அங்கே மொட்டுவோ நாளை பரீட்சைக்காக ஸ்டடி லீவில் இருக்க காலையில் விழித்தது முதல் காணாமல் போன குஷாவையே வீடு முழுக்க தேடிக்கொண்டிருந்தாள். அவள் நடவடிக்கையை ரகுவும் ஜானகியும் கண்டும் காணாமல் இருக்க இறுதியாக ஜானகியிடம் குஷாவைப் பற்றி விசாரிக்க,
"உனக்குத் தெரியாதா? உன்கிட்டக் கூடச் சொல்லாம போயிட்டானா?" என்றதும் குழம்பியவள்,
"எங்க அத்தை போனான்? சாரி போனார்" என்று இறுதியில் மரியாதை கொடுக்க,
"அப்போ என் பையனை இன்னும் அவன் இவன்னு தான் சொல்லிட்டு இருக்கியா நீ?" என்று கேட்ட ஜானகிக்கு மெலிதாகச் சிரித்தவள்,
"அது அப்படியே பழகிடுச்சு... அதை விடுங்க எங்க உங்க பையன்?"
"என்னவோ திடீர் ப்ராஜெக்ட் ஒர்காம். இன்னைக்கே போனா தான் இருந்து முடிக்க முடியும்னு அவன் கிளம்பிட்டான். அவங்க அப்பாவை எழுப்பி சொல்லிட்டுப் போயிருக்கான்"
"என்ன ப்ராஜெக்ட்?"
"அவங்க பி.எச்.டி சம்மந்தமான வேலை" என்றதும் அவளும் அவருக்கு உதவி செய்ய,
"எம்மா மொட்டு நீ படிக்க மட்டும் செய்யனுமாம். உன்னை வேலை வாங்கக் கூடாதுனு ஆர்டர்" என்றவர் கிண்டலாகச் சிரிக்க,
"ஐயோ அத்த அதெல்லாம் வேணாம். எவ்வளவு நேரம் தான் படிக்கறது. ஒரே போரிங்" என்றவள் அவருடன் சமையலுக்கு உதவ,
"அப்படியா? அப்போ உன்னைக் கேள்வி கேக்கவா?" என்றவர் அர்த்தமாய்ச் சிரிக்க,
"எனக்கு சின்ன வயசுல உங்க மேல ஒரு பிடித்தமின்மை இல்லைனா ஒரு வெறுப்பு உண்டாகக் காரணமே நீ என்னை அப்படிக் கேள்வி கேட்டதால் தான். அண்ட் இப்போ நான் வேண்டாவெறுப்பா ஸ்கூலுக்கு போற பொண்ணில்ல"
"இதுல தான் அப்பாகும் ஆச்சர்யம் பிடிபடல. எப்படி நீ படிக்க ஒத்துகிட்டன்னு அவருக்கு ஒரே குழப்பம். டெய்லி பேசுற தானே அவர்கிட்ட?" என்றதும்,
"அதெல்லாம் அவரே டான்னு சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் போன் பண்ணிடுவாரு" என்றவள் வைத்தியிடம் மிகச் சமீபத்தில் இருந்து தான் மீண்டும் பழையபடி பேசத் தொடங்கினாள். ஏனோ இந்தக் கல்யாணத்தின் மீதான வெறுப்பில் தாத்தாவின் மீதும் கோவத்தில் இருந்தவள் நாளடைவில் அவரிடம் சகஜமாகப் பேச ஆரமித்தாள்.
வேலையெல்லாம் முடித்தாலும் மொட்டுவின் எண்ணமெல்லாம் தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் போன குஷாவின் மீதே இருந்தது. இப்போதெல்லாம் குஷா அவளுக்கு அனைத்திலும் தேவைப்பட்டான். காலை எழுந்ததும் கல்லூரிக்குப் போகும் முன் தன்னுடன் ஏதேனும் வம்பளக்கும் 'ஜெர்ரி' குஷாவையும் மாலை வந்ததும் அன்றைய நிகழ்வுகளைக் கேட்டும் சொல்லியும் புத்துணர்வு கொடுக்கும் 'நண்பன்' குஷாவையும் இரவில் தன்னை அணைத்தவாறு படுத்து அதனூடே அவள் மீதான காதலைச் சொல்லும் 'லவ்வர் பாய்' குஷாவையும் எப்போதாவது தன்னிடம் சண்டை வளர்க்கும் பழைய 'எதிரி' குஷாவும் அடிக்கடி அவளிடம் காதல் மொழிகள் பேசி காதலுக்கும் காமத்துக்கும் இடையேயான மெல்லிய கோட்டைத் தாண்டும் 'கல்ப்ரிட்' குஷாவையும் நினைத்து யோசனையில் இருந்தாள் மொட்டு.
அப்போது அந்த 'டெலி பதியை' உணர்ந்தவனாக அவளை அழைத்தவன்,
"ஹூய் அழகி என்ன பண்ணிட்டு இருக்க?" என்று கேட்க,
"நான் என்ன பண்ணேன்? சும்மா படிச்சிட்டு இருக்கேன்"\
"அப்படியா? இல்லையே எனக்கு என்னவோ யாரோ என்னை பயங்கரமா மிஸ் பண்ற மாதிரி பட்சி சொல்லுதே?" என்றதும்,
"ஏன் உன்னை நினைக்குறது தான் என் வேலையா? எனக்கு வேற வேலை இல்லையா?" என்று எப்போதும் போல் வம்பு வளர்த்தாள்.
"மொட்டு, நான் இன்னும் ஒரு வாரத்துக்கு வர மாட்டேன். அண்ட் லவாவும் அனுவும் ஊருக்கு வராங்க" என்றதும் அவளையும் அறியாமல் தொண்டை அடைக்க மௌனமானாள் மொட்டு.
"ஹூய் என்ன சத்தத்தையே காணோம்? நல்லாப் படி ஜாலியா எக்ஸாம் எழுது. அப்பாகிட்டச் சொல்லிடுறேன். அவர் உன்னை காலேஜுக்கு கூட்டிட்டுப் போவார். எல்லாம் ரெடியா எடுத்து வெச்சுக்கோ. ஆல் தி பெஸ்ட்" என்று அவன் பாட்டிற்குப் பேச இவளுக்கோ அவனுடன் இருக்க வேண்டும் என்று மனம் துடியாகத் துடித்தது.
"நீ வரமாட்டியா குஷா?" என்ற குரல் ஏனோ குஷாவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதில் ஒலித்த ஆற்றாமையும் பரிதவிப்பும் அவனுக்கும் புரிந்தது.
"நான் இல்லாம இருப்பது தான் உனக்கு நல்லது. அப்போ தான் நீயும் கொஞ்சம் டென்ஷன் ஆகாம ரிலேக்ஷ்டா இருப்ப"
"அப்படினு நான் சொன்னேனா?"
"ஏய் நீ சொல்லல. நான் தான் சொல்றேன். நல்ல படியா எக்ஸாம்ஸ் எழுது" என்று இடைவெளி விட்டவன்,
"நான் தான் ஏமாத்துக்காரன் ஆச்சே? அண்ட் நம்ம ரிலேஷன் தான் ரெண்டு பாமை ஒரே திரியில கட்டுனது போல ஆச்சே? இதுக்கு என்ன அர்த்தம்?" என்று சாதாரணமாகத் தான் அவன் கேட்டான். பின்னே அவளுடைய சமீபத்திய மாற்றங்களை அவன் மட்டும் காணாமலா இருக்கிறான்?
"இந்த லவா எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டானா? நீங்க சரியான கேடி ட்வின்ஸ் டா. ஏன் எனக்கெல்லாம் கோவமே வரக் கூடாதா? நீ பேசாத பேச்சா நான் பேசிட்டேன்?" என்று பொரிந்து தள்ளிய மொட்டுவிடம்,
"அப்போ உனக்கு என் மேல எந்தவிதமானக் கோவமும் வெறுப்பும் இல்ல. அப்படித்தானே?"
"இப்போ நான் பயங்கர கோவத்துல இருக்கேன். நீ ஏன் சொல்லாம போன?"
"பேச்சை மாத்தாத. உனக்கு என்னைப் பிடிக்குமா பிடிக்காதா? நீ என்னைத் தேடுறயா என்ன? தேடுனா ஏன் தேடுற? அண்ட் அன்னைக்கு சொன்ன பொண்டாட்டிங்கற வார்த்தை உதட்டுல இருந்து வந்ததா இல்ல உள்ளத்துல இருந்து வந்ததா?" என்று நிறுத்த ஏனோ மொட்டுவுக்கு தான் உடல் முழுவதும் படபடக்க இதயம் தாறுமாறாகத் துடித்தது.
"ஹூய் அழகி லைன்ல இருக்கியா இல்லையா?" என்று ஹஸ்கியில் கேட்க அவளோ எல்லாம் தெரிந்தும் தெரியத்தைப்போல் கேட்கும் குஷாவுக்கு என்ன பதில் உரைப்பது என்று புரியாமல் தவித்தாள்.
"சரி நான் ஊருக்கு வர வரைக்கும் நல்லா யோசிச்சு பதில் சொல்லு" என்று அழைப்பைத் துண்டித்தான். லவாவைப் பற்றிய எண்ணத்தில் இருந்தவனுக்கு எவ்வாறு ரிலேக்ஸ் ஆவதென்று யோசிக்க அவனுக்கு மொட்டு தான் பதிலாக வந்தாள். அதனால் அவளிடம் பேசி தன்னை ரிலேக்ஸ் செய்தவன் அடுத்து ஆகவேண்டியத்தைப் பார்த்தான்.
எவ்விதமான உரையாடல்களும் இல்லாமல் அனு வண்டியைச் செலுத்த லவா அவள் அருகில் அமர்ந்தவாறு வந்தான். அவள் ஏதேனும் பேசுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளுடைய பாராமுகம் அவன் மீதான கோவத்தை உணர்த்தியது.
"அனுமா, என்னை..." என்று அவன் பேச ஆரமிக்க வேண்டுமென்றே ம்யூசிக் பிளேயரை ஆன் செய்தவள் அவன் மீண்டும் பேசத் தொடங்க அதன் சப்தத்தைக் கூட்டினாள்.
"நீ கேட்டாலும் கேட்காட்டியும் நான் பதில் சொல்லிடுறேன் அனு. என் ப்ரெண்ட் ரவி தேஜானு ஒருத்தன் இருந்தான். குஷாவுக்கும் அவனை நல்லாத் தெரியும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவனுக்கு கல்யாணம் ஆச்சு. போன வருஷம் கொரோனால அவன் இறந்துட்டான். அவன் சாகும் போது அவன் வைப் எட்டு மாசம் ப்ரெக்னன்ட். திடீர்னு எனக்கு பெயின் வந்து டாக்டரை பார்த்ததும் என்னையும் அறியாம உன்னை அந்த இடத்துல நெனச்சு பார்த்துட்டேன். அதுல இருந்து எனக்கு ரொம்ப பயம் பிடிச்சிடுச்சு. எனக்கு ஏதாவது ஆகி உன்னை நான் கஷ்டப்படுத்த விரும்பல..." என்ற பேச்சை அவள் கேட்டும் கேட்காததைப்போல் வந்தாள். அதன் பின் சென்னை வந்தவர்களை வரவேற்று ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.
அறைக்குள் நுழைந்ததும் அவள் கரத்தைப் பிடித்த லவாவுக்கு,
"கையை விடு. என்னைக் கோவப்படுத்தாத. உன்னை மாதிரி யாரும் என்னை சந்தோச படுத்தியதுமில்லை உன்னை மாதிரி யாரும் என்னைக் காயப்படுத்தியதும் இல்ல. என்னைக் கொஞ்ச நாளுக்கு தனியா விடு லவா. நான் கோவத்துல ஏதாவது ரியாக்ட் பண்ணிடப்போறேன். இங்க நாம மட்டும் இல்ல. அத்தை மாமா மொட்டுனு எல்லோரும் இருக்காங்க" என்றவள் விலகிச் சென்றாள்.
மறுநாள் காலை மொட்டுவை அழைத்துச் செல்ல ரகு தயாராக அவரைக் கண்ட லவா தான் கூட்டிச் செல்வதாய்ச் சொன்னான். அனுவும் லவாவும் விடுமுறை எடுத்து இங்கே வந்துள்ளதாகச் சொல்ல அதை அவர்களும் நம்பியிருந்தனர்.
ஏதும் பேசாமல் இருந்த லவாவிடம்,"என்ன லவா என்னை யாருனு மறந்துட்டியா என்ன?" என்று சகஜமாகவே பேச்சை வளர்த்திய மொட்டுவிடம் லவாவும் பேச முயன்றான். மொட்டுவோ லவாவிடம் பேசினாலும் அடிக்கடி தன்னுடைய செல்போனை பார்த்துக்கொண்டே இருக்க,
"ஹே டைம் இருக்கு மொட்டு. எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற? ஜாலியா போய் எழுது" என்று நண்பனாய் ஆறுதல் சொல்ல அதற்கு தலையசைத்தாலும் மொட்டு மீண்டும் அதையே செய்துகொண்டிருந்தாள்.
குறித்த நேரத்திற்கு முன்பாகவே கல்லூரிக்கு வந்து விட அவளைத் தனியாக விடமால் அவளுடனே இருந்த லவாவிற்கு ஏதோ ஒன்று புரிவதைப்போல் இருக்க,
"குஷா போன் பண்ணிட்டானா?" என்று கேட்டதும் ஒருகணம் எக்ஸைட் ஆகி மீண்டும் சுருங்கிய முகத்தைக் கண்டவனுக்கு எல்லாம் விளங்கியது. அவளுடன் பேச்சுக் கொடுத்தவாறே குஷாவுக்கு மிஸ்ஸட் கால் கொடுக்க உடனே அவன் லைனில் வந்தான் குஷா. கேசுவலாக பேசுவது போல் பேசிவிட்டு மொட்டுவிடம் தரவும் அவள் முகமோ நூறு வாட்ஸ் பல்பாக எரிந்தது. அதைக் கண்டவனுக்கு இதயத்தில் இருந்த பாரம் குறைவதைப்போல் உணர்ந்தான். பிறகு வீட்டிற்கு வந்தவன் அந்த வாரம் முழுவதும் மொட்டுவுடன் பேசி அதன் மூலம் அவள் வாழ்வில் குஷா எவ்வளவு இன்றியமையாதவனாக மாறியிருக்கிறான் என்றும் விளங்கிக் கொண்டான்.
இப்போது லவாவின் குற்றயுணர்ச்சியும் குறைய தொடங்கியது. ஆனால் மறுபுறம் அனுவின் பாராமுகமும் ஒதுக்கமும் அவனுக்கு வருத்தத்தைக் கொடுக்க தவறவில்லை. ஜானகியும் ரகுவும் லவா அனு ஆகியோரின் வாழ்வைப் பற்றி அறிந்துகொள்ள அதிகம் முயற்சித்தனர். முதல் ஒன்றிரண்டு நாட்களில் அனுவை சரியாக கவனிக்காத மொட்டு இப்போது தான் அவளை நன்றாகவே கவனிக்க ஆரமித்தாள். எப்போதும் அவளிடம் ததும்பும் உற்சாகமும் சிரிப்பும் வெகுவாகவே குறைந்திருக்க மொட்டுவுக்குள் சந்தேகம் உண்டானது.
அன்று இரவு வேலையெல்லாம் முடித்து அனு அறைக்குள் நுழைய அவளுக்காகவே காத்திருந்த லவா அவளிடம் பேசத் தொடங்கினான்.
"அனுமா, நீ என்கிட்டப் பேசியே நாலஞ்சு நாள் ஆகுது. நான் பண்ணதெல்லாம் தப்பு. நான் அது எதுக்கும் எந்த விளக்கமும் கொடுக்க விரும்பல. ப்ளீஸ் என்னை இப்படி அவாய்ட் பண்ணாத அனு. உனக்கு என் மேல எவ்வளவு கோவம் இருக்குனு எனக்குத் தெரியுது. அதை நீ காட்டிடு அனு. ப்ளீஸ் என்னை இப்படி அவாய்ட் பண்ணி பினிஷ் பண்ணாத. அண்ட் ரெண்டு நாளா அம்மாவும் அப்பாவும் நம்மை ரொம்ப கூர்ந்து கவனிக்கிற மாதிரி எனக்குத் தெரியுது. ப்ளீஸ் புஜ்ஜு" என்று அவளுடைய கரத்தைப் பிடித்தான் லவா.
"லவா, உனக்கு என் நிலை புரியுதா இல்லையா? நீ சொன்ன வார்த்தைக்கான அர்த்தம் என்னனு எனக்கு இப்பயும் புரியல..." என்றவளை என்னவென்று புரியாமல் பார்த்த லவாவுக்கு,
"எனக்குக் கொஞ்சம் ப்ரைவேசி வேணும்னு சொன்னயே? அப்படினா நான் உனக்குத் தொந்தரவா தானே இருந்திருக்கேன்? உன்னைக் கட்டாயப்படுத்தி காதலிக்க வெச்சு உன்னை நான் இழுத்துப் பிடிச்சிட்டு இருக்குற மாதிரி தானே நீ நெனச்சிட்டு இருக்க? உனக்கு இந்த ரிலேஷன் ஷிப் மேரேஜ் எதிலும் விருப்பமே இல்லை தானே? எனக்கு ஒரு மாதிரி இருக்கு லவா..." என்னும் போதே அவள் கண்களில் கண்ணீர் உருண்டோட ஏனோ லவாவுக்கு அவள் அழுகை மீளாத் துயரத்தைக் கொடுக்க,
"ஒண்ணே ஒன்னை இப்போ நான் உனக்குப் புரிய வெச்சிடுறேன் அனுமா. உன்னை நான் எவ்வளவு விரும்புறேன்னு உனக்கு நான் சொல்லித்தான் தெரியணும்னு அவசியமில்லை. நீ என் வாழ்க்கையில அவ்வளவு ஸ்பெஷல். நமக்கு ரொம்ப ஸ்பெஷலான விஷயத்தை நாம எப்பயும் அதிக சிரத்தையோடு பாதுகாப்போம் தானே? அப்படித்தான் நானும் உன்னை பாதுகாத்தேன். எனக்குள்ள பயம் வந்திடுச்சு அனு. எனக்கு எதாவது ஆகி அதால உன் லைப் ஸ்பாயில் ஆகிடுமோனு பயம். அதான் உன்னைப் பாதுகாப்பதா எண்ணி நான் சில முட்டாள்தனம் செஞ்சிட்டேன். உன்னை நான் அதிகம் ஹர்ட் பண்ணிட்டேன் இல்ல? ஆனா அது எனக்கு எவ்வளவு ஹர்ட் ஆகியிருக்கும்னு உனக்குத் தெரியாது. ஓகே. நான் செஞ்ச முட்டாள் தனத்தை ஜஸ்டிபை பண்ண விரும்பல. எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு. நான் செஞ்ச எல்லாத்தையும் நானே சரி பண்ணிடுறேன். ஆனா எனக்கு ஹாஸ்பிடல் போகும் போதும் ஆப்ரேசன் செய்யும் போதும் நீ என் கூட இருக்கனும் அனு. ஐ லவ் யூ சோ மச் அனு. அன்னைக்கு நீ போறேன்னு சொல்லும் போது தான் நீ இல்லாத என் வாழ்க்கை எப்படி இருக்கும்னு எனக்குப் புரிஞ்சது. ப்ளீஸ் அனு..." என்றவன் அவளை அணைக்க அவனை பதிலுக்கு அணைத்து ஆறுதல் செய்ய வேண்டும் என்று தோன்றினாலும் அவனால் காயப்பட்ட மனது அதற்கு இடம் தரவில்லை. அவனை விலக்கியவள்,
"உனக்கு ஒன்னும் ஆகாது. உன்னை சரி பண்ணற வரைக்குமாது உன் கூடவே நான் இருப்பேன்" என்று நகரமுற்பட்டவளைத் தடுத்தவன் அவளை அணைத்து ஒரு முத்தம் கொடுத்து விலகினான். அனுவுக்குள் இப்போது இருக்கும் மனநிலையை குஷா ஒருவனே நன்கு அறிவான். வெளியே அவள் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் லவாவுக்காக அவள் எவ்வளவு மருகுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.
அதன் பின்னான நாட்களும் தாமரை இலை நீர் போலவே அவர்கள் வலம்வந்தனர்.
அங்கே மொட்டுவோ குஷாவின் அருகாமையை அதிகம் எதிர்பார்க்க அவளுடைய தவிப்பு தான் லவாவின் பலமாக இருந்தது. இவ்வாறு இருக்க மொட்டு தன்னுடைய முதல் செமெஸ்டரை வெற்றிகரமாக முடித்தாள். எட்டு நாட்களுக்கு அவளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்க அன்றைய மாலை எல்லோருடன் சேர்ந்து கார்ட்ஸ் மற்றும் கேரம் விளையாடிக்கொண்டிருந்தாள். லவா மொட்டுவுடன் சேர்த்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் மோடுக்கு திரும்ப அது அனுவுக்கும் சற்று ஆறுதலாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து லவா வந்ததாலோ என்னவோ ஜானகிக்கு மகனை கவனிக்கவே நேரம் போதவில்லை. என்ன தான் பெற்ற தாய்க்கு பிள்ளைகள் சமம் என்றாலும் ஜானகிக்கு லவா என்றால் கொஞ்சம் கூடுதல் பிடித்தம் உண்டு. பின்னே வாயுள்ள பிள்ளை எப்படியேனும் பிழைத்துக்கொள்ளும் என்பதால் குஷாவைப் பற்றிய கவலை அவருக்கு என்றும் இருந்ததில்லை. அதைக் கவனித்த மொட்டு விளையாடும் சாக்கில்,
"ஏன் அத்தை இத்தனை நாட்களா உங்க முகத்துல இருந்த பொலிவைக் காட்டிலும் இப்போ ரொம்ப அதிகம் இருக்குதே?" என்று கிண்டல் செய்ய,
"எல்லாம் அவளோட செல்லப் பையன் கூட இருப்பதால தான்" என்று ரகுவும் கமெண்ட் கொடுக்க அனு ஏதோ யோசனையில் இருக்க அதைக் கண்டவர்,
"என்ன அனு, எப்பயும் கலகலப்பா இருக்குற நீ இப்போல்லாம் ஏன் டல்லா இருக்க?" என்று கேட்ட ரகுவுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்தவள்,
"அப்படி இல்ல மாமா. ஒரு மாதிரி பிசியா பரபரப்பா இருந்துட்டு இப்போ சோம்பேறியா இருக்குறதால கூட உங்களுக்கு அப்படித் தெரியலாம்" என்று சொன்னாலும் ஜானகி அதைக் குறித்துக்கொண்டார்.
அப்போது பார்த்து பெல் அடிக்கப்பட ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டவளுக்கு குஷாவாக இருக்குமோ என்று வேகமாக ஓடிய மொட்டுவைக் கண்களால் ஜாடை காட்டிய ஜானு,
"கவனிச்சியா லவா. மொட்டு இந்தப் பத்து நாளாவே நார்மலா இல்ல. எதையோ பறிகொடுத்தவ மாதிரியே இருக்குறா. இதுங்க இப்படி லவ் பண்ணதுனு தெரியாம எண்னெனவோ செய்ய இருந்துட்டோம் இல்ல?" என்று கேட்டவருக்கு,
"அவன் வர விஷயம் மொட்டுவுக்குத் தெரியாதில்ல?" என்றார் ரகு.
"நான் தான்பா சொல்ல வேண்டாம்னு சொன்னேன். அவளுக்கு சர்ப்ரைஸா இருக்குமில்ல?" என்னும் போது நால்வரும் கதவைப் பார்க்க அங்கே அவனைக் கண்டவள் எதுவும் பேசாமல் தன்னவனையே பார்வையால் வறுத்தெடுத்த மொட்டுவிடம் சிறு புன்னகை கூடச் செலுத்தாமல் உள்ளே வந்த குஷாவைக் கண்டவர்கள்,
"இவன் என்ன டா எந்த ரியாக்சனும் கொடுக்கல?" என்றார் ஜானகி.
"ஏன் அத்த நடுவீட்ல நாம எல்லோரும் நந்தி மாதிரி இருந்தா எப்படி அவன் அவளைக் கண்டுபான்?" என்று நீண்ட நாட்கள் கழித்து தன்னுடைய இயல்பான குறும்பை வெளிக்காட்டிய அனுவை கண்ணிமைக்காமல் பார்த்தான் லவா.
அவனோ வேலை பளு பயணக்களைப்பு லவாவின் ஆப்ரேசன் பற்றிய சிந்தனை ஆகியவற்றில் மூழ்கியிருக்க அவனைப் பின் தொடர்ந்தே வந்த மொட்டுவைக் கண்டுகொள்ளாமல் குளியறைக்குள் புகுந்துகொள்ள,
'நான் இவனை மிஸ் பண்ண மாதிரி இவன் என்னை மிஸ் பண்ணவே இல்லையா? இல்ல இதெல்லாம் தெரிஞ்சும் என்னை அலையவிடுறானா?' என்று பொருமினாள் மொட்டு. வெளியே வந்தவன் அப்போது தான் அவளைக் கவனித்தவனாக,
"ஹேய் பனி எக்ஸாம்ஸ் எப்படிப் போச்சு?"
"ஹ்ம்ம் போச்சு போச்சு"
"எவ்வளவு நாள் லீவ்?"
"எயிட் டேஸ்"
"ஏய் என்னுடைய ரெட் டி ஷர்ட் என்ன காணோம்?" என்றவனுக்கு,
"திருடன் தூக்கிட்டுப் போயிட்டான்" என்றதும் தான் அவள் வேண்டா வெறுப்பாக பதிலளித்ததையே உணர்ந்தவன்,
"என்ன மேடம் கடுப்புல இருக்குற மாதிரி தெரியுது?" என்றது தான் தாமதம்,
"ஊருக்குப் போறேன்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல. அங்க போயிட்டு எனக்கு போனும் பண்ணல. இங்க நான் எப்படி இருக்கேன்னு கேக்கல. திரும்ப வரேன்னு ஒரு வார்த்தையும் சொல்லல. இப்பயும் நீ செஞ்ச தப்புக்கு என்கிட்ட மன்னிப்பு கேக்கல... இதுல நான் மட்டும் உனக்கு ஒழுங்கா பதில் சொல்லனுமா?" என்றவளின் கோவத்தை அப்போது தான் உணர்ந்தான்.
இங்கிருந்து சென்ற அன்று அவளுடன் வம்பளந்தவன் தான். அதன் பின் ஒவ்வொரு பரிட்சைக்கும் அழைத்து வாழ்த்து சொல்லி மாலையில் எப்படிச் செய்தாய் என்று கேட்டு வைத்துவிடுவான். ஏனோ அவனுக்கு இருந்த மனநிலையில் அவளுடன் சீண்டி விளையாட முடியாமல் போக அதை அதிகம் மிஸ் செய்தவள் அந்தக் கோவத்தை எல்லாம் இப்போது கொட்டினாள்.
அதைக் கேட்டவனுக்கும் இதயம் ஜில் என்று இருக்க மேலும் அவளை தவிக்க விடாமல்,
"திடீர்னு ஒரு அவசர வேலை மொட்டு. அங்க வேலையும் ரொம்ப ஜாஸ்தி. அதான் டெய்லி போன் பண்ணேனே?" என்று கேட்க,
"எது ரெகார்டெட் கால் மாதிரி எக்ஸாம்ஸ் பத்தி விசாரிப்பையே அதுவா?"
வரும் வரை இருந்த டென்ஷன் ஸ்ட்ரெஸ் முழுவதும் தொலைத்தவனாக அவளை நெருங்கி முணுமுணுத்த அவள் உதடுகளை விரல்களால் பிடித்து,
"அப்பப்பா எப்படித் துடிக்குது?" என்று அவளை நெருங்கி அணைத்தவன் அவளை வாசம் பிடித்து,"நீ என்னை அவ்வளவு மிஸ் பண்ணியிருக்க மொட்டு. அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா? நீ என்னைத் தேடி இருக்க. உன்னுடைய தேடலா நான் இருந்திருக்கேன். இந்தத் தேடலுக்கானக் காரணம் என்னனு உனக்குப் புரியுதா? ஏன்னா இதுக்கான அர்த்தம் எனக்கு நல்லாவே புரியுது. நான் நினைக்குறத தான் நீயும் நினைக்கறியா அழகி?" என்றவன் இப்போது அவளை விட்டு விலக,
சிலையென நின்றவள் அதற்கு பெயர் 'காதல்' என்பதைத் தான் எப்போதே உணர்ந்து விட்டாளே? இருந்தும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் தான் அவளுக்கு ஒரு தயக்கம் இருந்தது. குஷாவோ இதன் அர்த்தத்தை மொட்டு உணர்ந்ததால் தான் இவ்வாறு நடந்துகொள்கிறாளா இல்லை வெறுமனே தன்னைத் தேடி மட்டும் இருக்கிறாளா என்று தெரிந்துகொள்ளவே அவளைக் குழப்பிவிட்டான்.
"சரி நான் வெளிய போறேன். நாம ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் உள்ள இருந்தா வெளிய இருக்கவங்க தப்பா எடுத்துக்கப்போறாங்க" என்று விஷமத்துடன் பதிலளித்து வெளியேற அவன் சொன்னதன் பொருளை உணர்ந்தவள் தன் தலையைத் தட்டிக்கொண்டு வெளியேறினாள். (நேரம் கைகூடும்)
32(2) நாளை.