இரவு ஒன்பது மணி இருக்கும் தமயா பேருந்து விட்டு இறங்கி வீட்டை நெருங்கும் வேளையில் பின்னால் “டொட், டொட்”என்ற புல்லட் சத்தம் கேட்க, திரும்பாமல் அது தொரை என அறிந்தவாறு நடந்தாள்.
அவனும் அவளை கடந்து கண்ணாடி வழியே பார்த்தவாறு முன் சென்றான்,மனதில் ‘என்ன இப்ப தான் வரா’ என எண்ணியவாறு.
வீட்டின் முன் புல்லட்டை அமர்த்திவிட்டு இறங்கியவன், தள்ளிக் கொண்டே உள்ளே சென்று நிறுத்தினான்.
தமயா ரொம்ப அசதியாக நடந்து வருவது போல் தெரிந்தது நளனுக்கு.
செருப்பை கழட்டிப் போட்டு உள்ளே சென்றாள் அவன் புல்லட்டை ஸ்டேன்ட் போட்ட நேரத்தில்.
தன் அறைக்கு சென்றவள், கைப்பையை வைத்துவிட்டு, கட்டிலில் அப்பிடியே அமர்ந்து நிதானமானாள்.
நளனும் அறைக்குள் நுழைந்து அவனின் பர்ஸ், சாவியை எடுத்து டேபிளில் வைத்தவாறு தமயாவைப் பார்த்தான்.
“அம்மா, அத்த, அத்தாச்சி எல்லாம் கோயிலில் விளக்குப் பூஜைனு போய் இருக்காங்க பெரியப்பா”
“ம்ம்ம்!”என ஷோபாவில் அமர்ந்தான்.
சங்கர், சாமி ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிகெட் பார்க்க, ஜோதி தந்தையின் ஃபோனில் கேம் விளையாடி கொண்டு இருந்தாள், சரசு வெற்றிலையை மென்றவாறு எல்லாரையும் திட்டியவாறு டிவியில் தெரிவதைப் பார்த்தார்.
நளன் அப்பா வெளியில் படுத்து இருமிக் கொண்டிருந்தார்.
நளனுக்கு ஒரு மாதிரி இருந்தது, பாவம் தமயா ஏற்கனவே அசதியாக வந்தாள் இப்ப வேலையும் இருக்கும் போல என எண்ணி வருத்தப்பட்டான்.
எழுந்து அடுப்படி பக்கம் லேசாக தொண்டையை கனைத்தவாறு சென்றான் அவள் பயந்துடக் கூடாதென்று.
“என்ன சாப்பாடு செய்ற..?”
அவனை பார்க்காமல், “சட்னி வைக்குறேன், தோசை ஊத்தனும்” என்றாள், கோபம், ஆதங்கம், அழுகை எல்லாம் ஒன்று சேர.
“நான் வேணா போய் இட்லி வாங்கிட்டு வரவா.?”
“அதான் சட்னி அரைச்சுட்டேன், இனி தோசை ஊத்த வேண்டியது தான்” என்றாள் அவன் பக்கம் திரும்பாமல்.
“ம்ம்ம்!”என வெளியில் சென்றவன் மனமில்லாமல், “நான் வேணா தோசை ஊத்தவா”என்றான் மறுபடியும்.
திரும்பி அவனை கண்கள் கலங்க முறைத்தவள், “ஏன் உங்க அம்மா, தம்பி எல்லாம் எனக்கு நீங்க பணிவிடை செய்றீங்கனு நக்கலடிக்கவா, தேவையில்ல போங்க”என்றாள்.
நளனுமே இதுவரை அடுப்படிற்குள் சென்று எதுவும் செய்ததில்லை தான், ஆனால் இன்று தமயா கஷ்டப்படுவது தெரிய வேறு வழியில்லாமல் கேட்டான்.
“ஜோதி!”என தம்பி மகளை அழைத்தான்.
“என்ன பெரியப்பா..?”
“உனக்கு தோசை ஊத்த தெரியுமா..?”
“தெரியாதே பெரியப்பா”
“ம்ம்ம்! பெரியப்பா சொல்லி தரவா இன்னைக்கு..”
“ஓ! அப்ப ஊத்தலாமே வாங்க”என்றாள் ஆர்வமாக.
தமயா அவனை திரும்பி பார்த்தாள் புருவத்தை சுளித்து.
“உன் பெரியம்மாவை நகர சொல்லு ஜோதி, அப்ப தானே நம்ம ஊத்த முடியும், யாரு நைஸா ஊத்துறானு பாக்கனும் சரியா..?”
“ஓகே! டன். பெரியம்மா நகருங்க. டுடே நானும் பெரியப்பாவும் தான் தோசை ஊத்தப் போறோம்”என ஜோதி தமயாவை நகர்த்திவிட்டு நளனோடு சென்று நின்றாள்.
நளன் இந்த வீட்டில் தான் சமையல் பக்கம் சென்றதில்லை, ஆனால் வெளிநாட்டில் அனைத்தும் சமைத்து சாப்பிட்டவன், அத்தனை வருடங்கள் தனியாக இருந்தவனுக்கு சமையலும் கைவந்த கலை தான்.
நளன் ஒவ்வொரு முறையும் ஊற்ற சொல்லித் தருகிறேன் என இடையில் ஜோதி கையைப் பிடித்து ஊற்றினான்..
தமயா வேடிக்கைப் பார்க்க, ஜோதி”இப்ப நான் பெரியப்பா”என கரண்டியை வாங்கி தனியாக மாவை இழுத்தாள்.
“நீ கொண்ட தோசையை எல்லாருக்கும் வை, என்னத்த வேடிக்கை பாக்குற..” என்றான் தமயாவை.
அது வெந்ததும் எடுத்துக் கொடுக்க தமயாவும் சாமி, சங்கர், சரசு, உடையப்பா என அனைவருக்கும் பரிமாறினாள். தமயாவை அலைய விடாமல் நளன் ஜோதியிடம் கொடுத்து அனுப்பினான்.
“அப்பா! இது நான் ஊத்துன தோசை” என தகப்பனிடம் பெருமைப்பட வேக வேகமாக வைத்தாள்.
சங்கர்”ஏய்! பொய் சொல்லாத, நீ எல்லாம் அடுப்பு பக்கமே போனதில்லயே”
“டேய் அண்ணா! பெரியப்பா தான் சொல்லி தந்தார், வா உனக்கும் சொல்லி தர சொல்றேன்..”
“நான் மேட்ச் பாக்கனும் நீயே போய் ஊத்திக் கத்துக்கோ”என்றான் அவன்.
“அவசரத்துக்கு தெரியனுமுடா எப்பிடி தோசை ஊத்துறதுனு அவ பொம்பளை புள்ள, நீ ஆம்பளப் பிள்ளைனு இல்ல கத்துக்க” என்றான் நளன் வெளியில் வந்து.
“ம்ம்ம்! நீயும் ஜோதியும் உட்காருங்க ஹாட் பாக்ஸில் இருக்கு தோசை”என அவனும் அமர்ந்தான்.
தமயா,ஜோதியும் அமர, “பெரியம்மா! இது நான் ஊத்தினது”என கோணலான ஒன்றை எடுத்து வைத்தாள்.
“ம்ம்ம்! இது என்ன ஃபிளைட் டிசைனில் இருக்கு ஜோதி”என கிண்டல் செய்துவிட்டு வாயில் வைத்தாள்.
நளனும் சாப்பிட, தமயாக்கு அதுவரை இருந்த மனநிலை மாறி நார்மல் ஆனாள், ஜோதியோடு பேசிக்கொண்டே சாப்பிட்டாள்.
அப்பப்ப தொரையை பார்த்தாள் ஏன் என்றே தெரியாமல். அவனோ தோசையை சாப்பிட்டு டிவி முன் அமர்ந்தான்.
பத்து மணிக்கு நான்குப் பெண்களும் நுழைந்தனர் வீட்டிற்குள்.
குத்து விளக்குகளோடு.
சாமி அறையில் வைத்துவிட்டு வந்தவர்கள், ஹாலில் வந்து அமர்ந்தனர்.
“என்னடா இப்ப தான் வந்தீயா..?”என கேட்டார் மரகதம்.
“இல்ல! வந்து சாப்புட்டு முடிச்சுட்டேன், என்ன திடீருனு விளக்குப் பூஜை எல்லாம்”
“அது வந்து நம்ம கனிகாவுக்கு நல்ல வரன் வரனுமுனு வேண்டிட்டு செய்யப் போனேன்டா, அப்பிடியே லலிதாவும் சங்கர் நல்லப்படியா பரீட்சை எழுத வேண்டிகிட்டா, அதான் சேர்ந்து பண்ணோம்.”
“ம்ம்ம்! இந்தா கனிகா செயின்”என நகையை எடுத்து நீட்டினான்.
அதை வாங்கிப் பார்த்தவள், கையில் எடுத்து வைத்தாள்.
“எத்தனை கிராம்டா தம்பி..?”
“பத்து கிராம்”
“ஏப்பா! பழைய சங்கிலி எத்தன கிராம்..?”என கேட்டார் சரசு.
“அப்ப கனிகா சங்கிலியை மாத்தின மாதிரி பழசைப் போட்டு புதுசா எடுத்திருக்க வேண்டியது தானே..”
தமயாவை திரும்பி பார்த்தவன், தன் தாயிடம்”அவ மொத மாச சம்பளத்தில் வாங்கின செயினாம் அதான் மாத்த வேணாம் அப்பிடியே இருக்கட்டுமுமுனு சொன்னா, அதோட தாலிப் பிரிச்சுக் கோர்க்குறப்ப தாலிச் செயின் போடப் போறதால ஒரு செயின் போதுமுனு சொல்லிட்டா”என்றான் கோர்வையாக.
தமயாக்கு மூச்சு சீராக மாறியது, மனதில்’அய்யோ! தொரைக்கு எப்பிடி தான் இப்பிடி சமாளிக்க வருதோ, ரொம்ப நன்றிங்க தொரை’என அவனை புகழ்ந்தாள், அடுத்து நடக்கப் போவது தெரியாமல்.
“அதுவும் சரி தான், வேலைக்குப் போயிட்டு வரும் போது ஒரு சங்கிலிப் போட்டு போறதே பெரிய ரோதனையா இருக்கு, அதும் உன் பொண்டாட்டி இப்பிடி ஒன்பது மணிக்கு வந்தா, பாத்துப்பா இருக்க சொல்லு, சொல்லிப்புட்டேன்”என்றார் பெரியவராக.
“ஒன்பது மணிக்கு வந்தாளா..?”என கேட்டார் மரகதம்.
“ஆமா! ஒருத்திக்கும் வீட்டைப் பத்தி கவல இல்ல, அவ அவ சோலியை பாக்கப் போயிட்டீங்க, வீட்டுல உள்ளவங்க சாப்புட்டாங்களானு கூட யோசிக்கல, எனக்கு அந்த கேஸ் அடுப்பை பத்த வைக்க தெரியுமா..? இந்த நேரத்தில் போய் விறகு அடுப்பை தான் எரிக்க முடியுமா பின்னாடி போய் கண்ணு தெரியாம..?”என சரசு மொத்தமாக திட்டினார்.
“ஏத்த! அவ ஒன்பது மணிக்கு வருவானு எங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்” என்றாள் லலிதா உடனே.
“எத்தன மணிக்கு போனீங்க கோயிலுக்கு அக்கா..?”என கேட்டான் நளன்.
“ஏழு மணிக்கு மேல தான் போனோம்”
“நைட் சாப்பாட்டுச்சா..?”
“ம்ம்ம்! கோயிலிலே பிரசாதம் தந்தாங்க”
“சரி! ஆறரை மணிக்கு வரவ, ஏழு மணிக்கு மேல ஆகியும் வரலைனு யாருமே யோசிக்கலையா…?”என்றான் நளன் பொதுவாக.
“அவ வர லேட்டா ஆவுதுனா அவ தான் ஃபோன் பண்ணி சொல்லி இருக்கனுமுடா”என்றார் மரகதம்.
“ஏன்டா! நீ ரெண்டுப் பிள்ளைங்களை பெத்தவன் தானே..? வீட்டுல வயசானவங்க, பிள்ளைங்க இருக்காங்களேனு நெனச்சு போய் சாப்பாடு வாங்கி தராம டிவிப் பாத்துட்டு இருக்க, இந்த வீட்டுக்கு வந்தவ எப்பையும் வர நேரத்துக்கு வராம இருக்கானு ஃபோன் பண்ணி அவ கிட்ட கேக்கலானாலும் எனக்கு ஃபோன் பண்ணி சொல்ல மாட்டீயா நீ..? இந்த மாதிரி அண்ணி இன்னும் வரலனு.”என வேகமாக கேட்டான்.
சாமி முழித்து”இல்லண்ணே! மேட்ச் ஃபைனல் அதை பாத்துட்டு இருந்துட்டேன்”என்றான் பொறுப்பில்லாமல்.
“உன் பையன் தோளுக்கு மேல வளர ஆரம்பிச்சுட்டானு பாக்குறேன் சாமி இல்லனா.”என அவனை முறைத்தவன், முகத்தை சுளித்து அமைதியானான்.
“இது குடும்பம் தானே..? யாரு வந்தா போனா, சாப்பிட்டா, சாப்பிடலைனா எனக்கென்னனு இருக்க இது ஒன்னும் சத்திரம் இல்ல, நீங்க கோயிலுக்குப் போறீங்கனு காலையிலே உங்களுக்கு தெரியாதா..? அவ கிட்ட காலையில் சொல்ல வேண்டியது தானே..? இங்கரே! உனக்கும் தான் சொல்றேன், உன் வேலையில் நேரம் போவது இயல்பு தான் ஆனா அதுக்காக வீட்டுல சொல்லாம இருப்பீயா..? ஏதாவது முயற்சிப் பண்ணி சொல்லனும் தான்…? எனக்கு தெரிஞ்சிருந்தா கூட நான் சாப்பாடு வாங்கிட்டு வந்திருப்பேன். நான் வந்து தான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கனுமா..?”
“நல்லா கேளுப்பா, சமைக்குறதல கணக்கு நடக்குது அதான் ஆளாளுக்குப் போறாள்க எனக்கென்னனு”என்று சரசு ஏத்தி விட்டார்.
“சாப்பாட்டுல நீயா..? நானா..? னு பாக்காம யாருக்கு நேரம் இருக்கோ, சமைச்சு வைங்க, இல்லையா வெளியில் போறேன், வரேன் நேரமாகுமுனு சொல்லுங்க, இனி இப்பிடி நடக்க கூடாது சொல்லிட்டேன்”என கோபமாக அறையை நோக்கி சென்றான்.
***
தமயாக்கு தொரை மீது கோபம் வரவில்லை, அவன் கூறியதும் சரி தானே என தோன்றியது.
அடுப்படியை சுத்தம் செய்து விட்டு அறையை நோக்கி சென்றாள்.
‘கோபமா போனாரே, நம்ம பக்கமும் தப்பு இருக்கு..?’என எண்ணிக் கொண்டு நடந்தாள்.
அறையினுள் சென்றவளுக்கு நளன் பாய் படுக்கையில் படுத்துக் கண்களை மூடி இருந்த காட்சி தான் தெரிந்தது.
மெல்ல நடந்து பாத் ரூம் சென்றவள், வேலையை முடித்துவிட்டு திரும்பி வரும் போது அப்பிடியே இருந்தான்.
அறை விளக்கை ஆப் செய்யப் போனவள், அவன் முன் வந்து நின்றாள்.
“தூங்கிட்டீங்களா..?”
“என்ன வேணும்…..?”என்றான் கண்களை திறக்காமல்.
“இல்ல! நான் வேணுக்குமே நேரமாகுறதை சொல்லாம இல்ல, வேலை அப்பிடி அதுல நினைவே இல்ல” என்றாள் தயங்கி.
“ம்ம்ம்!”
“அதோட ஃபோனும் ஸ்விட்ச் ஆப் ஆகிட்டு, அது சார்ஜ் நிக்க மாட்டுது”
“ம்ம்ம்!”
“இல்லனா, வரும் போது கூட சொல்லி இருப்பேன், எனக்கும் டயர்டு ரொம்ப அதனால யோசிக்க முடியல”
“ம்ம்ம்!”என்றான் எல்லாத்துக்கும்.
“என்ன வெறும் ம்ம்ம்ம் மட்டுமே சொல்றீங்க..? நான் பொய் சொல்றேனு நினைக்குறீங்களா…?”என்றாள் சற்று வேகமாக.
கண்களை முழித்தவன், “நீ உன் பக்க விளக்கத்தை சொன்ன, சரினு ஏத்துக்கிட்டேன். வேற என்ன செய்ய சொல்ற…?”
தமயா அமைதியாக நின்றாள்.
“நீ போய் படு, ஏற்கனவே அசதியா இருந்த வேற..”
தமயாக்கு கண்கள் கலங்கியது ஏனோ தெரியவில்லை, அப்பிடியே நின்றாள்.
“இங்கரே! உனக்கு என்னைய புடிக்கலைனு எனக்கு தெரியாம இல்ல, ஆனா இப்பிடி சில நேரங்களில் நடக்கும் போது தகவல் சொல்லனும் அது முக்கியம், இப்ப நான் தான் உனக்கு பொறுப்பு, ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாம் உன் ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி நீ நினைச்சிருந்தா.”
தமயா அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“எனக்கு அந்த நேரத்தில் அது தோணல, சொல்லக் கூடாதுனு நினைக்கல” என்றாள் கலங்கிய கண்களோடு.
“சரி! போய் தூங்கு, போ”என்று திரும்பிக் கொண்டான்.
தமயாவும் சென்று படுக்கையில் விழுந்தாள் பொத்தென்று.
அவளுக்கு விரக்தியாக இருந்தது.
சிறிது நேரம் ஆக, “நீ பேசாம உன் வீட்டுக்குப் போய் இருக்கீயா..? கொஞ்ச நாளைக்கு”என கேட்டான்.
“ஏன்…?”என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“இங்க உனக்கு கஷ்டமா இருக்க மாதிரி தெரியுது, அம்மா வீட்டுக்குப் போயிட்டு வந்தா ஒரு மாற்றாம இருக்குமேனு சொன்னேன்.”
“இன்னைக்கு உன் ப்ரண்ட்ஸ் குடும்பத்தை விசாரிச்சதும் தான் எனக்கு உன்னோட கோபம் முழுசாப் புரியுது, நான் உனக்கு பொருத்தம் இல்லாதவன் தான்.”
தமயா அமைதியாக இருந்தாள்.
அவள் முகத்தை பார்த்தவன், “இங்கரே! நான் உனக்கு புடிச்ச மாதிரி மாப்பிள்ளை பாக்கட்டுமா..? நீயும் குடும்பத்துக்காக தானே என்னைய கல்யாணம் பண்ண, உன் நிலை எனக்கு புரியுது, எதுக்கு கட்டாயத்தில் நீ இங்க இருக்கனும் மனசே இல்லாம, நீ சொல்லு எப்பிடி மாப்பிள்ளை பாக்கட்டும், மத்ததை பத்தி கவலைப்படாத நான் எல்லாரையும் சமாளிச்சுக்குறேன்”என்றவனை கண்கள் சிமிட்டாமல் புரியாத புதிராக பார்த்தாள்.
“பதில் சொல்லு!”
“தாலிப் பிரிச்சு கோர்த்துட்டு என் வீட்டில் ஒரு வாரம் இருந்துட்டு வரேன்”என்றாள் பதிலுக்கு.
“நான் கேட்டதுக்கு பதில்…?”
“அந்த ஒரு வாரத்தில் எனக்குப் புடிச்ச மாப்பிள்ளையை பத்தி யோசிச்சு வைக்குறேன், நீங்க அதுக்கு அப்புறம் தேடலாம்”என அவனுக்கு முதுகை காட்டிப் படுத்தாள்.
மீண்டும் திரும்பி”தோசை ஊத்தி உதவி பண்ணதுக்கும், செயின் விஷயத்தை சமாளிச்சதுக்கும் நன்றிங்க தொரை” என்றாள் நேரடியாக, பிறகு திரும்பி தூங்கினாள்.
நளன் அவள் சொன்ன பதிலில் சற்று குழம்பி தான் போனான். வேற மாப்பிள்ளை பார்க்க ஓகே சொல்லிட்டாளா..? என மனம் வருந்தியது, அப்புறம் ஏன்டா கேட்ட. ஆமா! அவளாச்சும் சந்தோஷமா இருக்கட்டும் என நினைத்து கண்களை மூடினான்.