மனசாட்சி இல்லாமல் பேசியவனை அற்ப பதரைப் பார்ப்பது போல் அனைவரும் பார்க்க,
அழகனோ, “அவ்வளவு தானே உனக்கு ஆசை எடுத்துக்கோ” என்றவன் சட்டென்று அந்த பணத்தை பையில் போட்டு அவனிடம் கொடுத்தான். பின்னர் உள்ளே சென்று இப்போது அவர்கள் இருக்கும் வீட்டின் பத்திரத்தையும் கொண்டு வந்து கொடுத்தான்.
”சரி இதெல்லாம் கொடுத்தாச்சு, ஆனா ரிஜிஸ்டர் பண்ணனுமே” என்றதும் மீண்டும் உதட்டை வளைத்து சிரித்த அழகன்,
“இந்த வீடு உன் பேர்ல தான் இருக்குது” என்றதும் அதிர்ந்தான் அகில்.
“இந்த வீடு இருக்கிற நிலத்தையே உன் பேர்ல தான் வாங்குனான். நான் அப்பவே தலப்பாடா அடிச்சிக்கிட்டேன் இவன் பேர்ல எதுக்கு வாங்குற, உன் பேர்ல வாங்குன்னு கேட்டியா நீ. ஏன் தம்பி இப்படி இருக்கிற” என்று பெரிய மகனை பார்த்து கேட்டார் குமரேசன்.
“பரவால்லப்பா என்கூட பிறந்தவன் தானே” என்று சொல்லி பத்திரத்தை கொடுத்து விட்டு மீதம் இருந்த மூன்று பத்திரங்களையும், மற்ற மூவரது கையிலும் கொடுத்தான். இளம்பரிதி, கார்முகிலன், சங்கரி மூவரும் அதை வாங்க மறுத்தார்கள் வலுக்கட்டாயமாக அவர்கள் கையில் திணித்தான் அழகன்.
“அப்பா..”
“என்ன தம்பி”
“இவ்வளவு தூரம் ஆனதுக்கப்புறம் நம்ம அமைதியா இருந்தா நல்லா இருக்காது இல்லையா. அதனால நீங்க என்ன பண்றீங்க அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க, தெரிஞ்சவங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு அடுத்த வாரமே அகில் விரும்புற பொண்ணு வீட்டுக்கு, பொண்ணு கேட்டு போங்கப்பா. அவங்க பொண்ணு தர யோசிப்பாங்க, அப்ப நீங்க சொல்லுங்க இவ்வளவு பேங்க் பேலன்ஸ் இருக்குது, இவ்வளவு பெரிய வீடு இருக்குன்னு சொல்லுங்க கண்டிப்பா பொண்ணு தருவாங்க”
“எங்களை மட்டும் போக சொல்றியே, நீ வரலையாப்பா”
“இல்லப்பா நான் வரல. வீடு கட்ட ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் பணத்தை எடுத்து வச்சுருந்தேன், அவசரத்துக்கு பிசினஸ் ஆரம்பிக்க பணம் வேணும்னு என் நண்பன் விசாரிச்சுட்டு இருந்தான். நான் அதைக் கொடுத்தேன், ஆனா அவன் வாங்க மறுத்துட்டான்பா, நாம இரண்டு பேரும் பார்ட்னர்ஸா இருக்கலாம்னு சொன்னா வாங்கிக்கிறதா சொன்னான். அவன் ஒர்க்கிங் பார்ட்னர்னா, நான் ஜஸ்ட் பைனான்சியல் பார்ட்னர் மட்டும் தான்பா. இப்ப எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டேன் இல்லையா, அதனால அவனோட போய் ஜாயின் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்றவனது முடிவைக் கேட்டு அனைவருக்கும் வருத்தமாக இருந்தது.
”சூப்பர் மார்க்கெட் வைக்கணும்னு தானே நீ ஆசைப்பட்ட”
“இதுவும் அதை விட குறைஞ்ச வேலை இல்லப்பா, நல்ல வேலை தான். அதை நான் பார்த்துக்கிறேன், நீங்க எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யணும். பொண்ணு கேட்க போனா அகிலைப் பத்தி விசாரிப்பாங்க, தயவு செய்து அவங்கக்கிட்ட எனக்கு நாலு பையன் ஒரு பொண்ணுன்னு சொல்லிடாதீங்கப்பா. எனக்கு மூணு பையன் ஒரு பொண்ணுன்னு மட்டும் சொல்லுங்க. அகில் தான் மூத்த பையன்னு சொல்லுங்கப்பா” என்றதும் அதிர்ந்தார் குமரேசன்.
“ஏன் தம்பி இப்படி எல்லாம் பேசுற?”
“இல்லப்பா அது தான் சரி வரும். அகில் மட்டும் இல்ல ஊர்ல இருக்கிற எல்லாருமே அப்படித்தான் பேசிக்கிறாங்க, எனக்கு ஏதோ குறை இருக்குன்னு. அவங்க விசாரிக்கும் போது நான் தான் உங்க பெரிய பையன்னு தெரிய வந்துரும், ஆனா அவங்க உங்கக்கிட்ட கேட்கும் போது நான் உங்க பையன் இல்லன்னு சொல்லிடுங்கப்பா. இல்லன்னா அகிலோட கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வந்துரும், இதெல்லாம் நான் அவசரப்பட்டு எடுத்த முடிவுன்னு நீங்க நினைக்க வேண்டாம். நல்லா யோசிச்சு நிதானமா எடுத்த முடிவு தான்பா.
பரிதி வேலைக்கு போயிட்டு இருக்கான், முகிலும் கூட படிப்பை முடிச்சிட்டு எப்படியும வேலையில ஜாயின் பண்ணிடுவான். இவங்க ரெண்டு பேருக்கும் கூட அடுத்தடுத்து ஒரு வருஷத்துலையோ மூணு வருஷத்துலையோ கல்யாணம் பண்ணி வச்சிட்டு கடைசியா பாப்பாக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருங்கப்பா. முடிஞ்சா பாப்பா கல்யாணத்துக்கு மட்டும் என்ன கூப்பிடுங்க கண்டிப்பா வருவேன். அதே போன் நம்பர் தான் வச்சிருப்பேன் நீங்க கூப்பிடுங்க நான் பேசுறேன். இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேன்னு யோசிக்கிறீங்களா, என்னைக் கூட்டிட்டு போறதுக்கு என் பிரண்டு வந்துட்டு இருக்கான்பா. நான் இப்பவே இந்த வீட்டை விட்டு போறேன்” என்று அழுங்காமல் குலுங்காமல் தன் மன எண்ணத்தை அணுகுண்டு போல் தூக்கி போட்டவனை அனைவரும் அதிர்ந்து பார்த்தார்கள்.
“ஏன் தம்பி இப்படி ஒரு முடிவெடுத்த, நீ போயிட்டா எல்லாம் சரியா போயிடுமா?” என்று மனத்தாங்கலோடு விமலா கேட்க,
“இதை விட்டா வேற வழி இல்லைங்கக்கா. நீங்க தான் இவங்களைப் பார்த்துக்கணும்கா..”
“என்னமோ போ. நீ எங்கிருந்தாலும் நல்லா இருந்தா சரி. நான் கிளம்புறேன் பிள்ளைங்க தனியா இருக்கும் ” என்று சொல்லி விட்டு அவர் கிளம்பி விட்டார்.
அழகன் அப்படி சொன்ன பிறகும் அகிலிடம் எந்த மாற்றமும் இல்லை. ‘நீ போனா என்ன, வந்தா என்ன?’ என்ற எண்ணத்தில் தான் அமர்ந்திருந்தான்.
“அண்ணா போகாதீங்க அண்ணா..” என்று மற்ற மூவரும் அவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க, ‘நான் போயே தீருவேன்’ என்று தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தான் அழகன்.
“சரி எல்லாரும் அவங்க ரூமுக்கு போங்க” என்று சொன்ன குமரேசன் போக மாட்டேன் என்றவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்தார். அவர் சொல்வதற்கு முன்பாகவே அங்கிருந்து சென்று இருந்தான் அகில்.
‘தனக்கு இப்படி ஒரு மகனா?’ என்று அவனை நினைத்து அருவருத்தவர் அழகனை நினைத்து கவலை கொண்டார்.
அனைவரும் சென்றதும், “எதுக்குப்பா இப்படிப்பட்ட ஒரு முடிவெடுத்த?”
“பயமா இருக்குதுப்பா”
“என்ன கண்ணா சொல்ற. நீ ஏங்கண்ணு பயப்படணும். அம்மா இல்லாம பிள்ளைகளை எப்படி வளர்க்கிறதுன்னு தெரியாம நான் கஷ்டப்பட்டப்ப தூண் போல எனக்கு உறுதுணையா இருந்த நீயே இப்படி கலங்கி நிற்கலாமா. எதுக்காக நீ பயப்படணும்?”
“இல்லப்பா இது அகிலால வந்ததில்ல. அகில் என்னை வார்த்தையால எவ்வளவு நோக்கடிச்சான்னு உங்களுக்கே தெரியுமே. அவன் என்னைப் பத்தி சொன்னது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. ஆனாலும் அப்ப இருந்தே அவன் நம்மக்கிட்ட அதிகமா ஒட்டுனது கிடையாது, அதனால என்னால அதை ஏத்துக்க முடிஞ்சுதோ என்னவோ. ஆனா மத்த மூணு பேர் மேலையும் பாசத்தைக் கொட்டி கொட்டி வளர்த்திருக்கேன்பா. அவங்களை என் பிள்ளைங்க மாதிரி வளர்த்திருக்கேன்.
நாளைக்கு அவங்களும் இதே மாதிரி ஒரு வார்த்தையை கேட்டுட்டா என்னால அதுக்கு மேல உசுரோட இருக்க முடியாதுப்பா. இவங்க நல்லவங்க தான் ஆனா நாளைக்கு பரிதியும் கூட ஒரு பொண்ண விரும்பலாம், அந்த பொண்ணு கூட இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம் இல்லையா. ஏனோ இப்ப பெரும்பாலான பிள்ளைங்க கூட்டு குடும்பத்தை விரும்புறது கிடையாது, கொழுந்தனார், நாத்தனார் கொடுமை எல்லாம் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. அப்படி இருக்கும் போது நம்மள மாதிரி பெரிய குடும்பத்துல வாக்கப்பட எந்த பொண்ணும் ஆச பட மாட்டாங்க.
அதனாலதான் அவங்க அவங்களுக்கு உண்டானதை பிரிச்சு கொடுத்துட்டேன். எப்ப அவங்களுக்கு கல்யாணம் பண்ணனும்னு நீங்க நினைக்கிறீங்களோ பண்ணி வைங்க, ஆனா இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாதுப்பா. அகில் முகத்தை பார்க்கும் போது அவன் சொன்ன வார்த்தைகள் ஊசி மாதிரி நெஞ்சுல குத்துதுப்பா. எங்க இருந்தாலும் என்னோட நினைப்பு உங்களை சுத்தி தான் இருக்கும், கடைய வித்துடன்னு நீங்க கவலைப்படாதீங்கபா. உங்கக்கிட்ட முழுசா நான் எதையும் சொல்லல. ரெண்டு கடையை மட்டும் தான் வித்துட்டேன், ஒரு கடைய குமார் பார்த்துக்குவான், அதுல வர்ற பணத்தை அப்பப்ப உங்கக்கிட்ட கொண்டு வந்து தர சொல்லி இருக்கேன். அதை நீங்க செலவுக்கு வச்சுக்கோங்கப்பா சரியா” என்றவன் குமரேசன் ஓய்ந்து அமர்ந்திருப்பதை கூட பொருட்படுத்தாமல் தன்னறைக்குள் நுழைந்து தன் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
தேவையானதை எடுத்துக் கொண்டு அவன் வருகையில் அகிலைத் தவிர மற்றவர்கள் ஹாலில் கூடி இருந்தார்கள். பூஜை அறையில் இருந்து தாயின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டவன் அந்த புகைப்படத்திற்கு பின்னே மறைத்து வைத்திருந்த மற்றொரு பொருளை அவர்கள் அறியாமல் எடுத்து தன் பெட்டிக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.
அவற்றை வைத்து விட்டு உள்ளே சென்று குளித்து முடித்து வேறு உடைமாற்றி வந்தவன், “சங்கரி கடைசியா சாப்பிட்டுட்டு போறேன் சாப்பாடு போடுமா” என்றதும் அழுதவாறே அண்ணனுக்கு சாப்பாட்டை பரிமாறினாள் சங்கரி.
அவன் பிசைந்து ஒரு வாய் வாய்க்குள் வைப்பதற்குள்ளாகவே பரிதி, முகில், சங்கரி மூன்று பேரும் ஒரே நேரத்தில் வாயைத் திறக்க அவர்களுக்கு போட்டியாய் தானும் வாயை திறந்து அவன் ஊட்டுவதற்கு காத்திருந்தார் குமரேசன். நால்வருக்கும் ஒரு ஒரு வாயாக உணவை ஊட்டி விட்டு தானும் உண்டு முடித்த அழகன் தட்டை கழுவி வைத்து விட்டு ஹாலுக்கு வருகையில் அவனது நண்பன் அவனை அழைத்துச் செல்ல வந்திருந்தான்.
அதிலும் உள்ளே வராமல் வெளியில் இருந்து ஹாரன் அடித்தவாறே இருந்தான். ஏனெனில் தான் எடுத்திருந்த முடிவை முதலில் அவன் கலந்தாலோசித்தது அவனது நண்பனிடம் தான். அவன் கொடுத்த திட்டுகளை எல்லாம் வாங்கிக் கொண்டு தெளிவாக தன் எண்ணத்தை கூறியவன், “வந்து கூட்டிட்டு போக முடியுமா முடியாதா? உன் கூட வந்தா எங்க இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் தெரியும், இல்லன்னா நான் எங்க இருக்கேன்னு தெரியாத தூரத்துக்கு போயிருவேன் எப்படி வசதி” என்றதும் சரி என்று ஒருமனதாக ஒப்புக்கொண்டவன்,
“உன்னைக் கூட்டிட்டு போக வர்றேன். ஆனா உங்க வீட்டுக்குள்ள வரமாட்டேன், முக்கியமா உன் தம்பி அகிலைப் பார்க்கவே மாட்டேன். அவனைப் பார்த்தேன்னு வைய்யேன் இருக்கிற கோவத்துல நாலு அடி அடிச்சாலும் அடிச்சுருவேன். அப்புறம் நீ யாருடா என் தம்பியை அடிக்கிறதுக்குன்னு கேட்டு நீ என் சட்டையைப் பிடிப்ப.
நீ என் பிரண்டுடா அவன் எப்படி உன்னை அப்படி சொல்லலாம்னு பதிலுக்கு நான் அகிலை அடிக்க பாய்வேன், அதனால நமக்குள்ள சண்டை வந்துடும். இதெல்லாம் நடக்கக்கூடாதுன்னா நான் உள்ளே வரமாட்டேன், இப்பவே சொல்லிட்டேன்” என்றதும்,
“சரிடா எதுக்கு தான் இப்படி கோபப்படுறியோ தெரியல. கல்யாணம் ஆகப்போகுது அப்பவும் நீ இப்படி கோபப்பட்டா என்ன அர்த்தம்”
“கல்யாணமே ஆகாம இருந்தாலும் நான் இப்படித்தான் கோபப்படுவேன். ஏன்னா நீ என் நண்பன் அவ்வளவு தான்” என்று சொல்லி தான் அனுப்பி வைத்திருந்தான் அழகனின் உயிர் தோழன் மகேஷ்.
நண்பன் வந்து விட்டதை அவனது வண்டியின் ஹாரன் சத்தத்தில் உணர்ந்த அழகன் எழுந்து நின்று பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டவாறு, “அப்பா எல்லாரையும் நல்லபடியா பார்த்துக்கங்க. பரிதி எனக்கு அப்புறம் நீ தான் முகிலையும், சங்கரியையும் பார்த்துக்கணும் சரியா. அகில் பொறுப்பானவன் தான் இல்லைன்னு சொல்லல ஆனா இதுக்கு மேலே குடும்பத்தை பார்த்துக்குவான்னு எனக்கு நம்பிக்கை கிடையாது. உன்னை நம்பி தான் விட்டுட்டு போறேன் எல்லாரையும் பத்திரமா பார்த்துக்க சரியா. அண்ணா அதே நம்பர் தான் வச்சிருப்பேன் நீங்க எப்ப வேணா கூப்பிடலாம் நான் உங்களோட பேசுவேன். அதே மாதிரி சங்கரிக்கு போன் இல்லாததால் தான் இவ்வளவு நாள் எந்த விஷயங்களையும் சரியா கத்துக்க முடியாம போயிருச்சு. சங்கரிக்கு ஒரு போன் வாங்கி கொடுத்துரு பரிதி..” என்றவன்,
தங்கையிடம், “சங்கரி போன் வந்துருச்சுங்கிறதுக்காக கண்டதையும் பார்த்து மனசை கெடுத்துக்க கூடாது சரியா. படிக்கிற பிள்ளை நல்ல விஷயத்துக்கு மட்டும் போனை யூஸ் பண்ணு. ஏன்னா போன் எந்த அளவுக்கு உதவியா இருக்குமோ அதே அளவுக்கு ஆபத்தானது புரியுதா” என்றதும் புரிந்ததென்று தலையாட்டினாள்.
அழுது கொண்டிருந்த முகிலிடம், “அச்சோ என்ன முகில் நீயே இப்படி அழலாமா?”
“நீங்க போகாதீங்க அண்ணா. அகில் வேணா போகட்டும் நீங்க வீட்டை விட்டு போகாதீங்க அண்ணா.”
“நான் அவனால வீட்டை விட்டு போகல, எனக்கு இதுக்கு மேல இங்க இருக்க தோணல. படிச்ச படிப்பு வீணா போகுது இல்லையா நானும் போய் பிசினஸ் பண்ணி சில விஷயங்களை கத்துக்கிறேன், நாலு இடத்துக்கு போய் நாலு மனுஷங்களை பழக்கமாக்கி வச்சுக்கிறேன். எல்லாரும் உடம்பை பாத்துக்கோங்க அப்பா பாத்துக்கோங்கப்பா” என்று சொல்லி விட்டு நகர்ந்தவனது, விழிகள் கலங்கி கண்ணீரைச் செறிய தயாராக இருக்க, கஷ்டப்பட்டு அதை உள்ளிழுத்துக் கொண்டவாறு அனைவருக்கும் கையசைத்து விடை கொடுத்தவாறு தன் நண்பனோடு கிளம்பி சென்று விட்டான் கவியழகன்.
அவன் சென்ற பின்பும் நால்வரும் அப்படியே, அதே நிலையில் தான் நின்று இருந்தார்கள். அவர்களது விழிகளும் கலங்கி இருந்தது. ஆனால் இதெல்லாம் தெரிந்தும் தன் அறையில் அமர்ந்து காதலியிடம் கொஞ்சி கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தான் சுயநல எண்ணம் கொண்ட அகில்.
“அப்பா இனிமே அண்ணா திரும்பி வராதா?” என்று கேட்ட சங்கரியை அணைத்துக் கொண்டு அழுதே விட்டார் குமரேசன்.
“இதுக்கொல்லாம் காரணம் அகில் அண்ணா தானே அவரைப் போய் என்னன்னு கேளுங்கப்பா.” முகில் கேட்க,
“காயம் பட்டவனே எதுவும் சொல்லாத போது நான் போய் என்ன சொல்ல முடியும். என் தம்பி இப்படி பேசிட்டானேன்னு உங்க அண்ணன் வீட்டை விட்டு போகல, இவ்வளவு தூரம் ஒட்டி உறவாடி பழகாத அகிலே இப்படி பேசிட்டானே, நான் பாசத்தை கொட்டி என் பிள்ளைங்க மாதிரி வளர்த்த மத்த மூணு பேரும் இதே வார்த்தையை என்னைப் பார்த்து கேட்டுட்டா நான் செத்துப் போயிருவேன்பா. என்னால அதை தாங்கிக்க முடியாது, அவங்களோட பாசமாவது எனக்கு வேணும். அந்த பாசத்தையாவது நான் நிலை நிறுத்திக்கணும்னா நான் இங்கிருந்து போய் தான் ஆகணும்னு சொல்லிட்டு போறான்.
அகிலுக்காக அவன் போகல உங்களோட பாசம் வேணுங்குறதுக்காக இங்கிருந்து போயிருக்கான். உங்க வாழ்க்கையில நாளைக்கு யார் வேணா வரலாம், போலாம் ஆனா என்னைக்கும் உங்களை இப்படி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்த உங்க அண்ணனோட பாசத்தை தூக்கி எறிஞ்சுறாதீங்க. அகில் மாதிரி உங்க அண்ணனைக் காயப்படுத்திடாதீங்க, அவனோட பாசத்தை அகில் புரிஞ்சுக்காத மாதிரி நீங்களும் புரிஞ்சுக்காம போயிடாதீங்க. அவனுக்காக நீங்க எதுவும் செய்ய முடியாது, ஆனா கொஞ்சம் நன்றியோடவாவது இருக்கலாம் இல்லையா, போங்க போய் படுங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டு கட்டில் விழுந்த குமரேசன் முதல் முறையாக மனைவி இல்லாததை நினைத்து மனம் நொந்து போனார்.
‘ஒருவேளை மனைவி இருந்திருந்தால் இவர்களை அடித்து வளர்த்திருப்பாளோ, நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பாளோ, தான் தான் செல்லம் கொடுத்து பிள்ளைகளை கெடுத்து விட்டோமோ?’ என்று எண்ணி மனம் நொந்தவாறு படுத்திருந்தவருக்கு நெஞ்சின் ஓரம் சுருக்கென்ற வலி கவ்விப் பிடித்தது. இடது கையால் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டே படுத்திருந்தவர் தன்னையும் அறியாமல் உறங்கி விட்டாலும் கூட, சுருக் சுருக்கென்று நெஞ்சின் ஓரம் வலி இருந்து கொண்டே இருந்தது..
உடன் பிறந்த உறவுகளை வேண்டாமென உதறி விட்டு செல்லவில்லை.
வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் நேசமாவது கிடைக்கட்டுமென்ற பேராசையில் செல்கிறேன்.
பங்கு பிரிக்கப்பட்டது அசையா சொத்துக்கள் தான். அவர்களது மீதான் எந்தன் அசைக்கவியலா நேச சொத்தல்ல..