தமயா கீழ அனைவருக்கும் டீ போட்டு கொடுத்து விட்டு அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்து நிதானமாக பேப்பர் படித்துக் கொண்டே அவளுக்கான டீயை குடிக்கத் தொடங்கினாள்.
நளன் பாத் ரூமில் இருந்து வெளயில் வரவும், “டீ இருக்கு, எடுத்துக்கோங்க”என்றாள்.
புரியாமல் அவளைப் பார்த்தவாறு’என்ன இன்னைக்கு இங்க டீ கொண்டு வந்துருக்கா, இன்னேரம் அடுப்படியில நிப்பாளே’என யோசித்தவாறே டீயை கையில் எடுத்தான்.
“இங்கரே! லீவா இன்னைக்கு”எனக் கேட்டான் மறுபடியும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில்.
அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், லேசாக உள்ளுக்குள் சிரிப்பு வர, “இன்னைக்கு நைட் டியூட்டி, சாயங்காலம் ஆறு மணிக்கு தான் போகனும்”என்றாள்.
“ஓ! அப்ப எவ்வளவு நேரம் வேலை, நைட் தூங்க மாட்டீயா..?”
“காலையில் ஆறு மணி வரை, நைட் வீட்டுல படுக்குற மாதிரி தூங்க முடியாது எமெர்ஜென்ஸி இல்லனா சேரில் உட்காந்தப்படி தூங்குவோம் தான்”
“ம்ம்ம்!”என பேப்பர் வர காத்திருந்தான். அது அவனுக்கு பழக்கமான ஒன்று பேப்பரும், டீயும் ஒரே நேரத்தில் படிப்பதும், குடிப்பதும்.
ஆனால் இப்போது டீயை மெனகெட்டு மொரடு மொரடாக இறக்கினான் மெதுவாக.
சிறிது நேரம் ஆக, “உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேக்கனும்..?”என்றாள் தமயா.
“என்ன..?”
“இல்ல! எனக்கு மாப்பிள்ளை பாக்குறேனு சொன்னீங்க, நானும் எப்பிடி பட்ட மாப்பிள்ளை வேணுமுனு சொல்றேனு சொன்னேன், அப்ப இந்த தாலிப் பிரிச்சு கோக்குற முறை எல்லாம் எதுக்கு..?” என்றாள் அவனை நேராக பார்த்து.
நளனுக்கு நொடிப்பொழுது மூளை வேலையே செய்யவில்லை.
அவள் கேட்பதும் நியாயம் தானே.
“நிறுத்திடலாம், வேணானு”
“எப்பிடி நிறுத்துவீங்க..? அது முடியுமா உங்களால”என்றாள் நக்கலாக.
“என்னடா..?”என நளன் கேக்க, “உங்கள இல்ல பெரியப்பா, பெரியம்மா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”
“என்ன ஜோதி..?”என பேப்பரை மடித்து ஓரமாக வைத்தாள்.
“எனக்கு ஹோம் ஒர்க் கொடுத்த இந்த கணக்கு வரவே மாட்டுது, கனிகா, புவனா அத்தாச்சிக்கு தெரியல, அண்ணன் கிட்ட கேட்டா அவன் படிச்சுட்டு இருக்கான், உங்களுக்கு தெரியுமானு பாருங்க”என நீட்டினாள்.
அதை தமயா வாங்க, நளன் மெதுவாக எழுந்து பேப்பரை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.
“இது ஈஸியா சொல்லி தரேன் வா”என புரியும் விதத்தில் விளக்கினாள் தமயா.
“அய்யோ! சூப்பர் பெரியம்மா”என தமயாவின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் ஜோதி சட்டென்று.
நளன் நிமிர்ந்துப் பார்த்தான் இருவரையும்.
தமயா சிரித்தவாறு”ஏன் ஜோதி, நீ முத்தம் கொடுக்கும் அளவுக்கு இந்த சம் ரொம்ப படுத்திட்டா..?”என கேட்டாள்.
“ஆமா பெரியம்மா, நானும் எனக்கு தெரிஞ்சவரை ட்ரை பண்ணேன் வரவே இல்ல”
“ஜோதி! மொதல இந்த சேப்டர்ல உள்ள எல்லா ஃபார்முலாஸ்யும் மெம்மரிப் பண்ணு, அது தான் சம் அடுத்த ஸ்டெப் போக கீ, சரியா..?”
“ம்ம்ம்! ஓகே, நீங்க சூப்பரா சொல்லி தரீங்க, இனி எனக்கு கவலையே இல்ல ட்வெல்த் வரைக்கும். தேங்க்ஸ் பெரியம்மா”என மீண்டும் கொஞ்சியவள்,
நளனிடம்”பெரியப்பா! சூப்பர் பெரியம்மாவை தான் கல்யாணம் பண்ணி இருக்கீங்க, அதனால உங்களுக்கு ஒரு முத்தம்”என அவன் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு வெளியேறினாள்.
வயதிற்கு வந்த பெண்கள் அப்பாவிடம் அளவாக பழக வேண்டுமென்று சொல்லியே வளர்க்கப்படுறாங்க, ஆனால் நளனுக்கு ஜோதி அவனுக்கு பிறக்காத பெண், அவள் பிறந்ததில் இருந்து இவன் தான் அப்பா ஸ்தானம் அதனால நளனிடம் எந்த இடைவெளியும் கிடையாது அவளுக்கு.
“பாவம் ஜோதி, நீ இங்கயே இருக்கப் போறேனு நெனச்சுட்டுப் போறா.” என்றான் நளன்.
“ம்ம்ம்!”என்ற பதில் மட்டுமே வந்தது தமயாவிடம் இருந்து.
நளனுக்கு அவளின் ம்ம்ம்! வில் ஒரு ஏமாற்றம் வந்தது.
*****
இரவு சாப்பிட ஆரம்பித்தனர் தமயா, நதியா, தங்கம்.
மூவருக்குமே நைட் டியூட்டி தான் வந்தது சில நேரங்களில் மாறும்.
“என்னடி இது அதிசயமா இருக்கு, புருசனே பொண்டாட்டிக்கு புடிச்ச மாதிரி மாப்பிள்ளை பாக்க போறார..?”என கடுப்பாக கேட்டாள் நதியா.
“ம்ம்ம்!”
“நீ என்னடி சொன்ன..?”
“நானும் எப்பிடிப்பட்ட மாப்பிள்ளை வேணுமுனு, அம்மா வீட்டில் போய் யோசிச்சு சொல்றேனு சொன்னேன்..”
“ஹேய்! இது எல்லாம் நடக்குற சமூகத்திலா நம்ம இருக்கோம். ஏதோ அந்த மனுசன் ரொம்ப நல்லவரா இருக்காப்ல, என் மனசு அறிஞ்சு என்னோட உணர்வுகள் மதிச்சு கேக்குறாரு இதை எல்லாம். அதுக்காக இது எல்லாம் நடக்குமாடி..? மொதல தாலிப் பிரிச்சு கோர்ப்பதை நிறுத்தட்டும் அதுவே முடியாது, அப்புறம் எங்க எனக்கு புடிச்ச மாப்பிள்ளை பாத்து, அவங்க வீடு, என் வீடுனு பேசி எனக்கு இன்னொரு கல்யாணத்தை செய்றது, போங்கடி” என சலித்தாள்.
“தெரியுதுல, அவரு நல்லவருனு அவர் கூட சந்தோஷமா தான் வாழடி”என்றாள் நதியா.
“அவரு ரொம்ப தங்கமானவரு தான், அதுல சந்தேகமே இல்லடி, அந்த விதத்தில் என் மனசுல உயரத்தில் இருக்காரு ஆனா புருசனா என்னால பாக்க முடியலடி, நான் என்ன செய்ய..? என்னால முடியல, ஆனா அவரு ரொம்ப நல்லவரு”என்றாள் எங்கோ பார்த்தவாறு.
“அவரு வயசு தானே உனக்கு பிரச்சனை..?”என கேட்டாள் தங்கம்.
“சரிடி! நடந்துட்டு இனி இருக்க வாழ்க்கையை வாழலாமுல, உனக்கே தெரியுது அவரு நெனைக்குற மாதிரி வேற மாப்பிள்ளை எல்லாம் கதைக்கு ஆவுற காரியமில்லைனு அப்புறம் ஏன் இந்த விளையாட்டு, பேசாம அவரை ஏத்துக்க முயற்சி பண்ணலாமே” என்றாள் நதியா.
“எனக்கு அவரை புடிக்காம இல்லடி, கல்யாணத்தின் அன்னைக்கு இருந்த கோபம் இப்ப இல்ல அவர் மேல, ஒவ்வொரு நாளும் வித்தியாசமா தெரியுறார், அவரு குடும்பத்திடம் இருந்து என்னைய கோழிக்குஞ்சியை காப்பதுப் போல பாதுக்காக்குறார் ஆனா புருசனா என்னால ஒட்ட வைக்க முடியலடி”என கண் கலங்கினாள்.
“சரி விடு, எது நடக்குதோ நடக்கட்டும் அந்த கடவுள் தான் இனி உங்க வாழ்க்கைக்கு வழிப்படுத்தி வைக்கனும் இது மனசால வரனும் நாங்க கட்டாயப் படுத்த முடியாது, ஆனா ஒன்னு கையில் இருக்கும் பொக்கிஷமான புதையலை கை நழுவ விட்டுடாத மனக்குழப்பதால்!” என்றாள் தங்கம், கூடவே நதியாவும்.
****
புதன் கிழமை அன்று…
வரும் வெள்ளிக்கிழமை தாலிப்பிரித்து கோர்ப்பது.
நளனும் எப்பிடி நிறுத்தலாம் என யோசித்தான், ஆனால் வழி தென்படவில்லை.
அன்று இரவு…
“என்ன நிறுத்துறேனு சொன்னீங்க, ஒன்னும் நடக்கல”என்றாள் வேண்டுமென்றே, அவள் திடமாக நம்பினாள் அது முடியாதென்று.
‘நம்ம என்ன மாடர்ன் வாழ்க்கையா வாழ்ந்துட்டு இருக்கோம், புடிக்கலனு உடனே விலகிக்க, அதுவும் புருசனே மனசு வந்து பொண்டாட்டிக்கு கல்யாணம் பண்ணி வைப்பது, நடக்குறதா இது’ என வேடிக்கையாக எண்ணினாள்.
“ம்ம்ம்! நாளைக்கு ஒரு நாள் இருக்கே” என்றான் நளன் நம்பிக்கையாக.
“ஓ! பாப்போம் அதையும் என்ன செய்றீங்கனு”
இருவரும் தூங்க சென்றனர்.
வியாழன் காலை ஒரு அவசர செய்தியோடு தான் விடிந்தது.
தமயா அம்மாக்கு காலை வீட்டு வேலைப் போனப்போது சுமோ கார் இடித்து விபத்தாகி விட்டது என்ற செய்தி.
நளனும், தமயாவும் அவசரமாக புல்லட்டில் சென்றனர்.
முதன் முதலாக தமயா புல்லட்டில் செல்கிறாள் ஆனால் அது மனதில் பதியவில்லை, எண்ணம் எல்லாம் அம்மாக்கு என்னவாகிட்டு என்றே இருந்தது.
சொர்ணத்திற்கு நல்ல அடி தான், உயிருக்கு ஆபத்தில்லை, கால்கள் கட்டுப் போடப்பட்டிருந்தது.
நடக்கவே சில நாட்கள் ஆகும் என டாக்டர் கூறிவிட்டார்.
அவருக்கு ஆறுதல் கூறிக் கூடவே இருந்தாள் தமயா.
நளன் அவளை அங்கயே இருக்குமாறு சொல்லி, வீட்டிற்கு சென்றான்.
மதியத்திற்கு சாப்பாடு செய்துக் கொண்டு நளனும், சரசும், மரகமும். சாமியோடு லலிதாவும் வந்தனர் அவரை பார்க்க.
சொர்ணத்தை நலன் விசாரித்து சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
சரசு”அடியேய்! அவங்க என்ன வேணுனா போய் விழுந்தாங்க கார் மேல.. ஏதோ நேரம் சரியில்லை இத்தோட போனுச்சே”என்றார்.
“அதில்ல அத்த, நாளைக்கு எப்பிடி தாலிப் பிரிச்சு கோர்க்குறது” என்றாள் லலிதா.
“அத அப்புறம் பாத்துக்கலாம்” என்றார் சரசு.
“என்னம்மா சொல்ற.?”என கேட்டான் சாமி.
நளனும் ஆச்சிரியமாகப் பார்த்தான்.
“ஆமாட! நாளைக்கு விசேஷத்திற்கு வரவங்க இவங்களுக்கு இப்பிடி ஆகிட்டேனு தான் பேசுவாங்க, என் புள்ள கல்யாணம் பண்ண நேரமுனு சொல்லிட்டா அத எல்லாம் வேணாம், இவங்க சரியாகட்டும் பொறுமையா பண்ணலாமம் தாலிப் பிரிச்சு கோப்பதை. நம்ம காலத்துல ஆடி மாசம் வந்தா தான் தாலிப் பிரிச்சு கோக்குறது, இப்ப தானே அடுத்த நாள், அடுத்த வாரமேனு முடிக்குறோம், நீங்க சரியாகுங்க மொதல”என்றார் சரசு சொர்ணத்திடம்.
“நீங்க சொல்றதும் சரி தான், வரவங்க அபசகுணமா ஏதாவது சொல்லிடப்புடாது, நம்ம மெதுவாக வைப்போம்”
அனைவரும் பேசிக் கொண்டிருந்துட்டு கிளம்ப, சரசு”ஏம்மா பெரிய மருமகளே! நீ அம்மா கூடவே இரு, பத்து நாள் அங்க போய் தங்கிட்டு வா, பாவம் இதோட எப்பிடி உன் தம்பி, தங்கச்சி தனியா பாத்துப்பாங்க”என்றார்.
தமயா எதிர்ப்பாராதது வரிசையாக நடந்தது. கொஞ்சம் குழம்பி தான் போனாள். எப்பிடி இது நிறுத்த முடியாதுனு நினைத்தோம் தானாக நின்றுவிட்டது தாலிப்பிரித்து கோர்ப்பது, ஆனா நம்ம எவ்வளோ முயற்சித்தும் கல்யாணம் நடந்ததே அது எப்பிடி…?
நளன் நிறுத்த நினைத்தது தானாக நின்றதோடு அல்லாமல் தமயாவும் அம்மா வீட்டீற்குப் போகப் போகின்றாள்.
மற்றவர்கள் முன் நடக்க, நளன் மட்டும் வெளியில் நின்றான்.
அவள் வெளியில் வர, அவளின் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தான்.
“இதை செலவுக்கு வச்சுக்கோ, நான் அவங்கள விட்டுட்டு ராத்திரிக்கு வரேன்.” என்றான்.
“பரவாயில்ல நீங்க நாளைக்கு கூட வாங்க, அதான் நான் இருக்கேன் தம்பி இருக்கான் பாத்துக்குறோம்”
“ம்ம்ம்!”என விலகி சென்றவன், அவளிடம் திரும்பி”இங்கரே! பாத்தீயா..? நாளைக்கு நடக்கவிருந்தது தானா நின்னுட்டு. உன் ஆசைப்படி எல்லாம் நிறைவேறும்” என கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான்.
தமயாக்கு முதன் முறையாக ஏதோ ஒரு நெருடல் வந்தது, ‘அப்ப பிடித்த மாப்பிள்ளை சொன்னா பாத்துடுவார..? அதுவும் நடக்குமா..? ச்சே! ச்சே! அது நடக்க வாய்ப்பில்ல’ என மனதை தேற்றினாள்.
அவளுக்கு புரியவில்லை அது ஏன் நடக்க கூடாதென்று நினைகின்றாள், அப்பிடி நடக்க வாய்ப்பில்லைனு ஏன் சமாதானம் ஆகிறாள் என்று… திரும்பி அறைக்குள் நடந்தாள்.