அண்ணன் மகளின் பதிலில் அதிர்வாகச் சில நொடிகள் நின்ற நிவிதா,
“என்னடி சொல்ற? நடக்காத கல்யாணமா? “
எனக் கேட்டதையே திரும்பக் கேட்க,
“ஆமா அத்தை எனக்கு அப்படி தான் தோணுது”என்றாள் இவளும் சஞ்சலமாக,
“உனக்கு ஏன் அப்படி தோணுது?”
“தெரியல அத்தை.ஏனோ அவரும் சரியா பேச மாட்டேங்கிறாரு, நானே ரெண்டு முறை பேச முயற்சி செய்தேன், அப்பவும் சரியான பதில் சொல்ல மாட்டேங்குறாரு, நான் கேக்குறதுக்கு பதில் சொல்றாரு, அவ்வளவுதான். என்னைப் பத்தி எதுவும் கேட்கல, சரி அவருக்கு தான் ஏற்கனவே என்னைப் பத்தி தெரியுமேன்னு நானே நினைச்சுகிட்டேன், இருந்தாலும் பேசும்போது ஒரு ஆர்வமோ? ஆசையோ? அவருக்கு இருக்கிற மாதிரி தெரியல, எனக்கு ஏதோ மனசுக்குள்ள சஞ்சலமாக இருக்கு, இந்தக் கல்யாணம் சரி வராது அப்படின்னு” என்று கூறியவளிடம்,
“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, நீ மனசை போட்டுக் குழப்பிக்காத, நான் வேணா அந்தப் பையனுக்குப் போன் பண்ணி பேசிப் பார்க்கவா?
“வேணாம் த்தை, வேணாம், வேணாம்” என்றாள் வேகமாக,
“நடக்கிற படி நடக்கட்டும், விடு!”
என்றவளை அதிர்ச்சியாக பார்த்தவளுக்கு என்ன சொல்லுவது என்பதே புரியாத நிலை.
“உனக்குப் பிடிச்சிருக்கு தானே! நீ விருப்பப்பட்டு தானே சம்மதிச்சே” எனக் கேட்டவரிடம்
“எனக்குப் பிடிச்சிருக்கு! பிடிக்கல! அப்படி எதுவும் தோணல அத்தை, தாத்தா என்கிட்ட கேட்டாங்க அதனால நான் சரின்னு சொன்னேன்”
என்றபடி கண் சிமிட்டி சிரித்தவளை பார்த்தவளுக்கு மனதிற்குள் பயமாக இருந்தது, இது எங்கே சென்று முடியுமோ என்று.
அத்தையின் பயந்த முகம் பார்த்தவள் தன் சஞ்சலத்தை அவருக்கும் ஏற்றி விட்டதை உணர்ந்து,
“நீ ஒன்னும் பயப்படாத அத்த, அதெல்லாம் நான் சூப்பரா வாழ்வேன்! கல்யாணம் ஆனா எல்லாம் சரியாயிடும்”
என அவருக்கு மட்டும் அல்லாமல் தனக்குமே தைரியத்தை கூறிக் கொண்டாள்.
மனதில் பலம் ஏற்பட்ட அதே நேரம் பலவீனமும் ஏற்பட்டது அத்தைக்கு காட்டாமல் அதைத் தனக்குள்ளே மறைத்துக் கொண்டாள். முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.
“அத்தை, அக்கா” என சப்தமிட்டு கொண்டே வந்த அகிலாவின் குரலில் தான் இருவரும் சுயம் உணர்ந்தார்கள்.
“பாட்டி உங்க ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிடுறாங்க. கீழே வாங்க!..” என்றவளிடம், சற்று நேரத்தில் வருவதாக கூறி அவளை கீழே அனுப்பியவர்கள் சிறிது நேரம் சென்றே இருவரும் கீழ இறங்கி சென்றனர்.
அரிசி மில்லில் இருந்தும் சர்க்கரை ஆலையில் இருந்தும் அப்பாவும் இரு அண்ணன்களும் வருவதைப் பார்த்த நிவிதா அவர்கள் அருகே செல்ல அவர் பின்னோடு வந்து கொண்டிருந்த வினிகா அத்தையின் கைபிடித்து இழுத்து,
“எதையாவது உளறி வைக்காத அத்த”
என்றாள் அவசரமாக,
“எல்லாம் தெரியும் டி வா”
எனத் தந்தையை நோக்கிச் செல்ல இருந்தவளை, அவரே எதிர்கொண்டு வந்து,
” வாம்மா”
என்றபடி தலையசைத்து டைனிங் கேபிளை நோக்கிச் சென்றார்.
தன் பின்னோடு வந்த அவரின் வாரிசான இரு பெண்களையும் தன் இரு அருகிலும் அமர்த்திக் கொண்டு அவர்கள் இருவருக்கும் பரிமாறி விட்டு, தனக்கு பரிமாற மனைவியைக் கண்களால் அழைக்க,
“ம்க்கும்ம் பேத்திகளுக்குப் பரிமாறினவருக்கு, தனக்கு பரிமாறிக்க தெரியாது”
என நொடித்துக் கொண்டே கணவனுக்குப் பரிமாறினார் சிவகாமி.
இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மகன்கள் இருவரும் தங்களுக்கு பரிமாற வந்த மனைவிகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.
இவர்களோடு சாப்பிட அமர்ந்த அகிலாவும்,
“என்ன ஒரே இருட்டா இருக்கு?”
என கூறியபடியே உணவு பாத்திரங்களை ஒவ்வொன்றாக திறந்து பார்க்க,அவளின் கேள்வியில் குழம்பியவராக
“என்னடி இருட்டா இருக்குங்குற! பட்ட பகல்ல, நல்ல வெளிச்சமா தானே இருக்கு” என்றார் பாட்டி ஒன்றும் புரியாதவராக.
“இன்னும் வெளிச்சம் வேணுமாக்கும் உனக்கு, ஏம்மா சின்னவள, அந்த விளக்கைக் கொஞ்சம் பத்தி விடுமா” என
“ஹேய் சாப்பிடு டி! சும்மா வம்பு வளர்க்காம” என அத்தையின் பேச்சுக்கு மறு வார்த்தை பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள் அகிலா.
“பத்தியா இந்தச் சின்னத, இவ்வளவு நேரம் என் கிட்ட வழக்காடிட்டு அத்தகாரி சொன்னவுடனே அமைதியா சாப்பிடுறதை”
எனப் பெரிய மருமகளிடம் கிசு கிசுத்தவர்.
பேத்தியின் அருகில் வந்து இன்னும் கொஞ்சம் அவள் தட்டில் பொரியலை வைக்க, அவரை முறைத்துக் கொண்டே உண்டவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்து முன் அறையில் சென்று அமரப் பெண்களும் சாப்பிட்டு முடித்து அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டனர்.
எப்பொழுதும் போலப் பாட்டியே முதலில் ஆரம்பித்தார்,
“என்னப்பா பெரியவனே, எல்லா வேலையும் சிறப்பா நடக்குதா?”
“ஆமாமா எல்லாம் நல்லபடியாகவே போய்கிட்டு இருக்கு “
“ஏம்பா அந்தச் சாப்பாட்டுல இன்னும் ரெண்டு மூணு ஐட்டம் சேக்கணும்னு சொன்னிங்களே, சமையல்காரர் கிட்ட சொல்லிட்டீங்களா?” எனத் தாத்தா கேட்க,
“ஆமாம் பா! சொல்லிட்டோம்” என்றார் சின்னவர்,
சாப்பாடு என்றதும் ஆர்வத்துடன் அகிலா,
“என்ன எல்லாம் மெனுல இருக்கு அப்பா..?” எனக் கேட்க,
“எல்லாமே இருக்கு, சின்ன குட்டி, உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு? அதையும் சேர்த்துடலாம் மெனுல” என்ற பெரிய தந்தையை பார்த்தவள்.
“பறக்கிறது, குதிக்கிறது, ஓடறது எல்லாம் இருக்கா?”
“அது என்னடி? பறக்கிறது, ஓடுறது, குதிக்கிறது!”
“அதான் பாட்டி, இந்த ஆடு, கோழி, மீன் இப்படி”
“அடியே இப்ப தானே, சொன்னேன் கவுச்சி ஆகாதுன்னு”
“ஐயோ போங்க பாட்டி, உங்களுக்கு ஒண்ணுமே தெரியல. போன வாரம் என் ஃப்ரெண்டோட அக்கா கல்யாணத்துல மட்டன் பிரியாணி, சிக்கன் பிரை, பெரிய பெரிய மீன் வருவல் எல்லாம் வச்சிருந்தாங்க தெரியுமா, அவ்வளவு சூப்பரா இருந்துச்சு, நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் போய்ச் செம கட்டு கட்டுனோம்”
“அடியாத்தி! என்னடி சொல்ற? கல்யாணத்துலயா இப்படி அசைவம் போட்டாங்க? இது எங்கேயாவது நடக்குமா டி”
என்ற படியே மூக்கில் விரல் வைத்து அதிசயிக்க.
“ஆமாம் பாட்டி, ஊரே வந்து கொண்டாடி சாப்பிட்டு போனாங்க தெரியுமா!”
“அடப்பாவமே ஒருத்தர் கூடவா சொல்லல, கல்யாணத்துல அசைவம் சேர்க்க கூடாதுன்னு”
அது எப்படி சொல்லுவாங்க, அது என் ஃப்ரெண்ட் ரிஹானா விட்டுக் கல்யாணம் ஆச்சே”
“ரிஹானா வா? அடியே! அந்த பாய் வீட்டு பொண்ணு அந்தப் பிள்ளை வீட்டு கல்யாணத்தை பத்தியா சொல்ற, அவங்க வீட்ல அசைவம் போடலனா தான டி அதிசயம்,
போடி போக்கத்தவளே” என்ற படியே முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டு திரும்ப, இவர்களின் சம்பாஷனை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குச் சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.
“அடடே! என்ன ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு..?” எனக் கேட்ட படியே உள் நுழைந்தார்கள் மோகனின் தாய் ரஞ்சிதம் மற்றும் தந்தை அண்ணாமலை…
அண்ணன், அண்ணியை கண்ட தும் மகிழ்வுடன் எழுந்த பார்கவி இன்முகத்துடனேயே வரவேற்றாலும் இப்போது இவர்கள் வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும்? என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது அவர் மனதில்.
வீட்டின் வருங்கால சம்பந்திகளை வரவேற்கும் விதமாகத் தாத்தா செல்லதுரை முன் வந்து,
“வாங்க! வாங்க! உள்ள வாங்க! நல்லா இருக்கீங்களா?
என வரவேற்க அவரைத் தொடர்ந்து மருது பாண்டியும், முத்துப்பாண்டியும் சிவகாமி பாட்டியும் சுசிலாவும் நிவிதாவும் முறையே வரவேற்றார்கள்.
இவர்களோடு ரஞ்சிதத்தின் அண்ணா அவரின் மனைவியும் அக்கா மற்றும் அவரின் கணவரும் வந்திருந்தார்கள்.
இவர்கள் வருவதைப் பார்த்த நிவிதா அண்ணன் மகள் வினிகாவுக்கு கண் காட்ட, அகிலாவையும் இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள் அவள்.
வந்தவர்களைப் பெண்கள் உபசரிக்க,
ஆண்கள் அனைவரும் சோபாவில் உட்கார பெண்கள் மூவரும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
பொண்ணுக்கு நகை எல்லாம் செஞ்சாச்சா? என்ற படியே மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.
இவர்களின் வசதி அறிந்து பெண்ணுக்கு எவ்வளவு நகை போடப் போகிறார்கள் சீர்வரிசை என்ன தரப் போகிறார்கள் என எந்தக் கேள்வியும் கேட்காமல், சம்பந்தம் அமைந்ததே பெரிது என அனைத்துக்கும் ஒப்புக்கொண்ட ரஞ்சிதத்திற்கு இப்போது மெதுவாக, என்னென்ன செய்வார்களோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதை நிவர்த்தி செய்து கொள்ள தன் அண்ணியையும், அக்காவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார் சம்பிரதாயம் எனக் கனவனிடம் கூறிவிட்டு.
பார்கவிக்கு தன் அண்ணியின் புத்தி தெரிந்ததால் அவ்வளவு கோபம் வந்தது.
துடுக்காகப் பேச முனைந்தவரின் கைகளைப் பிடித்து அமைதியாக இருக்கும் படி கண்ணைக் காட்டிய சுசீலா, அனைத்தும் தங்கள் மாமியார் பார்த்துக்கொள்வார் என்பது போல ஜாடை காட்டினார். அவரின் செயலால் அமைதி அடைந்த பார்க்கவியும் என்ன நடக்கிறது? என்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
ரஞ்சிதம் கொண்டிருக்கும் ஆசையின் அளவுகோலை அவரின் பேச்சின் மூலமும் நடத்தையின் மூலமும் ஏற்கனவே தன் அனுபவ அறிவைக் கொண்டு அறிந்து வைத்திருந்தார் பாட்டி.
“என்னம்மா இப்படி கேட்டுட்ட? எங்க பேத்திக்கு எல்லாமே நாங்க நிறைவா தான் செய்வோம், நீங்க எதையுமே சந்தேகப்பட வேண்டாம், நீங்கக் கேட்கிற அளவுக்கு நாங்க எதையும் குறையா செய்திட மாட்டோம்”
என நறுக்கென்று பதில் கூற, எங்கே தன் பேச்சு வேறு விதத்தில் சென்று விடுமோ எனப் பயந்த ரஞ்சிதம்,
“இதோ நான் போய் அழைச்சிட்டு வரேன்!” என்ற படி வினிகாவின் அறையை நோக்கிச் சென்றார்.
சித்தியின் பின்னே வந்த வினிகா வந்தவர்களை இரு கரம் கூப்பி வரவேற்று,
“வாங்க”
என மெதுவாகக் கூறிய படி தன் அத்தையின் அருகில் சென்று நின்று கொண்டாள். ஏனோ ரஞ்சிதத்தை கண்டால் மிகவும் பயந்து வந்தது பெண்ணுக்கு.
வந்தவளை தன் அருகில் அமர வைத்துக்கொண்ட ரஞ்சிதம் சிறிது நேரம் தலை முதல் பாதம் வரை பார்வையால் அவளை வருடியவர்.
‘இவளை வைத்துத் தான் தன் அந்தஸ்தும் அதிகாரமும் உயரப் போகிறது’
என மனதில் எண்ணி மகிழ்ந்த படி அவளை லேசாக அனைத்து விட்டு
“நீ எங்க வீட்டுக்கு எப்ப வருவேன்னு காத்துகிட்டு இருக்கேன் மருமக பெண்ணே..” என்று அவளிடம் கூறிவிட்டு, அனைவரிடமும் சென்று வருவதாக கூறி விடை பெற்றார்கள்.
தன் அறையில் விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்த விஜயராகவனுக்கு மனது முழுவதும் வலி,வலி,வலி மட்டுமே,
மனதில் பதிந்து விட்டவளை மறக்க முடியுமா? என்பது மிகப்பெரிய சந்தேகமே.
தைரியமாக நண்பனிடம் விரைவில் மனதில் இருப்பவரின் நினைவை விட்டு வெளி வந்து விடுவதாக கூறிவிட்டு வந்துவிட்டாலும்,
தனக்கு ஏன்? இப்படி ஒரு வழியும் ஏமாற்றமும்? என்று நினைக்காத நேரமில்லை அவன்.
காலதாமதம் செய்து விட்டோமோ? அவளிடம் தன் மனதின் விருப்பத்தைக் கூறி இருக்கலாமோ? என மருகியபடியே படுத்திருந்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து சென்று தலையணையை நனைத்தது.
அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் அன்றே சென்று பேசி இருந்திருக்கலாம் என்று யோசிப்பது இனி எந்த வகையிலும் உதவி செய்யப் போவதில்லை இனி அதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற உண்மை புரிப்பட, தன் நிலையை தானே கடிந்து கொண்டு, கடினமாக இருந்தாலும் மறக்க முயற்சி செய்ய வேண்டும் என தனக்குள்ளேயே கூறியவனாக பெருமூச்செறிந்தபடி உறக்கம் கொள்ள முற்பட்டான்.
ஆனால் எங்கோ தூரம் சென்று விட்ட உறக்கத்தை கட்டி இழுக்க தான் முடியவில்லை அவனுக்கு. மறக்க வேண்டும் என்ற நினைவே கொள்ளாமல் கொன்றது அவனை..
கொல்லும் மனதின் வலியில் இருந்து தன்னை எப்படி காத்துக் கொள்ள போகிறான்.. காத்திருப்போம் நாமும் அவனோடு..