முலை!!
----------------
வழக்கம்போலான ப்ரொஜெக்ட்டின் MEP (Mechanical Electrical Plumbing) கோ-ஆர்டினேஷன் மீட்டிங்கில், "Architecture is getting deviated from Art" என்றெவெரோ கொளுத்திப்போட, நான் வழக்கம்போல் inspired ஆகியதன் விளைவு,
Either,
Art or Architecture-
அனைத்தும் துறத்தல்-ஓர்
ஆகச்சிறந்த கலை!
அதற்குதாரணம்-
கற்சிலை -
காட்டிடும் முலை!
என்று அரை சயனத்தில் கிறுக்கியதை பக்கத்திலிருந்த என்ஜினீயர் சரவணன்(40+) ரசிக்கவில்லை என்பது, "என்ன கன்றாவிடா எழுதி தொலைச்சுருக்க?" என்பது போலவர் பார்த்ததிலேயே புரிந்தது.
காரணம்...
புறநானூற்றிலும், பூபாலக் குறவஞ்சியிலும் வெகு அழகாய் கையாளப்பட்ட வார்த்தையை , இன்று கெட்ட வார்த்தை ஆக்கி, நமது social rule அதையே அவருக்கு ஊட்டியிருக்கிறது. அதன்பின்னான புனிதத்தன்மை அவருக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.
பெண் மார்பென்பது, வெறும் பெக்டோரல் சதையின் மேல் படர்ந்த Glandular திசுக்களின் விளையாட்டென்பதும், கொழுப்பு திசுக்களின் எண்ணிக்கை பொறுத்தே அதன் அளவென்பதும்
விஞ்ஞானம் சொல்லியும் அஞ்ஞானம் அதை "அந்த மாதிரி" பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும்.., Psychologically அதன் பின்னே இரு ஜீவன்களின் (Of course, அம்மா- குழந்தை) உன்னதப்பொருத்தம், உணர்வுப்பொருத்தம், எண்ணப்பொருத்தம்.. அட, எல்லாப்பொருத்தமும் பால்வழி பரிமாறப்படுவதை அறிவோமாயின், "நாமென்பது நாமல்ல... நம் தாயே" எனும் நிஜங்காண்போம்.
குழந்தை தன் பிஞ்சு அதரத்தால் முலைக்காம்பை மெல்லச்சப்பி இழுக்கையில் உருவாகும் ஆக்சிடோசின் & ப்ரோலாக்ட்டின் காரணிகள், வெறும் Emotional Bonding-ஐ மட்டுமல்ல, தாய் சேயாகவும் சேய் தாயாகவும் சிலநொடி மாறும் சிலிர்ப்பையும் உண்டாக்குவதை உன்னதமாய் விளக்கிட, சத்தியமாய் சொல்கிறேன்.. என்னெழுத்து போதாது!!
தாய்க்கும் சேய்க்குமான இந்த Psychological Linking-ற்கு உதாரணமாய் புறநானூற்றின் 295-ஆம் தும்பை தினை பாடலை ( "கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்" எனத்தொடங்கும் பாடல், ப்ளீஸ் கூகுளிட்டுக்கொள்ளுங்கள்.. அர்த்தம் = என் முலைப்பால் குடித்தவன் நிச்சயம் வீரனாகவே மடிவான் என்று சொல்லும் வீரத்தாய்!!) கண்டிப்பாய் நான் சொல்லப்போவதில்லை. மாறாய்,
அனுபவப்பூர்வமாய் நானுணர்ந்த ஒன்றை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
1970களில் அடக்கவொடுக்க பெண்பிள்ளையாய் தனிமையை ரசித்து, ஆறேழு வயதிலேயே அற்புதமாய் கவிதைகள் எழுத ஆரம்பித்து, அதையெல்லாம் ஒருவருக்கும் காட்டாது தனக்குள்ளேயே ஒளித்து வைத்து, பதினான்கில் உணர்வுப்பூர்வ காதல், பதினாறில் திருமணம்..இரு பிள்ளைகள் ஈன்று இருபது வயதிலேயே "என் கொழந்த என்ன மாதிரி ஆச்சே..என்ன பண்ண போறானோ?.." எனும் பெரும் கேள்வியோடும், எவருக்குந்தெரியா தன் எழுத்துக்களோடும், இள மரணம் அடைந்தவளின் சிசுவாகிய (அதேபோல் எழுத்தையும் தனிமையையும் விரும்பும்) என்னிடம் எவரேனும் வந்து..
"நீங்க நல்லா எழுதறேள். ஆனா எப்பவும் யாரோடும் ஒட்ட மாட்டேன்றளே??" என்றால்....
அது நானல்ல. என் அம்மா!. என்று அமைதியாய் மனதுக்குள் சொல்லிக்கொண்டே புன்னகைப்பதை தவிர வேறெதுவும் அறியேன் நான். காரணம்,
நானவள் முலைப்பால் குடித்தவன்!!!!
--------
#Charithraa's