சுட்டும் விழிச் சுடரே - அத்தியாயம் - 2..
அன்புள்ள தோழர்களே
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி! உங்களது உண்மையான விமர்சனத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின், திருத்தி எழுதுவதற்கு அது என்னை ஊக்கப்படுத்தும்.
இன்று அகிலன் வானத்தில் ஜொலித்த நட்சத்திரத்தை பார்த்தபடி ‘யாழினி நீ எங்கிருந்தாலும், உனக்கும் நான் ரசிக்கும் இந்த வானமும் ,நட்சத்திரம் தெரியும்தானே. உனக்கு என் நினைவு வருமா?. எண்ணங்களுக்கு வலிமை அதிகம் என்கிறார்களே! அப்படியென்றால், இப்போது நீயும் என்னை நினைத்துக்கொண்டு தான் இருப்பியா!.
கண்ணில் விழுந்த காதலியே
உன்னை எப்படி
நான் தொலைத்தேனடி’
என்று அவனையே கேட்டு நொந்துக்கொண்டிருந்தான்.
அடுத்தடுத்த நாட்களில் அகிலனுக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்ததால் இரவில் நெடு நேரத்திற்கு பின் தான் வீட்டிற்கே வந்தான். அதனால் பூங்காவிற்கு செல்லவும் அவனுக்கு நேரம் இல்லாது போனது. சில சமயம் அதிக வேலைப்பளு கூட அவனுக்கு சரி என்று பட்டது. ப்ராஜக்ட் (project) வெற்றிகரமாக முடிந்ததால், அவனது அலுவலகத்தில் சுற்றுலா ஒன்று செல்ல முடிவு செய்திருந்தனர். இந்த வருடம் ஹைதெராபாத் செல்லலாம் என்றனர். அதைக்கேட்டதும் அகிலனின் மனம் ஒரு பக்கம் குதூகலமும், மறு பக்கம் துக்கமும் அடைந்தது. அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் தான் அகிலன் உயர் பதவியைப் பெற்று இருந்தான், அதனால் வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் சுற்றுலா செல்வது அவனது கடமையாகும். விருப்பம் இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி ஒப்புக் கொண்டான். சுற்றுலா செல்வதற்காக ஒரு சொகுசு பேருந்தும், தங்குவதற்கு நட்சத்திர விடுதியையும் முன்பதிவு செய்திருந்தனர். வாரங்கள் ஓட ஹைதெராபாத் செல்லும் அந்த நாளும் வந்தது. பேருந்து அதன் வேகம் பிடித்து சென்னையில் இருந்து சென்றது. இதமான பாடலும் குளிர்காற்றும் வீச அனைவரது பயணமும் இனிதே தொடர்ந்தது, அகிலனுக்கு மட்டும் அவளின் பழைய அழகிய, இதமான நினைவுகளோடு பயணம் தொடர்ந்தது.
ஹைதெராபாத் அவன் வாழ்வில் மறக்க முடியாத இடம். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது இதே ஹைதெராபாத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்பொழுது ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'நிலோபர் தெரு' பகுதியிலுள்ள இரண்டு தளம் கொண்ட சிறிய விடுதி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் தங்கி இருந்தனர். அது ஒரு மூன்று நாள் சுற்றுலா, முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் என்ற இடத்தை பார்க்க சென்றனர். அது பெண்களுக்கான புடவை, வளையல் மற்றும் அலங்காரம் பொருட்கள் விற்கும் இடம். அங்கு எதையும் பேரம் பேசித்தான் வாங்க வேண்டும். அந்த பகுதியில் தெலுங்கு பேசுபவர்களை விட உருது / ஹிந்தி பேசுபவர்களே அதிகம். அதுவே அகிலனுக்கு சாதகமானது. யாழினி தனக்கு ஒரு புடவையும், தன் அம்மாவிற்கு ஒரு புடவையும் வாங்க முடிவு செய்தாள். ஆனால் அவளுக்கோ அல்லது அவளுடைய தோழிகளுக்கோ ஹிந்தி தெரியாது. அதனால் சக மாணவர்களில் யாராவது ஹிந்தி பேசுபவர்கள் இருப்பார்களா என்று சுற்று முற்றும் பார்த்தாள். யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அகிலனின் கண் சில நிமிடத்திற்கு ஒரு முறை அவளை பார்த்துக் கொண்டிருக்கும் என்று கூறுவதை விட ரசித்து கொண்டிருக்கும் என்றுதான் கூற வேண்டும்.
அகிலனுக்கு எப்பொழுதுமே ஒரு ஐயம் உண்டு. அகிலன் மனதிற்குள்' நமக்கு யாழினி மேல் இருப்பது ஈர்ப்பா (crush) இல்ல காதலா. எதுவாயினும் பரவாயில்ல அவளை பார்த்துட்டு இருக்கிறதே ஒரு வித மனக்கிழற்சியா இருக்கு. அதை எதுக்கு நாம கடிவாளம் போட்டு ஸ்டாப் பண்ணனும், கடிவாளம் போட்டாலும் மனசு கேக்குமான்னு தெரியல' என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு இருக்கும் போதே அவள் யாரையோ தேடுவதை பார்த்து, 'என்ன?' என்பது ஒரு புருவத்தை உயர்த்தி கேட்டான்.
இருவருக்கும் இடையே தூரம் அதிகம் என்பதால் அவளும் தலையை அசைத்து அருகில் கூப்பிட்டாள்.
அவனது மனம் போல, கால்களும் தானாக அவளிடம் சென்றது. அருகில் வந்தவன் “என்ன? எதுக்கு கூப்பிட்ட?“ என்று கேட்டான்.
“எனக்கு புடவை வாங்கணும், இங்க யாருக்கும் ஹிந்தி தெரியல. நம்முடைய கிளாஸ்ல யாராவது ஹிந்தி தெரிஞ்சவங்க இருக்கிறார்களா?“ என்று கேட்டாள்.
அகிலன் மனதில் 'அகிலா! அரிதில் பெற்ற இந்த பாக்கியத்தை எளிதில் கை நழுவ விட்டு விட்டுறாதே? இதைவிட சிறந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது' என்று ஒரு குரல் உள்ளிருந்து கேட்டது.
“எனக்கு ஓரளவுக்கு தெரியும். உனக்கு ஓகேன்னா நான் வரேன்?“ என்றான். அவளுக்கு ஹிந்தி தெரியாததால் எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் ஒப்புக்கொண்டான்.
யாழினி, அவனது கையை பிடித்து இழுத்துச் செல்லாத குறைதான் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினாள். இதைப்பார்த்த அவரது நண்பர்கள், " நடக்கட்டும், நடக்கட்டும்" என்று கிண்டல் செய்தனர்.
அகிலன் திரும்பி ஒரு முறை முறைக்க, அவர்கள் அவ்விடம்விட்டு நகர்ந்து சென்றனர்.
அதைப் பார்த்த யாழினி, "கிண்டல் பண்றாங்க போல, உனக்கு சங்கடமா இருந்தா, நீ கிளம்பு." என்றாள்.
அகிலன் மனதிற்குள் 'உன்கூட இருப்பது எப்படி சங்கடமாகும் என் கண்மணி' என்று நினைத்துக்கொண்டு, ஆனால் வெளியில் “பொண்ணுங்களோடு சேர்ந்து புடவை வாங்க கடை கடையா சுத்துனா, பசங்க கிண்டல் பண்ணாமலா இருப்பானுங்க.. உனக்கு இன்னும் எவ்வளவு நேரமாகும்?" என்று சலிப்போடு கேட்டான்.
அகிலனுக்கு மனதில் தோன்றுவதை கூறினால் தவறாகிவிடும் என்ற அச்சமோ! இல்ல பெண்களிடம் இதமாக பேச வராதோ! எதுவோ ஒன்று யாழினியிடம் சொல்லவிடாமல் அவனைத் தடுத்தது. யாழினிக்கு 'ஏனோ அவனுடன் இருப்பது அந்நியமாக இல்லை, அது போல் அவனுக்கும் இருக்கும்' என்று நினைத்தாள்.
ஆனால் இவன் இப்படி எடுத்தெரிந்து பேசுவான் என்று சற்றும் எதிர்பார்க்காத யாழினி "சாரி, என் தப்புதான். நீங்க. கிளம்புங்க! 'கியா, கித்துனா' இந்த இரண்டு வார்த்தை தானே, இதை வச்சு நானே பேசிக்கிறேன். இவ்வளவு தூரம் நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்றாள் துடுக்காக.
அகிலன் 'அச்சச்சோ, அவசரத்தில் பேசி விட்டோமோ!' என்று நினைத்து. "நான் புடவை எடுக்கிறேன். அதுவும் எவ்வளவு சீக்கிரத்தில் எடுத்துக் கொடுக்கிறேன்னு பாரு" என்று கேட்டான்.
"பார்க்கலாம். அது எனக்கும் பிடிக்கனும்" என்றாள் அதே கோவத்துடன்.
அவள் இதுவரை சென்ற கடையில் அவள் போட்டு பார்த்ததில், எதை பார்த்து அவள் அழகில் சொக்கிப்போனானோ, அதே கடைக்கு மீண்டும் அழைத்துப் போய்," இந்த ரெண்டு புடவையும் உனக்கு ரொம்ப அழகா இருக்கும். உனக்கு ஓகேவா?" என்றான்.
'இவ்வளவு நேரம் வாயே திறக்கல, இப்போ என்னவோ அழகா இருக்கும் என்றெல்லாம் சொல்லுறான். இவனுக்கு இப்படி கூட பேச வருமா!. புடவையும் நல்லாத்தான் செலக்ட் பண்ணிருக்கான்' என்று நினைத்துக்கொண்டு அதிலிருந்து இளம் பச்சை நிறம் மற்றும் ஆரஞ்சு நிறப்புடவை இரண்டையும் எடுத்துக் கொண்டாள்.
“பிடிச்சிருக்கா” என்றான்.
“பிடிச்சிருக்குங்க” என்றாள் ஒரு வார்த்தையில்.
"அப்புறம் எதுக்கு உம்முன்னு வர, மேடத்துக்கு என் மேல் கோவம் போல, மரியாதையெல்லாம் அதிகமா தெரியுது" என்றான் அகிலன்.
"பின்ன! உங்களுக்கு புடவை எடுக்க தெரியுதுன்னா? அப்பவே சொல்லாம் இல்ல, நான் இப்பதான் முதல் தடவையாக புடவை எடுக்கிறேன். எத எடுக்கிறது, எத விடுறதுன்னே எனக்கு தெரியல. அதனாலதான் இந்த குழப்பம்" என்றாள்.
"ஆமா! நான்தான் போற வரவங்களுக்கு எல்லாம் புடவை எடுத்து குடுத்துட்டு இருக்கேன்" என்றான் கிண்டலாக .
"யாருக்கு தெரியும்! எடுத்துக் தருவியோ, என்னவோ" என்றாள் கோவத்தை விடுத்து.
"நான் பேசும் முதல் பெண்ணே நீதான்" என்றான்.
மனதுக்குள் ஒரு மலர் மலர்ந்தது போல் சிலிர்ப்பாக இருந்தது யாழினிக்கு. ஆனால் அவளும் வெளியில் காட்டாமல்" நம்பிட்டேன்! உடன் வந்ததுக்கு நன்றி. போலாமா?" என்றாள் பேச்சை வளர்க்காமல்.
அனைவரும் பேருந்து ஏறி, விடுதிக்கு வந்து சேர்ந்தனர். மேல்தளத்தில் ஆண்களுக்கும் ,கீழ்தளத்தில் பெண்களுக்கும் அறை கொடுக்கப்பட்டிருந்தது. யாழினிக்கு கடை கடையாக சுற்றியதால் தலை வலி அதிகமாக இருந்தது. மனதிற்குள் 'எங்காவது ஒரு டீ குடிச்சா கொஞ்சம் நன்றாக இருக்கும்' என்று யோசித்தாள்.
அவள் தோழி கவிதாவிடம் கேட்க, கவிதாவோ “ நான் என்னைக்கு டீ குடிச்சுருக்கேன், டையர்டா இருக்கு டியர். நீ போய் முன்னாடி ஹால்ல இருக்கரவங்கல கேட்டு பாரு” என்றாள்.
வேறு வழியில்லாமல்,யாழினி அங்கு இருக்கும் வேலையாட்களிடம் "இந்த நேரத்தில் டீ கிடைக்குமா" என்று ஆங்கிலத்தில் விசாரித்து கொண்டிருந்தாள், ஆனால் அவர்களுக்கு புரியாமல், ஏதோ ஹிந்தியில் பதில் கூறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அகிலனும், வெளியில் ஒரு நடை சென்று வருவதற்காக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான்.
யாழினியை வெளியில் பார்த்தவுடன், நம்ப ஆளு இவங்கிட்ட என்ன பேசிட்டு இருக்குறா என்ற எண்ணஓட்டதுடன்,"இந்த வேலை எப்படி கிடைக்கும்னு கேட்கிறியா? உனக்கு அந்த வேலையெல்லாம் கொடுக்க மாட்டாங்க" என்றான் நக்கலாக.
உதட்டை இடது, வலதாக சுளித்து காண்பித்துவிட்டு பதிலுக்கு அவளும் "எனக்கில்லை உனக்கு தான், எதாவது வேலை கிடைக்குமான்னு கேட்டுட்டு இருக்கேன்" என்றாள். அதன் பிறகு இவனை விட்டால் வேறு வழி இல்லை என்று "எனக்கு பயங்கிரமா தலை வலிக்குது. அதான் டீ கிடைக்குமான்னு கேட்டுட்டு இருக்கேன்" என்றாள் கெஞ்சலாக.
அகிலன் மனதிற்குள் 'பெண்களின் முக அசைவுக்குத்தான் எத்துணை வலிமை, மனம் தானே கரைந்து காணாமல் போகிறதே' என்று ஒரு பெருமூச்சுடன், "சரி வா, நான் வெளியே தான் போறேன். ஏதாவது கடை இருந்தா, டீ குடிச்சிட்டு வரலாம்" என்றான்.
அங்கிருந்து சிறிது தொலைவில் 'நிலோபர் கேஃப்' என்ற பெயரில் ஒரு டீக்கடை இருந்தது. அந்த இரவு நேரத்திலும் ஜனத்திரளில் நிரம்பியிருந்தது. பெரிய கடையா இருக்குமோ என்று நினைத்து பார்த்தால், அது ஒரு சிறிய அறைதான். ஆனால் தொடர்ச்சியாக டீயும் ,காபியும் கொடுத்த வண்ணம் இருந்தனர். அந்த நேரத்தில் ஆண்கள் மட்டுமே இருந்ததால், இவன் சென்று வாங்கி வந்து இருவரும் அந்த சுவையான பன்னிரெண்டு ரூபாய் டீயை அருந்தினர்.
"டீ ரொம்ப நல்லாருக்கு" என்றாள்.
"ஆமாம், அதான் இவ்வளவு கூட்டம் போல" என்றான்.
"அதிசயத்த பாரேன். நமக்கு இந்த ஒரு விஷயத்துல ஒத்து போகுது" என்றாள் யாழினி.
"நமக்குன்னு சொன்னதுல சந்தோஷம் " என்று கள்ளப் புன்னகை செய்தான். அவன் புன்னகை அந்த இரவு நேரத்தில் அவளை ஏதோ தொந்தரவு செய்ய, இதுக்கு மேல பேசுனா தப்பாகிடும் என்று டீ யின் சுவையை சுவைத்தாள். விடுதிக்கு திரும்பும் போது சிறிது விலகி நடக்க ஆரம்பித்தாள். செல்லும் வழியில் இரண்டு வானரர்கள், இவளை கிண்டல் செய்தபடி வண்டியை ஒட்டினார்கள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் 'எங்க போனாலும் ஊருக்கு நாலு இப்படித்தான் திரியறானுங்க 'என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டே நடந்தாள்.
அகிலன் "இப்படி இடைவெளி விட்டு நடந்தா இப்படித்தான் பண்ணுவானுங்க", என்று அவள் அனுமதியின்றி அவள் கையைப் பிடித்து இழுத்து அருகில் அணைத்தபடி நடக்கலானான்.அவள் அருகில் மோதும் போது 'பட்டுதறியில் நெய்த தேகமா இவளுடையது' என்று தோன்றி உடல் சிலிர்த்தது அகிலனுக்கு.
யாழினிக்கு, அவனருகில் இருப்பது பாதுகாப்பாக உணர்ந்தாலும், வேறு ஒருவனின் கை பட்டதால் மனது படபடவென அடிக்க, பேசும் திரணற்று மௌனமாக நடக்கலானாள். எங்கு இதயம் துடிப்பது வெளியில் கேட்டு விடும் போலிருந்தது அவளுக்கு.
மனதை நிதானப்படுத்தி, "அவனுங்களை திட்டுறதை விட்டுட்டு என்ன பிடிச்சு பக்கத்துல வச்சுக்கிட்டா ஆச்சா!" என்று வராத கோவத்தை, வரவழைத்து பேசினாள்.
"ஊரு விட்டு, ஊரு வந்து ஹீரோ வேஷம் போட சொல்றியா, அதெல்லாம் சினிமாவில் தான், நீ ஒழுங்கா கிட்டயே வா" என்று இன்னும் இழுத்து இறுக்கமாக பிடித்தான். அந்த இருளில் நிலவே இவர்களை தொந்தரவு செய்யாமல் மேகத்திற்குள் சென்றது. அவன் தீண்டலில் அவளுக்கு தன்னை சுற்றி மொத்தமும் மறந்துபோயிருந்தன.
அவர்களும் "டேய் பட்சி நமகில்லை" என்று ஹிந்தியில் கூறிவிட்டு விலகிப்போனார்கள்.
அவன் தன்னை விட்டு விலகிய போது தான் விடுதிக்கு வந்ததையே உணர்ந்து, வெட்கத்துடன் முகம் சிவந்து, பேசும் திறனற்று அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.
அகிலனுக்கோ அவளை அனுப்பும் மனமில்லாமல் மனதிற்குள்
'அருகில் இருந்த அன்பே ,
உன் அழகில் நனைய அனுமதிப்பாயா!'
என்று மனம் மருங்கி, அன்று அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
'அந்தப் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடராமல் துளைத்துவிட்டேனே' என்று தன்னையே நொந்து கொண்டு இன்றைய இரவு பேருந்து பயணத்தை தொடர்ந்தான் அகிலன்.
அகிலன் தன் காதலை எப்பொழுது உணர்ந்தான்? அவளுக்கு உணர்த்தினானா? இவர்களுடன் சேர்ந்து நாமும் கல்லூரி பயணத்தை அடுத்த அத்தியாத்தில் மேலும் தொடர்வோம்.
தொடரும்….
Last edited: