அத்தியாயம் 12
‘இது என் வீடு... நான் இங்க எப்போ வேணாலும் வருவேன்’ என வீராவேசமாய் பேசிவிட்டு சென்ற பேரின்பன் கடந்த பத்து நாட்களில் ஒருமுறை கூட அவர்கள் வீடு இருந்த தெருப்பக்கம் கூட தலைக்காட்டவில்லை.
பச்சைபசேலென்ற வயலுக்கு நடுவே ‘ப’ வடிவ சுற்றுச்சுவருக்கு உள்ளே, ஒரு முற்றம் அதனோடு கூடிய சமையல் மேடை, ஓரமாய் பத்துக்கு பத்து அளவில் ஒரு அறை என திண்ணையுடன் அமைந்த மிக சிறிய ஓட்டு வீடு அது. அதிக புழக்கமில்லாததால் ஒழுங்கற்று கிடந்த வீட்டை இரண்டே மணி நேர அவகாசத்தில் கிளிகளுடன் சேர்ந்து புழக்கத்திற்கு மாற்றிவிட்டிருந்தான் இன்பன்.
கோகிலாவுக்கென அலைந்து திரிந்து அவள் அன்றாடம் அத்தியாவசியமாய் உபயோகிக்கும் பொருட்களை அவன் அள்ளிக்கொண்டு வர, தயக்கத்தையும் மீறி, ‘ஒரே நாள்ல இத்தனை செலவு தேவையா மாமா?’ என கேட்டு விட்டிருந்தாள் கோகிலா.
மின்விசிறி கூட இல்லாத வீட்டில் கோகிலாவை தங்க வைக்க அவனுக்கு பெரும் சங்கடமாய் இருந்தது. அவள் எதையுமே முகச்சுழிப்பிலோ, வாய்விட்டோ கேட்க போவதில்லை எனும்போதும், இந்த ஊருக்கு வந்த புதிதில், ‘அட்டாச்டு பாத்ரூம்’ இல்லாததுக்கே அவள் முகம் தூக்கியது அவன் கண்ணை விட்டு மறையவில்லை.
வீட்டின் பக்கவாட்டில் அரசாங்கத்துக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஜனநாயக கடமைக்காக நாலு சுவர் எழுப்பி ‘கழிப்பறை’ என பெயரிடப்பட்ட அந்த இடத்தை கோகிலா சங்கோஜப்படா வண்ணம் முடிந்தவரை சீர்ப்படுத்தி குளியல் வசதியோடு ஏற்ப்படுத்தினான் இன்பன்.
எல்லாம் முடிந்து அடுத்ததாய் சமையல் என வரும்போது அங்கிருந்த விறகடுப்பை காட்டி, ‘எனக்கித எப்படி ஆன் பண்ணனும்ன்னு சொல்லி தரீங்களா?’ என கோகிலா கேட்ட அழகில், ‘விறகடுப்பை ஆன் பண்றாளா?’ என பீதியாகி, ‘கேஸ் அடுப்பு வர வரைக்கும் நானே உனக்கு சமைச்சு குடுக்குறேன், நீ ஜம்முன்னு உட்காந்து உன் மாமன் சமையலை டேஸ்ட் பண்ணு’ என சொல்லிவிட்டான் அவன்.
என்ன நடந்தும், எத்தனை மாறியும் ‘பின்ப்பக்க கதவை மட்டும் திறக்கக்கூடாது’ என்ற அவன் கட்டளையில் சிறிதும் தொய்விருக்கவில்லை. வீட்டு தேவைகளை எல்லாம் அவன் கவனித்ததிலேயே முதல் மூன்று நாட்கள் மின்னலென மறைந்து விட்டது.
அதன் பின்னே தினமும் சூரியன் வரும்முன்னே எழுந்து வயல் வேலைகளை மேற்ப்பார்வையிட்டு, அன்றைக்கு செய்யவேண்டியதை குறித்துகொள்வது, ஆட்கள் வந்தவுடன் அவர்களுக்கு கம்மங்கூழோ, கேழ்வரகு கஞ்சியோ வைத்து கொடுப்பவன், அப்போது கிடைக்கும் இடைவெளியில் அறைக்குள் கோழிகுஞ்சென சுருண்டு உறங்கும் மனையாளுக்கு சூடான தேநீரோடு ‘காலை வணக்கமும்’ சேர்ந்து வரும் அவனிடம் இருந்து.
காலைக்கும் மதியத்துக்கும் சேர்த்து ஒரு குழம்பு, காய் என அவன் சமைத்துவிட்டு வெளியே சென்றால் எப்படியும் வீடு திரும்ப மதிய நேரம் கடந்துவிடும். வங்கிக்கடனுக்காக பேங்க்குக்கு செல்வதும், விவசாயக்கல்லூரிக்கு சென்று அவன் பயிரிட்டுள்ளவற்றின் நிலவரம் சொல்லி யோசனை கேட்பதுமே நாள் மாற்றி நாள் நடந்தது. இடையிடையே மண்புழு உரம் தயாரிப்பதற்கான வேலைகளில் அவன் கவனம் செலுத்த, கோகிலாவுக்கு செய்ய வேலையும் இன்றி அவன் இருக்கும் திசையையே பார்த்துக்கொண்டு பொழுதை தள்ளுவாள்.
அவள் அருகில் இருப்பதனாலோ என்னவோ, எத்தனை வேலை இருந்தும் இன்பனுக்கு கொஞ்சம் கூட முகத்தில் சலிப்பு தட்டுவதில்லை. இதில், ‘புது பொண்டாட்டி பக்கத்துல இருக்கவும் தான் முகமே உனக்கு ஜொலிக்குதுப்பா’ என ஏத்தி விட்டுக்கொண்டிருந்தனர் வேலைக்கு வரும் பெருசுகள்.
ஆக மொத்தத்தில் சோளக்காட்டிற்க்கு குடிவந்த பின், இன்பன் தன் வீட்டையும் மறந்திருந்தான், தான் புது மாப்பிள்ளை என்பதையும் மறந்திருந்தான். ஆனால், அதை மறக்காமல் மனதுக்குள் அவனை வாட்டிக்கொண்டிருந்தவள் கோகிலா மட்டுமே...!
முதலில் தயங்கி தயங்கி பேசியவள் இப்போதெல்லாம் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கியிருந்தாள். ‘மாமா, மாமா’ என அவள் அனைத்திற்கும் அவனையே நெருங்க, ‘கல்லாய் இருந்தால் கூட காதல் கசிந்திருக்கும்’, ஆனால் இந்த இன்பனுக்கு ‘மனைவி என்ற பாசம் அதிகரித்ததே தவிர, அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள தோன்றவில்லை போலும்’.
போன போக்கில், ‘இவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்குமோ?’ என எண்ண ஆரம்பித்து விட்டாள் கோகிலா.
சரியாய் இன்றைய கெஞ்சல் ஒலி கேட்கும் அதே நேரம் முன்தினம், “அண்ணே, விரசா முடிண்ணே, வாசனையே பசியை கிளப்புது” என திண்ணையில் அமர்ந்து ஓலமிட்டுக்கொண்டிருந்தான் பச்சைக்கிளி.
“அலையாதடா... நமக்கு தானே சமைக்குறாரு” என வெட்டுக்கிளி சமாதானம் செய்தாலும் அவனாலும் பசியை பொறுக்க முடியவில்லை.
நாட்டுக்கோழி ஒன்றை எங்கிருந்தோ தூக்கிக்கொண்டு வந்து இன்பனிடம் கொடுத்த கிளிகள், அதை சமைத்துத்தரும்படி ஏகத்துக்கும் நச்சரிக்க, ‘போய் தொலைங்க’ என்ற பொய் சலிப்போடு அதை சமைக்க சென்றிருந்தான்.
“உங்க அம்மாக்கிட்ட குடுத்தா இந்நேரம் சமைச்சு குடுத்துருப்பாங்கள்ள?” என்றாள் கோகிலா. நாள் முழுக்க ஆட்கள் சூழ இருப்பவனை தனிமையில் அவளிடம் பிடித்து வைப்பதே இந்த இரவு நேர சமையல் பொழுது தான். அதற்க்கும் பங்கம் வந்தால் அவளும் காந்தாமல் என்ன செய்வாள்!?
“ஹும், எங்கண்ணன் கோழி அடிச்சு குழம்பு வச்சா, செத்துப்போன கோழிக்கூட, வாசனையில குழம்பை விட்டு எட்டிப்பாக்கும்ன்னா பார்த்துக்கோங்க!!” என்றான் பச்சைக்கிளி.
வந்த கடுப்பில், “எங்கிருந்து தான் இப்படி சொம்படிக்க கத்துக்கிட்டீங்களோ?” என்றாள் பல்லைக்கடித்துக்கொண்டு.
எதற்கோ அவள் கோபத்தில் இருப்பதை உணர்ந்த இன்பன், “டேய், அங்க வாய் பாக்காம இங்கன வந்து தேங்கா சோம்பு அரைச்சு குடுங்கடா” என்றான் ஏவலாய்.
‘இதோ’ என நொடியில் அம்மிக்கல்லுக்கு விரைந்துவிட்டனர் கிளிகள்.
அடுத்த கால்மணி நேரத்தில் நால்வரும் வட்டமிட்டு அமர்ந்து சாப்பிட, உண்மையிலேயே இன்பன் சமைத்தது அத்தனை ருசியாய் இருக்க, “சமையல் எப்படி கத்துக்கிட்டீங்க மாமா?” என்றாள் ஆர்வம் தாங்காது.
“ஹாஹா!! கத்துக்குறது எல்லாம் இல்லை! பசிக்கும்போது வேற வழி இல்லாம செய்ய ஆரம்பிச்சது! இத்தனை வருஷ பழக்கம் அப்படியே வருது” என்றான் இன்பன்.
கிளிகள், “வருஷம் ஒருக்கா பாரியூர் நோம்பி வருங்கண்ணி! அன்னைக்கு ராத்திரி எங்க அண்ணன் சமையலு தான் எங்களுக்கு சைட்டிஷ்ஷே! எத்தனை தான் கடைல வாங்குனாலும் அண்ணே ஒரு வறுவலாவது செஞ்சுக்குடுத்தா தான் சரக்கு சும்மா சர்ர்ருன்னு உள்ளப்போகும்!!” என உளற,
“எது? சரக்கா?” என அதிர்ந்து விழித்தாள் கோகிலா.
இன்பன், “டேய், கிளம்புங்கடா” என்றான் கோவமாய்.
சொன்ன பிறகே, நாக்கை கடித்துக்கொண்ட கிளிகள், “ஹிஹி சும்மா சொன்னோம் அண்ணி” என மழுப்பிவிட்டு தட்டில் மிச்சம் இருந்ததையும் முடித்துக்கொண்டு கிளம்பி ஓட, இன்பனிடம் “எல்லாருக்கும் நீங்க தான் ஹோல் சேல் சப்ளையா?” என்றாள் புருவம் இடுக!!!
அவனோ ஒன்றும் அறியாதவன் போல, “என்னதுமா?” என்றான் படுக்கையை தட்டிப்போட்டபடி.
அவன் செய்கையில் இன்னும் கடுப்பாக, “சாப்பிட்டாச்சு! அடுத்து உறக்கமோ?” என்றாள் நக்கலாய்.
அவனும் விளையாட்டாய், “ம்ம்ம்... அதானே உலக வழக்கம்” என்றான் படுக்கையில் அமர்ந்துக்கொண்டு.
“ம்ம்ம்... ஆமால்ல!!” என்றவள், அடுத்த நொடி அவன் கொஞ்சமும் எதிர்ப்பாராத கோரிக்கையை முன்வைத்தாள்.
“எனக்கு சரக்கடிக்கணும் போல இருக்கு! வாங்கிட்டு வரீங்களா?”
அவள் சொன்ன வார்த்தைகள் செவியை அடைந்தாலும், பதில் சொல்ல முடியாது தொண்டை அடைத்துப்போக, கனைத்துக்கொண்டவன், “என்னது?” என்றான் மீண்டும் ஒருமுறை அவள் சொல்லட்டும் என!
“சரக்கு மாமா!! ஆல்கஹால்!! வாங்கிட்டு வரீங்களா?” என்றாள் இன்னும் அழுத்தமாய்.
“நீ கு..குடிப்பியா?”
“அப்கோர்ஸ்!! நான் சென்னைல வளந்தவ! பப், பார்டிக்கெல்லாம் போகும்போது பழக்கமாகிடுச்சு” என்றாள் இயல்புபோல். ஆனால் உண்மையில் பானங்கள் பரிமாறப்படும் கெட்டூகெதருக்கு கூட அவள் இதுவரை செல்ல பிரியப்பட்டதில்லை.
ஒருவேளை அவள் விளையாடுகிறாளோ என எண்ணியவன், “அதுக்கென்ன, வாங்கிட்டு வர்றேன்” என வாசல் பக்கம் போக, “மாமா?” என தடுத்தாள் அவனை.
வெற்றி சிரிப்புடன் திரும்பியவனிடம், “பீர் எல்லாம் வாங்கிட்டு வந்துடாதீங்க!! எனக்கு பத்தாது!!” என்றவள், “ம்ம்ம்... ரம் வாங்கிட்டு வாங்க, பிரான்டட் ஆ!!” என்றாள் கொஞ்சமும் சிரியாமல்.
அதைக்கேட்ட இன்பன், ‘நீயா பேசியது என் அன்பே! நீயா பேசியது?’ என பேக்கிரவுண்ட் சாங் போடும் நிலைக்கு அசையாமல் அதிர்ந்து நின்றுவிட்டான்.
அவன் நிலைக்க்கண்டு இதழ்கள் சிரிப்பில் துடித்தாலும், “இட்ஸ் கெட்டிங் லேட் மாமா!! சீக்கிரம் வாங்கிட்டு வாங்க” என்றாள் அலட்டலாய்.
கீ-கொடுத்த பொம்மை போல அங்கிருந்து நகர்ந்தான் பேரின்பன். அவன் கண்ணை விட்டு மறையும்வரை பார்த்திருந்தவள் ‘கேட்டதும் வாங்க போறியா? இன்னைக்கு உனக்கு இருக்கு மாமா!!’ என சத்தம் போட்டு சிரித்தாள்.
அரைமணி நேரம் கடந்த பின் வீட்டிற்க்குள் வந்த இன்பன் கையில் காகிதம் சுற்றிய பொருள் இருக்க, ‘நிஜமாவே வாங்கிட்டு வந்துட்டானே!’ என்றுதான் நினைத்தாள் கோகிலா.
இறுகிய முகத்தோடு ‘இந்தா!’ என அவன் நீட்ட, ‘உண்மையிலேயே சரக்கு தானா?’ என சந்தேகத்துடன் திறந்து பார்த்தாள் கோகிலா.
‘அட லூசு மாமா, சரக்கு கேட்டா என் வாயில அடிச்சு என்ன விஷயம்ன்னு கேட்காம இப்படி வாங்கிட்டு வந்து நீட்டுறியேடா’ என உள்ளுக்குள் அவள் புலம்பினாலும் வெளியே, “வாவ், நல்ல பிரான்ட் தான்” என்றாள் அவனிடம் பாராட்டாய்.
சட்டையை கழட்டி ஆணியில் மாட்டிவிட்டு ஒன்றும் பேசாமல் படுக்கையில் அமர்ந்துவிட்டான்.
அவனை சீண்ட வேண்டுமே என, “சும்மா இதை மட்டும் குடுத்தா எப்படி? மிக்சிங்க்கு எதுவும் இல்லையா?” என்றாள்.
அவளை கோபமாய் முறைத்தவன், அசையாது இருக்க, ‘என்ன முறைக்குராரு? ரொம்ப ஓவரா போறோமோ?’ என மெலிதாய் பதறினாள்.
‘ப்ச்! என்னதான் செய்றாருன்னு பார்த்துடுவோம்!!’ என்ற குருட்டு தைரியமும் வர, பாட்டிலில் இருந்ததில் பாதியை கவிழ்த்தவள் அதில் பாதிக்கு மேலாய் தண்ணீரை ஊற்ற, பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வை இடுகியது.
இதுவரை ஏதோ ஒரு தைரியத்தில் செய்துவிட்டாலும் அடுத்து அதை குடிக்க வேண்டுமே என நினைக்கும்போது அப்படி ஒரு தயக்கம்!
‘ஸ்மெல் வருமே!! குமட்டுமே!!’
‘இப்போவாது எதுக்கு இப்படி செய்றன்னு கேட்குறாரா பாரு! சும்மா முறைச்சுக்கிட்டே உட்காந்துருக்காரு’
முடிந்தவரை அவள் நேரம் கடத்த, “குடி! எவ்ளோ நேரம் தான் பார்த்துக்கிட்டே இருப்ப” என்றான் இன்பன்.
“ஹான்... ஹான்”
வாய் வரை கொண்டு சென்றாலும் உள்ளே செலுத்த தைரியம் வரவில்லை. கைகள் கூட மெலிதாய் நடுங்கின. வாயில் வைக்கும் முன்பே குமட்டல் எடுப்பதை போல் வேறு உணர்வு எழ, ‘உனக்கு தேவையாடி இது?’ என நொந்தே போனாள்.
அவள் செய்கைகளை எல்லாம் சுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்தான் இன்பன்.
“இதெல்லாம் பழக்கம்ன்னு சொன்ன? இப்போ குடிக்க இவ்வளோ தயங்குற?” என அவன் கேட்க, “அது... அது.... ஆங்!! இது நான் குடிக்குற பிரான்ட் இல்ல, அதான் கொஞ்சம் யோசிக்குறேன்” என்றாள்.
“சரிதான்” என வாயை மூடி சிரித்துக்கொண்டான் இன்பன். அவள் ‘இதெல்லாம் எனக்கு பழக்கம்’ சொன்னபோது ‘அப்படியும் இருக்குமோ?’ என நினைத்து தான் முகம் இறுகி போனான் இன்பன்.
என்னதான் செய்கிறாள் என பார்க்க அவன் வாங்கி வர, பானத்தை விட அதிகமாய் தண்ணீரை ஊற்றி, அதை கையில் வைத்துக்கொண்டு குடிக்க முடியாமல் அவள் தயங்குவதிலேயே தெரிந்து போனது, ‘அவள் விளையாடுகிறாள்’ என்று...
வேண்டுமென்றே அவளை சோதிக்கவென ‘குடி குடி’ என சொல்லிக்கொண்டிருந்தான் இன்பன்.
இறுதி முயற்சியாய் வாய்வரை கொண்டு சென்றவள் மனதைரியத்தை ஒன்றுக்கூட்டி குடிக்கலாம் என நினைக்கும்போது, மீண்டும் குமட்டிக்கொண்டு வந்தது. வாயருகே சென்ற வேகத்திலேயே குவளை கீழிறங்க, எப்போது இன்பன் அவளருகே வந்தான், எப்படி கையில் இருந்த பானத்தை முழுக்க அவள் வாயில் சரித்தான் என அவள் உணரும் முன்பே, “இப்படிதான் குடிக்கணும்! இதெல்லாம் கைல வச்சுக்கிட்டு யோசிக்க கூடாது” என்றான் சிரிப்புடன்.
குடித்து முடித்தவளுக்கு முதலில் தோன்றியது, ‘ச்ச! என்ன சப்புன்னு இருக்கு’ என்பது தான்!!
‘உண்மையிலேயே குடிச்சுட்டேனா!’
‘குடிச்சா தலை சுத்தி, வாய் குளறி, அப்படியே மிதக்குற மாறி இருக்கும்ன்னு படத்துல சொல்வாங்க! இதென்ன நமக்கு ஒண்ணுமே ஆகல?’
என அவள் சுய அலசலில் ஈடுப்பட, “அடுத்த ரவுன்ட் போறியா?” என்றான் இன்பன்.
அவன் விளையாட்டை கூட உணராதவளாய், “நோ நோ நோ” என்றாள் அவசரமாய்.
“அப்போ சரி தூங்கலாமா?” என்றான்.
அரைமனதாய், ‘ம்ம்’ என தலையாட்டினாள் கோகிலா. பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், மெல்ல உடலுக்குள் ஏதோ வித்தியாசமாய் உணர்வதாய் தோன்றியது அவளுக்கு.
இன்பன் தினமும் படுப்பதற்கு முன் ஒரு குளியல் போடுவது வழக்கம் என்பதால் அவளை படுக்க சொல்லிவிட்டு குளிக்க சென்றிருந்தான்.
அவன் திரும்பி வருகையில் கூடத்தின் சுவரை ஒருகையால் பற்றிக்கொண்டு மறுகையால் தலையை தாங்கிக்கொண்டு நடைப்பயின்றுக்கொண்டிருந்த கோகிலாவை கண்டதும், “ஏய், உன்னை படுக்கத் தானே சொன்னேன்!!” என அருகே சென்றான் வேகமாய்.
“ம்ச்! எனக்கு என்னவோ பண்ணுது மாமா!!?”
‘குடிச்சது வேலையை காட்டுது போல’ என எண்ணியவன், “நீ படுத்துக்கிட்டன்னா ஒன்னும் பண்ணாது! வா” என்றான்.
அவன் கையை உதறியவள், “எனக்கு தூக்கம் வல்லப்போ” என்றாள். பேச்சு குழற ஆரம்பித்திருந்தது.
“மூக்கி கண்ணு, இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுடா! சமத்தா வந்து படுத்துக்கோ, வா!!” என்றான் கெஞ்சலாய்.
“நா வல்ல்ல்ல...”