தமயா அவன் பக்கம் திரும்பவும் தான், தன்னை நோக்கி கேட்கின்றான் என புரிந்தது.
“கேள்விப்பட்டிருக்கேன், ஆனா பெருசா அந்த விரத முறைகள் பற்றி தெரியாது”
“ஏன் நீ சாமி கும்பிட மாட்டீயா…?”
“ஓ! நல்லா கும்புடுவேன், போற வழியில் கோயில் இருந்தால் வாசலில் நின்னு கன்னத்தில் போட்டு உதட்டில் தொட்டு வணக்கம் சொல்லிட்டு போறதோட சரி, இந்த விரதம் எல்லாம் இருந்ததில்லை, நாங்களே விரதம் மாதிரி தான் தினசரி சாப்பாடே சாப்புடுவோம் இதில் தனியா வேற இருக்கனுமா” என நக்கலாக கூறி சிரித்தாள்.
“ம்ம்ம்! நானுமே இப்பிடி தான். ஆனா வீட்டில் பயங்கரமா இருக்கும், எல்லா விரதமும் இருப்பாங்க மாசா மாசம். நீ என்ன செய்யப் போற..?”
அவளோ அவன் கேட்டதை விட்டு “ஆமா! உங்க கிட்ட ஒரு சந்தேகம கேக்கனும்…?”
“என்ன…?”
“நீங்க இட்லிக்கு உளுந்து எங்க வாங்குறீங்க…?”
“ஏன்..? வழக்கமான நம்ம எம் ஆர் கடையில் தான்.”
“இல்ல! இன்னைக்கு மாவு அரைச்சேன் அது ஓடவே இல்ல ஒழுங்கா, எப்பிடியோ அரைச்சு வச்சுட்டேன். வீட்டில் வேற யாரும் இல்ல”
நளன் புருவத்தை சுளித்து, “எப்ப ஊற வச்ச..?”
“வந்து தான் ஆறரை மணிக்கு அப்புறம்.”
“எப்ப அரைச்ச…..?”
“ஏழரை இருக்கும்”
“உங்க வீட்டுல மாவு அரைச்சது இல்லையா..?”
“இல்ல! நாங்க அவ்வளவா இட்லி, தோசை எல்லாம் போடறதில்லை, அப்பிடியே போட்டாலும் அம்மா தான் அரைச்சு வைக்கும். ரொம்ப அற்புதமாய்.”
நளனுக்கு மனதில் சிரிப்பு தான் வந்தது’இவள் எப்போது எப்பிடி பேசுறானு தெரிய மாட்டுது, திடீருனு நல்லா பேசுறா.. திடீருனு முறைக்குறா’என அவனும் நித்திரையை தேடினான்.
***
நளன் காலையில் முழித்ததும் ஏதோ புதுக் குரல் கேட்டது, என்னதென்று திரும்பி பார்த்தான்.
அவனின் துணைவி ஃபோனில் பூரி, கிழங்கு செய்யும் முறையை பார்த்து மனப்பாடம் செய்துக் கொண்டிருந்தாள்.
நளன் மனதில்’ஓ! இதான் அந்த ட்ரை பண்றேனு சொன்னதா..’என எண்ணி எழுந்தான்.
தமயா கிச்சனில் நுழைந்ததும் லலிதா கேட்டக் கேள்வி இது”என்னத்த போட்டு மாவு அரைச்ச..? அது அரைச்சப்படியே இருக்கு”என்றது தான்.
“அரிசி, உளுந்து தான்.”
“அது தெரியுது, இந்த வெயிலுக்கு பொங்கவே இல்ல, வெந்தயம், உப்பு எல்லாம் போட்டீயா..?”
“உப்பு ஊத்தும் போது போடக் கூடாதா..?”
லலிதா அவளை ஒரு பார்வை பார்த்தாள். “மாவு அரைக்க தெரியாதா.?”
“அரைச்சதில்லை!”
“ம்ம்ம்! ராஜாங்கத்தில் இளவரசி மாதிரி வளர்ந்தீங்களோ..?” என்றாள் நக்கலாக.
தமயாவுக்கு கோபம் வந்தது, அவள் வீட்டுச் சூழ்நிலையில் இட்லி எல்லாம் அடிக்கடி கிடைக்காது, அதனால் தெரியாது.
“ராஜாங்கத்தில் பணிப்புரியும் சேவகி வீட்டில் பதார்த்தங்களுக்கு வழியில்லை, அதனால அவளுக்கு செய்யத் தெரியாது”என்றாள் கடுப்பாக.
“இங்க அப்பிடியில்லை எல்லாம் தான் செய்யனும். ஏதோ பண்ணு எனக்கென்ன..? அந்த மாவு புளிக்காது தூக்கி மாட்டுத்தொட்டியில் ஊத்து, எனக்கு வேலை மதியத்துக்கு தான், அதுவே சோறு, குழம்பு, ரசம், ரெண்டுப் பொரியலுனு வைக்கனும்”என வெளியேறினாள் வெளி வேலைப் பார்க்க.
தமயா’அய்யோ! சமையலை விட இதுங்களை சமாளிக்குறது கஷ்டம் போல’என கோதுமையை எடுத்தாள் பிசைவதற்கு.
மாவை பேஷனில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைய ஆரம்பித்தாள்.
பத்துப் பேர் மேல் இருப்பதால் மாவு அதிகமாக போட்டதால் பிசையவே முடியவில்லை.
‘ச்சே! பேஷண்டுக்கு ஆப்ரேசன் கூட பண்ணிடலாம் போல இந்த மாவு பிசைவதற்கு, கடவுளே’என ஐந்து விரல்களையும் மாவாக்கினாள்.
இடையில் தலை முடிகளை ஒதுக்க போக, நெற்றியில் மாவு, கன்னத்தில் மாவு என அப்பிக் கொண்டாள்.
மாவு தான் இன்னும் ஒரு நிலைக்கு வரவில்லை.
நளன் எழுந்து ஹாலிற்கு வந்தான். மற்றவர்கள் எழவில்லை.
சரசு பின் கொட்டகையில் இருந்தார்.
நளனுக்கு டீ குடிக்க தோன்றியது, ஆனால் யாரும் இல்லாததால் அடுப்படிப் பக்கம் எட்டிப் பார்த்தான்.
அவளின் தலைமுடி, கன்னம், நெற்றியை எல்லாம் பார்த்தவன், “குளிச்சுட்டீயா..?” என கேட்டான்.
“ம்ம்ம்!”என்றாள் புரியாதவாறு.
“மறுபடியும் குளிக்க அவசியம் வரும்”என வெளியில் எட்டிப் பார்த்தான் யாருமில்லை.
வெள்ளை உள் பனியன், வேஷ்டியோடு நின்றவன், வேஷ்டியை மடக்கி கட்டிட்டு, முகம் துடைப்பதற்காக தோளில் கிடந்த துண்டு மற்றும் கையில் இருந்த பேப்பரை ஓரமாக வைத்தான்.
அந்த மாவில் போதுமானளவு இன்னும் தண்ணீர் ஊற்றி ஐந்தே நிமிடத்தில் பிசைந்து முடித்தான்.
அவனையும், மாவையும் மாறி மாறி பார்த்தவள் அசந்து நின்றாள்.
உலோக உருண்டையாக வைத்தவன்,
வாஷ்பேஷன் சென்று கையை கழுவிட்டு, “டீ ரெடியா..?”என கேட்டான்.
“ஆ!”என அவசரமாக அதை வடிக்கட்டி கொடுத்தாள்.
டீயை வாங்கியவன் பேப்பர், துண்டோடு வெளியேறினான்.
தமயா அந்த மாவு உருண்டையை கை வைத்துப் பார்த்தாள்.
‘ஐ! அழகா வந்துட்டே, நம்ம இவ்வளவு நேரம் மெனக்கெட்டோம்’என முகத்தில் சந்தோஷம் வந்தது.
வேகமாக பூரிக் கட்டையை எடுத்து அடித்து அடித்து வரிசையாக அடுக்கி, ஒவ்வொன்றாக பொரித்து எடுத்தாள்.
உருளை கிழங்கு மசாலா செய்து முடிக்க, மணி ஆகியது.
அவசரமாக ஓடினாள் தன் அறைக்குள்.
‘இந்த மாமியார் சேமியா வேற, நைட்டிப் போடக் கூடாதுனு சொல்லி புடவையை கட்டி கழட்ட வேண்டியதா இருக்குனு, அதை கழட்டியவாறு கண்ணாடியை பார்த்தவளுக்கு அப்ப தான் புரிந்தது அவளின் தொரை சொன்னது.’
‘அடக்கடவுளே!’என ஓடிப்போய் முகத்தை மட்டும் கழுவிட்டு, தலையை தண்ணீர் வச்சு மாவைத் துடைத்துவிட்டு உடை மாற்றினாள்.
மரகதம் வீட்டுக்காரர் பத்து நாட்கள் வெளியூர் போறதால் மனைவி, மக்களை இங்கயே இருக்க சொல்லி விட்டுப் போயிட்டார்.
“அது சரி!”என சரசுக்கு கோபம் வர, தமயாவும் சரியாக வேலைக்கு கிளம்பி வந்தாள்.
“ஏம்மா மருகளே! உனக்கு மாவு அரைக்க தெரியாதா..? அந்த உளுந்தை ஊற வச்சு தான் அரைக்குறது”
“இல்லங்கத்த! வந்து தான் ஊற வச்சேன், நேரம் பத்தல”என சமாளித்தாள்.
“ஏன் நீ வந்து ஊற வச்சு தான் அரைக்கனுமா..? ஏம்மா சின்ன மருமகளே! நீ அந்த மாவை அரைச்சா என்ன..?”
“நான் அரைச்சு வச்சா, அப்புறம் உங்க புது மருமகளுக்கு என்ன தான் வேலை..? மாமா தானே சொன்னார், மதிய வேலை எனக்கு, காலை, ராத்திரிக்கு பொண்டாட்டி பாப்பானு, எல்லா நேரமும் நானே செய்யனுமா.? இந்தா அத்தாச்சிக்கு முதுகு வலினு படுத்துக்கிறாங்க, இந்த பிள்ளைவளும் டிவி, ஃபோனை பாத்துட்டு எழுந்திரிக்க மாட்டுதுவ, மதியமுனா சாதரண வேலையா என்ன..?”என நீட்டினாள்.
“இந்தா! இரு இரு இப்ப நான் என்ன கேட்டேனு நீட்டிட்டே போற..? என்னமோ செய்யுங்க, ஆனா இப்பிடி வீணடிக்காதீங்க அந்த கடவுள் பாப்பார், ஏம்மா நீயும் பொறுப்பா பாரு வேலையை பொருட்களை வீணடிக்காம, அரிசி, பருப்பு விக்குற விலை தெரியுமா..? தெரியாதா..?”என தமயாவை சாடினார்.
நளன் எதுவும் பேசவில்லை. தமயா அமைதியாய் நின்றுவிட்டு சமையல் அறைக்குள் சென்று அவளின் டிபன் பாக்ஸை சும்மா எடுத்து ஹேண்ட் பேக்கில் போட்டு கிளம்பினாள் நேரமாகியதால்.
இன்னைக்கு யாரிடமும் சொல்லவில்லை, மனதில் அத்தனை கோபம். காலையில் சாப்பிடவும் இல்லை.
யாரும் கேக்கவும் இல்லை, அவரவர் வேலையைப் பார்த்தனர்.
“ம்ம்ம்! தெரியும் நீ சாப்புடு, உனக்கு மாவு அரைக்க தெரியுமா..?”
“தெரியாது!”
“கனிகாவுக்கு”
“தெரியாது!”
“அக்கா! உன் ரெண்டுப் பொண்ணுங்களுக்கும் சொல்லிக் கொடுத்துடு மாவு அரைக்க, நாளைக்கு உன்னைய மாதிரி நாத்தனார் கேட்டுட போகுது, கனிகாவுக்கு வேற மாப்பிள்ளை பாத்துட்டு இருக்கோம்” என கூறிவிட்டு எழுந்து சென்றான்.