காலையில் எழுந்தது முதல் நளன் மனதில் சாமியின் செய்கைகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது, அதில் மூழ்கியவாறு அவன் அறையில் யோசனையில் அமர்ந்திருந்தான்.
தமயா லலிதாவிடம்”அக்கா! அவரு டீ குடிக்க இன்னும் வரல, நான் போய் குடுத்துட்டு வரேன்”என கூறியவாறு, நியூஸ்பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.
“என்ன தொரை பலத்த யோசனையோ, டீ குடிக்க கூட கீழ வரல..?”என அவன் கையில் டம்பளரை கொடுத்தவள், அருகில் அமர்ந்து பேப்பரை அவனிடம் நீட்டினாள் படிப்பதற்கு.
“பேப்பர் படிக்குற மூட் இல்ல, வை அதை”
“ஏங்க! இன்னும் உங்க தம்பி பத்தி நினைச்சுட்டு இருக்கீங்களா..?”
“ம்ம்ம்! எனக்கு எப்பிடி தம்பியா பொறந்தான், இவன்”
“உங்க தம்பி நைட் வீட்டுக்கே வரல, இப்ப தான் அக்கா சொன்னாங்க”
“இவ பொண்டாட்டி தானே, என்ன வேலைனு கேக்க வேண்டாம..?”
“ம்ம்ம்! சரி நான் தான் கேக்குறேன், உங்க தம்பி எத்தன தடவை நைட் வீட்டுக்கு வராம இருந்திருக்காரு நீங்களும், உங்க அம்மாவும் ஏன் கேக்கல..? ஏனா அவரு ஆம்பள, அதுவே லலிதா அக்கா அப்பிடி போய் இருந்தா சும்மா இருந்திருப்பீங்களா..? வீட்டுக்கு அடங்காதவனு விவாகரத்து கொடுத்து அனுப்பி இருக்க மாட்டீங்க”என்றாள் கடுப்பாக.
“இங்கரே! எனக்கு இந்த ஆம்பள, பொம்பள வித்தியாசம் எல்லாம் இல்ல, சங்கர், ஜோதியை கூட நான் சமமா தான் நடத்துவேன், இவன் ஆம்பளனு நான் கேக்காம இல்ல, என் தம்பினு ஒரு நம்பிக்கை, இப்பிடி செய்வானு நான் எப்பிடி யோசிப்பேன்” என்றான் வருத்தமாக.
“சரி விடுங்க, அதான் இப்ப தெரிஞ்சுட்டே அடுத்து என்ன பண்ணலாமுனு யோசிங்க”என பேப்பரை எடுத்து திருப்பினாள்.
“ம்ம்ம்! என்னால மனச ஆத்தவே முடியல, நான் மொட்ட மரமா கெடந்தேன் ஆனா அவன் பொண்டாட்டி, ரெண்டுப் பிள்ளைங்கனு சந்தோஷமான வாழ்க்கை தானே அமைஞ்சிருக்கு அதை போய் விலக்கி வச்சுட்டு இப்பிடி போய் தொலைஞ்சுட்டானே, நான் போய் இருந்தேனாலும் அது தனியா கெடந்தேனு சொல்வாங்க”என மனம் ஆறாமல் பேசினான்.
தமயா நளனை திரும்பி பார்த்தாள். பிறகு”நீங்க போய் இருந்தாலும், எல்லாரும் என்ன மாதிரி டீச்சரா மாற மாட்டாங்க தொரை”என நக்கலாக கூறிவிட்டு, பேப்பரை படிக்க ஆரம்பித்தாள்.
அவள் கூறியது புரிந்தமையால் நளனுக்கு சிரிப்பு வந்தது அந்த நிலையிலும்.
“இங்கரே! நீ வேற ஏன் நான் இருக்க மனநிலையில்”என்றான்.
“பின்ன உண்மையை தான் சொன்னேன் இப்ப எதுக்கு உங்க கூட அவரை கம்பேர் பண்றீங்க..? கல்யாணம் பண்ணியும் தொடவே யோசிச்சவரு நீங்க, ஆனா உங்க தம்பி…? வேணா விடுங்க, அவரு பொண்டாட்டி, பிள்ளையை நீங்க சுமப்பதை நிறுத்தி, அவரு தலையில் வைங்க எல்லாம் தானா நடக்கும், இப்ப டீ குடிச்சுட்டு, கடைக்கு கிளம்புற வழியைப் பாருங்க”என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்தவள், அழகாக சிரித்தவாறு வெளியில் சென்றாள்.
நளன் மனதில் தமயாவின் வார்த்தைகள் சரியான விஷயமாக தோன்றியது.
அதனை செயல்படுத்தவும் நேரம் பார்த்தான், அது தானாக அமைந்தது இரு தினங்கள் கடந்த நிலையில். அதுவரை சாமியை நளன் கண்டுக் கொள்ளவே இல்லை, பிள்ளைகளுக்கு தன் தகப்பன் இப்பிடி என்று தெரிந்தால் மனம் வெறுத்துடும்.
லலிதாவிற்கு தெரிந்தால் சாமியிடம் சாமி ஆடுவிடுவாள், ஆனால் அவனே உணரனும் என எண்ணினான் நளன்.
சங்கரும், ஜோதியும் பள்ளிக்கு கிளம்பியவாறு பையில் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
சரசு வழக்கம் போல் கால் நீட்டி அமர்ந்திருந்தார்.
சாமியும் ஷோபாவில் அமர்ந்திருந்தான். லலிதா டீ கொண்டு வந்துக் கொடுத்தாள் சாப்பிட்டதும் அவன் கேட்டதால்.
தமயா தன் அறைக்குள் சென்று கைப்பையோடு இறங்கினாள்.
சங்கருக்கு நினைவு வரவும் “பெரியப்பா! நேத்து ஸ்கூலில் என்னய ஆபிஸ் ரூம் கூப்புட்டு, எனக்கும், இவளுக்கும் ஃபீஸ் இன்னும் கட்டலனு இன்பர்மேசன் சொன்னாங்க”
நளன் புருவத்தை சுருக்கியவாறு, “அப்பிடியா..? இல்லையே அத கட்ட சொல்லிக் கொடுத்து ரெண்டு மாசம் ஆச்சே”என சாமியைப் பார்த்தான்.
“அட ஆமா! உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன் அண்ணா, அந்த பணத்தை ஒரு அவசரத்துக்கு போட்டேன், ஸ்கூல கட்டல”
“அப்பிடி என்ன அவசர வேலை..?” என்றான் கோபத்தை வெளிக்காட்டாமல்.
“ஒரு ஃபிளாட் பேசி அதுக்கு அட்வான்ஸ் வாங்கி கொடுத்தேன் அறுபது ஆயிரம், அது என்னனா வாங்குனவன் வேணானு சொல்லிட்டு காசு தர நேரத்தை ஓட்டுறான், கொடுத்தவன் என்ன ரொம்ப நச்சரிக்க நீங்க கொடுத்தப் பணத்தை கொடுத்துட்டேன், அவன் தருவானு பாத்துட்டு இருக்கேன் இன்னும் தரல அண்ணா”
“ஆனா! ஸ்கூல் ஃபீஸ் இந்த வாரத்தில் கட்டலனா, எங்களை கிளாஸ் அட்டென்ட் பண்ண விட மாட்டாங்க, பெரியப்பா எங்க ஸ்கூல் ரொம்ப ஸ்ட்ரினு தெரியுமுல”
“ம்ம்ம்! சாமி, பணத்தை ரெடிப் பண்ணிக் கட்டிடு”என்றான் சற்று அழுத்தமாக.
“அண்ணா! அவன் எப்ப கொடுப்பானு தெரியல, அதுவரைக்கும் ஃபீஸ் கட்டாம இருக்க முடியுமா..? உங்க கிட்ட இருந்தா கட்டுங்க”
முன்பு இருந்த நளனாக இருந்திருந்தால் சரி, நான் கட்டுகிறேன் என சொல்லி இருப்பான், ஆனால் இப்போது இருப்பது சாமியோட வண்டவாளத்தை அறிந்தவன்.
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..? என் கிட்ட பணம் இல்ல இப்ப”என்ற நளனை குடும்பமே கொஞ்சம் புதுசாக தான் பார்த்தது.
தமயா மனதில்’ம்ம்ம்! தொரை இத்தன நாளா டொக் வச்சுட்டே இருந்துட்டு இப்ப தான் அடிச்சு விளையாட ஆரம்பிச்சு இருக்காரு, கை தட்டுவோமா..? வேணாம் வேடிக்கையே பாப்போம்’என நோக்குவதை தொடர்ந்தாள்.
சாமி தமயனை அதிர்ச்சியாக பார்த்தான்.
“உன் பிள்ளைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டனும் நீ தான் யாரு கிட்டயாவது வாங்கியாகனும், வாங்கி கட்டு அப்புறம் உனக்கு வர வேண்டிய பணத்தை திருப்பிக் கொடு, இப்பதைக்கு என் கிட்ட இல்ல”
“என்ன அண்ணா! இத்தன நாளா இருந்த மாதிரி நீங்க பேசல, ஏன் அண்ணி ட்ரைனிங்கா..?”
“டேய்! ஏன் உன் அண்ணி கிட்ட நீ சொல்லி இருந்தீயா, நீ ஸ்கூல் ஃபீஸ் கட்ட கொடுத்தப் பணத்தை வேறதுக்கு செலவுப் பண்ணிட்டேனு, அத தான் என் கிட்ட இப்ப பேச சொல்லிட்டாள..? உன் கண்ணு முன்னாடி உம் பிள்ளைங்க ஃபீஸ் கட்டலனு சொல்லுதுங்க, அதுக்கு அப்புறம் தான் வாயை தொறந்து சொல்ற பணத்தை கட்டலனு, அதுக்கு நான் பதில் சொல்றேன், இப்ப எதுக்கு தேவை இல்லாம அவளை இடையில் இழுக்குற..?”என அழுத்தமாக கேட்டு முறைத்தான்.
எப்போதும் இடையில் பேசும் சரசு அமைதியாய் வேடிக்கைப் பார்த்தார்.
அதான் பேச வேண்டியவன் பேச ஆரம்பிச்சுட்டானே என்று.
லலிதா தமயாவை பார்த்து கண்களால் புரியாமல் கேட்டாள்.
மெல்ல நடந்து லலிதா அருகில் சென்ற தமயா”அக்கா! உங்க வீட்டுகாரர் சரியா ஆகனுமுனா நீங்க கம்முனு வேடிக்கை மட்டும் பாருங்க”என்றாள் மெதுவாக.
“ம்ம்ம்!”என்றாள் லலிதா.
“சரி! அவங்களை இழுக்கல, உங்க மச்சானுக்கு பைக் வாங்கி கொடுக்க மட்டும் காசு இருக்கு, என் பிள்ளைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட காசு இல்லையா..? அன்னைக்கு பாத்தேன் அவன, புது பைக் மாமா வந்து தான் எடுத்துக் கொடுத்தாருனு சொன்னான், அப்ப உங்களுக்கு மாமியார் வீடு முக்கியமாகிட்டு, நாங்க வேற ஆகிட்டோம், பாருங்க! உங்க பெரியப்பா உங்களை பிரிச்சுப் பாக்க தொடங்கிட்டார்”என்றான் பிள்ளைகளை பார்த்து.
“இங்கரே! எதுக்கு அவங்கள போக சொல்ற, நீங்க நில்லுங்க அப்ப தான் குடும்ப சூழ்நிலை புரியும். யாரு எப்பிடினு புரியனும், போதும் இனி முட்டாளாக இந்த வீட்டில் நான் இருந்தது, இதுக்கு அப்புறம் யாரும் அப்பிடி இருக்க கூடாதுனா நீங்களும் இருந்து தெரிஞ்சுகோங்க, வீட்டில் நடப்பதை” என்றான் நளன்.
தன் தம்பி பக்கம் திரும்பியவன், “என்ன சொன்ன, என் மச்சானுக்கு பைக் நான் வாங்கி கொடுத்தேனா..? போடா போக்கத்தவனே! அது என் பொண்டாட்டி அவ தம்பிக்காக வாங்கிக் கொடுத்தது அவ ஒன்னும் உன்ன மாதிரி, நம்ம குடும்பம் மாதிரி இல்ல, அவ சம்பளத்தில் மாசா மாசம் டியூவில் வாங்கி கொடுத்து இருக்க, நான் வாங்கி தரேனு சொன்னதை மறுத்து, நான் போய் என்ன மாடலனு எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.”
“சரி! அப்பிடியே நான் என் மச்சானுக்கு வாங்கி கொடுத்தா தான் என்னனு கேக்குறேன்..? ஏன்டா! சுயநலவதி உன் மச்சானுக்கு நகை போட உரிமையா என் கிட்ட கேக்குற, அவனுக்கு செய்ய உரிமையா நான் கொடுத்தப்ப இனிச்சது, அதுவே என் மச்சானுக்கு என் சம்பாரிப்பு பணத்தில் பைக் வாங்கி கொடுத்தா கசக்குதா..? என்னங்கடா உங்க நியாயம். என்னைய கடைசி வரை ஏமாளியா நினைச்சீயா…?”
“இங்க இருக்க எல்லாம் என் சொந்த உழைப்பில் வந்தது, என்னமோ அன்னைக்கு வீடுக் கட்ட மாமனார் கடைசியில் சொச்சம் கொடுத்தாருனு பெருமையா சொன்னீயே…? அது எல்லாம் எந்த மூலை கணக்குல வருமுடா, நான் போடவா கணக்கை….?
யாரு கிட்ட எதிரில் நின்னு மச்சானுக்கு செஞ்ச, மாமனுக்கு செஞ்சனு பேசுற, ஆமாட! எனக்கு பொண்டாட்டி வந்துட்டா, அடுத்து பிள்ளையும் வந்தா அதையும் நான் பாக்கனும், எனக்கு இன்னும் பல சோலி இருக்கும் என் பொண்டாட்டி, பிள்ளைனு வரும் போது, உனக்கு எதுக்கு கணக்கு சொல்லனும், நீ சம்பாரி உன் பொண்டாட்டி, பிள்ளைங்களை பாரு நான் கேள்வியே கேக்க மாட்டேன். ஆனா என் சம்பாரிப்பில் இருக்கும் வரை நான் சொல்றதை தான் கேக்கனும்”என்று முடித்தவன்,
“இங்கரே! என்ன உனக்கு நேரமாகலையா..? விடிய விடிய பேசினாலும் நின்னு வேடிக்கைப் பாப்பீங்க, கெளம்பு”என்றவன், சங்கர், ஜோதியிடம்”நீங்களும் கிளம்புங்க, உங்கப்பன் வந்து ஃபீஸ் கட்டுவான்”என அதட்டினான்.
சாமி அண்ணனின் அதிரடி ஆட்டத்தில் அசையாது பேயடித்த நிலையில் நின்றான்.
லலிதாவுக்கும் புரியவில்லை ஒன்றும், ஆனால் அவளும் தமயா சொன்னதை வைத்து பொறுமையை கடைப்பிடித்தாள் ஓரளவு புரியந்தமையால்.
நளன், தமயந்தி கிளம்பினார்கள்.
சரசு வெற்றிலையை மென்றவாறு உரலை இடிக்க, கணவர்”என்ன சரசு! எப்பயும் நீ இடையில இடிச்சுட்டே இருப்ப, இன்னைக்கு பேசவே இல்ல”என்று இருமிக் கொண்டே கேட்டார்.
“இத்தன நாளா வாய் தொறக்காத உங்க மூத்தப் பிள்ள, நீங்க எல்லாம் இன்னைக்கு வாயை தொறந்து இருக்கீங்கள. அப்புறம் என்னத்துக்கு நான் வேற, போதும், போதும். ஏய்யா! நான் சொன்னேன்ல எத்தன நாளைக்குனு இந்தா மூத்தவ வந்ததும் நம்ம பய எப்பிடி பேசுறான் பாருய்யா”
“அட நீ வேற சும்மா கெட, அந்த புள்ள வந்து தான் அவன் மொகத்துல வெளிச்சமே வந்திருக்கு”
“அது என்னவோ உண்மை தான், அப்பிடியே அவனுக்கு ஒரு புள்ளய பெத்துக் கொடுத்துட்டா போதும் அந்த மகராசி”
“பொறக்கும், பொறக்கும் அது, அவனுக்கு பொறக்காம போகுமா..” என்றார் இருமியவாறு.
***
மதிய உணவு வேளை பள்ளியில்.
சங்கர், ஜோதி இருவருக்குமே அழைப்பு வந்தது, விசிட்டர்ஸ் என்று.
இருவரும் வெளியில் சென்ற போது, ஒரு மரத்தடியில் நளன் நின்றுக் கொண்டிருந்தான்.
காலையில் சாமியிடம் அப்பிடி பேசி இருந்தாலும், பிள்ளைகளையும் பிரித்து பேச வேண்டிய சூழல் வந்த நிலையை அவனால் தாங்கமுடியவில்லை. அவர்கள் நினைவு வரவுவ், பார்க்க வந்தான்.
“ஐ! பெரியப்பா”என ஜோதி ஓடி வந்தாள்.
“பெரியப்பா! இந்த நேரத்தில் வந்து இருக்கீங்க..?”என கேட்டப்படி வந்தான் சங்கர்.
“சும்மா! உங்கள பாத்துட்டு போக தான், சாப்பிட்டீங்களா..?”
“ம்ம்ம்! சாப்பாட்டுச்சு பெரியப்பா” என்றாள் ஜோதி.
“காலையில் நான் வீட்டில் பேசியதை நீங்க மனசுல ஏத்தாதீங்க, சரியா..? உங்களுக்கு படிக்குற வேலை மட்டும் தான், ஆனால் வீட்டுச் சூழ்நிலையை தெரிஞ்சக்கனும், என்ன சங்கர்..?”
“சரி பெரியப்பா”என்றான் அவன் எப்போதும் போல்.
“ஜோதி! உனக்கு பெரியப்பா மேல எதும் கோபமாட..?”என கேட்டான் அவள் தலையை தடவியவாறு.
“இல்ல பெரியப்பா! அப்பா கிட் ஃபீஸ் கட்ட பணம் கொடுத்தும் கட்டலனு திட்டினீங்க, அதுக்கு ஏன் கோபம் எனக்கு வரப்போது..?”
நளன் சங்கரை பார்க்க, “பெரியப்பா! நீங்க எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்”என்றான்.
நளனுக்கு அவர்களை நினைத்து பெருமையாகவும், தம்பியை நினைத்து கோபமாகவும் இருந்தது.
ஜோதி திரும்பி பார்க்க, “ஐ! பெரியம்மாவோட தான் வந்தீங்களா..? சொல்லவே இல்ல”என கேட்டாள். .
அப்போது தான் நளனும் திரும்பி பார்த்தான்.
தமயா சிரித்தப்படி அருகில் வந்தாள், “நான் இவங்கள பாக்கலாமுனு ஆட்டோவில் வந்தா, வெளியில் உங்க புல்லட் நின்னுச்சு, ஜோதி என்ன பெரியப்பா சமாதானம் பண்ண வந்தாரா..?”எனக் கேட்டாள் சிரித்தப்படி.
“எங்களை பாக்க வந்திருக்கார், பெரியம்மா இருங்க நான் போய் என் ப்ரண்ட்ஸை கூட்டிட்டு வரேன். உங்களை காட்ட”என பதிலை எதிர்ப்பார்க்காமல் உள்ளே ஓடினாள்.
நளன்”நீ வரதா இருந்தா ஃபோன் பண்ணி இருக்கலாமுல.”
“அதே கேள்வி தான் உங்களுக்கும்”
சங்கர் சிரித்து”ரெண்டுப் பேருமே சொல்லாம வந்துட்டீங்க”
“சரிடா! நீ ஆபிஸ் ரூமில் இந்த வாரத்தில் ஃபீஸ் கட்டிறோம், சொல்லி வை, சாமி கட்டுறனானு பாப்போம்”
“ம்ம்ம்! எனக்கே அவர் மேல கோபம் வந்துச்சு பெரியப்பா, கொடுத்த பணத்தை கட்டல சரி அதை உங்க கிட்ட சொல்லனுமுல”
நளன் மனதில்’ சங்கர் வளர்ந்துட்டான், அதுவும் புரிதலோடு’என்று சந்தோஷமாக இருந்தது.
“ம்ம்ம்! விடுடா, பாத்துக்கலாம் என்ன இருந்தாலும் உனக்கு அப்பா அவன். நீ புரிஞ்சுக்கனுமே தவிர வெறுத்துடக் கூடாது, சரியா..?”
“ம்ம்ம்!”என்றான் மெல்ல.
அதற்குள் ஜோதி தோழிகளோடு ஜோதிமயமாக வந்தாள்.
“ஹேய்! இவங்க தான் என் பெரியம்மா, நான் சொல்வேன்ல மேக்ஸ் சம்ஸ் சொல்லி தருவாங்கனு, இவங்களே தான்”என அறிமுகம் செய்தாள்.
“இது எல்லாம் பொண்ணுங்களா.? உங்களை வேணா சொல்லுங்க ஒத்துக்குறேன், இவளோட சேர்த்து எல்லாம் வானரக்கூட்டங்க”
நளன் சிரித்தான்.
ஜோதி”டேய்! போடா உனக்கு என்ன வேலை இங்க.?”
“அதானே! பெரியப்பா, பெரியம்மா நான் கிளம்புறேன்”என அவன் எஸ்கேப் ஆனான்.
நளனும் ஃபோன் வந்ததால் பேசுவதற்கு விலகி நடந்தான்.
“ஏய்! உங்க பெரியப்பாக்கு வெயிட் ஹேர் எல்லாம் இருக்கு, ஆனா பெரியம்மா யூத்தா இருக்காங்க” என்றாள் ஒரு தோழி.
“ம்ம்ம்! உங்கண்ணன் சங்கர் கிளாஸ் தானே அவனுக்கு எதுக்கு வெயிட் ஹேர் இருக்கு, அந்த மாதிரி தான்டி, என் பெரியப்பா இப்ப வர ஹீரோஸ் மாதிரி சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைல், இதான் ட்ரென்டுடி.”
தமயாக்கு சிரிப்பு வர, “போதும் ஜோதி உன் பெரியப்பா புராணம்”என்றாள்.