சாமி, மரகதம், தர்மன் என அனைவரும் இவை எல்லாம் நமக்கு சரியாக வருமா என்று கேட்டனர்.
“ஐந்தரை வருடங்கள் ஆகுமே, பிள்ளை பள்ளிக்கூடம் போக வேண்டும், உனக்கு அடுத்த பிள்ளை எல்லாம் வேண்டாம..? சரி! இதற்கு செலவு ஆகுமே..? இது எல்லாம் தேவையா உனக்கு..?” என கேட்டனர்.
எல்லாருக்கும் ஒரு படி மேல் சென்ற சொர்ணம்”ஏன்டி! இது எல்லாம் உன் வேலையா..? அப்பிடி என்ன தான் இருக்கு அந்த டாக்டர் படிப்பில், ஏன்டி மானத்தை வாங்குற, கல்யாணம் பண்ணோமா, பிள்ளையை பெத்தாமானு இருக்காம.?”என அதட்டினார்.
அதுவரை அமைதியாக இருந்த நளன்,”எல்லாரும் பேசி முடிச்சாச்சா, இது என் முடிவு, என் பொண்டாட்டி டாக்டர் படிக்கப் போறா பரீட்சையில் பாஸ் ஆனா, இல்லையா பழைய மாதிரி வேலைக்கு போகப் போறா, இதுல உங்க யாருக்கும் பிரச்சனை இருக்கா..? நான் பிள்ளை பாத்துக்க உங்க யாரையும் கூப்புட மாட்டேன், அதே நேரம் வராதீங்கனு சொல்ல மாட்டேன், வாங்க சந்தோஷமா போங்க, நான் முடிவெடுத்த விஷயத்தில் மாற்றமில்லை”என்றான்.
லலிதா, மல்லி மட்டும் வாயை திறக்கவில்லை, அவர்கள் இருவருக்கும் படித்தால் தான் என்னவென்று தோன்றியது.
தமயாவிற்கு அனைவரும் பேசியதில் ஆதங்கமும், மனக்குழப்பமும் தான் மிஞ்சியது.
“உன் இஷ்டமுனு ஆடாதடா, நாங்க யாரும் வேணானு உம் பொண்டாட்டி மட்டும் போதுமுனு நினைச்சுட்டீயா.? அவ அந்தளவு மயக்கிட்டா, புரியுது”என்ற தாயிடம்..
“எதுக்கும்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க துடிச்ச, சரி! உன் ஆசைப்படி நாங்க சந்தோஷமா தானே வாழுறோம், இந்தா உனக்கு பேரப்பிள்ளை பொறக்க போவுது, அப்புறம் என்ன உனக்கு பிரச்சனை.? இவ படிப்பா..? அவ மயக்கினா புள்ளை தானே பொறக்கும், ஏன் படிக்கப் போகனும்…? நாங்க படிப்புனு வாழ்க்கையை நிறுத்தல, பிள்ளை மட்டுமுனு எங்க ஆசையை விடல, எங்களுக்கு முடிஞ்ச வழியில் யோசிச்சு வாழுறோம், தயவு செய்து புரிஞ்சுக்க முடியலனா விடு”என்றான் வேகமாக.
“என்ன அண்ணே! இப்பிடி பேசுறீங்க, சரி இது எல்லாம் எப்பிடி சரி வரும்..?”
“அதானேடா என்ன உளருர நளன்.?” என சாமி, தர்மன் கேட்டனர்.
“இது என் விருப்பம், உங்களுக்கு என்ன வந்துச்சு, சாப்புட்டு போங்க, தமயா போய் சாப்பாடு ரெடிப்பண்ணு”
தமயாவிற்கு மனமே சரியில்லை, இரவு தூக்கமும் வரவில்லை, மன அழுத்தம் ஏறியதால் வலி ஆரம்பித்தது அன்று இரவே.
“தொரை!”என வலியில் கத்த ஆரம்பித்தாள். எத்தனையோ பிரசவம் பார்த்திருந்தாலும் வலி என்பது அனுபவத்தில் தான் உணர முடியும் முழுமையாக. தமயாக்கு முதலில் ஆரம்பிக்கும் போதே அதிக வலியோடு இருந்தது .
மணி இரண்டு இருக்கும் பொழுது விடியாத நிலையில், நளன் காளிக்கு ஃபோன் செய்த நேரத்தில் உடனே அவர் காரோடு வந்தார் ஜெயாவை கூட்டிக் கொண்டு வாசல் முன்பாக.
அவசரமாக தமயாவை தூக்கி கொண்டு காரில் படுக்க வைத்து அவனும் அமர, வலியில் “தொரை!”என அலறினாள்.
அவனும்”இங்கரே! ஒன்னுமில்ல, உனக்கு தான் தெரியுமே இப்பிடி தான் வலிக்குமுனு”
மருத்துவமனைக்கு சென்றனர். டாக்டர் மீனாவும் அவசரமாக வந்தார், தங்கம் மட்டுமே இருந்தாள்.
தமயா அந்த வலியிலும் அம்மா என்பதற்கு பதில் தொரை என்றே கத்தினாள், டாக்டர் தங்கத்திடம்,
“தொரை யாருனு..?”கேட்டார்.
“அவ ஹஸ்பேண்ட் மேடம்”
“ஓ! அவர வரச் சொல்லு”
தங்கம் சென்று வெளியில் நின்ற நளனை அழைத்து வந்தாள்.
“வாங்க மிஸ்டர் தொரை! உங்க மனைவி கைப்பிடிச்சுட்டு நில்லுங்க, தைரியமா இரு தமயா, உனக்கு தெரியாததா, இன்னும் டேஸ் இருக்கு தான், பட் யூட்ரெஸ் ஓபன் ஆகிட்டு, ட்ரை அவர் பெஸ்ட், பேபி ஓகே நல்லா இருக்கு நீ கான்பிடென்டா இரு”என்றார்.
ஜெயா”ஏங்க! நளன் வீட்டுக்கு சொல்லனும்”
“அவங்க இன்னைக்கு வந்து தான் சண்டைப் போட்டு போனாங்களே ஜெயா.”
“அதுக்காக சொல்லாம இருக்க முடியுமா..? இருங்க, தமயா ஓப்பாடியார் நம்பர் இருக்கு, நானே கூப்புட்டு சொல்றேன்”என ஃபோன் செய்து விஷயத்தை லலிதாவிடம் கூறினார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மொத்த குடும்பமும் இருந்தது, மரகதம் தவிர.
இத்தனை நாள் பார்த்து பார்த்து செய்த நளனின் அன்பு வீணாக போயிடுமா என்ன..?
சரசு தவித்தார் பிள்ளை நல்லப் படியாக பிறக்க வேண்டுமென்று.
சொர்ணம் ஒரு பக்கம் புலம்பினார், “அய்யோ! என் புள்ளையை திட்டிட்டு தனியா விட்டுப் போயிட்டனே..”என ஒப்பாரி வைத்தார், அவருக்கு புகுந்த வீட்டில் பெண்ணை தவறாக பேசிடக் கூடாதென்ற எண்ணம் மட்டுமே.
***
“தொரை! முடியல ரொம்ப வலிக்குது” என அழுதாள்.
“இங்கரே! கொஞ்ச நேரம் தான்” என்றாலும், “எனக்கு பயமா இருக்கு தமயா”என்றான் மெல்ல அவளிடம்.
அவனின் பயந்த பரிதவித்த முகத்தை கண்டவளுக்கு ஏனோ வலியை மறைக்க, மரக்க செய்ய தோன்றியது ஆனாலும் பிரசவ வலியை அப்பிடி தாங்க முடியுமா என்ன.?
தமயா தன்னை பலப்படுத்தினாள், அவன் கையைப் பிடித்து, “தொரை!” என அழைத்தாள் பற்களை கடித்து, தலையை ஆட்டி, “இங்கரே! என்ன செய்யுது..?”என அவளின் கையை இறுக்கிப் பிடித்தான்.
தமயாவிற்கு தெரியும் வலி வரும் போது அழுத்தம் கொடுத்தால் தான் குழந்தை வெளிவரும் என, அந்த முறை வந்த வலியில் தன்னை மீறி”தொரை!”என கத்தியவள் அவன் கையைப் பிடித்தப் பிடியில் தெரிந்தது அவளின் வலி, மொத்த வலியையும் உணரமுடியவில்லை என்றாலும் நளனால் அவளின் கைப்பிடி அழுத்தத்தில் இருந்த வலியின் வேகத்தை ஓரளவு உணர்ந்தான்.
அவளின் அந்த அலறலில் அவர்களின் குழந்தை வெளியுலகுக்கு வந்தாயிற்று.
தமயாவை பார்த்தவன், குழந்தையின் அழுகையில் நிமிர்ந்தான்.
தமயாவும் நேராக பார்த்தப் போது, மீனா குழந்தையோடு நின்றார்.
“கங்கிராட்ஸ்! தமயா, மிஸ்டர் தொரை குட்டி தமயா வந்துட்டா, உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு”என்றார்.
இருவருக்குமே ஆனந்தமாகியது, குழந்தையின் தொப்புள்கொடியை நறுக்கியதும் குளிப்பாட்டி தமயாவிடம் காட்டிய டாக்டர், நளன் கையில் தந்தார் மகளை.
கையில் தன் மகளை வாங்கிய நளனுக்கு உடலே சிலிர்த்தது, நடுங்கியது மகிழ்ச்சியில்.
தமயாவைப் பார்த்தான், “இங்கரே! குட்டி தமயா தான், என் ஆசைப்படி”என்றான்.
தமயா புருவத்தை சுளிக்க புரியாதவாறு,”நான் நமக்கு பொண்ணு பொறந்தா எப்பிடி இருக்குமுனு யோசிச்சப்ப, உன் முகம் தான் வந்தது, பொண்ணு மொதல பொறக்குறது ரொம்ப நல்லது தமயா, என் அம்மா சொல்லும்”என்றான் தன் தாய் நினைவில்.
“அண்ணே! அவளை நாங்க பாத்துக்குறோம், நீ போங்க, உங்க லவ்ஸ் தாங்கலைப்பா, என் வீட்டுக்காரர் எல்லாம் ஓடியே போயிட்டார் நான் கத்தியதில்”என கிண்டல் செய்தாள் தங்கம்.
நளன் மனதில் தன் குடும்பம் இங்கு இல்லாததை நினைத்து வருந்தியவாறு வெளியில் வந்த நேரம், அங்கு அனைவரும் நிற்பதை பார்த்ததும் முகமே மாறியது சந்தோஷத்தில்.
“அம்மா!”என சரசை நோக்கி மகளை தூக்கி கொண்டு நடந்தான்.
“உனக்கு அடுத்த பேத்தி பொறந்திருக்குமா, பாரு”என கொடுத்தான்.
“என் ராசாத்தி, தலைச்சம் புள்ள பொம்பளையா பொறந்தா குடும்பத்துக்கே நல்லது, பொறந்துட்டா உன் அப்பனுக்கு இனி என்ன வேணும், நீ போதும் என் ராசாத்தி”என கொஞ்சினார்.
மரகதம் அரக்க பறக்க ஓடி வந்தார்,
“பஸ்ஸே கெடைக்கலடா தம்பி”என புவனாவோடு,
“என்ன புள்ளடா..?”என குழந்தையை வாங்கி பார்த்தவர், “நல்லப்படியா பொறந்த வரை சரி, சாமி சொன்னதும் ஒன்னுமே புரியல”
தர்மனும், மல்லிகாவும் ஏற்கனவே வந்துவிட்டனர்.
காளியும், ஜெயாவும் அனைவரின் சந்தோஷத்தை பார்த்து சிரித்தனர்.
நளன் குழந்தையை வாங்கி”தமயாக்கு இவங்க வந்தது தெரியாது, உங்க கிட்ட கொடுக்க சொல்லி என்னைய அனுப்பினா, புடிங்க”என நீட்டினான்.
“அதுக்கு என்ன நளன், அவங்க சந்தோஷத்தை கண் கூடாக பாக்குறோம் புரியுது”என காளி கூற, ஜெயா குழந்தையை வாங்கினார்.
அனைவருமே நடந்த சண்டையை மறந்து குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
****
வீட்டிற்கு அழைத்து வந்ததும் பதினாறாம் நாளை தாங்கள் தங்கியிருந்த வீட்டிலே நடத்த திட்டமிட்டிருந்தான் நளன்.
ஒரு மாதம் கழித்து வைக்கப் பட்டது குழந்தையின் பதினாறு விசேஷம், குழந்தை எடை குறைவு என்பதால்.
அன்று தான் பதினாறு.
குடும்பத்தில் அனைவரும் வந்திருந்தனர்.
தமயா காலையில் இருந்து மனதில் ஒரு விதமான பயத்தோடு இருந்தாள்.
நளன் கண்களால் ஆறுதல் கூறியப் படி சமாதானம் செய்தான்.
அன்று தான் தமயாக்கு ரிசல்ட்.
விசேஷம் ஆரம்பித்ததும் குழந்தைக்கு முறைகள் செய்யப்பட்டது. சரசு தான் அனைத்தையும் செய்தார்.
அன்று நடந்த சண்டையைப் பற்றி யாருமே பேசவில்லை.
குழந்தைக்கு”உமையாள்”என பெயர் வைத்தனர் மணவாளன்- தமயந்தி.
ஜெயா மட்டுமே வந்திருந்தார். காளி ரிசல்ட் ஆர்வத்தில் சென்டரில் மாணவர்களோடு காத்திருந்தார்.
அனைத்து முறைகளும் முடித்ததும், குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் தமயா.
காளி வேகமாக வந்து நளனை கட்டிப் பிடித்து”நளன்! தமயா பாஸ் ஆகிட்டா, ரேங்க் வந்திருக்கு, கண்டிப்பா கவர்மென்ட் காலேஜ் கிடைக்கும், சந்தேகமே இல்லை”என மகிழ்ச்சியில் கூறினார் சுற்றி இருந்தவர்களை மறந்தவாறு.
நளனும் அவரை கட்டிப்பிடித்து சந்தோஷத்தில்”அப்பிடியா சார்.?”என வெளிப்படுத்தி, தமயாவிடமும் சென்று கூறினான்.
தமயா சந்தோஷத்தை வெளிக்காட்டாமல் அனைவரையும் சுற்றிப் பார்த்தாள்.
நளன் அப்போது தான் உணர்ந்தான் வீட்டினரை.
அவன் அமைதியாக, லலிதா”நல்ல விஷயம் தானே தமயா, ஏன் உம்முனு இருக்க, சந்தோஷப்படு”என்றாள்.
சாமி”லலிதா!”என்றான்.
“என்ன லலிதா..? அவளுக்கு திறமை இருக்கு பாஸ் ஆகிட்டா, படிச்சா என்ன தப்புங்க, அவ என்ன பிள்ளையை விட்டுட்டு அடுத்தவனை பாக்க போறாள, இல்ல ஊர்சுத்த போகப்போறாள..? படிக்க தானே போறா…? இப்ப என்ன பிள்ளையை பாக்க இந்தா ஜெயாம்மா, நான் இருக்கோம், அத்தைக்கு என்ன வேலை பேத்தியை பாக்குறதை விட, அது எல்லாம் ஒன்னும் குடி முழுகிப் போயிடாது, நீ படி தமயா”என்றாள்.
ஆளாளுக்கு சப்போர்ட் பண்ணவும், சரசும் மனம் மாறினார், தமயா முகத்தில் சந்தோஷம் வந்தது.
அதை கண்ட நளனின் மனம் நிம்மதியானது.
****
குழந்தை தன் பொக்கை வாயை காட்டியது தமயாவிற்கு ஜெயா கையில் இருந்தவாறு, நளனும் ‘டாட்டா’ சொல்ல இருவரும் புல்லட்டில் கிளம்பினர்.
முதல் நாள் காலேஜிற்கு நேரில் கொண்டு விடுவதற்கு சென்றான் நளன், ஒரு மணி நேரத்திற்கு குறைவான தொலைவில் உள்ள காலேஜில் சீட் கிடைத்தது.
“தொரை! கனவு மாதிரி இருக்கு.”
“இங்கரே! இது நனவு தான் நம்பு”
“ம்ம்ம்!”
***
ஒரு வருடத்தை நெருங்கியது…
இரவு..
உமையாளுக்கு பால் கொடுத்து தூங்க வைக்க முயற்சித்தாள் தமயா.
பகலில் ஜெயா பார்த்துக் கொள்வார். சனி, ஞாயிறுகளில் லலிதா, சொர்ணம், தமயா தங்கை என வருவார்கள். சரசுக்கு டவுன் வாழ்க்கை ஒத்து வரவில்லை.
குழந்தையை தன் மார்பில் போட்டு இருந்தான் நளன்.
உமையாள் தந்தை மீது அப்பிடியே தலை சாய்த்து தமயாவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“என்னைய என்ன பாக்குற தூங்குடி”
உமையாள் தலையை நிமிர்த்தி தந்தையை பார்க்க, அவனோ”என் செல்ல உமையா குட்டி, தூங்குங்க”என கொஞ்சவும், அவனுக்கு முத்தம் வைத்து கண்களை மூடி ஏமாற்றியது அந்த பிஞ்சு.
“இங்கரே! உன் ஆசையை நிறைவேத்துறது தானே என் வேலையே தமயா”என அவளை தன் மார்பில் இழுத்து அருகில் கொண்டு வந்தான்.
“ம்ம்ம்! பையன் வேணும்..?”என்றாள்.
“காலேஜ்…?”
“அத நான் பாத்துக்குறேன்”
“அடிப்பாவி!”
“என்ன அடிப்பாவி..? எனக்கு அனுபவம் ஆகிட்டு, எல்லாத்தையும் மேனெஜ் பண்ண, அதான் நீங்க, ஜெயாம்மா, அப்புறம் நம்ம குடும்பம் இருக்கே” என்றாள் அவன் நரைமுடிகளை கோதிவிட்டு..
“ம்ம்ம்! பையன் கல்யாணத்துக்கு நான் இருப்பே..”என ஆரம்பித்தவனை தடுத்து,
“நம்ம இருப்போம், நானு டாக்டராக்கும் விட்டுட மாட்டேன் என் தொரையை, நீங்க என் புருசனாக்கும் விட்டுட்டு போக மாட்டீங்க உங்க இங்கரேய, இப்ப என்ன வேணுமுனு யோசிங்க தொரை, நான் கடைசி வரை டீச்சரா இருப்பேன் போல,
ஆமா! எப்பிடி தொரை நீங்க இவ்ளோ அழகா இருக்கீங்க இந்த நரைமுடி வந்தாலும், வாட்ஸ் எ சீக்ரெட்..?”
“ம்ம்ம்! எனக்கு அவ்வளவு அழகான பொண்டாட்டி என் இங்கரே இருக்காள, அதனால தான்”என அவளின் இதழில் இதழ் பதித்தான்.
“காதல் மழலை அவள் மணவாளன்”
அவனுக்கு எண்பது ஆனாலும் அவள் மட்டுமே டீச்சர், அவன் அவளின் மழலை மட்டுமே.
“இங்கரே என்ற
அழைப்பில் உருவாகிய
காதல் மழலை
தொரை என்ற
முகவரியில் பிறந்தது.”
தமயா விழிகள் மூடியது, இருவரும் வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்து இருந்தாலும் தீராத காதலினால் வயதை வாழ்க்கைக்கு பொருத்தாமல் வாழத் தொடங்கிவிட்டனர்.
அவர்கள் வாழ்க்கை இன்னிங்க்ஸ் தொடங்கி விட்டது இனி அங்கு வயதிற்கு வேலை இல்லை.
அவளின் டாக்டர் கனவை அவன் நிறைவேற்றிவிட்டான், மனம் இணைந்த தம்பதிகளாய் மாறிய அவர்கள் வாழ்க்கை நனவாகியது. அவனோட பல ஆண்டு வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டங்கள் அவனின் மனைவிக்காக மட்டுமே என நினைக்க தோன்றியது.
அடுத்த கட்டத்திற்கான நகர்வை நோக்கி செல்லும் அவர்களை வாழ்த்தி விடைப்பெறுவோம்.
****
டாக்டரான தமயந்தி, சுட்டிப்பெண் உமையாள், நடக்க தொடங்கிருக்கும் இனியன் ஆகிய இருப் பிள்ளைகளோடு நின்றாள் தன் தொரைக்காக வாசலில்..
தொரை புல்லட்டை நிறுத்தியதும் மூவரும் ஏறினர், தன் சொந்த ஊருக்கு தாத்தா, பாட்டிமார்கள், சித்தப்பா, சித்தி, அண்ணன், அக்கா, அத்தைகள், என அனைவரையும் காணுவதற்கு.
தொரை முன்பக்கம் உமையாளும், பின் பக்கம் இனியனும், தமயந்தியும்.
அவர்கள் பயணம் தொடரட்டும்…
…….. நன்றி…
( வணக்கம் நண்பர்களே!
இக்கதை முழுவதும் என் கற்பனையே, கற்பனை என்றாலும் எதார்த்ததை கொடுக்க முயற்சித்தேன், சில கற்பனை நடக்குமா..? என்றால், தெரியாது, இப்பிடி நடந்தால் நல்லா இருக்கும், அவ்ளோதான்.. இக்கதைக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.
போட்டிக்காக எழுதிய காதல் கதை, காதல் இளைஞர் வயதை தாண்டும் போது வந்தால் எப்பிடியிருக்கும். வரக்கூடாதா என்ன…? எனக்கு எண்பதிலும் காதல் செய்ய வைக்க ஆசை..????? ஏன் என்றால் காதலை எப்பிடி எல்லாம் வித்தியாசமாக சொல்ல வைக்கலாமுனு யோசிக்க சொல்லும் மூளை எனக்கு.