளின் கன்னம் தாண்டி வழிந்தது.
அவள் கண்களில் நீர் வழிய அங்கே மழையின் துளிகளும் சிந்தத் தொடங்கியது. கண்ணின் நீரை எல்லாம் இயற்கையே துடைத்துவிட முயல மழைக்கு ஒதுக்கும் எண்ணம் கூட இன்றி நனைந்தபடி நின்றிருந்தனர் இருவரும்.
தூறல்கள் தொடர சிறு மழையில் நனைந்தபடி, இணைந்திருந்த கைகளில் அழுத்தம் கூட்டியவன் “ஷ்ஷ்ஷ், மஹி. ப்ளீஸ் கண்ணை துடை. மழை வேற வருது. ஹூட் (HOOD ) வச்ச ஜாக்கெட்டும் போடல நீ. இங்க இந்த நேரம் இப்படி நின்னு எனக்கு விளக்கம் சொல்ல வரல மஹி. அதுவும் பப்ளிக் பார்க்ல நின்னு அழுகும் போது, கோபம் தான் வருது. பைத்தியக்காரியா டி நீ? அப்படி உன்னை பிடிக்காதவன்னா நான் ஏன் உன்னை கல்யாணம் பண்றேன் யோசிக்க மாட்ட? இந்த பேச்சை இதோட விடு மஹி. உன் குழப்பத்தை நீ மெல்ல தீர்த்துக்கோ. இப்ப வா வீட்டுக்கு போகலாம். மழையில நனைஞ்சு இன்னும் இழுத்துக்காத. இப்படி தனியா நின்னு யோசிக்கிறேன்னு இல்லாத மூளைக்கு வேலை கொடுக்காத.” என்றான் இலகுவான குரலில்.
“ஆமா ஆமா எனக்கு மூளை இல்லை தான். இருந்திருந்தா இப்படி நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவேனா? இல்ல நீ என்ன சொன்னாலும் நம்புவேனா? கண்டிப்பா எனக்கு மூளை இல்லைதான்” என்றாள் அவளும் அங்கிருந்து நகர்ந்தபடி கேலியான குரலில்.
“ஹுக்கும், நீ என்ன நம்புறதால தானே நான் இன்னும் ஹால்லேயே தூங்குறேன். அடி போடி பைத்தியக்காரி” என்று கடுப்பான குரலில் முணுமுணுத்தபடி நடந்தான் சுசீந்திரன்.
அவன் சொன்னது அவள் காதில் விழுந்தாலும் ஏனோ பதில் சொல்ல முடியவில்லை. வா என்னோடு கட்டிலில் உறங்க என அழைக்க எதோ ஒன்று தடுக்கிறது. அது வெட்கம் என்பதையும் தாண்டி அவன் மீதான வருத்தமும் இருப்பதால் தான் என அவனிடம் சொல்வது என்பது அவளால் இயலாதே.
அமைதியாகவே அவனது வார்த்தைகளைக் கடந்தவள், “ரொம்ப குளிருது சீக்கிரம் வா போகலாம் சுசீ.” என்றாள்.
“ஆனாலும் நீ ரொம்ப நல்லவடி.” என்றவன் அவளின் கை கோர்த்தபடியே அங்கிருந்து கிளம்பினான்.
அவன் மகிழுந்தில் வந்திருக்க அடுத்த சில நிமிடங்களிலேயே இருவரும் ஒன்றாய் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
மஹிமா வீடு வந்து சேர்ந்ததும் தலை துவட்டி உடை மாற்றிய பிறகு வெப்பமாக்கியின் முன் அவை நீட்டியபடி நின்றும் குளிர் சற்றும் குறையவில்லை. அவள் தன்னை சூடாக்கிக் கொள்ள அங்கேயே நின்று கைகளை வாட்டிக் கொண்டிருக்க, கழிவறைக் கதவை திறந்து கொண்டு வந்த சுசியின் கண்களில் அவனவளின் காதல் மனைவியாகத் தெரிந்தாள் அவள்.