குட்டநாடின் காயல் கரையோரம் இருந்த அந்த பழமையான கிருஷ்ணன் ஆலயத்தில் திருமணம் முடித்து , அதன் அருகில் இருந்த சிறிய மண்டபத்தில் வரவேற்ப்புக்காக நின்றிருந்தனர் மணமக்கள்.
மண்டபத்தின் ஒரு மூலையில் தன் பேத்தியின் கைகளை பிடித்துக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தார் லட்சுமிக்குட்டி அம்மா, அருகில் இருந்தவளை திரும்பி பார்த்தார் இங்கு நடக்கும் எதை பற்றிய உணர்வும் இல்லாமால் வெளியில் சிதறி விழும் மழை துளிகளில் பார்வை பதித்திருந்தாள்.
மணமக்களின் அருகில் பார்வையை ஓட்டியவர், மூத்த மருமகளிடம் விழிகளை நிலைக்க விட, அங்கு இருந்து ஓடி வந்தார் அவர் “எந்தா அம்மே, எந்து வேணும்”(என்ன அம்மா என்ன வேணும்) என்றவரிடம் “அம்முவினு வெள்ளம் வேணும்”(அம்முவுக்கு தண்ணீ வேணும்) என்க.
தன் கைப்பையில் இருந்து தண்ணீர் எடுத்து அவள் அருகில் சென்று “மோளே” என்க அவள் திரும்பவில்லை, “அம்மு” என்று அவள் கன்னம் பற்றி தன்னை நோக்கி திருப்ப அவரை பார்த்தவள் யோசனையோடு அவர் முகத்தை நினைவடுக்கில் தேடினாள் போல.
“வெள்ளம் குடிக்கடா” என்று வாயின் அருகில் கொண்டு செல்ல மெல்ல குடித்துவிட்டு, மீண்டும் மழையில் பார்வை பதித்தாள்.
அண்ணனின் திருமணத்திற்கென்று அழகாக புடவை உடுத்தி மெலிதான அலங்காரத்தில் அழைத்து வந்திருந்தனர், அண்ணனின் திருமணத்தில் இருக்கிறோம் எண்பதாவது அவள் நினைவுகளில் இருக்கிறதா தெரியவில்லை.
மீண்டும் மணமக்களின் அருகிலே சென்று நின்றவர் விழிகள் கலங்க, பார்வை மொத்தம் தன் மகளிடம், அவர் வயிற்றில் பிறந்தவள் அல்ல, ஆனால் பிறந்த இரண்டாம் நாள் முதல் அவர் மட்டுமே அவளின் தாய்.
திரும்பி தன் கணவனும் அவரின் தம்பிகளும் நின்ற இடத்தை பார்த்தவர் விழிகளில் வெறுப்பு கொட்டிக் கிடந்தது.
மகளை பார்த்துக்கொண்டிருந்த அச்சுதன் நாயர் மனதில் முள் தைத்த உணர்வு, அண்ணனும் தம்பியும் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள, தான் மனைவியையும் தொலைத்து, ஒரே மகளையும் இவர்களை நம்பி தொலைத்து விட்டேனே என்று இந்த இரண்டு வருடமாக மனதை கீரிக்கொண்டிருந்த முள் இப்பொழுது கத்தி முனையாக குத்திக் கிழித்தது.
மண்டபத்தின் எல்.இ.டி திரை மணமக்களை விடுத்து ஏதோ புதிய வீடியோ பதிவுகளை ஒளிப்பரப்பியது, “யுவர் அட்டன்ஷென் ப்ளீஸ்” என்ற சத்தத்தில் அனைவரின் கவனமும் அந்த திரையில் பதிந்தது.
மணமகனின் தந்தை மற்றும் சிறிய தந்தை பல முறை சில பெண்களுடன் பேசுவதும், பிறகு அவர்களுடன் தனியாக வேறு இடங்களுக்கு செல்வதும் என்று பதிவு நீண்டது.
அங்கு கூடி இருந்த இரு குடும்பத்தின் உறவுகள், நண்பர்கள் அனைவரின் முகத்திலும் பதட்டம், குழப்பம் என்று கலவையான பாவனைகள்.
“ஷ் ஷ், எல்லாவரும் இரிக்கு, இது கள்ளம் சும்மா”(எல்லாரும் உக்காருங்க, இது பொய் சும்மா) என்றார் முன்பில் வந்து நின்று அந்த குடும்பத்தின் மூத்தவர் கிருஷ்ணன் நாயர்.
“அப்போ உண்மை என்னனு தைரியமா சொல்றது” என்ற கம்பீர குரலில் ஒட்டுமொத்த மண்டபமும் திரும்பி பார்த்தது, வேட்டி நுனியை காலால் எம்பி பிடித்து மடக்கி கெட்டி, மீசையை முறுக்கிக் கொண்டே அழுத்தமான அடிகளுடன் அவரை நெருங்கினான் அவன்- வருண் ஜெகன்நாதன்.
அதிர்ச்சியில் அவர்கள் ஸ்தம்பித்து நிற்க, தன்னை கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்த புதிய மனைவியை விடுத்து இவனின் அருகில் ஓடி வந்தான் அம்முவின் சகோதரன் ராஜீவ் கிருஷ்ணா, அந்த குடும்பத்தின் மூத்த வாரிசு.
“நீ ஏன் இங்க வந்த, ஏன் இப்படி பிரச்சனை பண்ற” என்க.
“ஏன் வந்தியா ?… குட்டநாடு என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா, வேற என்ன சொன்ன பிரச்சனை பண்றேனா.. அத ஆரம்பிச்சது நீங்க, அப்போ முடிக்க வேண்டியது நான் தானே” என்றான் விழிகளில் அனல் தெறிக்க.
“எப்போவும் என் கல்யாணத்துல ஏண்டா பிரச்னை பண்ற” என்றவனை நக்கலாக பார்த்தவன் “ஏன்னா நீ கல்யாணம் பண்றது எனக்கு பிடிக்கல, ஒரு பொண்ணு வாழக்கை தப்பிக்கும்ல அதான்” என்றான் அலட்டாமல், ராஜீவுக்கு மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
திரும்பி கிருஷ்ணன் நாயரை பார்த்தவன் “அவமானம் அது எப்படி இருக்கும்னு இப்போ தெரியுதா?.. இந்த பொய்யை உன்னால் ஒத்துக்கவும் முடியாது, உண்மையை உரக்க சொல்லவும் முடியாது, இங்க இருந்து எனக்கு சொந்தமானவள அழைச்சுட்டு போறேன் உன்னால முடிஞ்சது பாரு” என்றவன் அவளின் அருகில் சென்று கரம் பற்றினான்.
பிடித்திருந்த கையின் கதகதப்பு மாறிய உணர்வில் அவள் விழிகள் அலை பாய்ந்தது, அவளை அழைத்துக்கொண்டு மேடையை நோக்கி சென்றான், மேடையில் அவளுடன் ஏறியவன் தன் சட்டை பாக்கெட்டில் இருந்து புது மஞ்சள் கயிற்றில் கோர்க்க பட்ட தாலியை வெளியில் எடுத்தான்.
இடத்தின் சூழலே மாறி விட்டது, ஒருவரும் அவனை நெருங்காமல் அவனை சூழ்ந்துகொண்டனர் பத்து பேர் பாதுகாவலர்கள் போல.
“அம்மு” என்ற அவன் அழைப்பை அவள் உணரவில்லை “அம்மு…” என்ற அதட்டல் வேலை செய்தது, பயந்து அவனை பார்க்க உயிர் துடித்தது அவனுக்கு .
என்று அவன் உள்ளம் அலற அவளை தன்னோடு இன்னும் சேர்த்து நிறுத்தினான்.
அவளின் முகம் அவன் மார்பை உரசி நிற்க , மூன்று முடிச்சுகளையும் நிதானமாக இட்டு முடித்தவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி ஆசையாக பார்த்தான்.
“இந்த தாலியை கழற்றி என் முகத்தில் விட்டெறிவாளா, இல்லை என்னை மன்னித்து ஏற்ப்பாளா, என் பக்க நியாயங்கள் அவள் கடந்து வந்த வலிகளை ஆற்றுமா, இல்லை மீண்டும் இவளை என்னிடமிருந்து பிரித்து என்னை நரகத்தில் தள்ளுமா…..” இந்த நிமிடம் அவனிடம் எதற்கும் பதிலில்லை.
யாரின் வரவுக்காக இந்த உயிரை பிடித்து வைத்திருந்தாளோ அவனின் இதயம் துடிக்கும் ஓசை தன் செவிகளை தீண்டுவதை அவள் அறியவில்லை, எந்த கரங்களால் பொன் தாலி வாங்க ஏங்கினாளோ அந்த கரங்களின் அணைப்பில் அவனின் மனைவியாக நிற்பதை அவள் உணரவில்லை.
தன்னை சுற்றி நடப்பதை ஒரு வித அலைப்புறுதலோடு பார்த்திருந்தவள் அவன் அழுத்தமாக உச்சியில் பதித்த முத்தத்தில் தன்னிலை இழந்து மெல்ல மயங்கி அவன் கரங்களில் விழுந்தாள்.
அனைவரும் ஸ்தம்பித்த நிலை என்ன நடக்கிறது, எதைப் பார்ப்பது ஒன்றும் புரியவில்லை.
அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கு நிற்கவில்லை கையில் அவளை அள்ளிக்கொண்டவன் மண்டபத்தின் வெளியில் நின்ற தன்னுடைய வண்டியில் அவளை கிடத்தினான், மார்போடு அவளை அணைத்துக்கொண்டு “அம்மு.. அம்மு..” என்று கன்னத்தை தட்டி அழைத்துப்பார்க்க இல்லை, அவள் விழைக்கவில்லை.
“ஒரு தடவ கண்ண திறந்து பாரு டி, என்ன நீ மறக்கலைனு சொல்லு, ஒரு தடவ ப்ளீஸ் டி கண்ண திற” என்றவனின் தோளை தட்டினார் அவனின் மாமா.
“எய்யா போலாம் உடனே டாக்டரை காட்டலாம்”.
“ம்ம், வண்டிய எடுங்க மாமா” என்றவன் அவளை மடியில் கிடத்தி பின் சீட்டில் அமர்ந்துவிட்டான், ஒன்றரை மணி நேர பயணத்தில் கோழிக்கோடை அடைந்துவிட்டனர்.
கோழிக்கோட்டில் அவர்கள் அறை எடுத்திருந்த ஹோட்டலை அடைந்தார்கள், அவளை கைகளிலே அள்ளிக் கொண்டு சென்றவனை அங்கிருந்தவர்கள் சந்தேகமாக பார்த்தனர்.
அது புரிந்தாலும் வருவதை பார்த்துக் கொள்ளலாம், என்ற முடிவில் விரைந்து தன் அறையை அடைந்தான், கதவை திறந்து வைத்து காத்திருந்தாள் மாமன் மகள் ரூபா, “எல்லாம் ஒகே தான” என்றவள் கேள்விக்கு தலை அசைப்பை மட்டும்பதிலாக கொடுத்தவன் தன்னவளை கட்டிலில் கிடத்தி அவள் அருகில் தளர்ந்து அமர்ந்துவிட்டான்.
“மாப்ள” என்று அழைத்து அவன் அருகில் நெருங்கி தோளை தட்டினார் மாமன் துரை செல்வம், “தளராதய்யா.. நீ மறுமவள பாரு, நா போய் அந்த டாக்டர தூக்கிட்டு வரேன், போலீஸ் எப்போ வேனா வரலாம், அவனுகளும் வரலாம்” என்றவர் மகளுக்கு கண் காண்பித்து வெளியில் சென்றார்.
“அப்பா” என்று பின்னோடு வந்தவளிடம் “நீ நம்ம ரூம்க்கு போ, அவங்க கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்” என்றவர் “டேய் பாத்துக்கோங்க” என்றார் உடனிருந்த சொந்தக்கார பிள்ளைகள் நால்வரிடம்.
“சரி பெரியப்பா” என்க ஒருவன் மட்டும் அவருடன் லிப்ட்டில் கீழிறங்கினான்.
அறையில் அவள் அருகில் கைகளில் தலை தாங்கி அமர்ந்திருந்தவன் மெல்ல எழுந்து பால்கனி வழி பார்க்க பெரு மழை கொட்டிக்கொண்டிருந்தது, போர்வையை எடுத்துக் கொண்டு அவளை நெருங்க, அவன் விழிகளில் விழுந்தது புடவை மறைக்காத பொன் பாதத்தில் மின்னிய ஒற்றை கால் கொலுசு.
அதை தொலைத்த அன்று “நா மட்டும் இங்க இருக்கேன், அவனை எங்கயோ தொலைச்சிட்டேன் பெரியம்மா” என்றவள் கதறல் இப்பொழுது செவிகளில் முழங்குவதாய் தோன்றியது.
அவனே தான் சொன்னான், ஓணம் நாளில் அவன் வரவை எதிர்ப்பார்த்து கால் கடுக்க நின்றவளின் பாதங்களில் இந்த கொலுசை அணிவித்து “இதில் ஒன்று நீ, ஒன்று நான்” என்று
அவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டவன் மனம் நிம்மதி இன்றி தவித்தது , தன்னை தேடி வர போகும் காவலர்களோ, அவளின் உறவுகளோ யாரும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல, அவனின் பயம் அவளைப் பற்றி, எழுந்த உடன் “யார் நீ” என்று கேட்டு விட்டால், தன்னை அவளுக்கு நினைவு வராமல் போனால்?? அந்த நொடியை எப்படி கடக்க என்று உண்மையில் அவன் பயந்தான்.