தமயாவை திட்டிய பிறகு ஃபோனை வைத்தவன் மனம் ‘தான் ஏன் அவளை இப்பிடி திட்டினோம்’ என நினைக்க செய்தது.
நொடியில் கோபம் வந்து திட்டினாலும் இப்ப அதை நினைத்து நொந்தான்.
இன்னுமே தமயாவின் வாசம் அந்த அறையை சுற்றி அவனின் மனதைக் கொன்றது.
அவனால் தாங்க முடியவில்லை, இது என்ன உணர்வு என தடுமாறினான்.
அவளின் உருவம் ஆங்காங்கே தெரிந்தது போல் இருந்தது அவன் விழிகளுக்கு.
‘இல்ல! இல்ல! அவளுக்கு என்னைய சுத்தமா புடிக்கல அப்பிடியிருக்கும் போது அவளை நான் நெனச்சா அது தப்பு, அவளும் கெட்ட குணம் படைச்சவ இல்ல, குடும்பத்துக்காக எல்லாத்தையும் தாங்குறவ என்னைய மாதிரி, ஏதோ என்னைய புடிக்கல, அதனால என் மேல கோபத்த காட்டுறா, போகட்டும் இப்ப என்ன நான் கொறஞ்சுப் போயிட்டேன்’ என தனக்குள்ளே மருகிப் புலம்பியவன், படுக்கையில் விழுந்தான்.
படுக்கையில் விழுந்தவன் தலை தன்னை மீறி பக்கவாட்டில் திரும்பியது.
அங்கு தமயா அதே கோபமான முகத்தோடு படுத்திருந்தாள்.
“என்னைக்கு சிரிச்சா இதுல நெனக்கும் போது சிரிச்சுட்டு தெரிய”என வாய் விட்டே கூறி கண்களை மூடினான்.
இதுவரை நளனின் இந்த மாதிரியான பேச்சினை கேட்காத தமயாவிற்கு இது புதுவிதமான நளனாக தெரிந்தான்.
‘என்னைய அங்க வர வேண்டாமுனு சொல்லிட்டாரே, என்ன செய்ய போறார்..? அய்யோ கடவுளே! எதாவது தப்பா செஞ்சுட்டா..? இல்ல’என தனக்குள்ளே பயந்து புலம்பினாள்.
‘அய்யோ! தப்பு பண்ணிட்ட தமயா, அவரு என்ன நெனச்சா என்னனு நீ உன் மனசுல இருப்பதை சொல்லி இருக்கலாம், அவருக்கு என்னைய புடிக்குதோ இல்லையோ, என்ன பத்தி நெனைக்கலனாலும் பரவாயில்லைனு நீ சொல்லி இருக்கலாம்டி’என தனியாக படுத்திருந்தவள் தலையில் அடித்து அழுதாள் சத்தம் இல்லாமல்.
‘அவரு கேட்டதும் நியாயம் தானே நீ அவரு கிட்ட எறிஞ்சு கோபமான தானே அதிகம் பேசி இருக்க, அவரு உன்னைய புடிக்குதுனு சொன்னதில்லை அதே மாதிரி புடிக்கலைனு இதுவரை சொல்லலையேடி, நீ தானே போன மொத நாளே புடிக்கலைனு சொன்ன. அத எப்பிடி சொன்னீயோ அதே மாதிரி புடிச்சு இருக்குனு சொல்லி இருக்க வேண்டியது தானே பைத்தியம்.’என தன் தவறை வரிசைபடுத்தி அடித்துக் கொண்டு அழுதாள், ஆனால் சத்தம் கொஞ்சமும் தாய், தம்பி, தங்கைக்கு கேட்டு விடக் கூடாதென்று.
அதை கொஞ்சமும் அலட்சியம் செய்யாமல் உடனே ஃபோன் செய்தாள் தமயா, ஆனால் நளன் ஃபோனை தூக்கிப் போட்டு அதை சார்ஜரில் கூட மாட்டுவதற்கு மறந்திருந்தான்.
மனம் நொந்து ஃபோனை தூக்கிப் போட்டவளுக்கு, ‘எப்போது பொழுது விடியும், புருசனை தேடிப் போவோம்’என்றிருந்தது.
****
பொழுது விடிந்ததும் நளன் மனம் ஆறவே இல்லை, தூங்கினாலும் தமயாவை திட்டியதை நினைக்க மறக்கவில்லை, பக்கவாட்டில் திரும்ப, தமயா கண்கள் மூடித் தூங்கி கொண்டு இருந்தாள்.
ஒரு நொடி அதிர்ந்து எழுந்தவன், மறுபடியும் பார்க்க அவளில்லை அங்கு.
அதற்கு மேல் பொறுக்க முடியாமல் விடியற்காலையிலே கிளம்பி விட்டான்.
ஃபோனை கையில் எடுத்தவன் அது செத்துப் போய் கிடக்க, சரி என்று அதை சார்ஜரில் மாட்டி விட்டு கீழிறங்கினான்.
சங்கர் புத்தகத்தை வைத்துக்கொண்டு சாலையை வேடிக்கைப் பார்க்க, “என்னடா படிக்காம என்ன வேடிக்கை.?”
“படிச்சுட்டு தான் இருக்கேன் பெரியப்பா!”என தலையை கவிழ்த்தான்.
சரசு வாசலில் அமர்ந்திருக்க”என்னப்பா! இவ்ளோ வெள்ளனே வெளியில் கெளம்பிட்ட..?”
“ஆமாம்மா! ஒரு புது வீட்டுக்கு நாளைக்கு பால் காய்ச்சனுமாம், அதுக்கு எலக்ட்ரிக்கல் சாமான் அனுப்பி விட்டேன், ஆனா அவனுங்க லேட் பண்றாங்க, அதான் நானே போய் பாத்துக் கொடுத்துட்டு வரலாமுனு, வர முன்ன பின்ன ஆகும் நைட், நீ படுத்துடு”என புல்லட்டை கிளப்பினான்.
நளன் கடை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை என்றாலும், எலக்ட்ரிக்கல் வயரிங் அனுபவம் இருப்பதால் வீடுகளுக்கு கான்ட்ராக்ட் எடுத்து ஆட்கள் வைத்து கரண்ட் வேலை பார்க்கின்றான். பொருட்களும் மொத்த கான்ட்ராக்டில் விற்பனை செய்வான், அதனால் அவனுக்கு டபுள் லாபம் தான்.
அவனுக்கு இருந்த மனநிலையில் கிளம்பினால் போதும் என்று சென்று விட்டான்.
***
காலையில் எழுந்ததும் எட்டு மணிக்கு எல்லாம் சமைத்து வைத்து விட்டு, அம்மா கிட்ட சொல்லிக் கொண்டு கிளம்பினாள் தமயா.
“அம்மா தலைப்பின்னல் போடுங்க”என ஜோதி அழைக்க, தமயா”இரு நான் வரேன்”என அவளே சென்று தலைப் பின்னல் போட்டு விட்டாள்.
தமயாவிற்கு அந்த வீட்டிற்கு வரும்வரை இருந்த பயந்த மனநிலை மாறி, கொஞ்சம் சந்தோஷமான மனநிலை வந்திருந்தது.
ஏதோ தன் கூட்டிற்கு வந்த பறவையின் உணர்வு.
தன் வீடு, தன் இருப்பிடமென்ற உரிமையான உணர்வுகள் அவள் மனதை பற்றியது.
பிறகு தன் அறைக்குள் சென்றாள் பையோடு.
அங்கு சென்றதும் மறுபடியும் நளன் நினைவு வர பயம் வந்தது. எப்பிடி அவர் முகத்தைப் பார்ப்பது, ‘ஏன் வந்தனு திட்டுவாரே’என மனம் அலறியது.
நளனின் ஃபோன் சார்ஜரில் கிடந்தது, அதை கண்டவளுக்கு’ஓ! ஃபோன் எடுத்துட்டு போகலையா தொரை.?’
மதியத்திற்கு அவளே சென்று சமைத்தாள், லலிதா அவளை கண்டதும் நைஸாக விலகினாள்.
தமயா அவளை எதிர்ப்பாராமல் சமையலை முடித்து, தானும் சாப்பிட்டு அறைக்குள் சென்றாள்.
கட்டிலில் அமர்ந்தவளுக்கு தூக்கம் வர, அப்பிடியே அதில் படுத்தாள், இன்று தான் முதன் முறை கட்டிலில் தலை சாய்த்திருக்காள்.
ஏனோ மனதில் நளன் வந்தான், தலையணையை எடுத்து அணைத்தவளுக்கு நளனின் முகம் வர பயம் தான் வந்தது, அய்யோ! எப்பிடி சமாளிப்பேன் என்று.
இரவு ஜோதியோடு பொழுதைப் போக்கினாள்.
லலிதா அடுப்படியில் நிற்க, நானே தோசை ஊற்றுகிறேன் என்று தமயாவே அனைவருக்கும் ஊற்றிக் கொடுத்தாள்.
லலிதா அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு’ஒரு மார்க்கமா தான் இருக்கா’என எண்ணி, “என்ன தமயா அம்மா வீட்டுக்குப் போயிட்டு வந்ததில் இருந்து, ஒரே குஷியா இருக்கப் போல”என்றாள் நக்கலாக.
“அம்மா வீடு யாருக்கு தான் புடிக்காதுக்கா”
“அது தெரியுது, ஆனா அங்க இருந்து வந்தா, ஏன்டா இங்க வந்தோமுனு இருக்கும் ஆனா நீ அப்பிடியில்லையே.?”
தமயாவிற்கு என்ன பதில் சொல்றதென்று தெரியவில்லை, தொரையை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றா?இல்ல தொரை கோபத்தில் பயந்து வந்தேன் என்றா? இல்ல ஒரேதாக அந்த வீட்டில் இருக்க மாதிரி நிலை வந்துவிடக் கூடாதென்றா?
“நான் எப்பையும் போல தான்கா இருக்கேன், உங்களுக்கு வித்தியாசமா இருக்கு”என்று மழுப்பினாள்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க, சரசு”ஏப்புள்ள! நளனா வர நேரமாகுனு சொல்லிட்டுப் போனான், நீ சாப்புட்டு போய் படு”என்றார்.
“ம்ம்ம்!”என ஒரு தோசையை கஷ்டப்பட்டு முழுங்கினாள், நேரம் ஆக அவனை சந்திக்கப்போகும் பயத்தில்.
அறைக்குள் வந்து படுத்தவள், இரவு விளக்கை மட்டும் போட்டுக் கொண்டாள்.
தூக்கம் எப்பிடி வரும், பாயில் திரும்பி திரும்பி படுத்தாள்.
‘அய்யோ! தொரை வந்து ஏன் வந்தேனு கேக்கப் போறாரே..?’என பயந்து என்ன பதில் சொல்றதுனு புலம்பினாள்.
‘ஏன்டி! பயந்துப் புலம்புற..? உங்களை புடிச்சு இருக்கு அதான் வந்தேன், இது என் வீடு நான் வருவேனு, நெத்தியடியா சொல்லுடி’என்றது மனம்.
‘ஆமா தானே, நான் ஏன் பயப்புடனும்..? அவரு என் புருசன், இது என் வீடு, இவரு வராதனு சொன்னா வராம இருக்கனுமா..?’ என முறுக்கினாள்.
ஆனால் சற்று நேரத்தில் புல்லட் சத்தம் கேட்டு, கீழே ஆள் அரவம் கேட்க, அவ்ளோ நேரம் வீராப்பு பேசின மனம் பயத்தில் உருண்டது.
தமயா தனியாக படுப்பதால் அறை கதவை திறந்து தான் வைத்திருந்தாள்.
அதனால் புல்லட் சத்தத்தில் நளன் வருவது கேட்டது.
நளன் மாடிக்கு வரும் வரை முழித்திருந்தவள், அறைக்குள் நுழையும் போது கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.
அறைக்குள் நுழைந்தவன் லைட் ஸ்விட்சை போடப் போக, அருகில் இருந்த இரவு விளக்கு போட்டு இருந்ததை கவனித்தவன், ‘காலையில் ஆப் பண்ணாம போயிட்டமோ’என எண்ணி அப்பிடியே சென்று உடை மாற்றினான்.
தமயா இருப்பது போன்ற உணர்வு வர,’ஆமா! சும்மாவே கோபக்காரி, நான் வேற அங்கயே இரு இனி இங்க வராதுனு சொல்லிட்டேன், அவ எப்பிடி வருவா.? எல்லாம் என் நெனப்பு போல’ என எண்ணி பாயை எடுத்துப் போட்டு படுத்தான்.
இரவு விளக்கு எரிய, மனம் தமயாவை நினைக்க பக்கவாட்டில் திரும்பினான்.
தமயா படுத்திருப்பது தெரிந்தது.
‘தினமும் இது வேற நெனப்பு’என திரும்பி கண்களை மூடினான்.
தமயாக்கு மனதில்’நம்மளை இன்னும் பாக்கல!’என நினைத்து கண்களை திறக்காமல் படுத்திருந்தாள்.
சிறிது நேரம் ஆக, நளன் தமயா பக்கம் திரும்பி படுத்தான்.
எதேச்சையாக பார்க்க, தமயா தெரிந்தாள், கண்களை மூடியவன் மறுபடியும் திறக்க, அவனையே பார்த்த தமயா மீண்டும் தெரிய, வேகமாக எழுந்து லைட்டைப் போட்டான்.
தமயாவிற்கு அவன் லைட்டை ஆன் செய்ய போவது தெரியவும் கண்களை மூடிக்கொண்டாள்.
‘அய்யோ! கடவுளே காப்பாத்து’என வேண்டிக்கொண்டு.
நளனுக்கு புரியவில்லை, இவ எப்ப வந்தா?
“இங்கரே!”என அழைத்தான் நின்ற இடத்திலே நின்று.
தமயா கண்களை திறந்தாள்.
“நீ எப்ப வந்த..?”
தமயா மனதில்’ஹப்பாடா! நல்ல வேளை ஏன் வந்தனு கேக்கல..’என முகம் தெளிவாக எழுந்தமர்ந்தாள்.
“காலையில் தான்”என்றாள் மெல்ல.
“ஓ!”என மூச்சை இழுத்து விட்டவன்,
“அம்மா நல்லா இருக்காங்களா…?”
“ம்ம்ம்!”
“சாப்பிட்டீயா..?”
“ம்ம்ம்!”
“நான் இன்னும் சாப்புடல, போய் தோசை ஊத்தி தா”என்றான் உரிமையாக.
தமயாக்கு மனம் மகிழ, சட்டென்று”ஆ! வாங்க ஊத்தி தரேன்”என எழுந்து புடவையை சரிப்பண்ணிட்டு அவனை கடந்து சென்றாள்.
அவனை கடந்து அறையை தாண்டவில்லை அவள், “நீ நோட்டுல எழுதியதை படிச்சேன், நினைவு, உணர்வு, வாசம் எல்லாம் இல்லாம இல்ல, ஆனா பேரு சொல்ல தான் உரிமை இதுவரை கெடைக்கல.” என்றான் மெல்ல அவள் முதுகைப் பார்த்தவாறு.
அவனுக்கு முதுகுக் காட்டி நின்ற தமயாவிற்கு அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடிமனதை தட்டி எழுப்பி நிலைக்கொள்ளாமல் நிற்க செய்தது.
கண்கள் குளமாகியது, மூச்சு விடவே முடியாதளவு அவளுக்கு ஒரு உணர்வு.
அவன் முடிக்கவும் அப்பிடியே நின்றவள் நொடியில் திரும்பி, சற்றும் யோசிக்கவில்லை, வேகமாக வந்து தொரையின் மார்பில் சாய்ந்து, அவன் முதுகோடு கைகோர்த்துக் கட்டிப் பிடித்தாள்.
கண்களில் நீர் வழிய, அது அவன் மார்பினை நனைத்தது.
அப்பிடியே நின்றவனுக்கு நிதானம் வர மெல்ல, அவளின் முதுகை ஒரு கையால் அணைத்தான்.
மறு கையால் அவளின் தலைமுடிகளை நகர்த்தி, “இப்ப எதுக்கு அழுதுட்டு நிக்குற தமயந்தி…?”என்றான் மெல்ல அவள் பெயரை உச்சரித்து.
நளன் காலையில் செல்லும் போது புல்லட்டை ஆன் செய்ததும் தான் அவனின் கடை கணக்கு நோட்டு நினைவுக்கு வந்தது, சங்கரிடம் அதை எடுத்து வருமாறு சொன்னான்.
சங்கர் நோட்டை மாற்றி எடுத்து வரவும், அதை கவனிக்காமல் வாங்கிக் கொண்டு போன நளன் மாலை ஆட்களுக்கு கணக்குப் பார்க்க எடுத்தப் போது தான் நோட்டு மாறியது தெரிந்தது.
அதன் பிறகு அதை திருப்பியவனுக்கு தமயா எழுதியது முதலில் புரியவில்லை, ஆனால் வரிசையாக நினைவுப்படுத்த ‘அம்மா வீட்டுக்கு போக டிரஸ் பை கொடுத்தது முதல் அவனுக்கு வித்தியாசம் தெரிந்தது, எப்பிடிப்பட்ட மாப்பிள்ளை என அவள் கூறியது தன்னை குத்திக்காட்டி’என புரிந்தது அவனுக்கு.
அனைத்தும் விளங்கவும் அவனுக்கு மகிழ்ச்சி பொறுக்கவில்லை, ஆனால் நேற்று, தான் திட்டியதை நினைத்து வருந்தியவன், இரவு நேரமானதால் காலையில் போய் அவளை அழைத்து வரலாம் என தான் வீட்டிற்கு வந்தது.
ஆனால் தமயா வீட்டில் இருப்பாள் என்று நினைக்கவில்லை நளன்..