காலங்கள் மாறினாலும் கடிதங்கள் எழுதுவதில் உள்ள சுகமே தனி தான்.
இருவருக்குமே அந்த அனுபவம் இல்லை.
ஆனால் எதிர்ப்பாராமல் அமைந்த இந்த காகிதப் பயணம் ஏனோ மனதை ஈர்த்தது.
“என் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியது இல்லை இதுவரை”
….தமயந்தி….
என எழுதியவள், அப்பிடியே வைத்துவிட்டு சென்றுப் படுத்துக் கொண்டாள்.
நளனின் மனம் அவள் ஏதோ எழுதுவதை பார்த்து என்னவென்று பார்க்க எண்ணியது.
ஆனால் அதை கட்டுப்படுத்தியவன் தன் வேலையைத் தொடர்ந்தான்.
தூங்கலாம் என விளக்கை அணைக்க சென்றவன் கண்ணில் பேப்பர் படவும், எடுத்துப் படித்தான்.
திரும்பி, உறங்கும் அவளை பார்த்தவனுக்கு அவளிடம் ஏக்கங்கள், ஏமாற்றங்கள் அதிகம் இருப்பதாக தோன்றியது.
அவளின் ஏமாற்றங்களில் தானும் ஒருவன் என நினைக்க மனம் வருந்தியது.
விரக்தியாக சிரித்தான்.
கணக்குப் பார்க்கவென்று நோட்டுகள் புதிதாக வாங்கி வைத்திருப்பான்.
அதில் ஒரு புது நோட்டை எடுத்தவன், அவள் எழுதிய பேப்பரை அதில் வைத்து,
முதல் பக்கத்தை விட்டுட்டு அடுத்தப் பக்கத்தில் ஒன்றை எழுதி, மூடி வைத்தான் பேனாவோடு..
அவளின் ஏமாற்றங்கள், ஏக்கங்கள் தீர அந்த எழுத்துப் பயணம் தொடர்ந்தால் நல்லதென்று மனதிற்கு பட்டது அவனுக்கு.
****
விடியற்காலை வழக்கம் போல் மாற்றமே இல்லாமல் விடிந்தது.
நளன் அவள் குளிக்கும் நேரத்தில் எழுந்து பால்கனியில் நின்றான். அவள் வந்து புடவைக் கட்டி முடிக்கும் வரை அங்கே நின்றவன், பிறகு தாமதமாக வந்து பாத் ரூமிற்குள் நுழைந்தான்.
தமயாவும் கண்ணாடி முன் நின்று பொட்டு வைத்துவிட்டு நகரப்போகும் போது, அந்த புது நோட்டை நோட்டமிட்டாள்.
புருவத்தை சுளித்துக் கொண்டே திறந்து பார்த்தவள், முகத்தில் லேசான சிரிப்பு வந்தது, முடிவிலியாக செல்வதை எண்ணி.
“ஏமாற்றங்கள் என்பது இயல்பு ஏக்கங்கள் என்பது உரிமை
எதிர்ப்பார்ப்பில் இரண்டும் முக்கியம்
இயல்பும், உரிமையும் நிறைவேறும்”
…………..மணவாளன்……….
தமயாக்கு முதன் முறையாக ஒரு வித்தியாசமான மனநிலை தோன்றியது நளன் மீது.
எப்பிடி தன்னை வெறுக்கும் ஒருத்திக்காக இப்பிடி நம்பிக்கை கொடுக்க முடிகிறது இவனால், என பிரமித்துப் பார்த்தாள் தொரையை.
அவளுக்கு பதில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை, அப்பிடியே மூடி வைத்துவிட்டு கீழே சென்றாள்.
***
காலை வேலைகள் தொடர ஆரம்பித்தது. திடீரென்று சரசு குரல் கேட்டது”வாங்க மாப்பிள்ள! வாங்க சம்பந்தி!”என்ற அழைப்பில்.
நளனும் ஹாலில் தான் அமர்ந்திருந்தான்.
“வாடா!”என்றவன், மற்றொருவரை “வாங்க!”என்றான்.
தமயா யார் என்று எட்டிப் பார்க்கவும் முகம் மலர்ந்தது.
“வாம்மா! வாங்க அண்ணா!”என அழைத்தப்படி, தன் தாயின் அருகில் சென்றாள்.
தர்மனும், தமயா அம்மா சொர்ணமும் வந்திருந்தனர்.
“நல்லா இருக்கியாட தமயா..?”என மெல்ல மகளை விசாரித்தவர், சென்று சுவர் ஓரமாக நின்றார்.
“வேலைக்கா..? யாரு இவ போறாள..? சொல்லவே இல்லையே. நான் மாப்பிள்ள வெளியில் போயிடுவாறேனு பாக்க வந்தேனுங்க சீக்கிரம்”என்றார் சொர்ணம் புரியாமல்.
“தமயந்தி வேலைக்குப் போறீயா..?”என கேட்டான் தர்மன்.
அவளோ ஆம் என தலையை மட்டுமே ஆட்டினாள்.
சொர்ணம் அவளை முறைத்தார்.
“ஆமான்டா! நான் தான் போக சொன்னேன், எதுக்கு வீட்டில் சும்மா பொழுதைப் போக்கனும் நல்ல வேலை, மனுசங்க உயிருக்கு உதவுற வாய்ப்பு தானே.”என்றான் பொதுவாக நளன்.
சரசு”என்னமோ அவன் பொண்டாட்டி அனுப்புறான் சம்பந்தி, ஆனா எத்தனை நாளைக்குப் போக முடியும். நாளைக்கே புள்ளக் குட்டி வந்தா வீட்டுல பொழுது கெடைக்குமானு பாப்போம், அது கெடக்குது அப்பிடி என்ன மருமவனை பாக்க காலையிலே வரனும்”என இழுத்தார் சரசு.
“ஆமா! ஆமா! உங்க பக்கம் சாமிக் கிட்ட தான் செய்யனும். தாலிச்செயின் இருக்கு, தாலிக்கு காசு மட்டும்..”என இழுத்தவரை…
“அது இருக்கு சம்பந்தி”என்றார் உடனே சொர்ணம்.
“ம்ம்ம்! இருந்து சாப்புட்டுப் போங்க”
தமயா தன் தாயை அடுப்படிற்குள் அழைத்துச் செல்ல, தர்மனும், நளனும் பேச ஆரம்பித்தனர்.
“நல்லா இருக்கியா தமயா..?”
“பாத்துட்டு தானே இருக்க, எப்பிடி இருக்கேன்..”
“ஏன்டி! இன்னும் திட்டிட்டே இருக்க, அம்மா என்ன உனக்கு கெட்டதா நெனப்பேன்”
“சரி! இரு சாப்புடலாம்”என வெந்த இட்லியை எடுத்து வைத்துவிட்டு அடுத்த ஈடு தட்டில் ஊற்றினாள்.
சொர்ணம் சுற்றிப் பார்த்து விட்டு, “தமயா! உன் கிட்ட தனியா பேசனுமுடி”
“என்னம்மா..?”
“அது வந்து..”
“இரு”என்றவள், மாடிக்கு தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“இப்ப சொல்லு, இங்க யாரும் வர மாட்டாங்க”
“அது வந்து, உனக்கு தாலிப் பிரிச்சு கோக்க ரெண்டு தாலிக் காசு எடுக்கனும்..?”
“ஆமா! நானே கேக்க நெனச்சேன் அதுக்கு பணத்துக்கு என்ன பண்ண..?”
“என் கிட்ட பண்ண என்ன இருக்கு..? நீ தான் தரனும்.”
“ஏம்மா! என்ன விளையாடுறீயா..? என் கிட்ட இருந்ததை எல்லாம் குடுத்துட்டேன். சம்பளம் கூட அடுத்த மாசம் தான் வரும்”
“நானும் என்ன பண்றதுடி, தினமும் கூலி வேலைக்குப் போறேன் அது சாப்பாட்டுக்கே சரியா இருக்கு, உன் தம்பி, உன் தங்கச்சி படிக்குறாங்க. எப்பிடியோ சமாளிக்குறேன். இப்ப போய் தங்கத்துல காசு எப்பிடி வாங்குறது..?”
“உன்ன யாரு இப்ப தாலிப் பிரிச்சுப் போட பேச வர சொன்னா..? இல்லனா பேசாம இருக்க வேண்டியது தானே.”
“அது எப்பிடி உன்ன இந்த வீட்டில் மதிப்பாங்களா..? ஏதாச்சும் பண்ணி தான் ஆகனும்”
“சரிம்மா! என்னைய என்ன செய்ய சொல்ற…?”
“உன் கழுத்துல இருக்க இந்த சின்ன செயினை தாடி, நாலு கிராம் வருமுல இத கொடுத்துட்டு ரெண்டு கிராமுல ரெண்டுக் காசு வாங்கிடுறேன், என்ன செயினுக்கு பதிலா காசா போட்டுக்காட” என்றார் கெஞ்சியவாறு.
“அம்மா! இது நான் எவ்வளவு சென்டி மென்டா போட்டு இருக்கேன். உனக்கே தெரியுமுல அத போய் கேக்குற..?”
“நானாடி வச்சுக்கப் போறேன். உனக்கு தானே காசா மாத்தி தரேன் போட்டுக்கோ தாலியோடு, என் நெலமை இப்பிடி இருக்குடி நான் வச்சுகிட்டா உனக்கு செய்ய மாட்டேனுங்குறேன், என் தலைய வித்தா காசு தருவானுங்க தெரிஞ்சா அத யாச்சும் செய்யலாம். உன் தம்பி வேலைக்குப் போற வரை எப்பிடியாச்சும் ஓட்டுறேன்டி. என் சாமி நீ, இத்தன நாளா பாரத்த சுமந்த. உன்னய அனாதையா விட முடியுமா..?”என கண்ணீர் சிந்தினார்.
பிறகு தன் கைப்பையில் இருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டையும் கொடுத்தவள், தான் கொண்டு வந்த துணிப்பையில் மாமியார், மாமனார் காலில் விழுந்தப்போது கொடுத்த ஐநூறு ரூபாய் இருந்தது அதையும் எடுத்து, “இத வச்சுக்கோம்மா, அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் செலவுக்கு தம்பிய வரசொல்லு தரேன்.”
“அய்யயோ வேணாமுடி, உன்னைய வேலைக்கு அனுப்புற எண்ணமே இல்லாம தான் கல்யாணத்தை முடிச்சேன். நான் சமாளிக்குறேன், புதுசா ரெண்டு வீட்டு வேலைக்கு கேட்டு இருக்கேன். பிரச்சனையில்ல”என்றார்.
“ஏன்மா! உடம்பை கெடுத்துடாத நான் தரேன்”
“இல்லடி! மாப்பிள்ள, சம்பந்திக்கு தெரிஞ்சா அசிங்கமா ஆகிடும். இதுவே வேற வழியில்லடி, தர்மனுக்கு தெரியாது நான் சொல்லல”
“ம்ம்ம்! சரி வா”என இருவரும் கீழே சென்றனர்.
தமயாவின் தாய் புறப்பட்டதும், அறைக்குள் வந்து மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
அந்த நோட்டு கண்ணில் பட, அதை திறந்தாள்.
“இயல்பும், உரிமையும் எனக்கு நிரந்தரம் அது நிறைவேறாது”
…..தமயந்தி……
என எழுதி மூடிவிட்டு நிமிர்ந்தாள், நளன் அறைக்குள் நுழைந்தான்.
தன் பர்ஸை ஓபன் செய்து அதில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.
“இல்ல வேணாம்! என் கிட்ட இருக்கு, இந்த மாசம் போதும், அப்புறம் சம்பளம் வந்துடும்.”
“அந்த சம்பளத்தை உன் வீட்டுக்கு குடுத்துடு அடுத்த மாசத்தில் இருந்து, உனக்கான செலவை நான் பாத்துக்குறேன்”
தமயா அவனை நேருக்கு நேர் பார்த்தாள் புரியாமல்.
“என்ன பாக்குற..? உன் வீட்டுச் சூழ்நிலை பத்தி தெரியும், தர்மன் சொல்லி இருக்கான், அதனால தான் உன்னைய வேலைக்கே போக சொன்னேன். உன் தம்பி சம்பாதிக்கும் வரை நீ குடு, அதுக்கு அப்புறம் உன் விருப்பம்”
அப்போதும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தவளின் கையில் பணத்தை திணித்தான்.
கையை நீட்டியப் படியே நின்றாள்.
கண்கள் கலங்கியது, முதன் முதலாக தன் ஏக்கங்களில் ஒன்று நிறைவேறியது.
தன் குடும்பத்திற்கான துணை, தான் மட்டுமே அது இந்த கல்யாணத்தால் தடைப்பட்டது என எண்ணியே அதிகம் வருந்தி இருக்கின்றாள்.
இன்று ஏனோ அது நிறைவேறிய மகிழ்ச்சி. கண்கள் கலங்க திரும்பியவள், அந்த நோட்டில் அவசரமாக எழுதினாள்.
“நன்றி
நன்றி
நன்றி
நிறைவேறுதலின் தொடக்கத்திற்கு…..”
………. தமயந்தி…….
வேகமாக வெளியேறினாள்.
நளன் புரியாமல் நோட்டை திருப்பி படித்தான்.
மேலே எழுதியது புருவத்தை சுளிக்க செய்தது.
அடுத்து எழுதியது லேசாக புரிந்தது. ஆனால் மேலே எழுதியது எந்த மனநிலை..? என யோசித்தான்.
“நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன் சாப்பாடு எடுத்து வை”என்றவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவனின் பார்வையோ கனிகாவிடம் இருந்தது.
கனிகாவோ ஃபோனில் இருக்க, “கனிகா! உன் கிட்ட தான் சொல்றேன்”
“மாமி கிட்டனு நினைச்சேன் மாமா”
“அவ தான் ஏதோ வேலையா எழுதிட்டு இருக்காள, போ நீ தோசையை ஊத்து” என்றான்.
சரியாக அந்த நேரம் மரகதமும், லலிதாவும் துணிப்பைகளோடு நுழைந்தனர்.
“என்னக்கா கடைத்தெரு போயிட்டு வர மாதிரி இருக்கு..?”
“ஆமான்டா! உங்க தாலிப் பிரிச்சுப் போடுற நாள் வருதுல, அதான் சாமான் வாங்க போக சொன்னுச்சு அம்மா, உன் மாமியா பொண்ணுக்கு புடவை அவங்க எடுத்துடுறாங்களாம், மாப்பிள்ளைக்கு டிரஸ் நீங்களே எடுத்து வைங்கனு ஆயிரம் ரூபாய் குடுத்துட்டுப் போய் இருக்காவோ. அந்த பணத்துல உனக்கு ஒரு பட்டு வேஷ்டி எடுத்தோம்”என்றாள் நக்கலாக மரகதம்.
தமயந்திக்கு ‘அம்மா ஆயிரம் ரூபாய் கொடுத்துச்சா, ஓ! நான் கொடுத்த பணத்தை இங்க கொடுத்துட்டு போயிட்டா’என யோசித்தாள்.
“ம்ம்ம்!”என நளன் மாடிக்கு சென்று விட்டான்.
லலிதா”கனிகா! நான் ஒரு புடவை எடுத்தேன் பாரே”என காட்ட அவளும் பல்லை காட்டியவாறு அதை கவனிக்க ஆரம்பித்தாள்.
மரகதமும் அவளுக்கு எடுத்த புடவையை காட்ட, மூவரும் மாறி அதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
நளன் டிரஸ் மாற்றிய பின் கீழே இறங்கி டைனிங் டேபிளுக்கு போனான்.
தமயா நிமிர்ந்து நளன் பக்கம் திரும்பியவாறு எழுந்தாள்.
“நீ உட்காரு, அவ ஏதோ அப்ளிகேசன் எழுதிட்டு இருக்கானு கனிகாவை ஊத்த சொலிட்டுப் போனேன். புடவை பாக்குறது முக்கியமான வேலையா இப்ப..?”
“இல்ல மாமா!”என கனிகா எழப்போனாள், “ஏன்டா! என் பொண்ணை தான் வேணானு ஒதுக்கின இப்ப என்ன பொண்டாட்டி மாதிரி சாப்பாடு போட கூப்புடுற..?” என்றாள் மரகதம், கனிகா இடத்தில் தமயா வந்த கடுப்பில்.
நளன் சற்றுக் கடுப்பாகி எழுந்தான் டைனிங்கில் இருந்தது.
“உட்காருங்க! இதோ வந்துட்டேன்”என தமயா அவசரமாக எழுந்து ஓடினாள்.
சரசு”சாப்புட உட்காந்தவன் கிட்ட என்னடி பேச்சு பேசுற..? அவனுக்கு பொண்டாட்டி இருக்கா எதுக்கு கண்டவ சாப்பாடு போடனும். ஏய்யா! இப்ப புரியுதா என்னதுக்கு கல்யாணம் பண்ணுனு சொன்னேனு. என்ன தான் உரிமை பட்டவா மாதிரி ஆகுமா..? இந்தா உடனே எழுந்திரிச்சு ஓடுறால.”என நீட்டி முழக்கினார்.
“ம்ம்ம்! என்ன உரிமை பட்டவ, ஒன்னும் இல்லாத வீட்டில் இருந்து வந்துட்டு”என புலம்பினாள் மரகதம் மெல்ல, சத்தமாக பேசினால் நளன் கிட்ட வாங்கி கட்டனுமே.
தமயந்தி தோசையை ஊற்றி எடுத்து வர, அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.
காலையில் சுடிதாரில் தெரியவில்லை, இப்போது புடவையில் நன்கு தெரிந்தது கழுத்தில் இல்லாத செயின்.
அதை கவனித்தவன் புருவம் யோசனையில் முடிச்சுப் போட்டது.
“என்னதுக்கு கழட்டி வச்சு இருக்க..?”என சரசு கேட்டார்.
“அது, அறுந்துட்டு அத்த”
“ஓ! அதுக்கென்ன எனக்கு தெரிஞ்ச பத்தர் இருக்கார் போய் எடுத்துட்டு வா, காலையில் நீ போற அவசரத்துல மறந்துடுவ, நான் சரிப்பண்ணி வைக்குறேன் நாளைக்கு”என்றார் மாமியார் சேமியா.
நளன் சாப்பிட்டு கைக்கழுவிய பின் ஹாலுக்கு வந்தான்.
தமயா’அச்சோ! இப்ப என்ன செய்றது..? மாவுனா கூட அரைச்சு சமாளிச்சேன் இப்ப தங்க செயினுக்கு எங்க போறது?’ என யோசித்தவள், சட்டென்று
“அது வந்துங்க அத்த, உங்க பையன் கிட்ட தான் கொடுத்து இருக்கேன், அவரு சரிப்பண்ணி தரேனு சொன்னாரு”என நளனை பார்த்து கண்களால் கெஞ்சிக் கொண்டே மாமியாரிடம் சொன்னாள்.
நளன் அவளை ஒரு மாதிரிப் பார்த்து விட்டு மனதில்’இவ என்ன என்னைய மாட்டி விடுறா, இதான் பேச வேண்டிய நேரத்தில் பேசுவதா..?’என எண்ணி,
“ஆமாம்மா! நான் பாத்துக்குறேன்”என வாசலுக்கு சென்றான்.