“அம்மா! நாங்க போற வழியில் தமயாவோட அம்மாவை போய் பாத்துட்டுப் போறோம், இவரு பாக்கல வேற.”என்றார் மரகதம்.
“அதுவும் சரி தான், நம்ம வீட்டு மூத்த மாப்பிள்ளைல, போற வழியில் பாத்துட்டுப் போங்க மாப்பிள்ள, அப்புறம் நாளைக்கு பாக்கலனு ஒரு சொல்லா ஆகிடும்”என்று மருமகனிடம் நைஸ் பண்ணிப் பேசினார்.
“ஆ! சரி சரி, மாப்பிள்ள அந்த காருக்கு வாடகை இருந்தா சில்லரை கொடுத்துடு. என் கிட்ட சில்லரை இல்ல”
“என் கிட்ட இருக்கு எவ்ளோக்கு வேணும்…?”என தர்மன் வந்தான்.
“உன் கிட்ட இருந்தா நீயே வச்சுக்கோ” என கடுப்படித்தார் பாண்டி அவனிடம்.
“அதான் தம்பி இருக்கானே அவனோட போயிட்டு வாம்மா”என்றாள் மரகதம்.
காலையில் இருந்து நளனுக்கு தமயாவை எப்பிடி பார்ப்பது என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது.
ஹாஸ்பெட்டலும் போக மாட்டாள், அவளின் வீட்டிற்கு போக ஒரு மாதிரியாக இருந்தது, மாமியாரை பார்க்க என்றால் வித்தியாசமாக இருக்கும் என குழம்பிக் கொண்டு இருந்தான்.
சரசு கேட்கவும், மரகதம்’தம்பியோட போ’ என சொல்ல, மனம் குஷியானது.
ஆனால் சரசு”ஆத்தே! அவனுக்கு வேற வேலை இல்லையாடி, அதான் ஆஸ்பத்திரியில் போய் எல்லா ராத்திரிக்கு கெடந்தானே, இப்பவும் போனா ஊருல என்ன சொல்லுவாள்க, மாமியார் வீட்டுக்கு தோதாப் போயிட்டானு சொல்ல மாட்டாங்களா..? போதும் போதும் அவன் போனது, அவனுக்கு பல சோலி இருக்கும், நீ என்ன காருல தானே போற, நானும் வரேன், வரும் போது மெயின் ரோட்டுல பஸ் ஏத்தி விடுங்க, வந்துடுறேன்”என்றார் ஒரேடியாக.
குஷியில் மலர்ந்த நளனின் மனம் அப்பிடியே சுருங்கியது.
‘அம்மா இவ்ளோ சொல்லியும் தான் அங்கு போனா சரி வராது’என அமைதியானான்.
தமயா காலையில் இருந்து மனதில் எதிர்ப்பார்ப்போடு இருந்தாள், தொரை இன்று வருவானா.? என்று.
ஃபோனும் பண்ணவில்லை, இவளும் கூப்பிடவில்லை.
பத்து மணியை தாண்டியப்போது, கார் வந்து நின்றது வாசலில்.
மாமியார், நாத்தனார் குடும்பம் வர, அவர்களை வரவேற்று அமர வைத்தவள், டீ போட்டுக் கொடுத்தாள்.
ஜோதி, சங்கர் பத்தி விசாரித்தாள் தமயா .
அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர். “மாப்பிள்ள தான் பாவம் சம்பந்தி, கஷ்டத்தைக் கொடுத்துட்டோம்”என பரிவாகப் பேசினார் சொர்ணம்.
“அதுக்கென்ன அவன் கடமையை செஞ்சான். பாவம் வேலையை விட்டு ஆஸ்பத்திரினு அலைஞ்சதால வேலை எல்லாம் அப்பிடியே கெடந்துட்டுப் போல,அதான் நான் செத்த போயிட்டு வரலாமுனு கூப்புட்டதும் வேலை இருக்கும்மா நீ அக்கா கூட போயிட்டு பஸ்ல வானு சொல்லிட்டான்”என்றார் மகனை கெத்தாக கூற எண்ணி, அவனுக்கு ஆப்பு அடித்தவாறு.
தமயா மனதில்’ஓ! அப்ப என் நெனப்பே இல்ல போல தொரைக்கு, இருந்திருந்தா தான் அத்தையை அழைச்சுட்டு வர சாக்கில் வந்து இருப்பாரே பாக்க, நீ தான் ஏங்கிட்டு இருக்கடி, அவரு எனக்கென்னனு இருக்கார் போல வந்தா வரட்டுமுனு’என கோபமாக தொரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினாள்.
“ஏம்மா மருமகளே! எப்ப வீட்டுக்கு வரப் போற.?”
“அம்மாக்கு கொஞ்சம் சரியானதும் வந்துடுறேன் அத்த”என்றாள் இப்ப வரப்போறதில்லைனு நேராக சொல்லாமல்.
“சரி! சரி! பாத்துக் கேட்டுட்டு வா, அங்க தான் ஒருத்தி இருக்காளே, பாத்துப்பா என்ன என் புள்ளைக்கு தான் ராத்திரிக்கு சாப்பாடு போட நேரமாகிடும். நீ இருந்தா பாத்துப்பனு நானும் செத்த கண்ணை மூடுவேன் வெள்ளனமே, இருக்கட்டும் நீ வர வரை பாத்துக்குறேன்”என மாமியார் இழுத்து முழக்கினார்.
‘ஆமா! நான் கண்ணு முழிச்சு சோறுப் போட மட்டும் தானே வேணும். போங்க உங்க புள்ளைக்கு நீங்களே போடுங்க’ என நினைத்து முகத்தை சுளித்தாள்.
அவர்கள் கிளம்பினர்.
***
தமயாக்கு ஒரு பக்கம் அழுகை வந்தது, மறுப்பக்கம் ‘அவர் உன்னிடம் வந்து கொஞ்சி கொணான்டியா பேசுனாருடி, நீயா புடிக்கலனு சொன்ன, இப்ப புடிக்குதுனு சொல்ற, அவரு வேலையை அவரு பாக்குறாரு, நீ இருந்தாலும், இல்லைனாலும் ஒன்னு தான் போல விடு’என தன்னை தேற்றினாள்.
மதியம் ஆக, தமயா ஃபோன் அடித்தது.
நளன் தான், அவனின் நம்பர் இரவில் இருந்து தொரை என்ற பெயரில் பதிவாகிருந்தது.
‘இவரு ஏன் கூப்புடுறாரு..?’என ஃபோனை அட்டென்ட் செய்தாள்.
“நான் தான் பேசுறேன்”
“சொல்லுங்க!”
“சபரியை சாயங்காலம் வர சொல்றீயா..?”
“ஆ!”
“சரி! வேற எதுவுமில்லையே வைக்கவா.”
அவளிடம் பதிலில்லை.
“இங்கரே!
“ம்ம்ம்!”
“என்ன பதிலை காணும்”
“என்ன பதில் சொல்லனும்”
“வேற எதுவும் இல்லையே, எதுவும் அவன் கிட்ட வாங்கி குடுத்துடுவா..?”
“ஒன்னும் வேணாம்!”என்றாள் கடுப்பாக.
“ம்ம்ம்! சரி, நான் வைக்குறேன்”என ஃபோனை வைத்தவன்,
‘எதுக்கு இப்பிடி பேசுறா.? சரி, எப்ப தான் நல்லா பேசி இருக்கா’என தனக்குள்ளே சிரித்தான்.
அவளை பார்க்க தோன்றினாலும், ‘அங்கு போனால் அம்மாக்கு தெரிய வந்துவிடும், அப்புறம் ஏதாவது பேசிடும், வேணாம்’என அமைதியானான்.
சபரி கட்டில் ஏற்றிக்கொண்டு வந்தான்.
அதனோடு நிறைய பழங்கள் நிறைந்த பையும் இருந்தது.
“இது ஏதுடா..?”என கேட்டாள் தமயா..
“மாமா தான் வாங்கி கொடுத்தார்”
“ம்ம்ம்!”என பெருமைப்பட்டாலும், அவன் தன்னை பார்க்காமல் வேலை முக்கியமுனு போயிவிட்டான் என்ற கோபம் இருந்தது.
மூன்று தினங்கள் சென்றது, தினமும் நளன் ஃபோன் பேசினான், ஏதாவது வேண்டுமா என கேட்பான் அவன்,அவளோ வேண்டாமென்று சொல்லிவிட்டு வைத்துவிடுவாள்.
அந்த சாக்கில் தான் நன்றாக இருக்கியா என்று ஒரு வார்த்தைக் கேட்பான்.
அன்று நளன் வீட்டில் இல்லை, ஓட்டு லிஸ்ட் எடுக்க வந்திருந்தார்கள், புது ஓட்டு இருந்தாலும் இணைக்கலாம்.
சரசு புது மருமகளைப் பத்தி சொல்ல, அவங்க ஆதாரும், கையெழுத்தும் வேணும் என கூறினார்கள்.
“மருமக அம்மா வீட்டுல இருக்கு தம்பி பக்கத்து அருகன்காடு பக்கம் தான்பா, மறுபடியும் எப்ப வருவீங்க..?”
“அதுக்கு என்னம்மா, முகாம் போடுவொம் அப்ப வரசொல்லுங்க” என்றான் அந்த பையன்.
சரியாக அந்த நேரத்தில் தமயா சபரியோடு பக்கத்து வீட்டுப் பைக்கில் வந்து இறங்கினாள், கையில் பை எதுவுமில்லாமல்.
“ராசாத்தி! நூறு வயசு, உனக்கு இங்க ஓட்டுப் போட சேர்க்க தான் பேசிட்டு இருந்தேன், இதான் மருமகப்பா”என்றார் அவர்.
“இல்லத்த! ஒரு சர்ட்பிகேட் வேணும் அது இங்க இருக்கு எடுக்க வந்தேன். என்ன தேவைப்படுது”என அந்த பையனிடம் கேட்டு, ஆதார் நம்பரை மட்டும் தன் ஃபோனில் இருந்ததை கொடுத்து விட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள்.
அவன் கிளம்பிவிடவும், “சரித்த! நான் ரூமுக்கு போயிட்டு வரேன், சபரி இங்க உட்காரு” என்றாள்.
டேபிளில் பூ இருந்தது, சரசு”ஏம்மா! இந்த பூவ எடுத்து தலையில் வச்சுக்க, வீட்டுல உன் ஓப்பாடியார் இல்ல, அவ அப்பா வீட்டு விசேஷத்துக்கு போய் இருக்கா, புள்ளைங்க பள்ளிக்கூடம் போச்சுங்க” என்றார்.
“ம்ம்ம்!”என அந்த மல்லிகைப் பூவை எடுத்துக் கொண்டு, தன் அறைக்கு சென்றாள்.
தொரை வீட்டில் இல்லைனு தெரியும் புல்லட் இல்லாததால்.
அறைக்குள் சென்றவளுக்கு தொரை நினைவு வந்தது.
அவனின் சட்டை ஹேங்கரில் தொங்கியது, கையில் இருந்த பூவோடு அதை தொட்டுப் பார்த்தாள்.
‘என் நெனப்பே இல்லையா உங்களுக்கு?’ என வருத்தமாகப் பார்த்தாள் அவன் சட்டையை அவனாக எண்ணியவாறு.
பிறகு திரும்பி தன் பையில் இருந்த பேப்பரை எடுத்தவள், அதை டேபிளில் வைத்து விட்டு, கையில் இருந்த பூவை கண்ணாடி முன் நின்று தலையில் வைத்தாள்.
தலைமுடிற்குள் சொருகும் போது பூ உதிரி கீழே விழுந்தது.
கட்டிலில் சிறிது நேரம் அமர்ந்தவள், டேபிளில் இருந்த நோட்டைப் பார்த்தாள்.
எழுந்து அதை திறந்தவளுக்கு அவள் கடைசியில் எழுதியது மட்டுமே தெரிந்தது.
பேனாவை எடுத்தாள்..
“என் நினைவில்லை
என் உணர்வில்லை
என் வாசமில்லை
என் பெயரில்லை
தொரை மனதில் ..?”
என எழுதினாள், அடுத்தப் பக்கத்தை திருப்பி..
மூடி வைத்துவிட்டு, அறை கதவை சாற்றிவிட்டு சென்றாள்.
***
இரவு நேரம் கழித்தே வந்த நளன் தன் அறைக்குள் சென்றான்.
மூடியக் கதவை யோசனையோடு திறந்தான்.
உள்ளே நுழைந்த மறுநொடியே தமயாவின் வாசத்தை உணர்ந்தான் அவளின் தொரை.
மல்லிகைப் பூ வாசம் கலந்த ஏதோ ஒரு உணர்வு தமயா வந்து சென்ற நினைவு அவனை ஏனோ தாக்கியது.
ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியாய் பால்கனி, பாத்ரூம் என தேடினான்.
அவசரமாக கீழே ஓடினான், அங்கு சரசு சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
தயங்கியவனை பார்த்த சரசு”என்னப்பா உடுப்பை மாத்தலையா..?”
“மாத்தனும், எங்க யாரையும் காணும்..?”
“எல்லாம் தூங்கப் போயிட்டாங்க, நான் தான் உனக்காக காத்திருந்தேன், உட்காரு!”
அவனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
“சொல்ல மறந்துட்டேன் நளனா, பெரிய மருமக ஏதோ பேப்பர் எடுக்க வந்தாப்பா அவ தம்பியோட”
“ஓ!”என்றான் உள்ளுக்குள் விடைக் கிடைத்த மகிழ்ச்சியில், அதன் பின் அவர் சொன்ன வாக்காளர் சேர்ப்பு எல்லாம் காதில் விழவில்லை.
அறைக்கு வந்தவன் ஃபோனை எடுத்து உடனே அழைத்தான் அவளுக்கு.
“சொல்லுங்க!”
“வீட்டுக்கு வந்தீயா..? அம்மா சொன்னுச்சு”
“ஆமா!”
“என்ன பேப்பர் எடுக்க வந்த..?”என கேட்டான் அவளிடம் அடுத்து என்ன பேசுவதென்ற எண்ணத்தில்.
“பின்ன அதானே பண்ற..? எப்ப பாரு பேசினா எறிஞ்சு விழுற மாதிரி பதில் பேசுற, எப்ப நீ நல்லா பேசி இருக்க.”
“ஆமா! நான் தான் எறிஞ்சு விழுறேன், நல்லா பேசலைல, எதுக்கு என் கிட்ட பேசுறீங்க…? இனிமே என் கிட்ட பேசாதீங்க, ஃபோனை வைங்க”என கட் பண்ணினாள்.
நளனுக்கு முதன் முறையாக தமயா பேசியதில் கோபம் வந்தது.
மறுபடியும் அவளுக்கு அழைக்க, சமாதானம் செய்ய கூப்பிடுகின்றான் என நினைத்து ஃபோனை எடுத்தாள்.
“இங்கரே! உனக்கு என்னைய புடிக்கலை அது தெரிஞ்ச கதை தான், இனி நீ இங்க வர வேணாம், அங்கயே இரு, நான் அடுத்து என்ன செய்றதுனு பாத்துக்குறேன்”என ஃபோனை வைத்தான் கோபத்தில்.
தமயாக்கு அழுகை, கோபம், ஏக்கம் எல்லாம் மாறி மாறி வந்தது. நளனுக்கு ‘தான் ஏன் கல்யாணம் பண்ணினோம், தனக்கு எதற்கு இந்த மனநிலை என வருந்தினான்.தமயாவை நினைத்து ஏங்கி, என்னைய இவள் புரிஞ்சுக்கவே இல்லையே’ என வேதனைப்பட்டான்.
அந்த நோட்டைப் பார்க்கவே இல்லை பார்த்திருந்தால் ஓரளவு விளங்கியிருக்கும்.