நேரம் பன்னிரெண்டை தாண்டியது, ஆனால் சாமி தூங்காமல் முழித்திருந்தான், லலிதா தூக்கம் களைந்தமையால் சிறுநீர் கழிக்க எழுந்தாள்.
மறுபடியும் படுப்பதற்கு வந்தவள், தூங்காமல் முழித்திருந்த கணவனை கண்டாள்.
“என்னங்க தூங்கலையா..?”என கேட்டாள் மெதுவாக, சங்கர் அவன் அருகில் படுத்திருந்ததால்.
“இல்ல!”
“ஏன்! உடம்புக்கு எதும் முடியலையா..?”
“எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன், போய் படு”
லலிதா அதற்கு மேல் பேசாமல் படுப்பதற்கு சென்றாள், அவள் அருகில் ஜோதிப் படுத்திருந்தாள்.
“லலிதா!”
“ம்ம்ம்!”
“உன் கிட்ட நகை எதும் இருந்தா தா, நான் அடுத்த மாசம் திருப்பி தந்துடுறேன்”என அவள் பக்கம் திரும்பிக் கேட்டான்.
“எதுக்கு..?”
“எதுக்கா..? புள்ளைங்களுக்கு ஃபீஸ் கட்ட தான்.”
“என் நகை எல்லாம் நீங்க தானே வாங்கிட்டுப் போனீங்க, பேங்க் லாக்கரில் வைக்குறேனு, என் தம்பி கல்யாணம் முடிச்சு, என் கிட்ட வேற நகை எந்த இருக்குங்க, இந்த தாலி செயின் மட்டும் தான் இருக்கு”
“அது.. அது வந்து அந்த நகையை பிரைவேட் நகை கடையில் வச்சுட்டு, வட்டிக்கு பணம் வாங்கி, ஒரு இடம் ரெஜிஸ்டர் பண்ண கொடுத்திருக்கேன் லலிதா”என்றான்.
“அப்ப அது பேங்கில் இல்லையா..? அடகு வச்சுட்டீங்களா?”என அதிர்ந்தவள், “அப்பிடி என்னங்க இடம் அது யாருக்கு ரெஜிஸ்ட்ரேசன், மொத்தம் எவ்வளவுக்கு வச்சீங்க, இருபது மேல் பவுன் இருக்குமே..?”என்றாள் கேள்வி மேல் கேள்வியாக.
சாமி”அது நம்ம பையனுக்கு தான் பேசி இருக்கேன் லலிதா, இன்னும் கொஞ்சம் கொடுக்க வேண்டியது இருக்கு, அது முடிச்சா இவன் பேருக்கு எழுதிடலாம்” என அவளை சமாதானம் செய்தான்.
“நெசமா தான் சொல்றீங்களா.? சங்கர் பேருல இடமா..? அப்பிடினா சரி தான், நகையை விட அவனுக்குனு ஏதோ சேக்குறீங்களே”என பெருமைப் பட்டாள்
சாமியும் அந்த எண்ணத்தில் தான் பணத்தை கொடுத்திருக்கான் ஆனால் அதன் கதை அங்கு என்னவோ..?
“அதான் புரியல, ஸ்கூல் ஃபீஸ் கட்ட நாளைக்கு தானே கடைசி தேதினு சொன்னான் சங்கர், ஒரு வாரமா நானும் அலைஞ்சுட்டு இருக்கேன், அண்ணனும் அன்னைக்கு பேசினதுக்கு அப்புறம் அதப் பத்தியே கேக்கல, ஆமா! அண்ணி கூட நீ நல்லா தானே பேசுற, அண்ணன் கிட்ட பேச சொல்லே”என்றான்.
லலிதாவிற்கு என்ன தான் தமயாவிடம் நன்றாக பேசினாலும், இந்த விஷயத்தில் கெஞ்சுவதற்கு தன்மானம் தடுத்தது.
நளன் அவ்வளவு பேசியப்பிறகும் அவனிடம் போய் நின்றால், கேவலமான விஷயமாக இருக்கும் என யோசித்தாள்.
“ஏங்க! மூத்தவரு அவ்ளோ கேவலப்படுத்தியும் தமயா கிட்ட போய் பேச சொல்றீங்களே..? இத்தன நாளா நானும் இதே புத்தியோட தான் திரிஞ்சேன் ஆனா இப்ப தன்மானம் தடுக்குதுங்க, அன்னைக்கு மூத்தவரு பேசினப்ப நம்ம ரெண்டுப் பேரும் பதில் பேச முடிஞ்சுதா..? சொல்லுங்க, இப்ப என்ன உங்களுக்கு நகை தானே வேணும்”என எழுந்தவள், வெளியில் சென்று சிறிது நேரம் கழித்து வந்தாள்.
“இந்தாங்க!”என அவன் கையில் தாலிச் சங்கிலியை திணித்தாள்.
“இத வச்சு பணத்தைக் கட்டுங்க, நம்ம புள்ளைங்களுக்கு தானே, ஆனா இனிமே கொஞ்சம் உருப்படியான வேலையை பாத்து நாலு காசை சேக்கப் பாருங்க சொல்லிட்டேன். இல்லனா! அடுத்த நிலைக்கு வக்கத்து தான் நிக்கனும், உங்க அண்ணன் மேல் எனக்கு கோபமே வரல, இத அவரு எப்பவே செஞ்சி இருக்கனும், அப்பிடி செஞ்சி இருந்தா இந்தா இந்த ராத்திரியில் புள்ளைங்களுக்கு பணம் கட்ட கண்ணு முழிச்சு யோசிச்சுட்டு இருந்துருப்பீங்களா.? எவனோ கொடுக்குறான் வாழ்க்கை ஓடுதுனு ராசாவாட்டும் திரிஞ்சிக்கல, பாருங்க! இது தாலிச் செயின் சீக்கிரம் திருப்பிடுங்க”என சென்று படுக்கையில் விழுந்தவள், மூக்கினை உறிஞ்சும் சத்தம் கேட்டது, அழுகின்றாள் என்று அவனுக்கு புரிந்தது.
இப்போது எல்லாம் இருவரும் சேர்ந்து சமைப்பது தான், தினசரி வழக்கமாகியது.
தமயா”என்னக்கா, இன்னைக்கு மௌன விரதமா…?”
“ஆமா! அது இருந்தா மட்டும் எல்லாம் அப்பிடியே தலைகீழா மாறப்போகுதா தமயா”
திரும்பி லலிதாவைப் பார்த்தவள், “என்ன அக்கா குரல் ஒரு மாதிரி இருக்கு, திரும்புங்க அழுதுட்டு இருக்கீங்களா..?”என அவளை திருப்பியவள், சிவந்த கண்களை பார்த்தாள்.
“என்ன ஆச்சு, ஜோதி அப்பா எதும் சொன்னார..?”என கேட்டுக் கொண்டே மஞ்சள் கயிற்றைப் பார்த்தாள் தமயா.
“அவரு என்ன பேச போறார்.?”
“அதுசரி, எங்க செயின்..?”
தமயாவை நிமிர்ந்துப் பார்த்தவள், பிறகு வெளியில் எட்டி மாமியார் இல்லை என்று உறுதி செய்த பின்னர்,
“தமயா! ராத்திரி……”என நடந்ததை கூறினாள் லலிதா.
“சரிக்கா! அதுக்கு ஏன் தாலிச் செயினை கழட்டிக் கொடுத்தீங்க..? என் கிட்ட சொல்லி இருந்தா நானே அவர் கிட்ட பேசி இருப்பேன்ல, ஏதோ உங்க வீட்டுக்காரருக்கு பாடம் புகட்ட அவரு அப்பிடி திட்டினார், அதுக்காக பிள்ளைங்களை விட முடியுமா…?”
“இல்ல தமயா! இருக்கட்டும் அவருக்கு இது வேணும், எனக்கும் தான். தன்மானத்தை விட்டுக் கொடுத்துட்டு தாலிச் செயினை போட்டு ஆட்டுறதில் என்ன இருக்கு.? பாரு! நீ கேட்டா இல்லனு சொல்ல மாட்டாரு உம் புருசன் ஆனா நீ உன் தம்பிக்கு பைக்கை சொந்த காசில் வாங்கி தந்த, எதுக்கு ஆயிரம் இருந்தாலும் அம்மா வீட்டுக்கு உன் புருசன் செய்றது நாளைக்கு ஒரு சொல்னு உனக்கு வீம்பு. அதே மாதிரி மூத்தவரு அன்னைக்கு பெருமையா சொன்னாருல, ஆனா எங்க நிலை அப்பிடியில்லையே, இவரும் எங்களை பொறுப்பா பாத்துகிட்டா போதும் தமயா, நகை எல்லாம் என்னத்துக்கு, அது எல்லாம் சீ..னு வருது”என புலம்பினாள்.
தமயாவின் மனதில்’பாவம் இந்தக்கா, இவங்க புருசனுக்கு இன்னொரு பொண்ணுக் கூட தொடர்பு இருக்குனா எப்பிடி தாங்குவாங்க’என எண்ணி,
“சரி! கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகும்.”
“ம்ம்ம்!”
***
புல்லட்டில் நளனும், தமயாவும் சென்றுக் கொண்டிருந்தனர்.
“தொரை!”
“ம்ம்ம்!”
“காலையில்…”என லலிதா கூறியதை கூறினாள்.
“தாலிச் செயினை அடகு வைக்குறாங்களா..?”
“ம்ம்ம்!”
அமைதியானவன், பிறகு”ஏதோ பண்ணி விழுந்து எழுந்திரிக்கட்டும் தமயா”
“என்ன தொரை, இது நீங்களா.?”
“ஆமா! போதும் இனி இரக்கப்பட்டு போய் செஞ்சது எல்லாம், என்ன தான் பண்றானு பாப்போம், ஆனா லலிதா நகையை வச்சு சங்கருக்கு இடம் வாங்குறானு சொன்னது நல்ல விஷயம் தான், அது உண்மை தானா..?”
“தெரியலையே.?”
“ம்ம்ம்! எப்பிடியோ என் சம்பாரிப்பு தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டப் போகுது”
“தாலிச் செயினா..?”
“ம்ம்ம்!”
“ஆமா!”
நளன் வெளிநாட்டில் இருந்த போது லலிதாவிற்காக தாலிப்பிரித்து கோர்ப்பதற்கு அனுப்பியது, ஏழு பவுன்.
தமயாவிற்கும் தாலிப் பிரித்து கோர்த்தப் போது, ‘அதே ஏழு பவுன் போடனும், ஒரே மாதிரி போட்டா தான் நல்லது, நாளைக்கு வித்தியாசம் வந்துடக் கூடாது’என சரசு சொல்லிட்டார்.
நளனும் சரியென்று நகை வாங்க தமயாவையே அழைத்துச் சென்றான், அவர்கள் மனதார சேர்ந்த பின் தான் தாலிப் பிரித்து கோர்த்தது.
அப்போது தமயா ஏழு பவுன் பெரிதாக இருக்கும், வேலைக்கு செல்வதால் ஐந்து பவுன் போதும் என்றாள்.
நளனிடம் ஏது மறுப்பு தமயா கூறியப் பிறகு, ஐந்து பவுனில் வாங்கிவிட்டு, மீதி இரண்டு பவுனிற்கு சின்ன நெக்லஸ் டைப்பில் ரவுண்டு டாலர் வைத்து வாங்கிக் கொடுத்தான், கணக்குக்கு ஏழு பவுன் வந்தது.
தமயாவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
ஏதாவது விசேஷம் என்றால் அதைப் போட்டு கொள்வாள்.
இன்று நளன் தாலிச் செயின் பத்தி பேசும் போது தமயாவிற்கு அது நினைவில் வந்தது.
***
செயினை அடகு வைத்து ஸ்கூல் ஃபீஸ் கட்டி விட்டான் சாமி.
அண்ணனும், தம்பியும் பேசிக் கொள்வதில்லை. இந்த ஒரு வாரமாக.
அன்று இரவு, தமயா கிளாஸ் முடித்து சீக்கிரம் வந்தாள் நளனோடு.
அடுப்படியில்…
“தமயா! நீ வந்தே அஞ்சு இடம் வந்துட்டு, அதுக்கு முன்னாடி பத்து இடம் வந்துச்சு. ஆனா ஒன்னுத்தையும் அந்த மனுசன் உருப்புட விடல”என்றாள் லலிதா.
“ஆமாக்கா! அவருக்கு என்ன தான் பிரச்சனை”
“ம்ம்ம்! முன்னாடியாச்சும், உம் புருசனுக்கு கட்டி வைக்க, அது நொட்டம் இது நொண்டினு சாக்கு சொன்னார், இப்ப என்னதுக்கு குறை சொல்லி ஒதுக்காராரோ, கனிகா அப்பா.”
“ம்ம்ம்! ஒரு வேளை என்னைய அனுப்பிட்டு, உங்க கொழுந்தனு கட்டி வைக்கப் பாக்குறாரோ..?”என நக்கல் அடித்துச் சிரித்தாள்.
“ஆமா! நீ வேற, யாரு..? மூத்தவரை இனி அசைக்க முடியும்..? நீ வீட்டுல இருந்துட்டா போதும், வாய் ஓயாமல் இங்கரே! இங்கரே! இங்கரே! னு ஏலம் போடுறாரு.. அவரு கிட்ட இருந்து உன்ன பிரிச்சுட்டாலும், அது நடக்குற காரியமா.?”என சிரித்தப் படி அவளை கிண்டல் செய்தாள்.
“போங்கக்கா! நீங்க வேற.”என வெட்கப்பட்டாள் தமயா.
தமயா அடுப்படிற்குள் நிற்பதை பார்த்தப்படி தான் தொரை உட்காந்திருந்தது, மனதில்’இவ ஏன் இப்ப வெட்கப்பட்டு சிரிச்சுட்டு இருக்கா..?’என அவளையே பார்த்தான்.
தமயாவிற்கு ஏதோ தோன்ற சட்டென்று சைடில் திரும்பி பார்த்தாள்.
தொரை புருவத்தை உயர்த்த, ஒன்றுமில்லை என கண்களால் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாள்.
“என்னத்த தான் குசுகுசுனு பேசுறாள்களோ, சாப்பாட்டை வைக்காம” என சரசு வேகமாக பேசினார்.
அவர் பேசியது எல்லாம் யார் காதிலும் விழவில்லை.
***
ஞாயிறு..
கனிகாவை பெண் பார்க்க கிளம்ப ஆரம்பித்தனர், நளன் வீட்டில்.
லலிதா கிளம்பியதை பார்த்த தமயா,”அக்கா! என்ன இது இப்பிடி புடவை கட்டி இருக்கீங்க.?”
“போது விடு தமயா, இப்ப என்ன எனக்கு சின்ன வயசா..?”
“உங்களுக்கு என்ன அறுபது வயசா ஆகிட்டு, அவங்களே இப்ப எல்லாம் மாடர்னா மாறிட்டாங்க. மாடர்னான சுடிதார், டாப், பேன்ட் போடுறதில்லை, புடவைக் கட்டுற ஸ்டைலை சொல்றேன். இங்க வாங்க”என லலிதாவின் புடவை ஃபிலீட்ஸை சின்னதாக வைத்து, தலையை அவளின் முகத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றினாள்.
“என்ன தமயா, கனிகாவை தான் பொண்ணு பாக்க வராங்க, என்னைய இல்ல”
“அக்கா! நம்ம மேக்அப் போடனுமுனு இல்ல, போடுற டிரஸை நமக்கு ஏத்த மாதிரி போட்டா போதும், சரி! என்னோட சின்ன நெக்லஸை போட்டுக்கிறீங்களா.. மஞ்சள் கயிறு மட்டும் இருக்கே”
“அதனால என்ன, நீ போட்டுக்கோ நீ தான் மூத்த மாமி, எனக்கு ஜோதி செயின் இருக்கு போட்டுக்குறேன்”
“அப்ப சரி!”என சிரித்தாள்.
“தமயா! எனக்கு கூடப்பொறந்தது தம்பி மட்டும் தான், ஆனா நீ தங்கச்சியா கிடைச்சு இருக்க, உன்னைய இப்பவாச்சும் புரிஞ்சுகிட்டனே.”என ஆதங்கமாக கூறினாள்.
“போதும்! வாங்க போகலாம், ஒரு நாளைக்கு ஒரு தடவை ரைம்ஸ் மாதிரி சொல்றீங்க”என சிரித்தாள்.
“அம்மா! நீ தானா இது, யூத்தா இருக்க” என்றாள் ஜோதி.
“அடியேய்! எனக்கு என்ன அவ்ளோ வயசா ஆகிட்டு, என் இருபதிலே நீ பொறந்துட்டடி, அதுக்காக எனக்கு வயசாகிடுமா…?”என மகளை முறைத்தாள் லலிதா.
“அப்பிடி சொல்லுங்கக்கா.”
***
பாண்டி மச்சான் இருவரையும் வரவேற்றார்.
தர்மனும், மல்லிகாவும் வந்திருந்தனர்.
மல்லி”என்ன அண்ணிகளா! ரொம்ப ஒட்டிட்டீங்க போல”
“ம்ம்ம்! ஏன் உனக்கு என்ன பண்ணுது.?”
“எனக்கு என்ன, பிரச்சனையில்லாம இருந்தா சரி தான். என் அக்காக்கு தான் முன்னாடி மாதிரி உங்க கம்பேனிக் கெடைக்கலனு ஒரே வருத்தம், இப்ப அங்க அதிகம் வரது இல்ல போல”
தமயாவும், லலிதாவும் சிரிக்க, “என்ன வந்ததில் இருந்து உட்காந்தியே இருக்கீங்க, வந்து அந்த பஜ்ஜியை போடுங்க”என்றாள் மரகதம் சற்றுக் கடுப்போடு.
“வரோம் அத்தாச்சி!”என லலிதா எழுந்தாள்.
“அத்தாச்சி! பஜ்ஜி சுடனு முன்னாடியே சொல்லி இருந்தா கையில் நைட்டியோடு வந்திருப்போல”என்றாள் தமயா நக்கலாக.
“ம்ம்ம்! இப்ப என்ன பட்டுப் புடவையா இது, எழுந்திரிச்சு வா, எல்லாம் என் தம்பி கொடுக்கும் இடம்.”
“பட்டுப் புடவை இல்ல தான், நீங்க கனிகா கல்யாணத்துக்கு மாமன் பொண்டாட்டி முறைக்கு எனக்கும், அக்காக்கும் நல்ல பட்டுப் புடவையா எடுத்துக் குடுத்துடுங்க, வாங்கக்கா போய் பஜ்ஜி சுடுவோம்”என உள்ளே சென்றாள்.
“ஏட்டி மல்லி! இவளுக்கு ரொம்ப வாய் ஆகிட்டுல..?”
“ம்ம்ம்! அண்ணனே மாறிட்டு அண்ணியோட இந்த வாய் பேச்சால, இப்ப எல்லாம் அண்ணன் அண்ணி பின்னாடி தானாம், என் வீட்டுக்காரர் சொன்னாரு”என்றாள் மல்லி.
“என்னமோ போ, அவனுக்கும் ஒரு குடும்பம் வந்துட்டு, ஆனா! ஒன்னும் நல்ல சேதி வர மாதிரி தெரியலடி, அம்மா ஒரே பொலம்பல், இவ தான் நர்ஸ் ஆச்சே டாக்டர் கிட்ட பாத்தா என்ன..?”
“நீயே சொல்லு அண்ணி கிட்ட”
“யாரு இவ கிட்டயா..? எப்பிடி பேசிட்டுப் போனா இப்ப பாத்தீல, அவ கிட்ட வாய் கொடுத்துட்டு எனக்கு புண்ணாக்கிக விருப்பமில்ல, விடு உண்டான சொல்லுவா”
அடுப்படியின் வாயிலில் நின்ற மரகத்திடம்”என்னக்கா.?”என கேட்டான்.
அப்பிடியே அடுப்பில் வியர்க்க நின்ற தமயா, லலிதாவை கண்டவாறு.
“தம்பி! இந்த இடம் ரொம்ப நலம் இடமுடா, உன் மாமா எதும் கெடுத்துப்புடாம பாத்து நீ தான்டா முடிக்கனும்”
“ஏக்கா! நானும் ஒவ்வொரு தடவையும் பேசி தான் பாக்குறேன், வரவங்க உன்னையும், மாமாவை தானே பெத்தவங்களா பாக்குறாங்க, உம் புருசன் பேச்சை கொறச்சா தான் கனிகாவுக்கு நல்லது நடக்கும்”
“என்னய என்னடா பண்ண சொல்ற ஒவ்வொரு தடவையும் நானும் சொல்லி தான் வைக்குறேன், அந்த மனுசனுக்கு புத்தில ஏற மாட்டுது, இந்த தடவை நீ எப்பியாச்சும் பேசிடுடா”என கெஞ்சினாள்.
“ம்ம்ம்! சரி சரி பேசுறேன், ஆமா! இவங்க ரெண்டுப் பேரும் பஜ்ஜி சுட தான் வந்தாங்களா..? ஏன் உன் பங்காளி வீட்டு ஆளுங்க இல்லையா..?”
“அது எப்பிடி மாமா வருவாங்க, அதான் உங்க அக்கா எல்லாரு கூடையும் டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணி வச்சு இருக்கே, யாரும் வர மாட்டாங்க, இது போய் கூப்புடாம” என்றாள் புவனா.
“இங்க பாருக்கா! சொந்தத்த அரவணைச்சு வச்சுக்க, உம் பொண்ணை கட்டிக் கொடுக்கனுமுனா அவங்க உதவி தேவைப்படும், எல்லா நேரமும் உன் தம்பிங்க பொண்டாட்டி வந்து இப்பிடி பஜ்ஜி சுட்டுத் தர மாட்டாங்க, புரியுதா?”
“சரிடா! என்னமோ உன் பொண்டாட்டியை வேலை வாங்கிட்டேனு ரொம்ப தான் பண்ற, அந்தளவு மயக்கி வச்சுட்டா உன்னைய, அம்மா சொன்னப்ப நம்பல நீ அப்பிடியில்லனு, இப்ப புரியுது”என இழுத்தாள் தமயாவை பார்த்தவாறு.
நளன் சிரித்துவிட்டு”அதுக்கு தானே கல்யாணம் பண்ணி வச்சுது அம்மா, சரியா தானே நடக்குது”என அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
பாண்டி”அது என்ன போடுறதை போட்டு அனுப்புங்கனா..? ஏன் மாப்பிள்ளைக்கு எதும் கொறையா..? எதுமே டிமான்ட் பண்ணாம பேசுறீங்க.?”என்க, அவ்வளவு தான் ஆரம்பித்தது பேச்சு இரண்டுப் பக்கமும்.
நளனால் முடியவில்லை, “பொண்ணோட அப்பாவே இப்பிடி பேசினா எப்பிடி..?”என எழுந்து சென்று விட்டனர்.
மரகதம் சாமி ஆடிவிட்டார் கணவனிடம்.
“நீ எல்லாம் செத்தா தான் என் பொண்ணுக்கு நல்லது நடக்குமுனு”
நளன்”விட்டு தொல, நானே நல்ல மாப்பிள்ளையா பாத்து பேசி முடிக்குறேன், அப்ப உம் புருசனை மட்டும் வெளியில் போக சொல்லிடு”என கோபமாக சொல்லிவிட்டு, தமயாவை கண் காட்ட, கிளம்பினர் அனைவரும்.
பாண்டிக்கு பொண்டாட்டி “செத்துப் போனு”என சொன்னதில் ஆத்திரம் வந்தது. ஆனால் அதை செய்யும் அளவிற்கு மனதில் தைரியம் இல்லை.