காலைப்பொழுது வழக்கமான பறவைகளின் இனிமையான அலறலில் விடிந்தது.
கண் விழித்த தமயாவிற்கு தோன்றியது இது தான், கீழே இப்போது போனால் மாடிக்கு வருவதற்கு விடவே மாட்டார்கள், அதற்கு ஒரேதாக குளித்துவிட்டுப் போய் விடலாம் என எண்ணி, குளிப்பதற்கு உடைகளை எடுக்க சென்றாள்.
‘புடவை தான் கட்டனும் என உயிரை வாங்குறாங்களே’என கடுப்பாக புடவைகளில் ஒன்றை எடுத்தாள் கையில் வந்ததை.
பாத் ரூமிற்குள் சென்றவள் இன்னும் தூங்கும் நளனை பார்த்தப்படியே நடந்தாள்.
‘கொடுத்து வச்ச வீட்டின் தொரை தூங்கிட்டு இருக்கார், நமக்கு வாச்ச வாழ்க்கை இது’என முகத்தைச் சுளித்து உள்ளே புகுந்தாள்.
குளித்ததும் புடவையை எடுத்து அணியப் போனவளுக்கு, ஈரத்தில் அதை கட்ட முடியவில்லை.
‘ச்சே! நேத்து சுடிதார் போட்டு போய் தான் அந்த மாமியார் சேமியா மானத்தை வாங்கினுச்சு இது என்ன குழாயினு, கொடுமையேனு வந்து புடவை எடுத்துட்டுப் போய் கீழே மாத்தினேன். இன்னைக்கு புடவையே கட்டிட்டுப் போகலாமுனு பாத்தா இந்த இடத்தில் முடியாது போலவே..’என லேசாக கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.
நளன் அங்கு இல்லை படுத்திருந்த இடத்தில்.
‘ஓ! எழுந்திரிச்சு போயாச்சா தொரை ஹப்பா! தமயா இன்னைக்கு உனக்கு நல்ல நாள் தான் போல’என பாவாடை, ஜாக்கெட்டோடு புடவையை மார்பின் மேல் போட்டவாறு வெளியில் வந்தாள்.
வேகமாக சென்று அறைக் கதவை சாற்றி தாழிட்டவள், கண்ணாடி முன் நின்று பெருமூச்சு விட்டாள்.
‘ஹப்பா! ஒரு புடவைக் கட்ட எவ்வளவு மூச்சு வாங்க வேண்டியிருக்கு’என எண்ணி புடவையை மார்பில் இருந்து பிரித்து தனியாகப் போட்டு, அதன் ஒரு முனையை மட்டும் பிடித்து இடுப்பில் சொருகினாள்.
மறுமுனை புடவையை எடுத்து சுற்றிக் கொண்டு திரும்பவும், நளன் எதிரில் வரவும் சரியாக இருந்தது.
அம்மினிக்கு இந்த ரூம் பற்றி தெரியவில்லை, இரவு வந்துவிட்டு காலையில் எழுந்துப் போறவளுக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சிரியம் இல்லை தான்.
அறையின் வாயில் நேர் எதிரில் ஸ்க்ரீன் இருக்கும் அதன் பின் ஒரு கதவு, அதில் சிறிய பால்கனி உள்ளது. நளன் எழுந்து அங்கு தான் நின்றுக் கொண்டிருந்தான்.
பாத் ரூம் திறக்கும் சத்தம் கேட்டதும், நாம் போய் முகம் கழுவிடலாம் என நிதானமாக வந்தவன், அவள் முன் நின்றான்.
அவனை கண்ட அதிர்ச்சியில் புடவையின் முனையை விட்டு அப்பிடியே நின்றாள், முன்னழகை மறைக்க மறந்தவாறு.
அவனும் எதிர்ப்பார்க்காமல் அவளை அந்த கோலத்தில் கண்டதும், அப்பிடியே நின்றான்.
நொடிப்பொழுதே இருவரும் திணறியது மீண்ட உணர்வில் நளன் திரும்பி நகர, தமயா புடவையின் முந்தியை எடுத்து அவசரமாக மறைத்தாள் மார்பழகை.
“ஓ! தெரியாது”என்றவள், “காலையில் போயிட்டு நைட் தான் ரூமுக்கே வரேன், எப்பிடி இதை எல்லாம் பாக்குறது.”என மெல்ல முனகிட்டு, புடவையை கட்டுவதற்கு ஆரம்பித்தாள்.
“நேத்து இங்க வரவே இல்லையா..?”
“இல்ல”
“ஏன்..?”
“ம்ம்ம்! புதுப்பொண்ணுனு உங்கம்மா படுத்தி எடுத்து இங்க வரவே விடல, ஒரு நாள் எனக்கு ஒரு யுகம் மாதிரி இருந்தது, ஆமா! மாடியில் தான் தங்குவீங்களா..? ஏன் கீழ உள்ள ரூம் புடிக்காத..?”என்றாள் கடுப்பாக.
“அப்பா, அம்மா வயசானவங்க, சாமி குடும்பத்தோடு இருந்தான் இங்க வந்துப் போறது சிரமமா இருந்துச்சு, நான் தனியா இருந்ததால் இந்த ரூமிலே இருந்துட்டேன். ஏன் உனக்கு கஷ்டமா இருக்கா..?”
“உண்மையை சொல்லனுமுனா இந்த ரூம் நல்ல பிரைவேசியா நிம்மதியா இருக்கு யாரும் வர மாட்டாங்க இங்க, ஆனா நான் இங்க வரனும் அதுக்கு பகல் பொழுது தான் கீழயே போகுதே.”என நொந்து சொன்னாள்.
நளன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
பாத்ரூமுக்குள் சென்று விட்டான்.
தமயாவும் அவனின் பதிலை எதிர்ப்பார்க்கவில்லை, வேகமாக புடவையை கட்டியதும் கீழே சென்றாள்.
***
அவள் சென்ற நேரம் அங்கு ஹாலில் பாண்டி அமர்ந்திருந்தார்.
“அத்தைக்கு நான் கோயிலோடு போனது வருத்தமோ..? அது ஒன்னுமில்ல அத்த என் கூட்டாளி ஒருத்தனுக்கு திடீருனு விபத்து ஆச்சு, அங்க போனா வர முடியல நான் இல்லனா என்ன, அதான் மரகதம் புள்ளைங்க இங்க தானே இருந்தாங்க, பத்தாதுக்கு என் சகல ஒரு ஆள் போதுமே. அவனுக்கு தோதுவா சொந்தத்திலே ஒரு பொண்ணை மாப்பிள்ளைக்கு கட்டி வச்சுட்டான்.” என மழுப்பிப் பூசி தன் விருப்பமின்மையை கொட்டினார்.
அவர் சொல்கின்ற விபத்து எல்லாம் கதை என்று அங்கு யாருக்கும் புரியாமல் இல்லை.
தமயா டீயை எடுத்துக் கொண்டு வந்து நளனிடம் நீட்டினாள்.
அதை வாங்கியவன், “அம்மா நீ குடிச்சுட்டீயா..?”
“நான் குடிச்சுட்டு தானே சாணியே அள்ளப் போவேன் நளனா”
“ம்ம்ம்!”
“இப்ப தானே பாக்க லட்சனமா இருக்கு மருமகளே, இப்பிடி புடவையை கட்டாம அந்த குழாயை மாட்டினா நல்லாவ இருக்கு” என்றார் சரசு தமயாவிடம்.
சாமி எழுந்து மெதுவாக வரவும், மற்றவர்களும் தொடர்ந்து வந்தனர்.
“அப்புறம் மாமா, புவனா நர்ஸ்க்கு படிக்க ஆசைப்படுது, அப்ளிகேசன் வாங்க சொல்லிட்டேன்”
“அட என்ன மாப்பிள்ளை நீ, அது எல்லாம் ஒரு படிப்பா..? நம்ம கௌரவத்துக்கு டாக்டர் படிக்க வைக்க வேண்டாம.?”என்றார் பாண்டி.
தமயாக்கு கடுப்பானது.
“யாரு கௌரவத்துக்கு மாமா..?” என்றான் சாமி.
“ம்ம்ம்! சின்ன மாப்பிள்ளை நம்ம பெரிய மாப்பிள்ளை கௌரவத்துக்கு தான் பின்ன உங்களுக்கும், எனக்குமா அந்த மரியாதை இருக்கு”என அவனை சேர்த்தே வாரினார்.
“மாமா! புவனாக்கு நர்ஸ்க்கு தான் படிக்கனுமாம். அதையே படிக்கட்டும், ஏன் என் கௌரவத்துக்கு என்ன..? என் பொண்டாட்டியே நர்ஸ்ஸா தானே இருக்கா, இப்ப என்ன கொறஞ்சு போச்சு மரியாதை.”என்றான் நளன்.
“ஆமா! ஆமா! மாப்பிள்ளை, இல்ல நானும் டாக்டர் அப்பானு சொல்லிக்கலாமுல”
“என்ன மாப்பிள்ளை மாமாவை கிண்டல் பண்றீயா..?”என சிரித்தாலும் பொண்டாட்டியை பார்த்து முறைத்தார்.
‘அச்சச்சோ வீட்டில் போய் படுத்துவானே’ என நினைத்த மரகதம், “தம்பி! நீ என்ன மாமாவை போய் நக்கல் அடிக்குற..? நம்ம புவனா டாக்டர் படிச்சா பெருமை தானே.” என்றாள்.
“அம்மா! படிக்கப் போறது நான். நீ சும்மா இரு”என்றாள் புவனா.
“ஏய் கழுதை! படிக்குறது தானே உனக்கு வேலை, என்ன படிச்சா என்னா….? உன் மாமன் தானே படிக்க வைக்கப் போறான்”
புவனா நளனை கெஞ்சுதலாக பார்த்தாள்.
“புவனா! மாமி கிட்ட கேட்டு அப்ளிகேசன் போடு, எந்த காலேஜ், பாத்துக்கலாம்” என்றான் நளன்.
“மாமியா…? யாரு அது..?”என்றாள் புவனா.
“அடியேய்! உன் மாமன் பொண்டாட்டி தான்.”என்றார் சரசு.
“ஓ! ஆத்தா அவங்களை நான் அக்கானு கூப்புடுவேன்.”
நளனுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது, கொஞ்சம் ஜர்க் ஆகி தான் அவனின் இங்கரே ஐ பார்த்தான்.
தமயா மனதில்’அவ பாட்டுக்கும் அக்கானு அழகா கூப்புட்டா, இந்த தொரைக்கு என்ன வந்துச்சு இப்ப, அதும் மாமியார் சேமியா முன்னாடி சொல்லனுமா, மாமியாம் மாமி ஏன் மம்மினு கூப்புட சொல்ல வேண்டியது தானே’கடுப்பாகப் பார்த்தாள்.
நளன் அவளின் முகம் மாறுதலை கண்டதும்,’சும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா இப்ப நான் மாமியை சொல்லி மாட்டிகிட்டனா, சரி சமாளிப்போம்’ என எண்ணி, “இங்கரே! இங்க நின்னு என்ன வேடிக்கைப் பாக்குற..? சீக்கிரம் போய் காலை வேலையை முடிச்சுட்டு கெளம்பு” என்றான் தமயாவை பார்த்து.
“இல்லம்மா! ஹாஸ்பெட்டலுக்கு தான்” என அவன் தொடங்கவும், அதற்குள் பாண்டி”என்ன மாப்பிள்ளை அதுக்குள்ள ஹாஸ்பெட்டல் போற வேலை வந்துட்டா.?”என்றார் நக்கலாக.
“மாமா! மாமாவாச்சேனு பாக்குறேன்” என பற்களை கடித்தவன்,
“அவ அங்க தானே வேலைக்குப் போயிட்டு இருந்தா, அந்த வேலைக்கு தான்”
“என்னது வேலைக்கா..? எதுக்கு இப்ப வேலைக்குப் போகனும்..? அதுக்கு எல்லாம் அவசியம் இல்லப்பா”
“அதானே மாப்பிள்ள! நீ இருக்க செல்வாக்குக்கு உன் பொண்டாட்டி வேலைக்குப் போகனுமா..?” என்றார் பாண்டி.
“எனக்கு இந்த செல்வாக்கு ஒன்னும் சும்மா வரல, இதுக்காக நான் இழந்தது தான் அதிகம், அது எல்லாம் சொன்னா உங்க யாருக்கும் புரியப் போறதும் இல்ல, ஏத்துக்கப் போறதும் இல்ல, அவ படிச்சப்படிப்பு அந்த நர்ஸ் வேலை நாலுப் பேருக்கு உதவுறது, அது சமூக அக்கறையோடு பாக்குற வேலை, நம்ம அவசரத்துக்குப் போனா அங்க முதலில் வரது இவளை மாதிரி நர்ஸ் தான். அந்த வேலையை எதுக்கு நிறுத்தனும் நம்ம கிராமம் வளர்ந்த கிராமம் எல்லா வசதியும் இருக்கு, வேலைக்குப் போயிட்டு வரட்டுமா, இப்ப என்ன வீட்டு வேலை முடிச்சு போனா பகலில் லலிதா பாத்துக்க போது, மறுபடியும் ராத்திரிக்கு சேர்ந்துப் பாத்துக்குறாங்க, உனக்கு சரி தானே..?”என தமயாவிடம் கேட்டான்.
“ம்ம்ம்!”என தலையை மட்டுமே ஆட்டினாள்.
லலிதாவிற்கு தான் மட்டும் தனியா கஷ்டப்பட வேண்டுமா..? என தோன்ற, “ஏன் மாமா! நான் மட்டும் தனியா அடுப்படியில் காயனுமா.?” என்றாள் உடனே.
“நீ ஏன் தனியா காயப் போற, அவளும் வந்து உதவுவா, மதியம் மட்டும் நீ பாரு, காலையிலும், ராத்திரிக்கும் அவ பாத்துப்பா”என்றான்.
தமயாவிற்கு வேலைக்குப் போக அனுமதி கிடைத்ததால் அந்த வீட்டு வேலை மனதில் சிரமமாக தெரியவில்லை.
நளனும் இப்பிடி சொன்னால் தான் அம்மா, லலிதா அமைதியாக இருப்பார்கள் என்று யோசித்து வேறு வழியில்லாமல் கூறினான்.
“அது சரி, உடனே வேலைக்குப் போகனுமுப்பா, ஒரு வாரம் ஆகட்டுமே.”
“ஏன்மா! நான் போகலை அடுத்த நாளே, அந்த மாதிரி தானே. போகட்டும் இன்னைக்கே”என நிறுத்தினான்.
பாண்டி பேசுவதற்கு அவன் வாய்ப்புக் கொடுக்கவில்லை, புவனா காலேஜ் செலவும் அவன் கையில் இருக்கின்றதே இப்போது அதனால் பாண்டி கம்மென்று அடங்கினார்.
சரசும் ஒன்றும் மறுக்கவில்லை. தமயாவிற்கு ஒரே சந்தோஷம்.
***
காலை வேலை முடித்துவிட்டு தமயா தங்கள் அறைக்குள் வேகமாக சென்றாள், உடை மாற்றுவதற்காக.
நளனும் குளித்து முடித்து வெளியில் வந்தான்.
தமயா தன் ஹேண்ட் பேக், போன் என எடுத்து வைத்தாள் கட்டிலில். சுடிதாரை கையில் வைத்தவாறு, “ரொம்ப நன்றி” என்றாள்.
“எதுக்கு…?”
“வேலைக்குப் போக வீட்டில் சொன்னதுக்கு தான்.”
“ம்ம்ம்! ஆமா, வேலைக்குப் போயிட்டு வந்து வீட்டு வேலைப் பாக்க உனக்கு சம்மதமா..?”
“அத இப்ப கேக்குறீங்க…?”
நளன் சற்று தடுமாறி தான் அவளை பார்த்தான்.
“இல்ல! அம்மாவும், லலிதாவும் இப்பிடி சொன்னா தான் ஒத்துப்பாங்க அதான்..” என்றான்.
தமயாவிற்கு அவனின் பயந்த பேச்சில் உள்ளுக்குள் லேசாக சிரிப்பு வந்தது,”பரவாயில்ல! நான் சமாளிச்சுக்குறேன்” என்றாள் தலையை ஆட்டிக்கொண்டே, சட்டென்று திரும்பியவள், அவனின் முகம் மாறுதல்களை கண்டு இன்னும் வாயிற்குள் இருந்த சிரிப்பை உதட்டில் மூடி அடக்கிவிட்டு, சுடிதாரை எடுத்துக் கொண்டு பாத் ரூமிற்குள் புகுந்தாள்.
நளன் தலையை குலுக்கிட்டு ‘ஹப்பா! நல்ல வேளை தப்பிச்சடா’என கடைக்கு கிளம்பினான்.
காலை உணவை முடித்துக் கொண்டு, தமயா கிளம்பி வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லியவாறு அவர்கள் வீட்டின் சற்றுத் தொலைவில் இருக்கும் பஸ் ஸ்டாப் நோக்கி நடக்க செருப்பை மாட்டினாள்.
சரசு உடனே”புடவை எல்லாம் கட்டிட்டுப் போக கூடாதா.?”என கேட்டார்.
“இல்ல! இது தான் எனக்கு சிரமம் இல்லாம இருக்கும்”
“அது என்ன அத்தனு சொல்ல மாட்டேனுங்குற, மொறை சொல்லிக் கூப்புடு”
“ம்ம்ம்! சரிங்க அத்த”என்றாள் மெல்ல.
மனதில்’இந்த மாமியார் சேமியா இப்ப விடாது போல, பஸ் போயிடப் போகுது, ஒன்பதுக்கு எல்லாம் வந்துடுமுனு புவனா சொன்னாளே’என புலம்பினாள்.