“ரூபா என் பொண்டாட்டிய பாத்தியா” என்று வந்தவனிடம் தன் அறையை காட்டினாள், உள்ளே சென்று பார்க்க மிக தீவிரமாக ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.
அவன் திரும்பி ரூபாவை பார்க்க “அக்கா ஏதோ கேட்டாங்க மாமா எனக்கு அது என்னனு தெரில, அவங்க சொல்லி சொல்லி டயர்ட் ஆகி அது என்னனு வரைய ஆரம்பிச்சுட்டாங்க” என்க புன்னகைத்துக் கொண்டவன் “அம்மு என்ன வேணும்” என்றான்.
“எனக்கு மஞ்சாடி வேணும்” என்றாள்.
“இது தான் மாமா, இத தான் கேட்டாங்க அது என்ன மாமா” என்க.
“அவகிட்ட குடுத்து அனுப்புறேன் பாரு” என்றவன், அம்முவை அழைத்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.
“இங்கயே ஒக்காரு” என்று கட்டிலில் அமர்த்தி “கண்ண மூடு” என்க.
“ஏன்” என்றாள் “மூடு அப்போ தான் தருவேன்” என்க விழிகளை மூடிக்கொண்டாள்.
அனால் சிறிதாக திறந்து கண்ணை சுருக்கி பார்க்க “ஏய் கள்ளி நல்லா மூடினா தான் தருவேன்” என்றவன் அவள் கை கொண்டு கண்களை மூட வைத்துவிட்டு.
அவன் அறையில் இருந்த சிறிய அறைக்குள் நுழைந்தான், அது அவனின் உடற்பயிற்சி அறை , அதன் உள்ளேயே கண்ணாடி தடுப்பிற்குள் புக் ஷெல்ப் மற்றும் சில பொருட்கள் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.
அதில் அந்த பெரிய மரப்பெட்டியை திறந்தவன், அதில் இருந்து வந்த காய்ந்த பூக்களின் நறுமணத்தை ஒரு முறை ஆழ்ந்து நுகர்த்தான்.
அதன் உள்ளே இருந்து ஒரு சிறிய பெட்டகத்தை எடுத்தான் அவளின் முன்பு அதை வைத்தவன் “அம்முக்குட்டி” என்று அழைக்க.
கண் திறந்து முன்பில் இருந்த பெட்டியை பார்த்தவள் ஆச்சர்யமாக!! அதை எடுத்து திறந்து பார்க்க, மஞ்சாடி விதைகளும் கொஞ்சம் மயில் பீலிகளும்.
“அய்ய்” என்று துள்ளியவள் “இது எப்படி” என்க.
“நீ எனக்கு சேகரித்து தந்தது தான்” சென்று சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கினான்.
“நா போய் ரூபாவுக்கு காமிக்கிறேன், அவளுக்கு தெரில” என்று அதை எடுத்துக் கொண்டு இரண்டு அடி நடந்தாள், மீண்டும் அவனிடம் வந்து “புருஷ்” என்றழைக்க அவன் திரும்பி அவளை பார்த்தான்.
“எனக்கு உங்கள கண்ணா பின்னான்னு பிடிக்குது” என்றுவிட்டு மீண்டும் ஓட அவன் வதனத்தில் மலர்ச்சி.
நாளை மறுநாள் விருந்து, அதற்க்கு அடுத்த நாள் அவன் வேலையில் சேர வேண்டும், விருந்திற்கு அழைக்க மாமாவும் அத்தையும் ஒரு பக்கமும், சித்தி சித்தப்பா ஒரு பக்கமும் சென்றிருக்கிறார்கள்.
விருந்துக்கு தேவையான மற்ற ஏற்பாடுகளை அவன் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டான்.
அதன் பொருட்டு வெளியில் செல்ல தயாராகி வர, வெளி வராண்டாவில் மஞ்சாடி விதைகளை வைத்து பல்லாங்குழி ஆட்டம் ஜோராக நடந்து கொண்டிருந்தது
“மாயக்காரி எல்லோரையும் வசியம் செய்து விடுகிறாள்” என்று மனைவியை மனதில் கொஞ்சியவன், தந்தையின் அறைக்கு சென்று அவரிடம் ஒரு முறை கூறி விட்டு மீண்டும் வெளியில் வந்தான்.
அந்த அறைக்குள் அம்முவை விடுவதில்லை, யாரேனும் அவளுடன் எப்பொழுதும் இருந்தனர், நர்சிடமும் சொல்லி வைத்திருந்தான் அவள் வந்தால் உள்ளே விடக் கூடாது என்று.
தன்னுடைய கருப்பு நிற மஹிந்திரா போலிரோவின் சாவியை கையில் சுழட்ட்றிக் கொண்டே வந்தவன் “அம்மு வெளில போக கூடாது, ரூபா கூடவே இரு நா வந்துர்றேன்” என்க.
“புருஷ்” என்ற அழைப்பில் நின்று திரும்பி பார்த்தவன், “என்ன” என்று புருவம் உயர்த்த.
“எங்க போறீங்க” என்ற கேள்வியில் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிவிட்டான்.
யாரிடமும் இந்த கேள்வியை அவள் கேட்கவில்லை, மாதவியின் பின்னே எப்பொழுதும் சுற்றுபவள் அவரிடம் கூட இப்படி கேட்க வில்லை.
அவள் அருகில் சென்று கை பிடித்து வரான்டாவின் பக்கவாட்டில் நிறுத்தியவன் “ரூபா..” என்க “போய்ட்டோம் மாமா” என்று விமல் மற்றும் வினிதாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவள் சிரிக்கும் சத்தம் கேட்டது .
“என்ன கேட்ட” என்று அவளை சுவரோடு சாய்த்து நிறுத்தி மீசையை முறுக்க, அவள் கன்னக்கதுப்புகளில் செம்மை படர தொடங்கியது.
“எங்க போ…… றீங்க” என்க “கொஞ்சம் வேலை இருக்கு வெளில போறேன்”
“எப்போ வருவீங்க” என்ற கேள்வியில் மீண்டும் ஆச்சர்யம் அவனிடம் தன்னை தேடுகிறாள் “நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்” என்பதை அழகாக, அவளுக்கு தெரிந்த விதத்தில் வெளிப்படுத்தினாள்.
“ஈவினிங் வந்துடுவேன் நல்ல பிள்ளையா இருக்கணும்,நா வந்துட்டு உன்ன வெளில கூட்டிட்டு போறேன் சரியா” என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து நகர.
“புருஷ்” என்றவள் மற்றோரு கன்னத்தை காண்பித்தாள், முகம் முழுதும் தன் அச்சாரத்தை பதித்தவன் மனம் இன்றி அவளை வீட்டின் உள்ளே விட்டு புறப்பட்டான்.
அவர்களின் பேச்சை தன் அறையில் இருந்து பார்த்தும், கேட்டும் இருந்த நீலவேணிக்கு இன்னும் இன்னும் உள்ளுக்குள் புகைந்தது
“அவ எப்போவும் எனக்கு குட்டி தான், அவளுக்கு என்ன பிறந்தநாள் கிப்ட் குடுக்கறதுனு யோசிக்கிறேன்” என்றார்.
“உங்க மருமகளுக்கு டிரஸ் நகை எல்லாம் விருப்பம் இருக்காது, ஒரு குடுவை நிறையா மஞ்சாடி விதையும் மயில் பீலியும் குடுங்க, சந்தோஷத்தில உங்களுக்கு ரெண்டு முத்தம் கூட கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றான்.
வாஞ்சிநாதனை காண்பித்து “அத தான் இவன கூட்டிட்டு போய் கூட கூடையா பொறுக்கிட்டு வ…” என்று பாதிலே நிறுத்திவிட்டு “தம்பி இப்போ என்ன சொன்ன??” என்று அதிர்ச்சியாக அவனை பார்க்க.
எழுந்து அமர்ந்தவன் “நா கார்தும்பிய விரும்புறேன்மா.. அவகூட என் வாழ்க்கைய ரசிச்சு வாழணும்னு ஆசைப்படுறேன், ஏன்மா உங்களுக்கு அம்முவை” என்று முடிக்கும் முன்.
“என் தங்கக் குட்டிய நா வேண்டாம்னு சொல்லுவேனா தம்பி, அவங்க வீட்ல இருக்கறவங்கள நினச்சா தான் கொஞ்சம் உதறுது, பிரச்னை பண்ணுவாங்களா” என்க.
“எந்த சண்டை சச்சரவும் இல்லாம காதல் இருந்தா , நாளைக்கு புள்ளைங்களுக்கு கதை சொல்லும் போது சப்புன்னு இருக்கும் சீதா” என்று வந்தார் பிரகாஷ்.
“என்னங்க நீங்க!”.
“சீதா இது அவன் வாழ்க்கை, அவன் பார்த்துப்பான்” என்றவர் “எதுவா இருந்தாலும் நாங்க இருக்கோம், நேரம் வரும்போது முறையா போய் பொண்ணு கேப்போம், பிரச்னை பண்ணாங்கனா அப்புறம் பாக்கலாம்” என்றார்.
சீதாவிற்கு அம்மு தன் மருமகளாக வருவதில் அத்தனை சந்தோசம், கிருஷ்ணன் நாயரை எண்ணி தான் கலக்கமாக இருந்தது, என்ன ஆனாலும் மகன் பார்த்துக் கொள்ளுவான் என்ற நம்பிக்கை இருந்தது.
“தேங்க்ஸ்பா” என்று தந்தையை அனைத்தவன் “சரிமா கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வரேன்” என்று வாஞ்சிக்கு கண் காட்டிவிட்டு செல்ல.
“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணீங்க நாங்க ஒத்துக்குறோம்” என்ற மகன்களின் கேலியில் கிச்சனுக்குள் ஓடி விட்டார் சீதா.
இருவரும் அந்த ஆலயத்தின் முன்னில் இருந்த மதில் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தனர்.
மிகப் பழமையான ஆலயம், ரோட்டில் இருந்து உள்ளே ஒரு சிறிய நடைப்பாதை , இரண்டு பக்கமும் மரங்கள் சூழ்ந்து ஒரு சிறிய காடு போல இருக்கும், உள்ளே செல்ல செல்ல வெளிச்சம் கூட கொஞ்சம் குறைவாக இருக்கும், எங்கும் குளுமை, அருகில் இருக்கும் காயல் நீரை தொட்டு கைகளில் அள்ளி வந்து தெளித்து செல்லும் காற்று.
துளசி மாலையை கையில் எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள் அம்மு, அவன் விழிகளில் ரசனை , அவள் அருகில் நெருங்க நெருங்க அவனுக்கு மூச்சடைத்தது , ஆழ்ந்து மூச்செடுத்து உப்ப் என்று ஊதி தன்னை சமன் செய்ய முயன்றான் .
வாஞ்சியுடன் இவன் நிற்பதை பார்த்த உடனே அவள் கால்கள் பின்னியது , நண்பனிடம் சரளமாக வந்து விழும் வார்த்தைகள் இவனைக் கண்டால் உள்ளே சிக்கிக் கொள்கிறது.
விழிகள் நிலம் நோக்க கைகளில் மெல்லிய நடுக்கம், பதட்டம் வந்தது பெண்ணிற்கு, சந்தன நிறப் பாவாடையில் கீழே மயில்பீலியுடன் புல்லாங்குழல் பிணைந்து கிடக்க, ஊதா நிற பார்டர் , அதே நிறத்தில் மேலே டாப் வெள்ளை நிற முத்துக்கள் வைக்கப் பட்டிருந்தது கழுத்தை சுற்றிலும் கையிலும்.
வெள்ளையும் ஊதாநிறமும் கலந்த வளையல்கள் அடர்ந்த கூந்தல் கொஞ்சம் மட்டும் சிறிய கிளிப்பில் இருக்க , மயில் தோகையாய் விரிந்து கிடந்தது , நாணத்தில் சிவந்த கன்னங்களும் உதட்டை கடித்து அவள் நின்ற கோலமும் அவனை பித்தம் கொள்ள செய்தது.
அவள் அடிகள் பதற , வாஞ்சி அவளை நெருங்கி வந்தான் , அவள் உணர்வுகள் நண்பனுக்கு புரிந்தது.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்முக்குட்டி” என்று அவள் கை பிடித்து வாழ்த்த , அவளுக்கு வார்த்தை வரவில்லை அவனை நிமிர்ந்து பார்க்க முகம் நிறைய புன்னகையை சுமந்திருந்தான் .
அவள் பாவமாக அவனைப் பார்க்க “அவனுக்கு தெரியாம எத்தனை நாள் சைட் அடிச்சுருக்க , சமைக்க கத்துக்கிறேன்னு அவனுக்கு பிடிச்சதை சீதாவை ஏமாத்தி கத்துக்கிட்டல்ல போ, போ.. உன்னோட தொட்டாசினுங்கி இங்க தான நிறையா இருக்கு” என்று மெல்ல விலகி நடந்தான் அவர்களுக்கு தனிமை கொடுத்து.
கைகளை மார்பின் குறுக்கே கட்டி அவள் அருகில் வர காத்திருந்தான் அவளின் மீதே பார்வை பதித்து ஜெகந்நாதன்.
அடிமேல் அடி வைத்து அவனை நெருங்கி விட்டாள் , தன் முன்னே நீண்ட அந்த வலிய கரத்தை பார்த்து நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளை காந்தமென இழுக்கும் அதே பார்வை, இதழ்களில் இளநகை “பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தும்பி” என்க.
தன்னாலே அவள் கரம் அவன் கரத்தோடு இணைந்துக் கொண்டது, அவள் கரத்தில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்து கொண்டான், அழுத்தமாக பிடித்தவனின் “ரிலாக்ஸ் தும்பி” என்ற குரல் மந்திரமாக இழுத்தது அவளை.
இணைந்திருந்த கரங்களில் பட்டு தெறித்தது ஒரு துளி கண்ணீர், அவள் நாடி பிடித்து உயர்த்தியவன் “இந்த கண்ணீர் நா வேணும்னு சொல்லுதா, வேண்டாம் சொல்லுதா” என்றவன் இதழ் பிரியா சிரிப்பில் அவன் தோளில் சாய்ந்துவிட்டாள் .
அன்று ஏங்கிய அந்த நொடி அழகாய் நிஜமாய் இன்று, நடுவில் அவன் நிற்க அவன் வலப்புறம் வாஞ்சி இடப்புறம் அவள்.
(மஞ்சாடி விதைகள் பகவான் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தது அதை அணைத்து கேரள ஆலயங்களிலும் பெரிய உருளியில் போட்டு வைத்திருப்பர் பிள்ளைகளின் கையில் நாணயங்களை கொடுத்து அதில் இட சொல்லி அவர்கள் கையால் மஞ்சாடி விதைகளை அள்ளி விளையாடுவர் கிருஷ்ணனே வந்து விளையாடுவதாக நம்பிக்கை குழந்தைகளுக்கு கூட்டல் கழித்தல் சொல்லி தரவும் பல்லாங்குழி விளையாடவும் பயன்படுத்துவர் அதோடு வளையல் மாலை கம்மல் முதலியவையும் செய்வர் வீடுகளில் கூட பூஜை அறையில் கிருஷ்ணனின் அருகில் மஞ்சாடி விதைகள் நிச்சயம் இருக்கும்)