பேருந்து நிறுத்தம் வந்தது. தோளில் தொங்கிய கைப்பையில் மதியம் உணவிற்கு இட்லி நான்கு எடுத்து வைத்துக் கொண்டு வந்தாள். அவள் அம்மா வீட்டில் இருந்து எதற்கும் கொண்டுப் போகலாமென்று அவளின் வழக்கமான டிபன் பாக்ஸை எடுத்து வைத்திருந்தது வசதியாக இருந்தது இப்போது.
வெறும் இட்லிகள் மட்டுமே எடுத்து வைத்திருந்தாள் ஏன் என்றால் தேங்காய் சட்னி கெட்டுப் போய்விடும், அங்கு பக்கத்தில் இட்லிப் பொடி வாங்கி கொள்ளலாம் என்று எண்ணி இருந்தாள்.
‘ச்சே! என் மனசு ஏன் இப்பிடி சங்கடத்தில் தவிக்குது, ஒழுங்கா அந்த தொரை கிட்ட சொல்லிட்டு வந்திருந்தா, மனசு செவனேனு இருந்திருக்கும், இப்ப என் உயிரை வாங்குது’என நொந்துக் கொண்டே வலதுப்பக்கம் திரும்பிப் பார்த்தாள் பஸ் வருகின்றாதென்று.
நிறுத்ததில் சிலர் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள், டவுன் செல்லும் ஆட்கள், அவளைப் போல் வேலைக்கு செல்பவர்கள் என பத்துப் பேர் நின்றார்கள்.
அந்த ஊருக்குள் பஸ் வருவதில்லை இந்த நிறுத்தம் மெயின் ரோட்டில் உள்ளது இங்கு வந்து தான் பஸ் ஏற வேண்டும் அதுவும் டைமுக்கு தான் வரும்.
பின்னால் ஏதோ சத்தம் கேட்டது, மனமோ அதட்டியது’அடியேய் தமயா! இந்த ‘டொட்’டொட்’ சத்தம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே..?’என்றது.
‘அது நம்ம வீடடுத் தொரையோட புல்லட் தான்டி’என வேகமாக திரும்பிப் பார்த்தாள்.
அதுவரை அவளை புலம்ப விட்ட ஆயுசு நூறுக்கு சொந்தகாரன் நளன் தான் வந்துக் கொண்டிருந்தான்.
நொடியில் கண்களை திறந்தவள்’ஆத்தி! இப்ப எப்பிடி கூப்புடுறது..? பேசாம மணவாளனு கூப்புடுவோமா..? ச்சே! நம்ம என்ன புருசன் பேரைச் சொல்லிக் கூப்புடும் சிட்டியிலா இருக்கோம். இப்ப பேரை சொன்னா எல்லாம் என்னைய விசித்திரமா பாப்பாங்க’என எண்ணி குழம்பி நின்றவள் காதில் விழுந்தது இந்த குரல்.
“ஏய்யா மணவாளா! செத்த நில்லு..” என்ற ஒரு ஆத்தாவின் குரல்.
தமயா’ஆத்தா! நீ தெய்வம்’என்றாள் மனதில்.
அவன் பைக்கை நிறுத்தி”என்ன சின்னம்மா..?”எனக் கேட்டான்.
“ஏய்யா! டவுன் வழியா போறீயா..?”
“ஆமா!”
“என்னைய செத்த அந்த சந்தையில் இறக்கி விட்டுப் போறீயா..? ஒரு பஸ்ஸும் நிறுத்த மாட்டேனுங்குறான். நானும் விடியல இருந்து நிக்குறேன், இந்த புளி மூட்டையை பாத்துட்டு போயிடுறான், இல்லனா தனியா டிக்கெட் கேக்குறான்”
“பின்ன, மூட்டைக்கு காசு கேக்க தானே செய்வானுங்க சின்னம்மா, குடுத்துட்டு ஏத்தி போட வேண்டியது தானே.”
“என்ன ஒரு முழு ஆளு காசா கேப்பானுங்க, போக்கத்தப்பயல்க. சரி நீ போற வழியில் என்னைய இறக்கிட்டுப் போயய்யா”என்றார் கெஞ்சதலாக.
தமயா அவன் தன்னை பார்ப்பான் சைகை காட்டலாமென்று பார்த்துக் கொண்டே இருந்தாள், அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை.
“சரி! சரி! ஏறு, ஆனா இனிமே இப்பிடி எல்லாம் நான் போகும் போது கூப்புடாத சரியா..? எனக்கு பல வேலை இருக்கும்.” என சற்று காட்டமாக கூறியவன், தொலைவில் நின்ற ஒருவனை அழைத்து மூட்டையை ஆத்தா அருகில் வைக்க சொன்னான்.
அவனுக்கு தமயா நிற்பது தெரியும், ஆனால் தன்னிடம் சொல்லாமல் வந்துவிட்டாள் என்ற கோபம் எல்லாம் இல்லை.
அவனும் அவளிடம் நேற்று தனியாக ஒன்றும் சொல்லிவிட்டு கிளம்பவில்லை என லூசில் விட்டான்.
வீட்டிலே பெரிதாக பேசுவதற்கு ஒன்றுமில்லை ரோட்டில் பார்த்து உரையாட என்ன இருக்கு என அவன் கண்டுக்கொள்ளவில்லை.
தன் புல்லட்டின் கண்ணாடி வழியே எதேச்சையாக பார்த்தவனுக்கு தமயா தன்னையே பார்ப்பது தெரிந்தது.
சட்டென்று திரும்பி பார்த்தான்.
அதுவரை எப்போது திரும்புவான் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்தவள் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டாள்.
‘நீ என்ன இந்திய பிரதமரா..? அமெரிக்க அதிபரா..? இல்ல முதலமைச்சரா..? உன் நம்பர் கண்டுப்பிடிக்க, தர்மா அண்ணே கிட்ட கேட்டா கொடுக்கப் போது.’என மனம் நகைத்தது.
****
தமயா மருத்துவமனைக்குள் நுழைந்து கையெழுத்துப் போட்டு பணியை ஆரம்பித்தது முதல் கேட்காதவர்களே இல்லை..
“புதுப்பொண்ணு அதுக்குள்ள வேலைக்கு வந்துட்ட..?”
“இன்னேரம் ஹனிமூன் போயிருப்பனு நினைச்சோம்”
“ஒரேதா நம்ம டாக்டர் கிட்ட செக் அப் வருவனு நினைச்சோமுடி”என மாறி மாறி கிண்டல் செய்தனர்.
தங்கலெட்சுமி தமயாவின் பள்ளித் தோழி, அதே மருத்துவமனையில் வேலைப் பார்ப்பவள்.
“கல்யாணத்திற்கு முதல் நாள் வரை வேலைக்கு வந்து, அடுத்த மூன்றாவது நாளே வேலையில் சேர்ந்தவள் நீ ஒருத்தி தான்டி தமயா.. கலக்குற போ”என்றாள் தங்கம்.
“ஏய்! மத்தவங்க தான் தெரியாம கிண்டல் பண்றாங்க, நீயுமா.? எனக்கு எப்படா அந்த வீட்டில் இருந்து ஓடி வருவோமுனு இருந்துச்சு..”
“அது சரிடி, வேலைக்கு அனுப்புவாங்களானு தெரியலைனு சொன்ன, ஆனா இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட.?”
“எல்லாம் நான் கட்டிக்கிட்ட தொரை தான் காரணம்.”
“என்னடி சொல்ற..?”
“அவர் கிட்ட சொன்னேன்டி நான் வேலைக்குப் போகனுமுனு. சரினு வீட்டில் பேசி அனுப்பிட்டார்.”
“ஹேய் நல்லவர் மாதிரி தானே தெரியுது, அப்புறம் ஏன்டி அவர புடிக்கலைனு சொன்ன.?”
“ம்ம்ம்! இதுக்காக எல்லாம் புடிச்சுப் போயிடுமா லூசு. அவர பாத்தாலே எனக்கு வயசு தான் முன்னாடி வந்து நிக்குது. என்னால ஏத்துக்கவே முடியல. ஆனா நான் என்ன செய்றது வேற வழியில்லாம இருக்கேன்.”என இந்த மூன்று நாட்களில் அவர்கள் பெட் ரூமில் நடந்தது முதற்கொண்டு கூறினாள் தமயா.
“தமயா! எனக்கு என்னமோ நீ அவரோட வயசை மறந்து அவர் பக்கத்தை யோசிக்கனுமுனு தோணுது. உனக்காக நிறைய விட்டுக்கொடுக்குற மாதிரி தெரியுது.”என்றாள் சிறந்த தோழியாக.
“நான் என்ன இப்ப வாழ முடியாதுனா சொல்றேன் அதான் வாழுறேன், புள்ளப் பெத்து தரேனு சொல்லிட்டேன்ல அப்புறம் என்னடி. ஆனா மனசால என்னால அவரை எனக்கு புருசனா பாக்க முடியலடி”என்ற தமயாவின் கண்கள் கலங்கியது.
“சரிடி! அமைதியாகு.”
“உனக்கே தெரியும், நான் சின்ன வயசில் இருந்து கஷ்டப்பட்டு தான் வளர்ந்தேன். ஆனா என்னோட கனவு உனக்கு தெரியுமுல, என் குடும்பத்துக்கும் என் கனவுக்கும் ஏணிப்படி வச்சாலும் எட்டாதுடி. அதனால கிடைச்சதை ஏத்துக்கிட்டேன். அது தான் அமையல கல்யாண வாழ்க்கையாச்சும் என்னோட ஆசைப்படி எனக்குனு ஒரு மனசுக்கு புடிச்சவன் வருவானு நினைச்சேன் அதுவும் இல்ல, இதிலும் கிடைச்சதை ஏத்துக்கிட்டேன். இனி நான் என்ன தான் செய்யனுமுடி..”என்றாள் அழுகையுடன்.
“சரி! புரியுது எதையும் யோசிக்காத”என ஆறுதல் செய்தாள் தங்கம்.
அதற்குள் தமயாவை ஒரு பேஷண்ட்க்கு ட்ரிப் முடியப் போகுதென்று அழைத்ததால் எழுந்து சென்றாள்.
“எதுக்குடி அழுது முகத்தை துடைச்சுட்டு போறா.?”என கேட்டுக் கொண்டே வந்தாள் நதியா, மருத்துவமனையில் வந்து வேலையில் பழக்கமான மற்றொரு தோழி.
“ம்ம்ம்! அவ கனவுக்கு கொஞ்சம் வசதி இருந்திருந்தா இந்த ஹாஸ்பெட்டலில் டாக்டரா ஆகியிருப்பாடி, நல்லா படிப்பா ஸ்கூல் ஃபர்ஸ்ட், இப்ப பாரு டாக்டருக்கு எடுப்புடியா இருக்கா, பாவம் கல்யாண வாழ்க்கையும் அவ ஆசைப்படி அமையல.”
நதியா”ம்ம்ம்! அதான் தெரியுமே வயசு அதிகமானவருனு..”
“ஆனாலும் நதி, இவ சொல்றதை வச்சு பாத்தா, அவரு நல்லவரு மாதிரி தான் தெரியுதுடி. ஆனா சொன்னா ஒத்துக்காம அழுவுறா”
“அவ ஆசைப்பட்டது எதுவுமே கிடைக்கலனு விரக்தி அவளுக்கு, பாவம் தான், அவளோட ஆசை ஒன்னும் பேராசை இல்லையேடி, நல்லா படிச்சதால டாக்டர் ஆக ஆசைப்பட்டா, அவ அழகு, வயசுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை ஆசைப்பட்டா இது சாதரணமாக பொண்ணுங்க ஆசை தானடி தங்கம்.”
“ம்ம்ம்! புரியுது நம்ம என்ன பண்ண முடியும். ஆறுதல் தான் சொல்ல முடியும். விதினு ஒன்னு இருக்குல அத மாத்த யாரால முடியும்.”
***
மதியம் முடியும் வேளையில் நான்கு மணிக்கு தான் தமயா ஃபோனையே பார்த்தாள்.
ஒரு சுகபிரசவம் கேஸ். டாக்டர் வர லேட் ஆனதால், தமயா தலைமையிலே சமாளித்தார்கள்.
தமயாக்கு வயசு அனுபவம் குறைவு என்றாலும் அவளுக்கு அத்தொழிலில் ஆர்வம் அதிகம், டாக்டருக்கு இணையாக கற்றுக் கொண்டே இருந்தாள்.
மகப்பேறு மருத்துவர் தமயாவை முழுமையாக நம்பி பக்கத்திலே வைத்துக் கொள்வார் அனைத்து விதமான கேஸ்களுக்கும்.
அதனால் தமயாவே பேஷண்டை சமாளிக்க, டாக்டர் கடைசி நேரத்தில் வந்து பிரசவம் சுகமாக முடிந்தது.
அந்த டென்சனில் தமயா ஃபோனையே மறந்தாள்.
வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்ததும் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். மூன்று மிஸ்டு கால் ஒரே நம்பரில் இருந்து, வெவ்வேறு நேரத்தில்.
மனதில்’தொரையோ.?’என தோன்றியது.
உடனே நம்பரை சேவ் பண்ணி வாட்ஸ் ஆப் சென்று பார்த்தாள்.
அதில் போட்டோ அவனோடையது தான் இருந்தது.
வாலிபத்தில் எடுத்த போட்டோ போல அது இருபதில் இருக்க வேண்டும். இப்போது இருப்பதற்கு ஒல்லியான உடல்வாகில் இருந்தான். பார்க்கவே நோஞ்சனாக தெரிந்தான்.
தலையை அசைத்தவள், உடனே அந்த நம்பருக்கு கால் செய்தாள், திட்டப் போகின்றாரோ தொரை என தலையை குலுக்கினாள்.
“பாதி தூரம் வந்ததும் தான் நினைச்சேன் சொல்லாம வந்ததை மறுபடியும் வீட்டுக்கு வந்தா மாமியார் சேமியா… ஷ்ஸ்ஸ்!”என நாக்கை கடித்தவள், “உங்க அம்மா ஏதாச்சு கேப்பாங்கனு வந்துட்டேன்”என்றாள் தன் மண்டையில் தட்டிக் கொண்டே.
“ம்ம்ம்! அதுக்கு என்ன..? நானும் சொல்லாம தானே போறேன். பரவாயில்ல.”
“நேத்து, நீங்க தலையாச்சும் ஆட்டிட்டுப் போனீங்க. ஆனா நான் நன்றி மறந்துட்டேன். என்னைய வேலைக்கு அனுப்பியது வீட்டில் பேசி நீங்க தான். அதான். இனி சரியா இருந்துக்குறேன்”என்றாள் கடகடவென்று.
“எப்ப வேலை முடிஞ்சு கிளம்புவ..?”
“இதோ இப்ப கிளம்பிடுவேன்”
“சரி! பத்திரமா போ”என ஃபோனை வைத்தான்.
தமயாவிற்கு ஏதோ ஒரு சிறிய எண்ணம் தோன்றியது அவன் மேல், நாட் பேட்னு. இவ்ளோ பொறுமையாக பேசுகின்றானே என்று.
***
ஆறரை மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு சென்று உடை மாற்றிப் புடவை கட்டிவிட்டு வந்து கிச்சனில் நுழைவதற்கு சரியாக அமைய, அவளுக்காக அடுப்பு வேலை காத்திருந்தது.
மதிய சமையல் வேலை முடிந்ததால் இரவு உணவு தயாரிப்பு தமயா தலையில் வைத்திருந்தாள் லலிதா.
டீ போட்டு குடித்தவளுக்கு, உட்கார நேரமில்லாமல் வேலை வந்தது.
மாவு இல்லை வீட்டில், தமயா லலிதாவிடம் கேட்க, அவளோ நீ அரைத்து வைத்துவிட்டு போனால் தான் இருக்கும், நான் அரைத்து வைத்து நீ தோசை, இட்லி ஊற்றிக் கொடுப்பதற்கு நானே இரவு சமையலும் செய்ய மாட்டேன் பாரு என்றாள்.
தமயாவிற்கு அய்யோ என்றிருந்தது. சரி! நாளைக்கு மாவு வேண்டுமென்று அரிசி, உளுந்து ஊற வைத்தாள் இரவு அரைக்கும் எண்ணத்தில்.
ஆனால் இரவிற்கு உணவு என்ன செய்வது, சரி கோதுமை தோசையை ஊற்றி வைத்துவிடுவோம் என அதை கரைத்து ஊற்றி ஹாட் பேக்கில் அடுக்கினாள். தக்காளி சட்னி வைத்தாள்.
தமயாவிற்கு சமையல் ஓஹோனு வராது, ஏனா அவள் வீட்டில் வகைகளான பதார்த்தங்கள் இல்லை. சாம்பார், புளிக்குழம்பு, மீன் பொடி, எப்போதாவது ஆட்டுக்கறி, இல்லை என்றால் ரேஷன் அரிசி கஞ்சி, அதில் வாங்கும் கோதுமை தோசை, பல நாட்களில் முதல் நாள் இரவு குழம்பு அடுத்த நாள் மதியம் வரை ஓடும், இவ்ளோ தான் அவள் வீட்டுச் சமையல்.
அதற்கு மேல் அவள் சாப்பிடுவதற்கு ஆசைப்பட்டதில்லை, வேலைக்குப் போன பிறகு மருத்துவமனை அனிவெர்சரி, டாக்டர்ஸ் மீட்டிங் என பார்ட்டியில் வித விதமாக வகைகள் பார்த்து அறிந்துக் கொண்டாள்.
ஆனால் இங்கு சாப்பாட்டிற்கு மூன்று வேளைகளும் புதுசு புதுசா தேவைப்படும் போல் தோன்றியது.
மதியம் சமைத்தது மீதம் இல்லை, இரவிற்கு புதிதாக சமைக்க வேண்டும்.
நளன் நன்கு சம்பாரிக்க ஆரம்பித்ததும் வந்த பழக்கம் தான் இங்கு.