NicePart 2
போதாததற்கு தீட்சண்யாவின் வீடியோ வேறு அவர்களை உலுக்கிவிட்டிருந்தது. நிஷாந்தின் உருகல் அவர்களையே கலங்கசெய்திருக்கும் போது அவர்களுக்கே அந்த கயவர்களை உண்டு இல்லை என செய்ய தோன்றியது.
ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்று கவனித்துக்கொள்ளலாம் என நினைத்திருக்க அதை செய்த பரமேஷ்வரனை அவர்கள் தடுக்க முனையவில்லை.
அவர்களை அடிக்க அடிக்க ஆத்திரம் தீராமல் இன்னும் அதிகரிக்கவே செய்தது பரமேஷ்வரனிற்கு. ஆனாலும் இன்னும் செய்யவேண்டிய காரியங்கள் தலைக்குமேல் இருப்பதை உணர்ந்தவர் நிஷாந்தை அழைக்க சென்றுவிட்டார்.
பார்மாலிடீஸ் அனைத்தையும் முடித்து தீட்சண்யாவை தாங்களே அடக்கம் செய்வதாக கூறி அவளது உடலை வாங்கிக்கொள்ள ஆகாஷின் உடல் யாருமில்லாமல் அநாதை பிணமாக கிடந்தது.
அனைத்தும் முடிந்து கிளம்பும் வேளையில் ஷைலஜாவின் நினைவு வர போலீசாரிடம் சொல்லி அவளை மதுவின் பிடியிலிருந்து மீட்க மறுவாழ்வு மையம் ஒன்றிற்கு அனுப்பிவைக்கபட்டாள். ஆகாஷ் இறந்த அதிர்ச்சியில் குடித்து சுயநினைவிழந்து இருந்தவளை அவர்கள் அழைத்துசென்றனர்.
தீட்சண்யாவை தனது மகள் போல எண்ணி அனைத்து காரியத்தையும் தானே செய்தார் பரமேஷ்வரன். அவளது சிரித்த முகம் கண்முன் வந்து வந்து அவரது மனதை வாட்டியது.
எப்படிப்பட்ட பெண் இவள்? என நினைத்து நினைத்து மறுகினார்.
தீட்சண்யாவின் இறுதிசடங்கை அன்றைக்கே கோவையில் செய்துவிட்டு வருவதற்குள் கைது செய்யப்பட்டவர்கள் மேல் இன்னும் நிறைய வழக்குகள் ஜோடிக்கப்பட அதை தடுக்க முடியாமல் பயத்தில் வெளிறிப்போய் இருந்தனர்.
பரமேஷ்வரனிடம் தங்களை விட்டுவிடுமாறு கேட்க கூட பயந்தனர். அந்தளவிற்கு அவரது ருத்ரதாண்டவத்தால் மிரண்டிருந்தனர். அவர்களது சார்பாக வாதாட யாரும் அமையாதவாறு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார் பரமேஷ்வரன். எந்தவகையிலும் அவர்களை செயல்படாத அளவிற்கு உக்கிரமாக சுற்றி சுற்றி அடித்தார்.
மஞ்சரியை பாதுகாப்பான கண்பார்வையற்றோர் இல்லைத்தில் சேர்த்த பரமேஷ்வரன் அதன் நிர்வாகியிடம் எதுவும் தேவையென்றால் எந்த நேரம் ஆனாலும் தன்னை தொடர்புகொள்ளுமாறு அவளுக்கு கார்டியனாக கையெழுத்திட்டு அவளை சேர்த்துவிட்டிருந்தார்.
அதுவும் மஞ்சரியின் வற்புறுத்தலால் தான். அவளை தங்களோடு வந்து தாங்கிக்கொள்ள கூறிய பரமேஸ்வரனிடம் ஒரேடியாக மறுத்த மஞ்சரி தங்களுக்கு செய்த உதவியே போதும் என கூறியவள் அவருக்கு நன்றி கூறி அனுப்பிவைத்தாள்.
அவளுக்கு தெரியாமலேயே அந்த இல்லத்து நிர்வாகியிடம் மஞ்சரிக்கு பார்வை கிடைக்க ஆவன செய்யவேண்டும், அதையும் நீங்களாகவே செய்வது போல இருக்கட்டும் என்ற வேண்டுகோளுடன் அவளிடமிருந்தும் விடை பெற்றார் பரமேஷ்வரன்.
அந்தளவிற்கு சுயமரியாதையுடன் இருந்தாள் மஞ்சரி. என்னதான் அவர்கள் உதவி செய்தாலும் அதையும் ஒரு அளவோடுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எல்லையில் நின்றாள். தீட்சண்யாவே அவளை பாதுகாப்பாக ஏதாவது இல்லத்தில் தானே சேர்த்துவிட சொன்னாள் என எண்ணி அதையே பிடித்துகொண்டிருந்தாள்.
நிஷாந்தும் அவளது போக்கிலேயே விட்டுவிட சொல்லிவிட்டான். மஞ்சரியின் குணம் அறிந்துதான் அப்படி சொன்னான். ஆனாலும் அவ்வப்போது அவளை சென்று பார்த்துக்கொள்வதாக பரமேஷ்வரனிடம் கூறிவிட்டான்.
தீட்சண்யாவின் இழப்பு உயிரை தின்னும் வலிதான். ஆனாலும் ஹர்ஷூவிற்காக தேற்றிக்கொண்டு அனைவரும் ஹாஸ்பிட்டல் வந்தடைந்தனர்.
அடுத்த ஐந்துநாட்கள் கண் திறவாமல் அனைவரையும் படுத்தி எடுத்தவள் கண்திறந்த பின்பு தனது சுயநினைவிழந்து தான் யாரென்றே தெரியாமல் அனைவரயும் அந்நியப்பார்வை பார்த்து உயிரோடு வதைத்தாள்.
அவளது மூளை சுத்தமாக அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இன்னமும் அதற்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பதால் அது கொடுத்த அதிக அழுத்தத்தால் மூளைக்கு செல்லவிருக்கும் அனைத்து செல்களும் பாதிப்படைந்து தனது செயல்பாட்டை இயல்பாக நிகழ்த்த முடியாமல் அவளது நினைவாற்றலை மொத்தமாக மளுங்கடித்திருந்தது.
இனிமேல் ஹாஸ்பிட்டலில் வைத்திருக்க வேண்டாமென்றும் அதற்கான மருந்துகளை எழுதிகொடுத்த தேவிகா விரைவில் சரியாகுமென நம்பிக்கையளித்து ஹர்ஷிவ்தாவை வீட்டிற்கு அனுப்பிவைத்தார். தானே அவ்வப்போது வந்து அவளை செக் பண்ணுவதாகவும் கூறிவிட்டார்.
சாவிகொடுத்த பொம்மையாக மாறிவிட்ட ஹர்ஷிவ்தாவின் முகத்தில் ஜீவனின்றி எப்போதும் எங்கோ வெறித்துக்கொண்டும் எதையோ தேடி தேடி அலைபாயும் விழிகளை சுழற்றிக்கொண்டும் மொத்தமாக அறைக்குள் மட்டுமே முடங்கிவிட்டாள்.
தன் மகளின் நிலையை பரணி நினைத்து நினைத்து அரை உயிராகிவிட்டிருந்தார். இப்படியே ஒன்பது மாதங்கள் ஒரு பைத்தியம் போல குடுப்பதை உண்டு காட்டிய இடத்தில் உறங்கி தன்னை மறந்து சூனியத்தை வெறித்தவளது நிலை அனைவரையும் உயிரோடு கொன்றது.
மகளை பார்க்க பார்க்க, அவளை பழைய படி மாற்றமுடியாமல் தவிக்கும் தனது இயலாமையால் விளைந்த பரமேஸ்வரனது கோவம் ஆகாஷ், தீட்சண்யாவின் குடும்பத்தை இன்னமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியில் தள்ளியது.
ஆனால் பரணியோ தீட்சண்யாவின் மீது கோவம் கொண்டார். அவளை பார்க்காமல் இருந்திருந்தால் அவளோடு உயிராக பழகாமல் இருந்திருந்தால் தனது மகளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என கோவம் மொத்தமும் இந்த உலகத்திலேயே இல்லாத தீட்சண்யாவிடம் திரும்பியது.
எந்தளவிற்கு அவள் மேல் தன் மகள் உயிரை வைத்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பாள்? எப்படிப்பட்ட நட்பு இது என மெச்சாமலும் இருக்கமுடியவில்லை. என வாய்வார்த்தையாக என்றோ சரஸ்வதி கூற இனி தீசன்யா பற்றி யாருமே இங்கு பேசகூடாது என ஆடித்தீர்த்துவிட்டார் பரணி.
ஆனால் ஹர்ஷூ சுயநினைவு பெறவும் தீட்சண்யாவே காரணமாக இருந்தாள். தீட்சண்யா இறந்து பத்துமாதங்கள் கடந்திருந்த நிலையில் அவளது அறையை சுத்தம் செய்ய வந்த வேலைக்காரம்மாவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள் மேல் எதுவோ விழுந்தது போல இருக்க அதை எடுத்துப்பார்த்தாள்.
பரண் மேல் இருந்த கப்போர்டில் தேவையில்லாத பில்லோ, பெட்ஷீட்ஸ் என அனைத்தும் இருக்க அதை எடுத்து அப்புறப்பாடுத்துமாறு பரணி சொல்லியிருந்தார்.
ஹர்ஷூ ஹாஸ்பிடலில் இருந்த போதே தீட்சண்யா சம்பந்தமான அனைத்தையும் பரணி இல்லாமல் செய்ய சொன்னார். ஆனால் நிஷாந்த் அனைத்தையும் பரண் மேல் இருந்த கப்போர்டில் பரணிக்கு தெரியாமல் பதுக்கி வைக்க அது இன்று ஹர்ஷிவ்தாவிடம் சேர்ந்தது.
இதுதான் தீட்சண்யாவின் எண்ணமோ? அவளது ஹர்ஷூவிற்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்க அவளை இப்படியே முடக்கிவிட கூடாதென நினைத்துன் தான் தானே அவளது கண்முன் தோன்றினாளோ? நிஷாந்தும் அதைத்தான் கூறினான் பரணியிடம்.
தங்கள் கல்லூரி காலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஸ் அனைத்தும் மேலே இருந்து சிதற தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அனைத்தையும் தன்னையறியாமல் தன்னிச்சையாக எடுத்து பார்த்தவளது கண்கள் ஏனோ குளமாகின.
ஒவ்வொன்றாக பார்த்துகொண்டிருந்தவள் தலையில் பெரும் இடியொன்று விழுந்தது போல வலி எடுக்க அதை தாங்கிக்கொண்டு மேலும் பார்க்க அந்த புகைப்படங்களின் நடுவில் தீட்சண்யாவின் நிச்சயத்தன்று தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதில் ஆகாஷூம் அவர்களோடு இருந்ததை வெறிக்க பார்த்தாள்.
அவளது நினைவுகள் சுழன்று தீட்சண்யாவின் இறப்பிலும் அடுத்த நொடி தான் இருக்கும் நிகழ்காலத்திலும் சட்டென வந்து நிற்க அதன் தாக்கத்தில், “தியா...” என பெருங்குரலெடுத்து கத்த சுத்தம் செய்ய வந்தவர் பயந்துவிட்டார்.
பரணியும் பரமேஷ்வரனும் என்னவோ என பதறி வர அங்கே புகைப்படங்களின் மத்தியில் ஹர்ஷூ நின்றிருந்தாள். கையில் இருந்த ஆகாஷை இப்போதே கொன்றுவிடும் எண்ணத்தில் உக்கிரமாக பார்த்து கொண்டிருந்தவளை கண்டு பதறி அருகில் வர அதற்குள் மயங்கிவிட்டிருந்தாள்.
----------------------------------------------------------ஹர்ஷூ பழையபடி சுயநினைவு பெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்டிருந்தது. ஆனாலும் அறைக்குள்ளேதான் தான் இருந்தாள்.
அவளது இந்த மாற்றம் அனைவரையும் நிலைகுலைய செய்தது.
தீட்சண்யா தற்கொலை செய்துகொண்டது மேலோட்டமாக பார்த்தால் கோழைத்தனமாக இருந்தாலும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்கு தகுந்த தண்டனை கொடுத்த முடிவில் துணிச்சல் தெரிந்தது. துணிச்சலாக ஆகாஷை அணுகிய முறை அவனை வியப்பில் ஆழ்த்தியது.