அத்தியாயம்: 10
சமீரா லோகுவையும் இறக்கிவிட்டு நேராக காவல் நிலையம் சென்றாள். அவளின் பதின்வயதிலேயே காவல் நிலையம் சென்ற அனுபவம் இருந்ததால் காவலர்களை கண்டு எந்த வித அச்சமும் அவளை அண்டவில்லை.
பத்திரிக்கை துறையில் இது மாதிரி ஒரு சில சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதிதில்லை என்று காவலர்கள் புரிந்து வைத்திருந்ததால் ‘ஏன், எதற்கு, எப்படி?’ என்ற மிக சாதாரணமான கேள்விகளுடன் அவர்களின் விசாரணையை முடித்துக்கொண்டு விஸ்வநாதனின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
வால்பாறையின் அடிவாரத்தில் ஏற்கனவே சரணடைந்திருந்த மாரியின் வாக்குமூலத்தால் காவல் நிலையத்தில் காவலர்களின் வேலை எளிதாக முடிந்தது.
பிரேத பரிசோதனை முடிந்ததும் விஸ்வநாதனின் உடலை எடுத்துச் செல்வதற்காக அங்கே காத்திருந்த சமீராவிற்கு, அவருடன் பழகிய நாட்கள் ஞாபகம் வந்தது.
பள்ளியின் இறுதி ஆண்டில் இருந்த சமீராவிற்கு மிகப் பெரிய பொழுபோக்கே எழுதுவது தான்.
அந்த எழுத்துக்கள் அனைத்தும் அவளின் சமூக அக்கறையை நன்றாக பறை சாற்றியிருக்கும்.
கண் முன்னே நடக்கும் சில அநியாயங்களை தட்டி கேட்க சமீரா நினைத்தாலும் அவளின் வயது அதற்கு தடை விதிக்கும். அந்த நேரங்களில் எல்லாம் அவளுடைய கோபத்தை எழுத்துக்கள் மூலம் வெளியேற்றி கொள்வது வாடிக்கையானது.
சில நாட்கள் அவளின் வீட்டின் அருகே இருக்கும் பூங்காவில் அமர்ந்து எழுதுவாள் சமீரா.
அப்படி ஒரு நாள் அவள் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும்போது தான் சமீரா விஸ்வநாதனை சந்தித்தாள்.
அவள் எழுதி வைத்திருந்த சில காகிதங்கள் பறந்து சென்று, பூங்காவில் நடை பயிற்சி செய்துக் கொண்டிருந்த விஸ்வநாதனின் கால்களில் விழுந்ததால் தான் சமீராவிற்கு அவரின் அறிமுகம் கிட்டியது.
காலின் அருகே கிடந்த காகிதங்களை கையில் எடுத்ததும் அதைப் படித்துப் பார்க்க விஸ்வநாதனை தூண்டியது அவரின் பத்திரிகை அறிவு.
அதில் இருந்த எழுத்துக்கள் அவரை மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தன.. அந்த எழுத்துக்களின் முதிர்ச்சி அதனை எழுதியவர் ஒரு பழுத்த அநுபவசாலியாகக் காட்டியது.
அதற்கு நேர் மாறாக ‘அந்த காகிதம் தன்னுடையது’ என்று வந்த அந்த சிறு பெண்ணைப் பார்த்ததும், பெரும் வியப்பு ஏற்பட்டது அவருக்கு.
அவளிடம் தன்னை பத்திரிக்கையாளன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவளைப் பற்றியும் அறிந்துக்கொண்டு அவளோடு மட்டுமில்லாமல் அவளின் குடும்பத்தாரோடும் நன்றாக பழக ஆரம்பித்தார். அவளும் அவரின் குடும்பத்தோடு நன்றாக பழகினாள்.
அவரின் குடும்பத்தில் அவரும் அவரின் மனைவி இருவர் மட்டுமே. இருவருக்குமே சொந்தங்கள் என்பது பெயரளவில் மட்டும் தான். அதற்கு அவர் சார்ந்திருத்த துறை முக்கிய காரணம்.
குழந்தை பாக்கியம் இல்லாததால் சமீராவை தன்னுடைய பெண்ணாகவே நினைத்து அவளுடன் பாசமாக பழகினர் விஸ்வநாதன் தம்பதிகள். (பெற்றவர்கள் பாசத்தை தவிர மற்றவர்களின் பாசத்தை நிரம்ப பெற்ற அதிர்ஷ்டசாலி இந்த சமீரா)
இவ்வளவு சிறிய வயதில் அநுபவமிக்க எழுத்தாளர் போல் எழுதுவதை மனம் திறந்து பாராட்டியதோடு நில்லாமல், சமீராவின் கட்டுரைகளை அவளின் பெயரிலேயே அவருடைய பத்திரக்கையில் பிரசுகரிக்கவும் ஏற்பாடு செய்தார்.
(சமீரா அப்படி என்ன, எப்படி எழுதியிருந்தா?ங்கற கேள்வி மட்டும் என் கிட்ட கேட்காதீங்க.. ஏன்னா, சமீரா தான் நன்றாக எழுதுவாள்.. இந்த சத்யாஸ்ரீராம் இல்லை.. எனக்கிருக்கிற ஆர்வ கோளாறுல ஏதாவது எழுதலாம்ன்னு தான் முதல்ல நினைச்சேன்.. நான் எழுதறதை நீங்க கூட பொறுமையா படிச்சு ஆதரிச்சு இருப்பீங்க... ஆனா நான் உருவாக்கின இந்த விஸ்வநாதன் கதாப்பாத்திரம் இருக்கே!! கண்டிப்பா என்னை சும்மா விடாது.. சமூகத்திற்காக ஏதாவது எழுதலாம்ன்னு நினைச்சதுக்கே கனவுல வந்து பயம் காட்டிட்டார்.. இதுல நான் எழுதியிருந்தா இந்த கதையின் முடிவு உங்களுக்கு தெரியாமலே போய் விட கூடிய வாய்ப்பு மிக அதிகம்... அதான் பெரிய மனசு வச்சு உங்களை எல்லாம் படுத்தவேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். அதனால நீங்க எல்லாம் தப்பிச்சிட்டீங்க மக்களே!!! )
அவரின் வழிக் காட்டுதலால் அவளின் மேற்படிப்பை இதழியல்(journalism) துறையை தேர்ந்தெடுத்தாள் சமீரா.
இளநிலை இரண்டாம் ஆண்டில் இருக்கும்போது தான் சமீரா காஞ்சிபுரம் வந்து சமர்த்தைப் பார்த்து மனதை பறிக்கொடுத்திருந்தாள்.
ஸ்ரீனி சமர்த்தை ‘நம்மளவா’ என்று சொன்னதுமே சமீராவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
அவர்களுடன் (ஸ்ரீனி – அம்ரு) சமர்த் வீட்டிற்கு செல்வதை ஏதேதோ சொல்லி தவிர்த்து விட்டு அவள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தாள் சமீரா கண்ணீரோடு.
அங்கே அவளோடு கூட வந்திருந்த அனைவரும் அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவர்களின் அருகில் சென்றாள் சமீரா.
“என்ன ஆச்சு மேம்?” என்று அவளின் இசை ஆசிரியரைப் பார்த்து கேட்டாள் சமீரா.
“சமீரா, சிக்கீரம் நாம ஊருக்கு போகணும்மா.. எங்க அம்ருதா? உங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருந்தோம்..” என்றார் அவர்.
“மேம்?” என்று வினவினாள் சமீரா..
“நம்ம கோவைல நிறைய இடங்களில் குண்டு வெடிச்சு நிறையப் பேர் இறந்து போய்ட்டாங்களாம்.. இங்க இருக்கிற யார் குடும்பத்தையும் காண்டக்ட் செய்யவே முடியல.. அதான் ரொம்ப கவலையா இருக்கு..? உங்க ரெண்டு பேரோட திங்க்ஸ் எல்லாம் நாங்களே பக் செஞ்சு எடுத்துக்கிட்டோம்.. சீக்கிரம் கிளம்பும்மா.. எங்க அம்ருதா?”
“என் வீட்டுல கூட யாரையுமே ரீச் செய்ய முடியலையா மேம்?”
“இல்லமா. அம்ருதா எங்க? நாம கிளம்பணும்..”
“அம்ருக்கா கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.. இப்போ அவங்க வீட்டுக்கு தான் போய் இருக்காங்க..”
“என்ன..து!!” இது வேறயா!!? கடவுளே!!! என்னை ரொம்ப சோதிக்கற..!!” என்றார் அந்த இசை ஆசிரியர்.
“வீடு தெரியுமா சமீரா உனக்கு?”
“இல்லை மேம் பட் இன்னும் தேர்ட்டி மினிட்ஸ்ல இங்க வந்து விடுவேன்னு சொன்னாங்க..” என்ற சமீராவைப் பார்த்து முறைத்தார் அந்த ஆசிரியர்.
“உங்களுக்கெல்லாம் கொஞ்சம்மாவது பொறுப்பு இருக்கா? இங்க இருக்கறவங்க எல்லாம் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தா, கூலா தேர்ட்டி மினிட்ஸ்ல வந்துடுவான்னு சொல்லற? அவளோட அம்மாக்கு நான் என்ன பதில சொல்றது..? அய்யோ!! கடவுளே!! நான் கிளம்பின வேளை.. இப்படி எல்லாம் நடக்கணுமா?” என்று ஏதேதோ புலம்பினார்.
சமீராவோ பதிலேதும் பேசாமலே மௌனமாகவே இருந்தாள். அவளின் மௌனம் அங்கேயிருந்தே தொடங்கிவிட்டது போலும்.. அவள் கேள்வி கேட்கும் நேரத்தில் வாயைத் திறப்பவள், அவளை யாராவது கேள்வி கேட்கும் பொழுதெல்லாம் மௌனத்தையே பதிலாக தர ஆரம்பித்தாள்.
(அவள் மீது தான் தவறு இருக்கிறது என்று நினைத்து தான் அவளின் மௌனம் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.. இங்கே அம்ரு கல்யாணத்திற்கு உதவியது தவறு என்று நினைத்ததாலேயே இந்த மௌனம்.
சமர்த்திற்கு ஏன் பெரும்பாலான நேரத்தில் மௌனத்தையே பதிலாக தருகிறாள் என்பதை அவள் தான் சொல்ல வேண்டும்.. அதுவரை பொறுத்திருப்போம்.)
இப்பொழுது அவள் மனதில் சமர்த்தின் நினைவு பின்னுக்கு தள்ளப் பட்டு அவளைப் பெற்றவர்களின் (அவளைப் பொறுத்தவரை இப்ராஹீம் – பேகம் தானே பெற்றவர்கள்) நலன் மட்டுமே குடிக்கொண்டிருந்தது.
எப்படியோ அனைவரையும் கிளப்பி ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி புறப்பட்டது அந்த வேன்.
கோவையை நெருங்கியதுமே திரும்பிய பக்கமெல்லாம் இருந்த காவலர்களைப் பார்த்ததுமே மிகப் பெரிய குண்டு வெடிப்பு தான் நடந்திருக்கும் என புரிந்தது வேனில் இருந்த அனைவருக்கும்.
ஒரு சில குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்ததால் ஊரை சுற்றிக்கொண்டு அவரவர் இடத்தில் இறக்கிவிட்டு கடைசியாக சமீரா இருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.
அவளின் வீட்டில் ஒரு பெரிய பூட்டு போட்டு அதில் சீல் வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தாள் சமீரா.
தெருவில் இருப்பவர்களிடம் விசாரிக்கலாம் என்று நினைத்து பக்கத்து வீட்டின் கதவை தட்டினாள் சமீரா.
அவ்வீட்டில் இருந்த வந்த பெண்மணி சமீராவைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டு பதிலேதும் உரைக்காமல் கதவை அடித்து சாத்தி விட்டு உள்ளே சென்று மறைந்தார்.
அத்தெருவில் இருக்கும் யாருமே அவளுக்கு பதில் அளிக்க முன் வரவில்லை. அனைவரின் முகத்திலும் இருந்த ‘நமக்கு ஏன் வம்பு, தள்ளியே இருப்போம்’ என்ற பாவனையைப் பார்த்து மிகவும் அதிர்ந்தாள் சமீரா.
தன்னைப் பெற்றவர்களின் கதி என்ன என்பதைப் பற்றி அறிந்துக்கொள்ள முதன்முறையாக காவல் நிலையம் சென்றாள் அவள்.
அங்கு அவளுக்கு மிகுந்த அதிர்ச்சி காத்திருந்தது.
காவலர்கள் அவளிடமிருந்து பெற்றவர்களின் பெயர் மற்றும் வீட்டு முகவரியை அறிந்துக்கொண்டதும் அவளை இளக்காரமாகப் பார்ப்பதை கண்டு அவர்களை கோபமாகப் பார்த்தாள் சமீரா.
“சார்! என் பாமிலிய பத்தி எனக்கு தெரியணும்.. தயவு செய்து அதற்கு ஹெல்ப் செய்ங்க.. பிறகு என் வீட்டிற்கு ஏன் சீல் வச்சு இருக்காங்கன்னும் கொஞ்சம் சொல்லுங்க..!”
“ஊருக்கே குண்டு வச்சவங்க வீட்டை சீல் வச்சு பூட்டாம வேற என்ன செய்வாங்க..?” என்றார் காவலர்.
சமீரா ஒன்றும் விளங்காமல் அந்த காவலரிடமே கேட்டாள்.
“சார்! நான் என் பேரன்ட்ஸ் பத்தி கேட்கிறேன்... நீங்க என்னமோ சொல்லுறீங்க?”
“இங்க பாருமா, உங்க அம்மாவைப் பத்தி இன்னும் தகவல் எதுவும் வரலை எங்களுக்கு.. ஆனா உங்கப்பா இப்ராஹீம் இந்த குண்டுவெடிப்பு கேஸ்ல கைதாகி இருக்கிறார். அவரை கோவை மத்திய சிறை சாலையில் வைத்திருக்கிறார்கள்.”
“சா....ர் எ..ன்..ன சொல்ல..? என்று கேட்கும்போதே கண்களை இருட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. இருக்கும் சூழ்நிலையை மனதில் கஷ்டப்பட்டு நினைவில் கொண்டு வந்து மயங்கி விழுவதை தவிர்த்தாள்.
“ம்ம் உன் அப்பா ஒரு குற்றவாளி.. தேசதுரோகிகள் எல்லாரையும் எங்க வைப்பாங்களோ அங்க வச்சு இருக்காங்க.... அவனோட பொண்ணா நீ.. பார்க்க நல்லா இருக்கியே.. இப்படி அடுத்துவங்க உசிர மொத்தம்மா எடுக்கறதுக்கு உன்னை வச்சே பொழப்பு நடத்தி இருக்கலாம்.. மனுஷனா அவன்.. சரியான அரக்கன்.. எத்தனை உசிரு தெரியுமா? மொத்தமா முடிச்சுட்டான் அந்த ராட்சசன்..”
“இல்லை நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க.. என் அப்பா ரொம்ப நல்லவுங்க.. இறை நம்பிக்கை மிகுந்தவர் அவர்.. ப்ளீஸ் சார் அவரைப் பார்க்கிறதுக்கு ஏற்பாடு செய்ங்க..” என்று கேட்டவளுக்கு தெரியாது இனிமேல் அவரைப் பார்க்கவே முடியாதென்பது.
“அதெல்லாம் இப்போதைக்கு முடியாது.. நீயும் இந்த இடத்தை விட்டு போக முடியாது.. விசாரணைக்காக உன்னையும் உன் அம்மாவையும் தான் தேடிட்டு இருந்தோம்.. உன் தெருவுல இருக்கிறவங்க ஒருத்தரும் வாயை திறக்க மாட்டேனுட்டாங்க.. நீயாவே வந்து சிக்கிட்ட.. சீக்கிரம் உன்னோட அம்மாவையும் பிடிச்சுடுவோம்.. அவ மட்டும் யோக்கியமாவா இருக்க போறா? ‘அந்த’ மாதிரி இடத்துக்கு தான் போய் தேட சொல்லியிருக்கோம்..” என்று அவளின் குடும்பத்தையே மட்டம் தட்டி பேசினார்.
அவள் ஒரு பெண் என்பதாலும் மற்றும் அவளின் வயதையும் கருத்தில் கொண்டு மகளிர் காவல் நிலையத்திற்கு சமீராவை அழைத்து சென்றனர் அந்த காவலர்கள்.