“கட்டறது நானா இருந்தாலும் அத காலம் முழுசும் கழுத்துல சுமக்கப் போறது அவ தானே , இந்த சின்ன விஷயத்தைக் கூட செய்ய முடியலைன்னா அப்புறம் என் காதலுக்கு என்ன அர்த்தம்” என்க.
அவன் கையை பிடித்துக் கொண்ட மாதவிக்கு வார்த்தைகள் வரவில்லை அவன் தலையில் கை வைத்தவர் “நல்லா இருய்யா” என்றார் குரல் தழுதழுக்க.
அழகான பச்சைப் பட்டுடுத்தி அதற்க்கு பொருத்தமான மரகத கற்கள் பதித்த மிதமான நகைகள் அணிந்து அழகு தேவதையாக கீழிறங்கி வந்தாள் கார்த்தும்பி.
விழி அகற்றாமல் அவளைப் பார்த்திருந்தவன் முன் வந்து நின்றவள் “புருஷ்.. நல்லா இருக்கா ரூபா இது எல்லாம் செஞ்சா” என்க .
இப்படியே அள்ளிக்கொண்டு எங்காவது சென்று விடலாமா என்று உடல் பரபரத்தது , தன்னை மிக கடினப்பட்டு அடக்கி கொண்டவன் “நீ எப்பொழும் சுந்தரி அல்லே” என்றான் அவள் செவிகளில்.
கன்னங்களில் சிவப்பேறியது , மற்றவர்கள் விலகி செல்ல அவள் கைகளைக் கோர்த்துக் கொண்டான்.
அனைத்தும் சிறப்பாக முடிய, முதலில் அத்தை மாமா கால்களில் விழுந்து வணங்கினர் , நிறைவாக ஆசிர்வாதம் செய்தவர் தங்கை மகனுக்கு கழுத்துக்கு செயினும் கைக்கு கைச்செயினும் இட , மாதவி அம்முவிற்கு அழகான இரண்டு காசு வளவிகள் இட்டார்.
“என்ன மாமா இது , எதுக்கு இதெல்லாம்” என்றவனிடம் “என்னய்யா என் மறுமவனுக்கும் பொண்ணுக்கும் செய்ய உரிமை இல்லையா” என்றவரை அனைத்துக் கொண்டான்.
எந்த கேள்விகளும் இல்லமால் அனைத்திலும் துணை நின்றவர், இன்று வரை நிற்கிறார் , பிறகு சித்தி சித்தப்பாவிடம் ஆசி பெற, அவர்களும் தங்களால் முயன்றதை செய்தனர், அவன் மட்டும் தந்தை அரை சென்று அவரிடம் ஆசிப் பெற்று பேசிவிட்டு வந்தான்.
“மாமா கொஞ்ச நேரம் பாத்துக்கோங்க நா..” என்று முடிப்பதற்குள் “மாப்ள நீ கோவிலுக்கு போயிட்டு , ஆசிரமம் போயிட்டு வா , இங்க எல்லாம் நாங்க பாத்துக்குறோம்” என்றவர்.
“போயிட்டு வா தாயி” என்றார் அம்முவிடம் , மனைவியை அழைத்துக்கொண்டு ஆலயம் சென்றான்.
இன்று இவர்களுக்கு சிறப்பு வழிபாட்டிற்கு சொல்லி இருக்க , அங்கு சென்று இறைவனை வணங்கி பிரசாதம் பெற்றுக்கொண்டு அங்கேயே சிறிது நேரம் அமர்ந்தனர்.
கோவிலை சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் , பிறகு அவனைப் பார்த்து “கிருஷ்ணன் எங்க” என்க அவனுக்கு சிரிப்பு வந்தது, “அவரைதான் இவ்ளோ நேரம் தேடுனியா அவர் வேற எடத்துல இருக்கார் அப்பறம் ஒரு நாள் கூட்டிட்டு போறேன்” என்க.
“ம்ம்” என்று தலை ஆட்டினாள்.
பிறகு அங்கிருந்து மாற்றுத் திறனாளிக்களுக்கான சிறப்பு ஆசிரமத்திற்கு சென்றனர் , இன்று ஒரு தினம் முழுதும் அவர்களுக்கான உணவு இவர்களின் செலவு , அதோடு அனைவருக்கும் புது துணிகள்.
நடக்க முடியாத குழந்தைகளுக்கு வண்டி என்று அனைத்தும், அங்கு சென்று அனைவரயும் கண்டு பேசி நின்றனர்.
காலை உணவை குழந்தைகள் உண்டு கொண்டு இருந்தனர் , இன்று தடபுடலாக விருந்து மூன்று வேலையும் “அளவாக எல்லாம் வேண்டாம் அவர்கள் கேட்பதை செய்து கொடுங்கள் பணம் நான் தந்து விடுகிறேன்” என்றுவிட்டான் ஜெகன்.
அந்த இடத்தில இருந்த தோட்டத்தின் நிழலில் பெஞ்சில் அமர்ந்திருந்தவள் ஏதோ யோசனையில் இருக்க , அருகில் சென்றவன் அவளுடன் அமர்ந்து “என்ன அம்மு” என்க.
“இவங்க எல்லாம் யாரு , ஏன் எல்லாரும் இங்கயே இருக்காங்க இது ஸ்கூலா” என்க.
“இல்ல இது தான் அவங்க வீடு , அவங்க இங்க தான் இருப்பாங்க”
“ஏன்” என்றவளிடம்
“அவங்களுக்கு அப்பா அம்மா இல்ல , வீடு இல்ல” என்க
அவனை திரும்பி பார்த்தவள் “என்னோட அப்பா அம்மா யாரு , உங்க அப்பா அம்மா யாரு?? நமக்கும் யாரும் இல்லையா” என்றாள்
துக்கம் தொண்டையை அடைக்க திரும்பிக்கொண்டான் “பாட்டியும் பெரியம்மாவும் எங்க போனாங்க , என்ன பாக்கவே வரல, நீங்களும் என்ன விட்டுட்டு போய்டுவீங்களா? எனக்கு பயமா இருக்கும் என்கூடவே இருப்பீங்களா” என்க.
அவளை நெஞ்சோடு இழுத்து அணைத்துக்கொண்டான் “உனக்கு அம்மா அப்பா எல்லாம் நான் தாண்டா , நான் இருக்கேன் உனக்கு” என்றவனுக்கு மண்டை வெடிப்பதை போல இருந்தது.
“எப்படி விட்டு செல்வேன் , நாளை காலை என்னை காணாமல் என்ன செய்வாள்” என்று தவித்தவன் “அம்மா ஏன் அப்படி பண்ணீங்க” என்று வாய்விட்டே அரற்றினான்.
அதிகாலை எழுந்தது , அலைச்சல் , வண்டியில் அவன் தோள் சாய்ந்து நல்ல உறக்கத்தில் இருந்தாள் அம்மு .
“என்னோட அம்மா அப்பா யாரு உங்க அம்மா அப்பா யாரு” மீண்டும் மீண்டும் அவன் செவிகளில் அந்த கேள்வி , மிக நிதானமாக வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.
மே மாத விடுமுறைக்கு சங்கரன் நாயர் குடும்பம் ஸ்மிதாவின் வீட்டிற்கு சென்றுவிட , கிருஷ்ணன் நாயர் மனைவி ஷ்யாமாவை தங்களுடன் வர சொல்லி கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தார்.
பாட்டியின் இடையை கட்டிக்கொண்டு தன்னை ஏக்கமாக பார்த்து நின்ற அம்முவை விட்டு செல்ல மனமே இல்லை ஷ்யாமாவிற்கு , ஆனால் சென்றுதான் ஆக வேண்டும்.
அவளைப் பார்த்து தயங்கி நிற்க “நான் பத்திரமா இருப்பேன் நீங்க போயிட்டு வாங்க பெரியம்மா” என்றாள் ஷ்யாமாவிடம்.
லக்ஷ்மியும் ‘நீ போ நான் பாத்துக்கிறேன்” என்க அவர் விடை பெற்றார்.
அவன் அறையில் இருந்து பார்த்தபோது கொட்டும் மழையில் காயல் கரையில் நின்றிருந்தாள்.
அவள் தனிமையை கெடுக்க விரும்பாமல் அவளை பார்த்தே நின்றிருக்க , சட்டென்று வெட்டி சென்ற இடி சத்தத்தில் பதறி நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தாள்.
பதறி ஓடியவன் உடனே தண்ணீரில் குதித்துவிட , பின்னையே வந்த பிரகாஷும் குதித்து விட்டார் , இருவரும் தேட கீழே கொடிகளின் உள்ளே மாட்டிக் கிடந்தாள் .
போராடி அவளை அங்கிருந்து மேலே ஏற்றினர் , லக்ஷ்மியம்மா அழுது கரைந்தார் , வெளியில் கொண்டு வர மயக்கத்தில் இருந்தாள் .
ஒரு வழியாக தண்ணீரை வெளியேற்ற , அவள் கண் திறக்கும் வரை உயிரே இல்லை அவனுக்கு , நெற்றியிலும் கைகளிலும் சிராய்ப்புகள் மிகவும் பயந்திருந்தாள்.
சீதா அவளை அழைத்து சென்று குளிக்க வைத்து , உடை மாற்ற உதவியவர் தலையை உலர்த்திக்கொடுத்தார் “இருடா குடிக்க சூட எடுத்துட்டு வரேன்” என்று அவர் வெளியேற .
உடனே உள்ளே நுழைந்தான் ஜெகன் “தும்பி ஏண்டி இப்படி” என்றவன் அவள் காயங்களை பார்க்க , அவன் கைகளை பிடித்துக்கொண்டாள், “எனக்கு மட்டும் ஏன் அம்மா அப்பா இல்லை” என்றவள் விழிகள் நிரம்ப.
அவள் கண்ணீரை துடைத்து முகத்தை கைகளில் ஏந்தினான், “நந்தேட்டா… ஒரு தடவ கட்டி பிடிச்சுக்கவா” என்றவளை அவன் தவிப்போடு பார்க்க.
உள்ளே நுழைந்தார் லக்ஷ்மி , அவளை விட்டு அவன் வெளியேற ஏக்கத்தோடு அவனைப் பார்த்திருந்தாள் கார்த்தும்பி.
இது முதல் முறை அல்ல , அவனின் மீது காதல் பொங்கி வழியும் பல சந்தர்ப்பங்களில் அவனிடம் கேட்டிருக்கிறாள் “ஒரு தடவ கட்டிப் பிடிச்சுக்கிட்டுமா” என்று “போடி” என்று அவளை விரட்டுவான்.
கட்டிப்பிடித்ததில்லை , முத்தம் வைத்ததில்லை அவன் காதல் மட்டும் அவளை சுற்றிக்கொண்டே இருக்கும் காற்றைப் போல , அவன் எப்பொழுதும் உடன் இருக்கும் உணர்வை அவளுக்கு தந்து கொண்டே இருந்தான்.
“நா எவ்ளோ தடவ கேக்குறேன் , இதே மாதிரி நீங்க ஒரு நாள் என்கிட்டே கேப்பிங்க அப்போ இருக்கு” என்றாள் ஒரு முறை .
“நீ முடியாது சொல்லுவியா” என்றான் இதழ்களில் உறைந்த குறும்பு புன்னகையோடு.
“அய்யடா ஆச தோசை , நான் ஏன் அப்படி சொல்லணும்… அன்னைக்கு முழுசா உங்கள இறுக்கி கட்டிப்பேன் , எங்கயும் விட மாட்டேன்” என்றவளை பார்க்கையில் இப்பொழுதே கேட்டால் என்ன என்று அன்று தோன்றியது அவனிற்கு.
அறையில் இருந்து வெளி வந்தவன் முடிவு எடுத்தவனாய் மீண்டும் அறைக்குள் சென்று அவளை வாரி அனைத்துக் கொண்டான், அப்படி ஒரு அணைப்பு அவளுக்கு வலித்தது ஆனால் சுகமாக, இன்னும் இறுக்கிக்கொள் என்று அவனுள் புதைந்து கொண்டாள்.
ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த லக்ஷியம்மா ஒன்றும் பேசாமல் அறையில் இருந்து வெளியேறி ஹால் சோபாவில் அமர்ந்துவிட்டார்.
சீதா பிரகாஷ் வாஞ்சி அனைவரும் அங்கு நிற்க யாரும் ஒன்றும் பேசவில்லை, அவளை உறங்க வைத்த பின்னே வெளியில் வந்தான்
லக்ஷ்மியம்மாவின் அருகில் அமர்ந்து அவர் கையை பிடித்தவன் “அவளை எனக்கு குடுத்துடுங்க” என்றான் .
“எடுத்துக்கோ, உங்ககூட இருந்தா அவ சந்தோஷமா இருப்பா , நீ கொண்டு போய்டு அவளை” என்றவர்.
“அவ அம்மா காதல என்னால நிறைவேத்த முடியல, ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காம அற்பாயுசுல போய்ட்டா , இவளுக்கு அது வேண்டாம் , என் அம்மு வாழனும் சந்தோஷமா நிம்மதியா” என்க.
அவர் அருகில் வந்த சீதா “உங்க கிட்ட கேக்க சங்கடப்பட்டு இவ்ளோ நாள் கேக்கல , அம்முவோட அம்மா யாரு” என்க.
“ஸ்ரீ நந்தினி , என் சொந்த தம்பி மக” என்றார் லக்ஷ்மி.