Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் தீபம் ஏற்றினாள்

காதல் தீபம் ஏற்றினாள் 01



Advertisement

 ஓம் சரவணபவ..

Advertisement

 அத்தியாயம் 01

Advertisement

 சிங்கப்பூர் விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த காலை வேலையில்..

Advertisement

 இந்திய விமானம் புறப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது..

 மக்கள் அங்கும் இங்கும் பரபரப்பாக அவர்களது உறவினர்களிடம் இருந்து விடை பெற்று அவர்களுக்கான ட்ராலியை தள்ளிக் கொண்டு செக்கிங் செய்து அடுத்தடுத்த கட்டதுக்கு முன்னேறிக் கொண்டிருந்தார்கள்..

 அந்த மக்களின் அவசர நிலையை விட வேறு ஒரு அவசரநிலை பி ஏ ராஜாவிடம் அதிகம் காணப்பட்டது..

விடாது அவனிடம் இருந்த கைபேசி அழைத்துக் கொண்டே இருந்தது..

 கிட்டத்தட்ட 10 அழைப்புகளுக்கு மேல் அவனது கைபேசியில் தவறிய அழைப்புகளாக பதிவாகி இருந்தது..

 இனியும் தாமதிக்காமல் அழைப்பிற்கு சொந்தக்காரனிடம் விஷயத்தை கூற வேண்டும்.. அவன் அடித்தாலும் வாங்கிக் கொள்ளலாம் எனும் நிலையில் அவன் அருகே சென்றான் அவனது பி ஏ ராஜா..

 அவனும் அவனது தொழில் சாம்ராஜ்யத்தின் முதல் தோல்வியை அன்று சந்தித்து சிங்கப்பூரை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு வருவதற்காக விமான நிலையத்தில் காத்திருக்கும் இருக்கையில் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான்..

 இன்று முடிக்க இருந்த ஒப்பந்தம் தடை செய்யப்பட்ட காரணத்தினால் மிகவும் கோபத்தோடு இருந்தான்..

 அவன் கோபமாக இருக்கும் வேலையில் இந்த அழைப்பை பற்றி கூறினால் இன்று இவ்வளவு மக்களுக்கு மத்தியிலும் தனக்கு கட்டாயம் அடி விழப்போவது உறுதி என்று தெரிந்து இனியும் தாமதிக்க விரும்பாமல் அவன் முன்னே நின்று. “ சார்.. சார்..” என்று இருமுறை அழைத்தான்..

 ராஜாவின் அழைப்பிற்கு எந்த ஒரு பதிலும் அவனிடம் இல்லை.. முன் எப்படி இருந்தானோ அப்படியே இருந்தான்..

 விடாமல் அழைப்பு வந்து கொண்டே இருக்கவும் ஏதோ அவசரம் என்று புரிந்து மீண்டும் சற்று சத்தத்தை கூட்டி “ சார்.. ” என்றான்..

 இந்த முறை தான் அந்த சிலைக்கு சற்று உயிர் வந்ததோ என்னும் விதமாக மூடியிருந்த கண்களை திறந்து தீயாக வெப்பத்தை முறைப்பாக வீசினான்..

‘ ப்பா என்ன பார்வைடா இது.. இவருக்கு மட்டும் சக்தி இருந்தால் இவர் பார்த்த பார்வைக்கு நான் எரிஞ்சி சாம்பல் ஆயிருப்பேன்..’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது இந்த முறை அவன் நினைப்பை கலைக்குமாறு

“ ஏய் இடியட்.. என்ன மேன் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க?.. ” என்றான்..

 அவன் பார்வை மட்டுமா?.. வெப்பம் வீசுகிறது.. அவன் குரலும் அந்த குரலில் இருந்து வரும் வார்த்தைகளும் அல்லவா அனலை அளித்தெளிக்கிறது..

 ராஜாவிற்கு அவன் திட்டியது எல்லாம் பனிக்கட்டி அள்ளி அவன் தலையில் போட்டது போல் குளுகுளுவென்று தான் இருக்கும்.. ஏனென்றால் அவன் கொடுக்கும் சம்பளம் அப்படியானது..

 அவனுக்கு பி ஏ வாக ராஜா இருக்கும் வரையில்தான் அங்கே அவனை நம்பி இருக்கும் அவனது குடும்பம் பசி இல்லாமல் மூன்று வேளையும் நல்ல உணவு சாப்பிட்டு, நல்ல உடை உடுத்தி கௌரவமாக அந்த ஊரில் வசிப்பார்கள்..

 தன் குடும்பத்திற்காக அவன் எவ்வளவும் தாங்குவான்..

  ராஜாவின் முதலாளி அந்த அளவிற்கு கொடுமைக்காரன் என்றும் சொல்ல முடியாது.. அதற்காக பண்பானவன் அன்பானவன் என்றும் கூறி விட முடியாது..

இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக சினத்தோடு இருந்தான்.. அதற்கு காரணம் இன்று அவன் எடுத்துச் சென்ற ப்ராஜெக்ட் கேன்சல் செய்யப்பட்டு விட்டது அது மட்டும் தான்..

 ராஜாவிடம் இருந்து இன்னும் எந்த ஒரு பதிலும் வரவில்லை என்பதால் மீண்டும் அவனே கத்தினான்..

“ டேய் ராஜா இப்ப என்னன்னு சொல்ல போறியா?. இல்லையா?.. எவ்வளவு நேரம் கேட்கிறேன்..” என்றான்.. இந்த முறை அனல் சற்று குறைந்த போல் இருந்தது.. அதனால் ராஜா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலைப்பு வந்ததற்கான நோக்கத்தை கூறினான் 

“ சார்.. அது வந்து என்னன்னா அக்கா தொடர்ந்து கால் பண்ணிக்கிட்டே இருக்காங்க.. ”

“ டேய் அறிவு கெட்டவனே..! அக்கா கால் பண்ணியதை சொல்றதுக்குதானா இப்படி பம்மற?.. என்னவாம் எடுத்து பேசுனியா?..” என்றான்..

 அக்கா என்றதும் சினம் வெகுவாகவே குறைந்துவிட்டது.. ஏனென்றால் அவனுக்கு இருக்கும் ஒரே உறவு அவனது அக்கா மதி மட்டும்தான்..

அவன் பிறந்ததில் இருந்து தாயைப் பார்த்ததில்லை.. தந்தை பிசினஸ் பிசினஸ் என்று வீட்டில் இருக்காமல் ஓடுவார்.. அவனை கண்ணும் கருத்துமாக வளர்த்தவர் மதி..

 அவனுக்கு தாய் தந்தைக்கும் ஒரு படி மேல் தான் அக்கா மதி..

“ சார் இப்பதான் எடுத்து பேசினேன்.. தொடர்ந்து அழைப்பு வந்துகிட்டே இருந்தது.. அழைக்கவும் என்னவோ ஏதோன்னு பயந்து தான் எடுத்தேன்.. நான் எடுத்ததும் முக்கியமான விஷயம் பேசணுமாம் உங்களை உடனே அவங்களுக்கு கூப்பிட சொன்னாங்க..” என்றான் ராஜா..

“ சரி என்னவோ தெரியல.. அக்கா சும்மா எல்லாம் இப்படி ஒரே கூப்பிடாது என் போன குடு..” என்று கேட்டு ராஜாவின் கையில் இருந்து அவன் அழைபேசியை பெற்றுக் கொண்டு சற்று தள்ளி வந்து அக்கா மதிக்கு அழைப்பு விடுத்தான்..

மதி எப்போது தன் தம்பியிடம் இருந்து அழைப்பு வரும் என்று கைப்பேசியை கையிலே வைத்துக்கொண்டு பார்த்திருந்தார்.. அதனால் அவன் அழைத்த முதல் ரிங்கிலேயே கைப்பேசியை ஓகே பண்ணி காதில் வைத்தார்..

“ அக்கா என்னக்கா எதுவும் உடம்புக்கு முடியலையா?.. என்ன இத்தனை முறை கூப்பிட்டு இருக்கீங்க?..” என்றான்..

இப்போது அவன் குரலில் அதிக பாசமும், பதட்டமும் மட்டுமே தெரிந்தது.. கோவம் இருந்த தடம் தெரியாமல் ஓடி மறைந்து விட்டது..

“ எனக்கு ஒன்னும் இல்லப்பா.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. போன காரியம் நல்லபடியா முடிஞ்சுதா?..”

“ ம்ம் முடிஞ்சது அக்கா.. உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை தானே?..” என்றான்.. 

 அவன் தோல்வி அவனோடு போகட்டும் அதை அக்காவிடம் சொல்லி இன்னமும் அவரை வருத்தப்பட வைக்க அவனுக்கு விருப்பமில்லை..

 ஏனென்றால் மதி அவர் வாழ்க்கையில் அனுபவித்த வலிகள் சொல்லில் அடங்காதவை..

“ உண்மையா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல திரு.. நீ எப்பவும் கேட்பியே அக்கா உனக்கு ஏதாவது வேணுமா கேளு?.. அக்காவுக்கு ஏதாவது வேணுமா கேளு செய்து தரேன்னு.. நானும் அதுக்கு நேரம் வரும்போது சொல்றேன்னு சொல்லுவனே.. இப்பதான் திரு அதுக்கு நேரம் வந்திருக்கு.. 

நான் உன்னை கார்னர் பண்ணுறேன்னு தப்பா நினைக்காத.. ஆனா அதை நீ எனக்காக கட்டாயம் பண்ணி தான் ஆகணும்.. நான் இப்ப உனக்கு சொல்ற இடத்துக்கு நீ போய் நான் சொல்ற வேலையை நீ உடனே செய்யணும்.. முடியுமா திரு முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத ப்ளீஸ்..” என்றார்..

“ அக்கா என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க?.. நீங்க கேட்டு நான் ஒன்னு முடியாதுன்னு எப்ப சொல்லி இருக்கேன்.. இனி எப்பவும் முடியாதுன்னு சொல்லவும் மாட்டேன்.. நீங்க சொல்லுங்க நான் அதை கட்டாயம் பண்ணுறேன்.. ஆனா நான் இன்னும் இந்தியா வரலையே.. இப்பதான் சிங்கப்பூர் ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுறேன்.. நான் இந்தியா வந்துதான் செய்ய முடியும்.. ஆனால் கட்டாயம் செய்வேன்..” என்றான்..

“ எனக்கு தெரியும் திரு.. ராஜா நீங்க இன்னும் அங்க இருந்து புறப்படலன்னு சொல்லிட்டான்.. இப்போதைக்கு அவசர உதவிக்கு நான் இங்கிருந்து ஆள் அனுப்பிட்டேன்.. பட் என்னால போக முடியல.. நீ வந்து நேர வீட்டுக்கு வராமல் நான் சொல்ற இடத்துக்கு போ.. அங்க போய் நான் சொல்றத நீ பண்ணிட்டு வா.. ” என்று அவனிடம் கூறி என்ன பண்ண வேண்டும்.. எங்கே போக வேண்டும்.. என்ற தகவலையும் அவனிடம் கூறி சற்று அக்காவின் பேச்சால் மட்டுப்பட்டிருந்த அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி விட்டு அலைபேசியை வைத்தார் மதி..

 முறை பொண்ணை உத்து உத்து பார்க்கும் முறை பையன் போல் ராஜா அவன் பாஸை உத்து உத்து பார்த்தான்.. அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை பொறுத்துதான் அவன் அடுத்து பேச வேண்டுமா இல்லை தள்ளி நிற்க வேண்டுமா என்று அவன் முடிவெடுக்க முடியும்..

  இப்பொழுது மீண்டும் அவன் முகம் கடினமாகவும் அனல் தெறிக்கவும் இருப்பதை பார்த்து அவன் அருகே அழைக்காமல் செல்லக்கூடாது.. சென்று அடிவாங்கும் அளவுக்கு அவனுக்கு தெம்பும் இல்லை.. அதனால் சற்று தள்ளியே நின்றான்..

 கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின்பு மதி சொன்ன பெயரையும் அந்த விலாசத்தையும் அவன் காதால் கேட்டான்..

‘ ஏன் இந்த அக்கா எப்பவும் இப்படி இருக்காங்க தெரியாது.. எவ்வளவு பட்டாலும் அவங்களுக்கு புத்தியே வரமாட்டேங்குது.. சாதுவா இருந்து தான். அதோட வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்கு.. இன்னும் அடங்குதா பாரு.. யாரை நான் இனி பார்க்க கூடாது பார்த்தா கொலையே பண்ணுற அளவுக்கு வெறி இருக்குன்னு ஒதுங்கி இருந்தேனோ இப்ப அங்கேயே என்னை போய் அவங்களுக்கு உதவியா இருந்து கவனிச்சுக்க சொல்லுதே ஐயோ.. கடவுளே என்கிட்ட இருந்து அவங்களை காப்பாத்து..’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவன் செல்லும் விமானதிற்கு அறிவிப்பு வரவும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்கள் இருவரும்..

 அதனை தொடர்ந்து விமானமும் புறப்பட்டது..

 

 அவனுக்கு இந்தியாவை விட்டு தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கேயும் சென்று வசிப்பதற்கு சற்றும் பிடித்தம் இல்லை..

 அதற்கு மதி ஒரு காரணம் என்றால் தாய்நாட்டு பற்று ஒரு காரணம்..

 தாய்நாட்டு பற்று காரணமாகத்தான் இங்கே தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பழங்காலத்து உணவு வகைகள் மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை கற்றுத் தேர்ந்து சிறந்த செப்-பாக பட்டம் பெற்று தன் நாட்டு ஆரோக்கியமான உணவுகளை அங்கே வாழும் தமிழ் மக்களும் உண்டு அனுபவிக்கட்டும் என்று நல்லெண்ணத்தோடு நாடு நாடாக சென்று அவனது பழமை புதுமை ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தான் 

 வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் எந்த காலத்திலும் தாய்நாட்டு உணவை மிஸ் பண்ணாமல் இருப்பதற்காக பாட்டி காலத்து பழமை வாய்ந்த உணவு வகைகள்.. மற்றும் புதுமையான தமிழ் உணவு வகைகள்.. அனைத்தும் அந்த நாட்டு மக்களுக்கு கிடைத்து அவர்களின் உணவின் ஏக்கத்தை தீர்த்து வைப்பதற்காகவும் அவனுக்கு இது விருப்பமான தொழில் என்பதால் மன சந்தோஷத்திற்கு மற்றும் உழைப்பிற்கு என ஆத்மார்த்தமாக அவன் தேர்ந்தெடுத்த தொழில் தான் இந்த உணவகம் ஆரம்பிப்பது..

தற்போது மலேசியா, இத்தாலி, துபாய் போன்ற மூன்று நாடுகளில்.. பழமை புதுமை ரெஸ்டாரன்ட் ஆரம்பித்து மிகவும் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது..

 தந்தையின் கன்ஸ்ட்ரக்சன் தொழிலை தந்தை இழப்பிற்கு பின் அதை விற்று அதில் வந்த பணத்தை தாய் தந்தை பெயரில் அவர்களின் ஞாபகார்த்தமாக முதியோர் இல்லம் ஆரம்பித்து அதில் அவனும் மாதாமாதம் தேவையான செலவுகளை பொறுப்பேற்று அதையும் நடத்தி வருகிறான்..

 அவனிடமும் சில நல்ல பழக்கவழக்கங்களும் இருக்கு.. தொழிலாளர்களை தட்டிக் கொடுப்பது அவர்களுக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் பூர்த்தி செய்வது.. என்பன போன்ற பழக்கங்கள் இருக்கின்றது.. ஆனால் கோவம் என்னும் ஓர் அரக்கன் அந்த குணத்தை பின்தள்ளி விட்டு அவனை மற்றவர்கள் முன் திமிரானவன், கோபகாரன் என அவனை அடையாளம் காட்டி விடுகிறது அந்த கோபம்..

 அந்த கோபம் மட்டும் சற்று குறைத்துக் கொண்டால் அவனைப் போன்று ஒரு நல்ல மனிதனை பார்க்க முடியாது..

 நன்றாக சோம்பேறித்தனம் இல்லாமல் ஓடி ஓடி உழைப்பான்..

தினமும் காலையில் வாக்கிங் போய்விட்டு வந்து குளித்து பின் சத்துமா கஞ்சியை குடித்து அக்காவிடம் சற்று நேரம் பேசி இருந்து விட்டு காலை உணவை முடித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்வான்.. அன்றய நாள் அப்படி ஆரம்பித்தால் எந்த நேரம் வீட்டுக்கு வருவான் என்று அவனுக்கே தெரியாது..

 மதியும் எவ்வளவோ கூறி பார்த்து விட்டார்.. வேலை நேரத்தை சற்று குறைத்து வீட்டில் ஓய்வுடன் இருக்கும் படி.. ஆனால் உழைக்க வேண்டிய வயதில் உழைத்து விட்டு ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஓய்வெடுக்க வேண்டும்.. என்று அக்காவுக்கு அறிவுரை கூறிவிட்டு அவரின் நலனை நன்றாக பார்த்து அறிந்து கொண்டு சென்று விடுவான்..

 சமீபகாலமாக மதி ரொம்பவும் தனிமையை உணருக்கிறார்.. என்பதை தெரிந்து கொண்டு அவருக்கு பேச்சு துணைக்கு உதவிக்கு என ஓர் இளம் வயது பெண்ணை வேலைக்கு அமர்த்தலாம் என்று தீர்மானித்து அதற்குரிய ஏற்பாடும் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறான்..

இதோ மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் அவன் தாய் மண்ணை மிதித்து விட்டான்..

 ஊரெல்லாம் சுற்றித்திரிந்தாலும் சொந்த நாட்டுக்கு சொந்த வீட்டுக்கு வந்து சற்று அமர்ந்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தாலும் அது அமிர்தம் தான்..

எப்போதும் திரு அப்படித்தான் உணர்வான்..

இதோ இருவரும் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்து இறங்கி விட்டார்கள்.. அங்கே இருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு மதி அவனுக்கு கொடுத்த வேலையை பார்ப்பதற்காக செல்ல வேண்டும்..

 திருச்சிக்கு சென்று அங்கிருக்கும் ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டும்.. தொடர் அலைச்சல்தான்.. ஆனால் அக்கா சொல்லிவிட்டாரே.. என்ற காரணத்திற்காக பயணத்தை தொடங்கினான்..

 ஆறு அடிக்கும் சற்று அதிகமான உயரம்.. உணவு சார்ந்த தொழில் என்பதால் அவனது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம் என்பதாலும் அதில் மிகுந்த கவனம் செலுத்துவதால் தேவையற்ற கொழுப்புகள், சதைகள் இல்லாமல் சீரான உடல் அமைப்போடு மிகவும் வசீகரமான தோற்றத்தோடு இருப்பவன்..

 அவனே பழமை புதுமை ரெஸ்டாரன்ட் சேர்மன் திருவேந்தன்..

 கோபம் வந்தாலும் அதை கட்டுப்படுத்தும் குணம் கொண்டவன் என்றாலும் அதிக அளவிற்கு இதுவரை யாருக்கும் ஆபத்தை விளைவிக்காதவன்..

 ஆனால் இனி அவனே நினைத்தாலும் அவன் கோபத்தை கட்டுப்படுத்தி வைக்க முடியாது என்பதும் இந்த பயணம் அதற்கு ஆரம்ப புள்ளி என்றும் அவன் அறிந்திருக்கவில்லை..

 யாரை இனி வாழ் நாளில் பார்க்க கூடாது என்று முடிவெடுத்து இருந்தானோ..! அந்த நபரை தான் இனி அவன் வாழ்க்கை முழுக்க சுமக்க வேண்டும் என்றும் அவன் அறிந்திருக்கவில்லை..

 அவன் எதிர்பாராத படி அவன் வாழ்க்கை இந்த பயணத்தால் திசைமாறி பயணிக்கப்போகிறது.. 

 நாமும் அவர்களோடு தொடர்ந்து இணைந்திருப்போம்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!