அத்தியாயம்: 27
கோதையை கோவிந்திற்கு தாரம் வார்த்துக்கொடுக்க சமர்த்தின் தாய் லட்சமியிடம் தான் கேட்டிருந்தார் காயத்ரி. அதில் மிகுந்த மன நிறைவு பெற்றனர் சமர்த்தின் பெற்றவர்கள்.
காயத்ரி கணவனை இழந்தவர் ஆதலால் அவரால் பெண்ணை தாரம் வார்த்துக் கொடுக்க முடியவில்லை. அவரின் கணவருடைய சொந்தங்கள் கோதையை தாரம் வார்த்துக்கொடுக்க முன் வரத்தான் செய்தனர். ஆனால் காயத்ரிக்கு சமர்த்தின் பெற்றவர்கள் மனைக்கு இருப்பதில் தான் விருப்பம்.
பெற்ற ஒரே மகனது திருமணமும் பதிவு திருமணம். அதில் சிறிது மனமுடைந்து இருந்த லட்சுமி மற்றும் சாரதிக்கு, கோதையை கோவிந்திற்கு தாரம் வார்த்துக்கொடுக்க காயத்ரி கேட்டதுமே மனம் மகிழ்ந்தது.
அவர்களின் முறைப்படி இனிதே நடந்த அந்த திருமண நிகழ்ச்சிகளை மனமுவந்து செய்தனர் சமர்த்தின் பெற்றவர்கள்.
ஒரு விதத்தில் எல்லோருக்குமே அவர்களின் மனமகிழ்ச்சி நிறைவை கொடுத்தது.
அந்த நிறைவினுடனே நடந்த திருமண வரவேற்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.
சமர்த் கோவைக்கே சமீராவை அழைத்து சென்றான். சில நாட்கள் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி கண்ணன் காஞ்சீபுரத்திலேயே இருந்துக்கொண்டார்.
அவர்களின் காதல் வாழ்வு அழகிய புது கவிதையாக மலர்ந்திருந்தது. அந்த இன்பமயமான இரவுகளின் மயக்கத்தில் இருந்த சமர்த்திற்கு, சமீரா தனியே பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
ஓரிரு நாட்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தவன் சமீராவின் புலம்பல்களில் பயம் கொண்டான். மறுநாளே மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றான். அவரின் பரிந்துரைக்கேற்ப அவனின் அன்பை முழுமையாக அவளிடம் காட்டிக்கொண்டிருக்கிறான்.
இதுவரை மருந்துகள் எதையும் பரிந்துரைக்கவில்லை மருத்துவர்கள். சமர்த்தின் காதலே அவளின் மனநிலையை மீட்டுக்கொடுக்குமென்பதால், அவனின் எல்லையில்லா காதலை திகட்ட திகட்ட சமீராவிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
சமீராவும் மௌனமாகவே அவளின் அதீத காதலை சமர்த்திற்கு கொடுத்தாள்!!
இப்பொழுதெல்லாம் இந்த மலரின் மௌனத்தை மிகவும் ரசிக்க தொடங்கியிருந்தான் சமர்த்!!
அவர்களின் திருமணம் முடிந்ததுமே அவள் தேசிய ஊடகத்தில் பணிக்கு சேர்ந்திருந்தாள். பணிக்கென்று தமிழ்நாடு முழுக்க பயணிக்க வேண்டியிருந்தது.
சமர்த்தின் உறுதுணையுடன் இன்றளவும் அவள் சமீராவாகவே இருந்தாள். தொழுகையை செய்ய தவறியதேயில்லை.
மாமியார் லட்சுமி கோவைக்கு வருகை தரும்போது மட்டும் அவள் நெற்றியில் குங்குமம் இருக்கும். அவரின் மனமகிழ்ச்சிக்காக என்று இல்லை!! சமர்த்தின் எல்லையில்லா காதலில் சிலவற்றை விட்டுக்கொடுக்க அவளாகவே முன்வந்ததே அதன் காரணம்.
சமீரா அவர்களின் காதல் வாழ்வில் மகிழ்ந்தாலும், தாய் பேகம் மற்றும் தந்தை இப்ராஹீமின் நினைவு அவ்வப்பொழுது எழுந்துக்கொண்டு தான் இருந்தது. கூடவே விஸ்வநாதனும் நினைவிற்கு வரத்தான் செய்தார்.
அவர்கள் அனைவரின் மரணத்திற்கு காரணமான சகாயம் மற்றும் விக்கியை எதுவுமே செய்ய முயலவில்லை என்ற குற்ற உணர்ச்சி அவளைப் போட்டு பாடாய் படுத்தியது.
மறுபடியும் அவளின் கூட்டிற்குள் செல்ல முயன்றவளை சமர்த்தின் காதல் மாற்றியது.
சமர்த் மீராவின் மனநிலையை புரிந்துக்கொண்டு, சகாயம் மற்றும் விக்கியின் மீதான இருக்கும் குற்றங்களுக்கு ஆதாரம் திரட்ட முயன்றான்.
கோவையில் சமீராவே அவளின் பத்திரிகை நண்பர்கள் மூலம் குண்டு வெடிப்பு வழக்குக்கு ஆதாரங்களை தேட ஆரம்பித்தாள்.
தூத்துக்குடியின் புதிய மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் சமர்த் விக்கிக்கு எதிரான ஆதாரங்களை தேட ஆரம்பித்தான். தூத்துக்குடி ஆட்சியர் சமர்த்தின் நண்பனாக இருந்ததால் ஆதாரங்கள் இலகுவாகவே கிடைத்தன.
கோவை மாவட்ட ஆட்சியராக சமர்த் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவுற்ற போது தான் அவனின் திருமணம் நடந்திருந்தது.
அவர்கள் திருமணம் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அவர்களின் கையில், விக்கி மற்றும் சகாயத்திற்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் இருந்தது.
கிடைத்த அனைத்து ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் விக்கி மற்றும் சகாயத்திற்கு எதிராக புகார் அளித்தாள். அந்த புகார் கடிதத்தை ஊடங்களில் தெரிவிக்கவும் அவள் மறக்கவில்லை.
காவல் துறையில் இருக்கும் சில நேர்மையற்ற அதிகாரிகளின் நடவடிக்கையால், மக்களிடம் அந்த துறையின் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து போனது வருத்தத்திற்கு உரிய விஷயமே!!
ஆனால், பல நல்ல அதிகாரிகள் அந்த துறையில் இருப்பதால் தான் நாமும் மிக பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதையும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது என்பது தான் உண்மை.
சமர்த்திற்கு இந்த புகார் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தால், அவர்களுக்கு சீக்கிரமாக தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் சமீராவிடம் அதை வெளியிட வற்புறுத்தியிருந்தான்.
சமீராவும் அதனை ஏற்றுக்கொண்டு, அப்படியே செய்தும் இருந்தாள்.