அத்தியாயம்-19
வாழ்க்கையில் நிறைய பேரைச் சந்திக்கிறோம், கடந்துபோகிறோம். ஆனால், எல்லோருடனும் எப்போதும் இருக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதில்லை. ஆனால், சிலருடன் இருக்கும்போது மட்டும் அப்படியான உணர்வு ஏற்படும். அவர்களுடன் இருக்கும்போது சௌகரியமாக உணருவோம். அந்த உணர்வு நமக்கு நல்லதாகத் தோன்றும். அவர்களோடு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். அவர்களோடு ஒரு ரிலேஷன்ஷிப்பை உருவாக்கிக்கொள்ள நினைப்போம். ஒரு நல்ல உணர்வுக்காக ஒருவரோடு இருக்கவேண்டும் நினைக்கிறோம். அவ்வளவுதான், மற்றபடி உறவுகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை நல்ல நட்பாகக் கூட இருக்கலாம் அப்படித்தான் மேகலாவோடு இருந்த நிமிடங்கள் அபிநயாவுக்கு மிகுந்த ஆறுதலை தந்தது.
கடைசியாக மேகலாவிடம் விடைபெறும் போது அவள் தழுதழுத்தப்படி இவள் கரம் பற்றி கூறிய அந்த வார்த்தைகள் அபிநயாவின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது.
" அபி உன் அளவுக்கு நான் அதிகம் படிக்கல ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்!!... வாழ்க்கை என்கிறது நேத்து பெய்த மழையில இன்னைக்கு முளைச்ச காளான் இல்லை, அது...'வாழையடி வாழையா செழித்து தழைத்து காய் கனி' என்று அடுத்தடுத்த கட்டத்துக்கு போகிற ஒரு நல்ல நிகழ்வு.
அதைப்போலத்தான் உன் வாழ்க்கையும் அமைய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பழசை எல்லாம் மறந்து விடு... எல்லாவற்றையும் ஏதோ ஒரு கெட்ட கனவாக நினைத்து ஒதுக்கித் தள்ளி விடு. இனி நீ வாழ போகிற வாழ்க்கைதான் உனக்கு உண்மை, நிரந்தரம் அதை மனசுல வச்சுக்கோ. கார்த்திக் நிச்சயமா நல்லவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் அரசாங்க வேலையில் இருக்கிறீங்க நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமாக வாழனும். இதுதான் எங்க ரெண்டு பேரோட ஆசை."
அபிநயாவுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை "சரி" என்று கண்ணீரோடு தலையசைத்ததோடு சரி. கோயம்புத்தூர் போனபிறகு கால் பண்ணுகிறேன் என்று முணுமுணுத்து விட்டு திரும்பி பார்க்காமல் விறுவிறுவென்று வந்து விட்டாள். ஹோட்டல் ரூமில் வந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் இனி அழவே கூடாது என்ற முடிவோடு குளிர்ந்த நீரில் குளித்து வேறு உடைக்கு மாறி அறையிலிருந்து வெளியில் வந்தாள்.
சில்லென்று மோதிய கடற்கரைக் குளிர் காற்றை ரசிக்க மனமின்றி கால் போன போக்கில் நடந்தாள்.
யாரோ அவளை பின் தொடர்வதுப்போல் ஒரு உணர்வு. பட்டென்று திரும்பிப்பார்த்தால் யாருமற்ற வெற்று வீதி தான் கண்ணில்பட்டது. திரும்பவும் நடந்தாள் கால்கள் சோர்ந்து இனி நடக்க முடியாது என்று தோன்றவே ரொம்ப தூரம் வந்துட்டோம் என்று மனம் சொல்ல அந்த இடத்தை அடையாளப்படுத்திக் காட்டியது அந்த ஷாப்.
அவள் நடந்து வந்து கடைசியாக நின்ற இடம் வேழவேந்தனின் ஷாப். முன்பு வேழவேந்தனுக்கு சொந்தமாக இருந்த அந்த ஷாப்பை பார்த்தவுடன் அதிர்ச்சியோடு அப்படியே நின்றாள்.
'மை காட் ' எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதையேதான் திரும்ப திரும்ப ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.
கால்கள் தன்னிச்சையாக அந்த ஷாப்பை நோக்கி நடந்து உள்ளே நுழைய இவளைப் பார்த்தவுடன் அந்த ஷாப்பின் உரிமையாளர் பெண் எழுந்து ஆர்வத்தோடு வரவேற்றாள்.
"வாங்க மேடம் நல்லா இருக்கீங்களா...?" அவள் குரலில் ஒரு துள்ளல் தெரிந்தது.
"நல்லா இருக்கேன்..."
"வாங்க... உட்காருங்க மேடம்" அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து எதிரிலிருந்த சுழல் நாற்காலியை காட்டி அமரும்படி கூறினாள்.
"உங்க நம்பர் இருந்தா நானே கால் பண்ணலாம்னு நெனச்சேன் மேடம் நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க...."
"அப்படியா...! எதுக்கு?"
"உங்க கிட்ட பேசணும்னு ஒருத்தவங்க அவங்க நம்பரை கொடுத்துட்டு போனாங்க, நீங்க வந்தா கொடுக்க சொன்னாங்க..."
"எங்கிட்டேயா...! யாரு அவங்க?" நெற்றியை சுருக்கியபடி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"இதோ ஒரு நிமிஷம் இருங்க அந்த டைரியில் எழுதி வெச்சிருக்கேன்." என்றவள் எழுந்து சென்று டேபிள் மேலிருந்த டைரியை எடுத்து வந்து அபிநயாவிடம் கொடுத்தாள்.
கையில் வாங்கி பெயரை பார்த்தவளின் முகம் மாறியது. இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் அந்தப் பெயர் அவள் நினைவில் இருப்பது தான் அபிநயாவின் முகம் மாற்றத்திற்கு காரணம்.
அந்த டைரியில் எழுதப்பட்டிருந்த பெயர் நீலவேணி. வேழவேந்தனின் கல்லூரியில் படித்தவள். வேழவேந்தனோடு நெருக்கமாக பைக்கில் அமர்ந்து சென்றதையும் அது அடுத்த நாள் நியூஸ் பேப்பரில் வெளிவந்ததும் இவளுக்கு நினைவுக்கு வந்தது. சிலைகளை ஏற்றுமதி செய்யும் பெரிய தொழில் அதிபரின் மகள்.
அவளையும் வேழவேந்தனையும் வைத்து இவள் சந்தேகப்பட்டு கேட்டப்போது.
"நீ... நினைக்கிற மாதிரி இல்ல அபி, அவள் என் அப்பாவோட பிரண்ட்டோட பொண்ணுதானே தவிர வேற எந்த தப்பான உறவுமில்லை என்று அவன் பிராமிஸ் பண்ணியது இன்று நடந்தது போல் அப்படியே நினைவில் இருந்தது.
இவள் எதற்கு நம்மிடம் பேச வேண்டும் என்று சொல்கிறாள்? ஒருவேளை வேழவேந்தனைப் பற்றின விஷயமாக இருக்குமோ? எதுவுமே இல்லை என்றான பிறகு இது என்ன புது குழப்பம்?
அந்த நம்பரை தன்னுடைய செல்லில் சேவ் பண்ணி கொண்டு ஷாப்பில் இருந்த அந்தப் பெண்ணிடம் ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு வெளியில் வந்தாள்.
ஹோட்டல் ரூமுக்கு போவதற்கு முன்பு அந்த நம்பருக்கு கால் பண்ணினாள்.
முதல் ரிங்கில் போன் அட்டென்ட் பண்ண பட்டது.
" ஹலோ... குட் ஐ ஸ்பீக் டு மி...மிஸ் நீலவேணி?" மிஸ்சா மிஸ்சஸ்சா என்பதில் சிறு தடுமாற்றம் எழுந்தது.
" நீலவேணி கியர்... மே ஐ நோ ஹூ இஸ் ஸ்பீக்கிங்...?"
"நான் அபி அபிநயா என்ன ஞாபகம் இருக்கா...?
அபிநயா தன் பெயரை சொன்னவுடன் மறுமுனை எந்த பதிலுமின்றி அமைதியானது.
"ஹலோ... ஹலோ... லைன்ல இருக்கீங்களா?"
" எஸ்... லைன்ல தான் இருக்கேன் சொல்லுங்க அபிநயா!!... எப்படி இருக்கீங்க ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உங்க பெயரை கேட்கிற மாதிரி இருக்கு...?"
"என்கிட்ட பேசணும்னு சொன்னீங்களாமே அதான் கால் பண்ணினேன்."
" ஆமா உங்கள இங்க பார்த்ததா ஒருத்தர் சொன்னார்... தற்செயலா ஷாப்புக்கு போனப்ப அந்த பொண்ணு கிட்ட கேட்டேன் அவளும் நீங்க வந்துட்டு போன விஷயத்தை சொன்னாள் அதான் திரும்ப வந்தா இந்த நம்பர் கொடுன்னு கொடுத்துட்டு வந்தேன்."
"என்கிட்ட என்ன பேசணும்...?"
" உங்க கிட்ட நிறைய பேசணும், போன்ல பேச முடியாது நேர்ல தான் பேசணும். இப்ப டைம் ஆயிடுச்சு நாளைக்கு காலையில ஒரு 8 o'clock மீட் பண்ணலாமா...?"
"ஓகே மீட் பண்ணலாம் எங்கேன்னு சொல்லுங்க...?"
"8 o'clock பீச்சிக்கு வாங்க அங்க ஃப்ரீயா பேசலாம்."
"ஓகே..." என்று பேசுவதற்கு சம்மதித்தாளே தவிர இரவுத் தூக்கம் தொலைந்து போனது. நீலவேணி என்ன சொல்லப் போகிறாளோ? என்ற பதற்றம் மனதை அழுத்தியது.
அடுத்த நாள் நீலவேணி, சொன்ன நேரத்திற்கு முன்பே அந்த இடத்திற்கு சென்றுவிட்டாள் அபிநயா.
அவளும் அதிக நேரம் அவளை காக்க வைக்காமல் சீக்கிரமாகவே வந்துவிட்டாள்.
இருவரும் கை குலுக்கிக் கொண்டு பேச்சை துவங்கினார்கள்.
எடுத்த எடுப்பிலேயே,
"வேழவேந்தன் இப்படி ஒரு துரோகத்தை உங்களுக்கு பண்ணியிருக்கக் கூடாது." என்றாள்.
".............."
"உயிருக்கு உயிராய் ஒருத்தியை காதலித்து விட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு வேறு ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். அதை நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..." என்று பிடிகையோடு பேசினாள்.
அபிநயா பதிலேதும் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
"காதலில் மூன்று குணங்கள் முக்கியம். அவை அர்ப்பணிப்பு, அக்கறை, பொறுப்புணர்வு. இதில் ஏதேனும் ஒன்றில் தொய்வு ஏற்பட்டாலும், அந்தக் காதல் தோல்வியில்தான் முடியும்!
ஓர் ஆண் ஒரு பெண் மீது காதல் கொண்டால், அந்தக் காதலை பெண்ணும் விரும்ப வேண்டும். அப்படி விரும்பினால் இருவரும் ஓர் உறவை வளர்த்துக்கொள்ளலாம். ஒருவர் மற்றவரின் அருகில் இருக்கலாம், சுக, துக்கங்களில் பங்கெடுக்கலாம். இருவரும் தங்களுடைய உறவின்மீது எந்தளவுக்கு அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்தே அந்த உறவு நீடிக்கும். ஒரு பிரச்னை வந்தால் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டாமல் தங்களுடைய உறவு நீடிப்பதற்காக இருவரும் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு சிக்கல் வந்தால் அதைத் தீர்ப்பதில் தனக்கும் பங்கிருக்கிறது என்பதை இருவருமே உணரவேண்டும்.
உறவு என்பதே இருவர் சேர்ந்துதான். ஆகவே, எதிர் பாலினத்தவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவேண்டும். இருவருக்கும் இடையேயான உறவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அர்ப்பணிப்பு, அக்கறை, பொறுப்புணர்வு ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டும். இது பக்குவப்பட்ட முதிர்ச்சியான மனநிலையில்தான் வரும்.
காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர்.
எந்தளவு மற்றவர்களுக்கு உதவுகிறீர்களோ அந்தளவு சீக்கிரமாக உங்கள் காதல் தோல்வியின் வலியை மறந்து, சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வீர்கள் அப்படித்தானே...?"
" ஆமாம்.... நீங்கள் சொல்வது சரிதான்..." என்றாள் குரலை சரி செய்தபடி அபி.
"காதல் தோல்விங்கறது வாழ்க்கையே முடிஞ்சுப்போச்சுங்கற உணர்வ தந்துடும், உடம்பில ஏற்படற காயத்தவிட பயங்கரமான வலியைக் கொடுக்கும். ஆனா, போகப்போக அந்த வலி குறைஞ்சிடும், இத என் அனுபவத்திலிருந்து சொல்றேன். காரணம் நான் அந்த அளவுக்கு ஆழமாக வேழவேந்தனை காதலித்தேன். ஆனால் அவர் என் காதலை தூக்கி எறிந்துவிட்டு உங்களை காதலிப்பதாக சொன்னார் உங்களையும் அவர் ஏமாற்றிவிட்டார் என்று நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு."
என்றவளை வேதனையோடு ஏறிட்டாள்.
" அபி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? உங்கள மாதிரியே இன்னொரு நபரும் அந்த வேழவேந்தனை தேடிக் கொண்டிருக்கிறார்..." என்றவளை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் அபிநயா