‘ஒரு மணிக்கு அப்படி வெளிய என்ன பண்றாங்க?’ என அலைப்புறுதலுடன் எழுந்து நின்றவளின் உறக்கம் எங்கோ சென்றுவிட்டது. குழந்தைகளை சுற்றிலும் அவன் வைத்திருந்ததை போலவே தலையணைகளை அடுக்கியவள் கேள்விக்குறியாக அவனை தேடி பால்கனிக்கு வரவும் அங்கு அவன் அமர்ந்திருந்த கோலத்தை கண்டு முதல்முறையாக குற்ற உணர்ச்சியில் தவித்தது அவள் மனம்.
அவளுக்காகவே அவன் பார்த்து பார்த்து வடிவமைத்திருந்த பால்கனி அது. இவர்களுக்கு திருமணமான புதிதில் அவள் விரும்பிய வண்ணம் அவளுக்கே தெரியாமல் அவளுக்காகவே அவன் உருவாக்கியது அந்த அறையின் பால்கனி. ஒரு அறையை விடவும் மிகவும் பெரியதாய் திறந்த வெளியில் மற்றவர்களின் பார்வைக்கு எட்டாத வகையில் சிறிய குடுவை போன்ற பாதி மேல் கூரையுடனும் மறுபாதியில் திறந்தவெளியாகவும் வடிவமைத்தான்.
குடுவையான மேற்கூரையில் இருந்து தொங்கும் வடிவில் ஒரு அழகிய பெரிய ஊஞ்சல் ஒன்று வட்ட வடிவ மெத்தை போல அழகாக ஆடிக் கொண்டிருக்கும். தாராளமாய் மூன்று நபர்கள் படுக்கும் அளவிற்கான பெரிய மெத்தை ஊஞ்சல் அது. அந்த பெரிய மெத்தை ஊஞ்சல் இணைக்கப்பட்டிருந்த தூளியை சுற்றிலும் வெள்ளை நிறத்திலான மெல்லிய மூடுத்திரையை தவிர அங்கு வேறு எதுவுமே கிடையாது. அதை சுற்றிலும் அவளுக்கு பிடித்தமான கொடிகள் பூக்கள் என அனைத்தையும் அப்போதே வடிவமைத்திருந்தான்.
அவன் எவ்வளவு ரசனை மிக்கவன் என்பதை அவள் அறிந்த கொண்ட மிக முக்கியமான புள்ளி அது. சாதரணமாக கூட அவளோடு அவன் வாழ்க்கையை துவங்க முயலவில்லை. சரியாய் ஆறு மாதங்கள் பொறுத்திருந்து இருவரும் மற்றவரின் அருகாமையை பெரியதாய் விரும்பிய போதெல்லாம் கூட அதை நாசுக்காக தவிர்த்து வந்து அவளை முதல்முறையாக இங்கு அழைத்து வந்திருந்தவனின் முழுமையான தவிப்பும் ரசனையும் காதலும் காமமும் இதே இடத்தில் அவனோடு இரண்டுற கலந்தவளுக்கு நீக்கமற புரிந்திருந்ததே. அந்த நொடிகள் இப்போதும் அவள் கண் முன்னே அழகாய் விரிகிறது தான். அவளுக்கே அப்படியென்றால் அவளது ஒவ்வொரு நொடிகளையும் ரசித்து பருகும் அவனுடைய நினைவலைகள் இப்பொழுது மிக சரியாய் எங்கு சென்றிருக்க கூடும் என்று அவளால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.
‘அதனால் தான் இப்படி அமர்ந்திருக்கிறானோ?’ அவன் அமர்ந்திருந்த விதம் அவளுள் தவிப்பை கிளப்பியது.
கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டு தன் தலையை பின்னாக சாய்த்து தன் கைகளால் மெத்தை மேலிருந்த விரிப்பை இறுக்கமாக பற்றி இருந்தான். அவனுடனான இத்தனை வருட வாழ்க்கையில் அவன் இப்படி அமர்ந்து அவள் பார்த்ததே இல்லை. அத்தனை வலி அவன் முகத்தில் பரவியிருந்தது. அவனுடைய தலை முடிகளை கோதி சென்ற குளிர் காற்று அவனுடைய இறுக்கங்களை அதிகமாக்கி கொண்டே போவதை போல காட்சியளித்தது அவனை ஆயார்ச்சியாய் கூர்மையாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு.
இந்த இடமும் காட்சியும் அதன் அத்தனை ரம்மியமும் இன்னமும் இருவரின் மனதிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே. இருவரின் வாழ்வும் அவர்களின் பரிபூரண காதலுடன் அடுத்த கட்டத்தை நோக்கி சென்ற இடம். எப்படி மறக்க முடியுமாம். அத்தனை தவிப்பாய் தன்னை மீண்டும் மீண்டும் நாடிய அவனுடைய திண்மையை தன் மென்மையால் கிறங்கடித்தவள் இதோ இப்போது ஏதோ வேற்றாளை போல தன் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
அவள் நினைத்தால் ஓடி சென்று அவனை அணைத்துக் கொள்ள முடியும். அவள் நினைத்தால் அவனுடைய தவிப்பை தாபத்தை உடனே போக்க முடியும். அவள் நினைத்தால் அவனை தன் காதலால் இன்பமுற செய்து மகிழ்விக்க முடியும். ஆனால் அவளால் அதையெல்லாம் இப்போது செய்ய முடியாதே. பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் உறவிற்கு எதற்கு காற்புள்ளியும் தென்றல் காற்றும். அவனை பார்த்த அடுத்த நொடியே மீண்டும் உள்ளே சென்றிருக்க வேண்டுமோ அவள். செல்லவில்லையே! அவனுடைய நிலை அவளை அப்படி செல்லவிடவில்லையே.
மெதுவாக அவனுக்கு எதிரில் வந்து அவனை நெருங்கி நின்றவள், “ப்ரித்வி!” என காற்றோடு அழைக்க சட்டென புன்னகை பூத்தது அவன் இதழ்கள். மீண்டுமாய் அடுத்த “ப்ரித்வி” அவளிடம்.
அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது. இதழ்கள் துடித்து நடுங்க மிகவும் மென்மையான குரலில் “ப்ரித்வி!” என்று அவள் மீண்டும் அழைக்க இப்போது “ம்ம்ம்!” என்று அவள் பேசுவதை கேட்க தயாரானான் அவளின் ப்ரித்விராஜ்.
“இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இன்னும் தூங்காம?”
“நீ என்னை தூங்க விடமாட்றியே போஜோ!” என்றான் விரிந்த புன்னகையுடன். சட்டென்று விழிகளில் தோன்றிய மிரட்சியுடன், “ப்ரித்வி!” என்று அவனை அதட்டினாள் யுக்தா.
“நீ ஒவ்வொரு முறை என்னை ப்ரித்வினு சொல்லும் போதும் ஒவ்வொரு கிஸ் கொடுப்பேன். அப்பறம் உன் இஷ்டம்!” என மீண்டும் குறும்பு கலந்த குரலில் ரசனையான சிரிப்புடன் கூறினான்.
அவனருகில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் முகத்தை தாங்கி தன்னை நோக்கி இழுத்து தன் நெற்றியோடு அவன் நெற்றி முட்ட, “முடியல டி. இங்க என்னால தனியா படுக்கவே முடியல… எப்படி முடியும்? ஒவ்வொரு முறையும் இங்க நான் சேர்த்த நினைவுகள் அப்படி. மூச்சு முட்டுது. ரொம்ப வலிக்குது. நான் நல்லா தூங்கி ஆறு மாசம் ஆகுது. யுக்தா! ஐ..ஐ நீட் யூ! ஐ நீட் யூ கம்ப்ளீட்லி. கம் ஓவர் ஹேர்(Come Over Here)” என்று கூறியவாறே அவன் விழிகளை திறக்கவும் அதில் கொட்டிக் கிடந்த தவிப்புகளும் அவளை முழுதாக நாடி எழுந்த உணர்வுகளும் உணர்ச்சி பொங்கிய முகமுமாய் காதலில் திளைத்தெழ விரும்பும் நெஞ்சமுமாய் அவன் அவளையே ஆழமாக பார்த்துக் கொண்டிருக்க அதற்கு மேல் தன் கணவனின் தேவையை ஒதுக்கும் எண்ணம் அவளுள் எழவில்லை.
சம்மதமாய் அவன் இதழ்களில் தன் இதழ்களை மென்மையாக பதித்தாள் சம்யுக்தா. ஆனால் அந்த ஒப்புதல் மட்டும் அவனுக்கு போதவில்லை போலும் அவளை விலக்கி விட்டு எழுந்து நின்றவன், “இது என்னுடைய தேவையா என்னுடைய விருப்பம் மட்..டுமானதாவே இருந்தா எனக்கு இது எதுவும் எப்பவும் வேண்டாம்…” என முனங்கி விட்டு இரண்டடி எடுத்து வைக்க அவன் வலது கையின் மணிக்கட்டை இரும்புப் பிடியாக இறுக்கமாக பற்றியவள், “யார் சொன்னது உங்களுக்காக மட்டும்னு…” என அவனையே எதிர் கேள்வி கேட்க சட்டென திரும்பி அவள் விழிகளை ஆழமாக ஊடுருவி ‘எனக்கு நீ மட்டும் இல்ல உன் காதலும் அதில் நான் சேர்த்த உறவும் இப்ப வேணும். அதெல்லாம் கைய மீறி போய்விட்ட நிலமையில எதுக்கு இந்த பேச்சு’ என அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் ப்ரித்வி.
“இதுவரைக்கும் நம்ப காதல்ல உங்களுக்காகனு மட்டும் எதவாது இருந்திருக்கா என்ன?”
அவளையே வெறித்துப் பார்த்தவன், “என்னோட இனி இருக்க முடியாதுனு சொல்லிட்டு…” என நிறுத்தி அவளையே அழுத்தமாக பார்க்க, “உங்..உங்க கூட இருக்க முடியாதுனு சொன்னேன் தான். ஆனா உங்களை பிடிக்கலைனோ உங்களை நான் காதலிக்கலைனோ சொல்லலையே…” என அவள் பார்த்த பார்வையிலும் வார்த்தையிலும் முழுதாய் தெரிந்தது காதல் மட்டுமே. பார்க்கும் பார்வையில் கூட அத்தனை காதலை ஒருவரால் லட்ச டசன் கணக்கில் கொட்டி விட முடியுமா என்பது பார்த்திருந்தவனுக்கு புரியவில்லை.
அவனை நெருங்கி வந்து நின்றவள், “ஐ லவ் யூ ப்ரித்வி! லெட் மீ லவ் யூ” என்று கூறி அவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்களை தன் இதழ்களால் மூடினாள். ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு. அவள் தன்னை காதலிப்பது அவனுக்கு தெரியும். அவள் தன்னை உயிராய் நினைப்பது கூட அவனுக்கு தெரியும். முதல்முறையாக அவனுக்காக அவள் தன் சுயத்தை இழக்க கூடும் என்பதை அப்போது தான் அவன் அறிந்தான். அவளுடைய செயல்களில் அவள் மனம் எப்படி துடிக்கிறது என்பதனை அவன் தான் அறிவானே. அவளிடமிருந்து விலகியவன், “தேங்க்ஸ்!” என்னும் சொல்லோடு அந்த ஊஞ்சலருகில் சென்று மெத்தையில் விழுந்தான்.
அவன் விலகியதன் காரணம் புரியாமல் அவன் படுத்திருந்த இடத்திற்கருகில் மெத்தையில் அமர்ந்தவள், “ப்ரித்வி?” என மெல்லிய குரலில் வினவ, “நீங்க மட்டும் உங்க புருஷனை லவ் பண்ணல. நானும் என்னோட பொண்டாட்டிய அளவில்லாம லவ் பண்றேன் மேடம். அவளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் என்னை கிஸ் பண்ணதுக்கு தேங்க்ஸ்.” என அதே மென்மையான குரலில் கூறியவனின் வார்த்தைகள் அவளுள் பெரும் பூங்கம்பத்தை ஏற்படுத்த, “எல்லாமே எனக்காகவா உங்களுக்கு?” என அழுத்தமாக வினவியவள் அவன் மீது படர்ந்தாள். “தள்ளி போ போஜோ ப்ளீஸ்! உனக்கு பிடிக்காம ஏன் இப்படி?” என அவனுடைய மறுப்புகள் எல்லாம் காற்றோடு தான் போனதோ. அவனை மென்மையாக தொட்டு தழுவி முத்தமிட துவங்கியவளின் செய்கைகள் எப்போது வன்மையாய் அவனிடம் இடமாறியது என்று இருவருக்கும் தெரியவில்லை.
‘மென்மையா எல்லாம் என்னால இருக்க முடியாது டி. என்னோட காத்திருப்பும் காதலும் என்னை ரொம்ப ரொம்பவே வன்மையா மாத்திடுச்சு.’ உஷ்ணம் பொங்கும் மூச்சுடன் அவள் காதுகளில் அவன் தாபமாய் முனங்க அவளின் கைகள் வேகமாக அவனை சுற்றி வளைத்து தன்னுடன் சேர்த்தணைத்தது.
“போஜோ! ஸாரி! பிடிக்கலனா சொல்லு” அவளை முத்தமிட்டு கொண்டே தான் தவிப்பாய் கேட்டான். அவளை தன் அதீத காதலால் காயப்படுத்தி விடுவோமோ என்று பயந்தான். அவளாக விரும்பி தன்னை ஏற்க வேண்டுமே என்று பெரிதும் தடுமாறினான். அத்தனை அவசரத்திலும் அடுத்த கட்டத்திற்கு எல்லாம் அவன் முன்னேறவில்லை. நிதானமாக அவளோடு முக்குளித்து மெல்ல மெல்ல தான் முன்னேறினான். அவனுடைய ஒவ்வொரு தழுவலிலும் ஒவ்வொரு தொடுகையிலும் ஒவ்வொரு அணைப்பிலும் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்தது அந்த பெண் மேகம்.
மோகம் துளிர்விடும் நேரமெல்லாம் அவள் விழிகளை மட்டுமே பார்த்துக் கொண்டு ஆழ்ந்து அவள் இதழ் அணைத்தான். தவிப்புடன் பற்கள் பதிய அவள் மெல்லிய தேகத்தில் பலவித முத்திரைகள் பதித்தான். ஒவ்வொரு நொடி காத்திருப்பும் அவனை கொஞ்சம் கொஞ்சமாய் செயலிழக்க செய்து கொண்டிருக்க அவளுடைய ஒரே ஒரு கண்ணசைவுக்காக காத்திருந்தவன் அவளுடைய அபார ஒத்துழைப்பில் சித்தம் தொலைந்து சிதைந்தான்.
“போஜோ! ஐ கான்ட்!” என கரகரப்பான குரலில் தவிப்புடன் தெரிவித்தவன் அவளை தன்னோடு அள்ளினான். தன் முகம் பார்த்து தன் அனுமதி வேண்டி விழியசைப்பவனை காதல் பொங்கும் விழிகளால் மோகன முறுவலுடன் ரசித்து, “இன்னும் நான் என்ன சொல்லணும்னு நினைக்கறிங்க!” என அவன் மார்பில் புதைந்து கொண்டவளை நோக்கி, “நான் வேணும்னு சொல்லலையே நீ?” என விழிகளை சுருக்கி அவள் முகம் பார்த்தவனை, “இதுக்கு மேலையும் எனக்கு நீ வேணும்னு நான் என் வாயால வேற சொல்லணுமாடா…” என சட்டென ஒருமை விளிப்புக்கு சென்றவளை தன்னுடன் வாரி சுருட்டிக்கொண்டு இதழ்கள் மலர சிரித்தான் ப்ரித்வி.
@@@@@@@@
உறங்க முயன்ற போதும் பிரிய மறுத்து ஒட்டிக் கொள்ளவே துடித்து வெகு அருகாமையில் ஒருவரோடு ஒருவர் உரசியபடி படுத்திருந்தனர் இருவரும். ஆனால் விழிகளில் உறக்கம் என்பது மட்டும் துளியும் இல்லை. விடிந்திருந்த இரவும் தெளிந்திருந்த வானமுமாய் அவன் முகம். களிந்திருந்த முகத்தோடு திரும்பி அவளை பார்த்து படுத்தவன் அவனுக்கு வாகாக கிடைத்த அவளின் இடப்புற பிறை நெற்றியோரத்தில் மென்மையாக முத்தமிட்டான். “முப்பத்தி இரண்டு!” என அவள் அவனுக்கும் கேட்குமாறு முணுமுணுக்க, “என்ன முப்பத்தி இரண்டு?” என்று புரியாமல் வினவினான் அவளின் ப்ரித்விராஜ்.
“நீங்க எனக்கு நெத்தியில கொடுத்த முத்தங்களோட கணக்கு முப்பத்தி இரண்டு…” என்று கூறியவளின் வலது கன்னத்தில் அடுத்தடுத்து முத்தம் வைத்தபடியே, “அவ்வளவுதானா?” என கரகரப்பான குரலில் வினவியவனை பார்த்து வேகமாக, “அது நைட்ல இருந்து இல்ல… இப்ப விடிஞ்சதுக்கு அப்பறம்… அதுக்கு அப்பறத்துல இருந்து தான்…” என்று கூறியவளை நிதானமாக ஏறிட்டு, “ஏன் நைட்ல இருந்து கணக்கு பண்ண வேண்டியது தானே? இல்ல மேடமால அப்ப கணக்கு பண்ண முடியலையா?” என்று குறும்பாக கண்சிமிட்ட, “கணக்கு பண்ண விட்டுட்டாலும்…” என அவன் மீசையை தொட்டு நீவி விட்டவளின் புன்னகை அவனிடம் தொலைந்தது.
@@@@@@@@
“அண்ணா!” என ஆனந்த் மீண்டும் மீண்டும் அழைப்பதை கூட உணராமல் வாசலை நோக்கி வெறித்திருந்த ப்ரித்வியின் பார்வையை உணர்ந்து அங்கு அமர்ந்திருந்த அனைவரும் தன் பார்வையை வாசலை நோக்கி திருப்பி பார்க்கவும் அங்கு அன்ன நடையிட்டு தன் இரு கைகளிலும் தன் இரண்டு பிள்ளைகளின் கையையும் பிடித்தவாறு உள்ளே நுழைந்தாள் சம்யுக்தா.
ப்ரித்வி அவளையே விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆனந்த் அவன் காதருகில் குனிந்து, “அண்ணிய முதல்முறையா பொண்ணு பார்க்க போகும் போது கூட நீங்க இப்படி பார்க்கல போல ப்ரோ. அம்மா, ப்ரியா எல்லாம் இருக்காங்க கொஞ்சம் கெத்து காட்டுங்க…” என மெல்லிய குரலில் கூறிவிட்டு சிரிக்க அவன் கூறியதை கேட்டு புன்னகை முகமாக அவளுடனே நடந்துவரும் தன் குழந்தைகளின் பக்கமாய் பார்வையை திருப்பினான்.
“ஶ்ரீ!” என மென்மையான முறுவலுடன் தன் செல்ல மகளை வேகமாக சென்று தன் கைகளில் அள்ளி கொண்டவன் அவளை தன் மடியில் அமர்த்தியபடியே அங்கிருந்த பெரிய சோஃபா ஒன்றில் அமர்ந்தான். அவனருகில் அவனை போலவே ஒற்றை காலை மடித்தவாறு அவன் பாவனையிலே சென்று அமர்ந்து கொண்டான் யுவராஜ். தன்னை அச்சில் வார்த்தது போல இருக்கும் தன் மகனின் மேல் ஆசையாக தன் பார்வையை ஓட்டிய ப்ரித்வி தன் மனைவியை உரித்து வைத்து பிறந்திருக்கும் தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தான்.
“என்ன சாப்பிட ராஜ்?” என துவங்கி பல்வேறு கேள்விகளுடன் தன் பிள்ளை செல்வங்களுடன் ஐக்கியமாகி விட்ட தன் கணவனை பார்வையால் முறைத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. மடியில் மகளும் அவனருகில் அவனை ஒட்டியவாறு மகனுமென பெருமழையில் நனைந்துக் கொண்டிருந்தான் அவன். ஒருபுறம் சிரிப்புடனும் மறுபுறம் தன்னை கண்டுக் கொள்ளாத கடுப்புடனும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவனுடைய மனைவி சம்யுக்தா.