“இதுல என்னக்கா இருக்கு, ஜோதி நீ போய் கெளம்பு, பெரியப்பா வண்டியை வெளியில் எடுக்கட்டும், டிரஸ் மாத்துறது தானே”
ஜோதி தன் தாயைப் பார்க்க, நளன் “அங்க என்ன பாக்குற, போய் கெளம்பி வா”என வெளியில் சென்றான்.
சரசு”பத்தரமா போயிட்டு வாங்க” என்றார் பெரியவராக.
ஜோதி வர, நளன் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.
“நீ ஏறி ரெண்டுப் பக்கமும் கால் போட்டு உட்காரு ஜோதி”என்றாள் தமயா.
ஜோதி அமர்ந்ததும், தமயா பின்னால் அமர்ந்தாள்.
பதினைந்து நிமிடங்கள் ஆகும் அவர்கள் செல்லும் அம்மன் கோயில்.
கோயில் வர, மூவரும் இறங்கி நடந்தனர்.
வெளியில் அர்ச்சனை செய்வதற்கு சாமான்கள் வாங்கிக் கொண்டு, தமயா பூ இருவருக்கும் சேர்த்து வாங்கி, பிரித்து ஜோதிக்கும் வைத்து விட்டு, தானும் வைத்துக் கொண்டாள்.
அது கிராம பக்கம் இருக்கும் கோயில் என்பதால் பெரிதாக கூட்டம் இல்லை, ஆனால் ஆங்காங்கே அமர்ந்தும், நடந்துக் கொண்டும் இருந்தனர்.
மூவரும் சென்று அர்ச்சனை செய்வதற்கு கொடுத்தனர், “உங்க நடசத்திரம் என்ன..?”என்றார் அர்ச்சகர்.
நளன் மனைவியிடம் கூறினான். ஜோதியுதும் கேட்டு, அவளோடதும் மூன்றையுமே சேர்த்துக் கூறினாள் தமயா.
அர்ச்சகருக்கு நளனை நன்கு தெரிந்தமையால், அவனுக்கு தனியாக மாலை வைத்துக் கொடுத்தார் அர்ச்சனை முடிந்ததும்.
மூவரும் கோவிலைச் சுற்றி வந்தனர்.
அங்கு நளனுக்கு தெரிந்தவர்கள் மூன்றுப் பேர் நின்றனர்.
“வாங்க மணவாளன்! கோயில் பக்கம் வந்து இருக்கீங்க”என தமயாவை பார்த்து தலை அசைத்தார்.
“வரவேண்டி இருந்தா வரனும் தானே, நீங்க எல்லாம் ஒன்னா நிக்குறீங்க..?” என்றான் நளன்.
“கோயில் அறக்கட்டளை கூட்டம் தொடர்பா பேச வந்தோம்”
தமயாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு இருக்க அவள் புதிதாக மணமானவள் என சொல்லாமல் புரியும்.
“வாங்கம்மா!”என்றார் அவர் தமயாவை, அவளை”மணவாளன் மனைவி”என மற்றவருக்கு அறிமுகப்படுத்தியவாறு.
“இது யாரு..?”என ஜோதியை கேட்டார் மற்றொருவர்.
“என் தம்பி பொண்ணு தான், பத்தாவது படிக்குது”
“ஓ! சரி சரி, நீங்க பாருங்க, நாங்க கிளம்புறோம்”என அந்த மூன்று ஆண்களும் நகர்ந்தனர்.
தமயா”வாங்க கொஞ்சம் நேரம் போய் உட்காந்துட்டு போகலாம்”என்றாள்.
ஜோதி”ஏய்! நிஷா”என தன் தோழியை அழைக்க, அவளும் திரும்பினாள்.
“பெரியம்மா! நீங்க போய் உட்காருங்க, என் ப்ரண்ட் நிக்குறா பாத்துட்டு வரேன்” என ஓடினாள்.
“சரி வா! நீ போய் அங்க உட்காரு, நான் வெளியில் போய் நிக்குறேன்”
“ஏன் தொரை உட்கார மாட்டிங்களா..?”
“இங்கரே! வேஷ்டி கட்டி இருக்கேன், இங்க உட்கார முடியாதுனு சொன்னேன்”
“கோயிலுக்கு வந்தா உட்காரனும், வாங்க வேஷ்டி அழுக்கான துவைச்சுடலாம்”என நல்ல இடமாக பார்த்து சுவர் பக்கமாக சென்றாள்.
நளனும் அவளோடு சென்று அருகில் அமர்ந்தான்..
“வர வர டீச்சர் ஒரே ஆர்டர் தான் போடுறீங்க”என சிரித்தான்.
“ம்ம்ம்! அப்பிடி ஆர்டரா சொன்னா தானே புரியுது தொரைக்கு”என லேசாக அவளும் சிரித்தாள்.
அவர்கள் அமர்ந்திருந்த சுவரில் வெளியில் இருந்து ஒரு மரம் இடையில் வர, அதற்காக வழிக் கொடுத்து காம்பவுண்ட் போடப்பட்டிருந்தது.
இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க, அவர்களிடம் பேசிவிட்டு சென்ற மூவரும் வெளியில் நின்று பேசியது அவர்கள் காதில் விழுந்தது.
அந்த பக்கம் என்றாலும் துளை இருந்ததால் அது தெளிவாக கேட்டது.
“மணவாளன் எப்ப கல்யாணம் பண்ணார், தெரியவே இல்ல.?”
“இப்ப கொஞ்ச நாள் முன்னாடி தான், நம்ம அருகன்காடு பக்கம் தான், பொண்ணு வீடு வசதி குறைவு தான், இருக்க கட்டுமனை மட்டும் தான், அப்பா இல்ல, அந்த பொண்ணு நர்ஸ் வேலை, அம்மா வீட்டுவேலை அதுல ஏதோ குடும்பம் ஓடுது, இன்னும் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க”என்றார் மற்றொருவர்.
“பரவாயில்ல! இந்த வயசுல இவ்ளோ அம்சமா வயசுப் பொண்ணா கெடச்சு இருக்கு இவருக்கு, நானும் என் மகனுக்குப் பொண்ணு தேடுறேன் அமைய மாட்டுது”என்றார் அவர் நொந்து.
நளன் தமயாவை திரும்பி பார்த்தான்.
அவளும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.
“யோவ்! நீயிர் பையனுக்கு பொண்ண மட்டும் பாக்கனும், அத விட்டுட்டு அழகு இருக்கனும், இத்தனை பவுன் நகைப் போடனும், கார் வாங்கி கொடுக்கனும், ஆண் வாரிசு இருக்கனும், நீ பாட்டுக்கும் லிஸ்ட் போட்டா எப்பிடி அமையும்..?”
“அதுக்காக நான் என்ன ஒன்னும் இல்லாத வீட்டிலா பொண்ணு எடுக்க முடியும்..? என் மகனுக்கு இப்ப தான் முப்பது வயசை தொட போகுது, கை நிறைய சம்பாதிக்குறான், அதுக்கு ஏத்த பொண்ணை தானே பாக்கனும், அப்புறம் நான் என்னதுக்கு அப்பன், சரி நான் கிளம்புறேன் நீங்க வாங்க”என பேசியவர் பைக்கை எடுத்துட்டு கிளம்பிட்டார்.
நளன் தமயாவை விரக்தியாக பார்த்து சிரித்தான்.
அவர் சென்றதும் மற்றொருவர்”இவர் மாறி ஆளுங்க எல்லாம் பொண்ணுங்களை பணத்தை வச்சு ஏலம் எடுப்பதால் தான், மணவாளன் மனைவி மாதிரியான பொண்ணுங்க வயசு வித்தியாசம், இரண்டாம் தாரம், சீக்குப்பட்டவன், குடிகாரனுங்கனு வாக்கப்பட்டு வீணாப்போறாங்க, ஆனா மணவாளன் நல்ல மனுசன்”என்றார் கூடுதலாக.
“ம்ம்ம்! நீங்க பொண்ணு வச்சு இருப்பதால் இப்பிடி பேசுறீங்க, பையன் இருந்தா அவரை மாதிரி தானே பேசிட்டு போவீங்க..? சரி அதை விடுங்க மணவாளன் நல்லவருனு உங்க பொண்ணை கட்டிக் கொடுப்பீங்களா..?”
“அது எப்பிடி..? அப்பன் நான் இருக்கும் போது வயசு வித்தியாசம் பாக்காம கட்டிக் கொடுப்பேனா.?”என்று அவரும் பைக்கை ஸ்டார்ட் செய்ய, இருவரும் கிளம்பினர்.
இந்த முறை தமயா விரக்தியாக சிரித்தாள்.
“ஏன் சிரிக்குற..?”
“நீங்க ஏன் சிரிச்சீங்க..?”
“இல்ல! நானும் கை நிறைய சம்பாதிச்சப்ப, என் அப்பா இப்பிடி பொண்ணு பாத்து இருந்தா, நீ வந்து மாட்டி இருக்க மாட்டல”
“என் அப்பாவும் உயிரோடு இருந்திருந்தா உங்களுக்கு கட்டிக் கொடுத்து இருக்க மாட்டாருல..”என சிரித்தாள்.
“ம்ம்ம்! அதுக்கு தான் சிரிச்சீயா..?”
“ஆமா! அவங்க பேசினது கஷ்டமா இருக்கா தொரை..?”
“இல்லல்ல! இந்த மாதிரி நிறைய கேட்டாச்சு, அப்பா இடத்தில் நான் இருக்கேன், உனக்கு அம்மா இருந்தாங்க, இனி நான் இருப்பேன் அவ்ளோதான் “
“ஆனா ஒன்னு, நம்ம ரெண்டுப் பேரும் சேரனுமுனு விதிப்போல, நீங்க காத்திருந்தா தானே,நானும் வந்து சேர முடியும் இந்த பந்தத்திற்கு, இல்லனா உங்க தம்பி மாதிரி நீங்க ஒரு பொண்ணை பாத்திருக்க மாட்டீங்க, நானும் மனசுக்கு ஏத்ததுனு போய் இருக்க மாட்டேனா.. அதனால நம்ம தான் ஜோடி, யாரு என்ன சொனனா என்ன..? சரியா தொரை.”என்றாள் அவன் பக்கம் தலைச் சாய்த்து.
“இங்கரே! ஒரு வேளை நீ இப்ப கூட இல்லாம இவங்க பேசினதை கேட்டு இருந்தா மனசு நொந்து இருப்பேன் தான், ஆனா இப்ப பெருசா தெரியல”என அவளின் கையை லேசாக தொட்டுப் பிடித்து ஆறுதல் படுத்திக் கொண்டான்.
“ம்ம்ம்! போகலாம், நீ கொஞ்ச நேரம் உட்காந்து எழுந்திரி”என தமயா ஜோதியை அமர வைத்தாள்.
மூவரும் வெளியில் வர, நளன் புல்லட்டை எடுக்க சென்றான்.
தமயா, ஜோதி இருவரும் பேசிக் கொண்டு செருப்பை மாட்டினர்.
நளன் புல்லட்டில் அமர்ந்து நிமிர, எதிரில் ஒரு புதுமண ஜோடி கோவிலுக்கு வந்தனர் பைக்கில்.
அவர்களை கண்ட நளனுக்கு மனதில் அப்போது தான் அது தோன்றியது, தமயா கேட்டக் கேள்வி’ஏன் ஜோதியை கிளம்ப சொன்னீங்கனு.? ஓ! நமக்கு தான் இது எல்லாம் தோணலையா..?’என பின்னால் திரும்பி பார்த்தான்.
இருவரும் நடந்து வந்தனர்.
****
இரவு..
நளன் மட்டுமே அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தான். தமயா சாமி அறைக்கு சென்று அர்ச்சனை சாமானை வைத்துவிட்டு, அடுப்படிற்குள் சென்று இரவு உணவு தயாரிக்க ஆரம்பித்தாள்.
“ஏன் அண்ணி! உங்களுக்கு ப்ரீயா மருந்து எல்லாம்”என கேட்டான் சாமி.
“அப்பிடி இல்லங்க, இருமல், காய்ச்சலுக்கு மருந்து வாங்கிகலாம் அளவா, மத்தப்படி சுகர், பிரஷருக்கான மாச மாசம் வாங்கினா எங்களுக்கு பாதி விலை தான், என்னோட அப்பா, அம்மா, உங்க அண்ணன், பிள்ளைங்க இருந்தால் அவங்களுக்கும்”
“என்ன நளனா..? அவன் சொல்றானு நீயும் சொல்றேனு சொல்ற..?”என்ற சரசு,
“ஏன்டா சாமி! நீ என்ன தான் சம்பாரிக்குற? ஏதோ அப்பப்ப நாயிக்கு ரொட்டித் துண்டுப் போடுற மாதிரி தூக்கிப் போட்டு போற, இத்தன பவுன் செய்ய அசாதரணமா சொல்லிட்டு இருக்க, இது எல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்”
“அம்மா! பேசாம இரு”என்றான் நளன்.
“என்னத்த பேசாம இருக்க சொல்ற, ஏன்மா சின்ன மருமகளே! ஏன் உன் தம்பிக்கு மூன்னு பவுன் கொறச்சலா போடக்கூடாத..?”என்றார் லலிதாவிடம்.
“அம்மா! நீ எதுக்கு இப்ப ஆரம்பிக்குற..?” என கேட்டான் நளன்.
“ஏன் அத்த! நாங்க வீட்ட விட்டு தெரியாம கல்யாணம் பண்ணாலும், வீட்டோட சேர்ந்தப்ப என் அப்பா உங்க மகனுக்கு மொறையா செயின், மோதிரம் எல்லாம் போட்டாருல, அது மட்டுமா பாத்திரம், பித்தளைனு வாங்கி வச்சு இருக்கார். இப்ப என் தம்பிக்கு நான் செய்ய கணக்கு கேக்குறீய…?”
“அப்பிடி வா சொல்றேன், உன் தம்பிக்கு நீ மோதிரம், கைசெயின், ஏன் கழுத்துச் செயின் கூடப் போடு அத நான் ஏன் கேக்கப் போறேன், ஆனா உன் புருசன் வருவாயிக்கு எது முடியுமோ அத பண்ணு, நளனா ஏன் பண்ணனும்…? உங்க பிள்ளைங்களுக்கு செய்றான், இந்த வீட்டுக்கு மூன்னு வேளை சாப்பாட்டுக்கு செய்றான், அது பத்தாதுனு இப்ப உன் அப்பன் வீட்டுக்கு அவன் ஏன் செய்யனும்..? உன் புருசன் சம்பாரிச்சா செய், இல்லையா போய் முடிஞ்சதை பண்ணிட்டு வா, அவன் சம்பாரிச்சதை பாத்தா ஓடி வந்த, இப்பவும் அதே மாதிரி வக்கத்து இருக்கான், அது உன் தலை எழுத்து” என இத்தனை நாள் காட்டத்தை அப்பப்ப காட்டினாலும் சந்தர்ப்பம் பார்த்து கொட்டினார்.
“பாத்தீயா! பாத்தீயாய்யா! உன் அம்மா எப்பிடி பேசுறாங்கனு, சொல்லிட்டே தானே இருக்காங்க உன் அண்ணன் காசுல திங்குறோம், வாழுறோமுனு இது என்ன புதுசா.? நீ ஒழுங்கா சம்பாரிச்சா எனக்கும், இந்த பிள்ளைங்களுக்கும் எதுக்கு இந்த அவமானம்..? என்னத்த தான் பண்றீயோ, நெதம் போற வர திங்குற கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம, ஆனா நான் மட்டும் அவமானப்படனும், ஆமா நான் ஓடி வந்தேன் தான் அப்ப வயசு கோளாறு வந்துட்டேன், இப்ப எங்க போறது..? இந்தா இந்த பிள்ளைங்களை அழைச்சுட்டு, நீங்க ஒன்னுத்துக்கும் ஆவாத பிள்ளையை பெத்து வச்சு இருப்பீங்கனு எனக்கு எப்பிடி தெரியும்..? இவன் புள்ளையை மட்டும் தானே பெத்து இருக்கான்..”என்றவள் கன்னத்தில் ஓங்கி அறை விழுந்தது.
சாமியே தான்.. “என்னடி! வாய் நீளுது ரொம்ப, அடிச்சு பல்லை கழட்டிடுவேன்” என்று அடுத்து அடிக்க பாய்ந்தான்.
அதற்குள் தமயா வந்து எதிரில் லலிதாவை பிடித்து ஒதுக்கினாள்.
நளன் தம்பியை அதட்டினான்.
“டேய்! என்னடா இது கை ஓங்குற பழக்கம்..?”
“பின்ன எப்பிடி பேசுறா, இவளை”என மீண்டும் அடிக்க முன்னேற, தமயா
“நிறுத்துங்க! அவங்க சொன்னதில் என்ன தப்பு இருக்கு, அவங்களை அடிக்குறீங்க..?” என்றாள்.
“நீங்க ஒழுங்கா சம்பாரிச்சு அவங்களை பாத்துக்கிட்டா அவங்க ஏன் பேசப் போறாங்க, சரி! அப்பிடியே பாத்தாலும் உங்களை முதலில் கேவலப்படுத்தியது உங்கா அம்மா தான் அவங்களை விட்டுட்டு பொண்டாட்டியை மட்டும் அடிக்குறீங்க..? ஏன் உங்களுக்கு அடிமையா இருக்காங்கனா..?”
“அவ என் பொண்டாட்டி நான் அடிப்பேன் உங்களுக்கு என்ன.?”
“சாமி! அதிகமா பேசாம அமைதியா போ”என்றான் நளன்.
“என்ன அண்ணே! பொண்டாட்டியை அடக்காம என்னைய அமைதியா போக சொல்ற..? ஓ! புதுப்பொண்டாட்டியா..?”
“டேய்! அவ கேட்டதுல என்ன தப்புடா இருக்கு, அம்மா பேசின மாதிரி தானே லலிதாவும் பேசினா..? அப்ப தப்பு யாரு மேல, உனக்கும் ரெண்டுப்பிள்ளைங்க வளர்ந்து வராங்க, நீயும் ஏதாச்சும் பொறுப்பா செய்யனுமுல, அதை தானே சொல்றாங்க, அதுல என்ன தப்பு இருக்கு”
“ஓ! அப்ப உன் பொண்டாட்டி வந்து சொன்னதும் நான் தப்பா தெரியுறேன், அப்பிடி தானே, சரி! என் பொண்டாட்டி பேசுறனா அவளுக்கு உரிமை இருக்கு ஏனா! அவ அப்பன் வீட்டுல இருந்து இங்க சாமான் சட்டு, ஏன் இந்த வீடு கட்ட கடைசியில் பத்தாம நின்னப்ப அவ அப்பா தானே தந்தார், ஆனா உன் பொண்டாட்டிக்கு என் சம்பாரிப்பை பத்தி பேச எந்த தகுதியும் இல்லை, என்ன கொண்டு வந்தாங்க இந்த வீட்டுக்கு, சும்மா வந்துட்டு எனக்கே பஞ்சாயத்து பண்ண வராங்களா..? மரியாதையா இருக்க சொல்லுங்க உன் பொண்டாட்டியை”என்றான் வேகமாக.
நளனுக்கு கோபம் வரவும், சாமியின் கன்னத்தில் ஒன்று விடத் தோன்றியது, ஆனால் பிள்ளைகள் நிற்க பொறுமை காத்தவன்,
“இங்க பாரு! இந்த பிள்ளைங்க முகத்துக்காக உன் மேல் கை வைக்காம விடுறேன், ஆனா இனி ஒரு தடவை என் பொண்டாட்டியை பத்தி பேசின பல்ல ஒடச்சி கையில் கொடுத்துடுவேன், என்ன தகுதி வேணும் உனக்கு..? அவ இதுக்கு முன்னாடி எப்பிடி இருந்தா உனக்கென்னடா..? இப்ப இந்த மணவாளன் பொண்டாட்டி, இந்த வீட்டில் என் தகுதி,மரியாதை என்னவோ அது தான் அவளுக்கும் இங்க, இனி ஒரு முறை அண்ணிங்கற மரியாதை இல்லாம பேசின என்னய பத்தி தெரியும் உனக்கு, லலிதா மேல கை வைக்குற வேலையும் வச்சுகாத, உன்னால முடிஞ்சதை சம்பாரி இனி உன்னைய திருத்த முடியாது, இந்தா சங்கர் வந்துட்டான் அவன் இனி படிச்சு ஆளாகிட்டா அந்த புள்ள லலிதா என்னைய, உன்னைய நம்ப தேவை இல்ல, புரியுதா..? போங்க போய் அவங்கவங்க வேலையை பாருங்க, இனி இப்பிடி யாரும் கூட்டம் வைக்காதீங்க, அம்மா உனக்கும் தான் சொல்றேன்” என தன் அறையை நோக்கி சென்றான் நளன்.
தமயாவிற்கு மனதில் நளன் பேசியது எல்லாம் பட்டாம்பூச்சியாய் பறந்தது.
அழுதுட்டு நின்ன லலிதாவிடம்,
“அக்கா! நீங்க காலையில் போகனுமுல போங்க போய் தூங்குங்க, ஜோதி அம்மாவை கூட்டிட்டுப் போய் படு, சங்கர் நீ போய் படு”என்றவள் அடுப்படி சுத்தம் செய்ய சென்றாள்.
சாமி”ஏன்டி! எல்லாம் உன்னால வந்தது, என்ன மரியாதை வேணும் உனக்கு.?” என எகிறினான்.
லலிதா அமைதியாக அமர்ந்திருக்க, தமயா”அக்கா! போய் தூங்குங்கக்கா” என்றாள்.
“தமயா! நீ வந்ததில் இருந்து உன்னய நான் எதிரியா தான் பாத்தேன், ஆனா நீ அத எதையும் மனசுல வைக்காம எனக்காக பேசுற, ஆனா இத்தன வருசம் வாழ்ந்து புண்ணியம் இல்லாம போறான் அந்த ஆளு..”என மூக்கை உறிஞ்சினாள்.
“விடுங்கக்கா! பிள்ளைங்க பாக்குறாங்க போய் படுங்க, எல்லாம் சரியாகும்”என ஆறுதல் சொல்லி தூங்க அனுப்பிட்டு, தன் அறையை நோக்கி சென்றாள்.
****
தமயா அறைக்குள் செல்லும் போது, நளன் பால்கனியில் இருந்து வந்தான்.
“என்ன தூங்க போயாச்சா எல்லாரும்”
“ம்ம்ம்!”என கட்டிலில் அமர்ந்தாள். அவள் அருகே கட்டிலில் அமர்ந்தவன்.
“இங்கரே! சாமி பேசினதை நீ தப்பா எடுத்துக்காத, அவனுக்கு அவ்ளோ பொறுப்பும், அறிவும் இருந்திருந்தா தங்கச்சிக்கு கல்யாணம் ஆகாம லலிதாவை அழைச்சுட்டு வந்திருக்க மாட்டான்”என்றான் மெல்ல.
“ச்சே! ச்சே! அதான் என் தொரை செமயா பதில் சொல்லிட்டாரே தம்பிக்கு”என அவன் கையைப் பிடித்தவாறு, தோளில் சாய்ந்தாள்.
“லலிதா உன் கிட்ட பெருசா பேசாது, ஆனா நீ அதுக்காக பேசின….?”
“ஆமாங்க! என்ன இருந்தாலும் அவங்க நிலை பரிதாபம் தானே, அடிக்கும் போது வேடிக்கை பாக்க முடியுமா..?”
“ம்ம்ம்! என்னமோ அந்த பிள்ளைங்க பாவம்..”
“ம்ம்ம்!”
“சரி! படு”என எழுந்தவன், பாயை எடுத்து விரிக்கப் போனான்.
“என்ன செய்ய போறீங்க..?”
“படுக்கப் போறேன்!”
“ம்ம்ம்! நான் வரதுக்கு முன்னாடி எங்க படுத்தீங்க..?”
“இந்த கட்டிலில்..”
“இப்ப ஏன் தரையில் படுக்குறீங்க…?”
“நீ வந்த நாளில் கீழே படுத்த அதான் நானும் சரினுட்டு தரையிலே படுத்துட்டேன்”
“அப்டியா..? அப்ப சரி”என அப்டியே நகர்ந்து கால் நீட்டி கட்டிலில் படுத்தவள், “இப்ப நான் கட்டிலில் படுத்து இருக்கேன் வந்து இங்க படுங்க தொரை”என்றாள் முறைத்து நக்கலாக, ஆனால் சிரிப்பை அடக்கியவாறு.
அவனுக்கும் அடக்கிய சிரிப்பு வெளிவந்தது.
தலையை மெல்ல ஆட்டினான், “சரிங்க டீச்சர்!”
“ம்ம்ம்! நான் ரொம்ப ஸ்ட்ரிட் டீச்சர் தெரிஞ்சுகோங்க”