இங்கிருந்து அம்முவை அழைத்து சென்றவர்கள் நேரே மருத்துவமனை கொண்டு சென்றார்கள் , அவளை அங்கே சேர்த்த பிறகுதான் ராஜீவுக்கு அழைத்தாள் ரெம்யா.
உடனே வீட்டிற்கு வர சொல்ல , “முடியாது” என்று மறுத்தவள் பிறகு அழைக்கிறேன் என்று வைத்துவிட்டாள் .
மருத்துவர் பார்த்து முடிக்கும் வரை அவர்களுக்கு கொஞ்சம் பயம் இருந்தது , உடல் நிலை சரி இல்லாதவள் இவர்கள் பாட்டிற்கு அழைத்து !! இல்லை இல்லை தூக்கி வந்து விட்டார்கள் .
அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால்…. இருக்கும் தலை வலியோடு இதுவும் சேர்ந்து கொள்ளும் , பின்னே போனால் உதைக்கிறது முன்னாள் போனால் முட்டுகிறது என்ற கதையாய் அணைத்து பக்கம் இருந்தும் பிரச்சனைகளாக இருக்கிறது.
அதிர்ச்சியில் வந்த மயக்கம் என்ற மருத்துவர் மாலை வரை பார்த்துவிட்டு அனுப்பிவிட்டார்.
உறக்கத்தில் இருந்தவளை அப்படியே காரில் கொண்டு சென்றனர்,அம்முவை காரில் பின்னால் படுக்க வைத்த ஹரியும் ஜெயனும் முன்னால் ஏற.
ரெம்யா பின்னால் அமர்ந்துகொண்டாள் திரும்பி அவளை பார்த்த ஹரி “நீ சொன்னதை கேட்டுத்தான் நாங்க இந்த பிளான் உள்ள வந்தோம் இப்போ ஏன் முகத்தை இப்படி வெச்சுருக்க” என்றான் எரிச்சலாக.
தன்னுடைய திருமணம் மட்டுமே முன்னே நிற்க மற்ற எதையும் பற்றி யோசிக்காமல் இறங்கிவிட்டாள் இப்பொழுது ராஜீவின் கோபத்தை பார்க்கும்போது கொஞ்சம் பதட்டம் வந்தது.
அம்முவை கஷ்டப்படுத்தும் எண்ணம் எதுவும் அவர்களுக்கு இல்லை அவளை பகடையாக வைத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் அதுதான் அவர்கள் திட்டம்.
நல்ல உறக்கத்தில் அவள் முகத்தில் சிறிதாக புன்னகை மலர, அவளையே பார்த்திருந்த ரெம்யா “நிச்சயமாக ஜெகனின் நினைவாகத்தான் இருக்கும்” என்று எண்ணினாள்.
உண்மை தான் மனதை கொள்ளை கொண்டவனின் நினைவு , அடி ஆழத்தில் புதைந்து கிடந்தது எல்லாம் மெல்ல மேலெழும்ப தொடங்கியது.
காலை வந்ததில் இருந்து தேடுகிறான் , வீடு முழுதும் தேடி விட்டான் “எங்க போனா நான் வந்தாலே உடனே வந்துடுவா , இன்னும் காணும்” என்று பார்க்க.
அங்கு வந்த வாஞ்சி “என்ன கப்பல் ரொம்ப நேரமா அல்லாடுது” என்றான் கிண்டலாக.
“என்னடா நக்கலா… எல்லாம் என் நேரம் நீயெல்லாம் பேசற மாதிரி ஆயிடுச்சு பாரு என் நெலம” என்றவன் “தும்பி எங்கடா” என்க.
“இத முன்னாடியே கேக்க வேண்டியது தானே” என்றான் வாஞ்சி .
“நீ முன்னாடியே சொல்ல வேண்டியது தான எங்கடா ??” என்க.
“தெரியலையே , தெரிஞ்சா சொல்ல மாட்டேனா” என்ற வாஞ்சியை கொலைவெறியோடு பார்த்தான்.
“உன்ன அப்பறம் கவனிச்சுக்குறேன்” என்றவன் “அம்மா” என்று அடுக்களை செல்ல , அவன் வாயில் ஒரு உண்ணியப்பத்தை வைத்துவிட்டு , “அம்மு இன்னைக்கு வரவே இல்லடா , நானும் உண்ணியப்பம் பண்ணிவெச்சுட்டு அவளதான் தேடுறேன்”.
“புள்ள சொன்ன மாதிரியே செஞ்சுருக்கேன் எப்படி இருக்கு” என்றவரை பரிதாபமாக பார்த்தவன் “அம்மா…” என்று கன்னம் கிள்ள , மெல்லிய கொலுசொலியும் கிண்கிணி நாதம் என்று சிரிப்பொலியும் கேட்டது.
சட்டென்று திரும்பி பார்க்க மஞ்சள் நிற பாவாடை மட்டும் கண்ணில் பட்டது , வேகமாக ஓடியவன் வீட்டின் பின்னால் படி இறங்கி கொண்டிருந்தவளை அப்படியே இடையோடு கை கொடுத்து தூக்கி குளக்கரை சுவற்றில் சாய்த்தான்.
“எங்க ஓடுற” என்றவனை பார்க்காமல் முகத்தை மறைத்து வைத்தாள்.
திருமணம் முடிவு செய்த நாளில் இருந்து அவனை பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்கிறாள் , இன்னும் பதினைந்து தினங்களே திருமணத்திற்கு.
இல்லாத லீவை ஏற்பாடு செய்து அவளை காணவே வந்திருந்தான், இனி திருமணத்திற்கு முன்தினமே வர முடியும்.
“தும்பி” என்று அழைத்தவன் கரம் அவள் இடையில் படர அவன் நெஞ்சில் அழுத்தமாக முகத்தை மறைத்துக்கொண்டாள்.
“பாரு டி” என்க,
“ம்ம்ஹும்” என்றவள் முகம் நிமிர்த்தி “தும்பி நாளைக்கு கெளம்பிடுவேன் , உனக்காகத்தான் இப்போ வந்ததே இப்படி பண்ணா எப்படி” என்க.
மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் “குட்” என்றவன் , “என்னாச்சு தூங்கலையா… முகம் ஏன் வீங்கி இருக்கு” என்க.
“ஒன்னும் இல்ல” என்றாள் , சிறிது நேரம் அவளை பார்த்தவன் கரங்கள் அவள் அடிவயிற்றில் பதிந்தது “பர்ஸ்ட்டேயா” என்க.
“ஹ்ம்ம்” என்றாள்.
“மூலிகை டீ குடிச்சியா” என்க.
“இல்லை” என்றாள்.
அந்த நாட்களில் அவளுக்கு முதல் இரண்டு நாட்கள் வயிற்று வலியும், கால் வலியும் இருக்கும், அதற்க்கு ஷ்யாமா அவளுக்கு ஆயுர்வேத மருதை சேர்ந்து டீ ஒன்று தாயாரித்து கொடுப்பார்.
அவளுக்கு அது வலியை கொஞ்சம் குறைக்கும்.
“ஏன்” என்றவனிடம் , “உங்கள பாக்க குளிச்சுட்டு அப்படியே வந்துட்டேன்” என்க.
அவளை அணைத்துக்கொண்டான் சில நொடிகளில் அவனில் இருந்து நிமிர்ந்து பார்த்தவள் “இப்போ வலி தெரியல” என்றாள் அவன் அணைப்பை காண்பித்து.
அழகாக புன்னகைத்தவன் “அப்போ இப்படியே இரு” என்று இன்னும் இறுக்கிக் கொண்டான் , வாகாக அவனின் நெஞ்சில் கன்னம் அழுத்தி இன்னும் நெருங்கி நின்றாள்.
“அம்மு” என்ற ஷ்யாமாவின் அழைப்பில் “ஐயோ” என்று அவனை தள்ளிவிட்டு ஓடினாள் , “ஏய் நில்லுடி , மெதுவா போ” என்று அவள் பின்னே ஓடி வந்தான்.
அவளை நிறுத்திய சீதா “ஏண்டா வலி இருந்தா சொல்லலாம்ல நான் ஏதாவது கொடுத்திருப்பேன்” என்றார்,
பின் அவரே “கல்யாணம் ஆச்சுன்னா சரியா போய்டும்” என்று பேச்சுவாக்கில் கூற.
“ஏன் அம்மாயி அங்க வேற நல்ல டாக்டர் இருக்காங்களா” என்றவளை அவர் “ஙே” என்று பார்க்க சத்தமாக சிரித்துவிட்டான் ஜெகன்.
மகனை அங்கு எதிர்பாராமல் முழித்த சீதா “மாமா கூப்பிடுறார்” என்று வெளியில் ஓட “என்ன ஆச்சு அம்மாயிக்கு” என்றாள் தும்பி.
“ஆளானப்பட்ட சீதாவையே ஓட வெச்சுட்ட” என்று அவளின் அருகில் நெருங்கி இரு பக்கமும் கை வைத்து அவளை சுவரோடு சாய்த்தவன், அவள் செவியில் “அவங்க எதுக்கு சொன்னாங்கன்னா என்று ரகசியம் பேச”…. குப்பென்று ரத்தம் பாய்ந்து சிவந்த முகத்தை எங்கு மறைக்க என்று தெரியாமல் அவனை தள்ளி விட்டு அங்கிருந்து ஓடினாள் தும்பி
“ஏய் இப்போ இல்ல கல்யாணத்துக்கு அப்புறம் தான்” என்றவனின் சிரிப்பு சத்தம் அவளை துரத்தி வந்தது.
வேகமாக வந்தவளுக்கு கால்களின் வலி இப்பொழுது அதிகம் ஆனதைப்போல , வீட்டிற்கு அருகில் வர அவளை அங்கேயே வழி மறித்தனர் அவளின் சித்தப்பா சங்கரனின் பிள்ளைகள் ஹரி மற்றும் ஜெயன்.
“ஏய் உனக்கு நாங்க என்ன வேலைக்காரங்களா , இந்தா பெரியம்மா உனக்காக டீ வெச்சிருக்காங்க” என்று கையில் கொடுத்தான்.
மூலிகை டீ இந்த சமயத்தில் அவளுக்கு குடிக்க ஷ்யாமா எப்பொழுதும் செய்வார் , ஆனால் அவர்கள் ஷ்யாமா கொடுத்ததாக கூறி காந்தாரி மிளகாய் அரைத்த தண்ணீரை கொடுத்தனர் .
அது மிக சிறிதாக இருக்கும் அனால் ஒன்று போதும் ஒரு வீட்டின் சாம்பாருக்கு அத்தனைகாரம் நிறைந்தது .
அதில் ஒரு ஐந்து எடுத்து அரைத்து தண்ணீரில் கரைத்து கொடுத்துவிட, ஒரு வாய் குடித்த போதே அவளுக்கு புரை ஏறிவிட்டது.
அவளின் சத்தத்தை கேட்டு ஓடி வந்தவர்கள் பார்த்தது முகத்தை மூடிக்கொண்டு தரையில் விழுந்து துடிப்பவளை தான்.
அவளுக்கு ஏதோ குடிக்க கொடுப்பதை பார்த்து தான் நின்றிருந்தான் ஜெகன் , அவள் அலறி கீழே விழவும் ஓடி வந்தவன் கரம் ஹரியின் கன்னத்தை பதம் பார்த்தது.
இரண்டு நாட்களுக்கு அவனுக்கு ஒரு பக்கம் வீங்கியே இருந்தது , விளையாட்டாக செய்ததாகவும் இப்படி ஆகும் என்று தெரியாது என்றும் சாதித்தார்கள் இருவரும்.
உடனே பஞ்சாயத்தை கூட்டிவிட்டார் சங்கரன் “என்ன திமிர் இருந்தா என் பையன அடிப்பான் உங்க பையன் , இந்த வீட்ல வாடகைக்கு தான் இருக்கீங்க அத மறந்துட வேண்டாம்” என்று வந்து அலறிக்கொண்டிருந்தார்.
மேலே தன் அறையில் தும்பியை உறங்க வைத்து அவள் அருகிலே அமர்ந்திருந்தான் ஜெகன் , சத்தம் கேட்டு படியில் நின்று பார்க்க சங்கரன் கத்தி கொண்டிருந்தார்.
“வீடு வாடைக்குனு எங்களுக்கும் தெரியும் சங்கரன் , தங்க இடம் இல்லாம இங்க இருக்கல , இந்த மாதிரி பத்து வீடு வாங்குற அளவுக்கு சொத்து இருக்கு , பணம் மட்டுமே வாழ்க்கைல எல்லாத்தையும் கொடுத்துடாது பேசும்போது பார்த்து பேசுங்க , என் மகன் உங்க வீட்டு மருமகன் ஆகப் போறார் மரியாதை இல்லாம ஒரு வார்த்தை வர கூடாது” என்றார் பிரகாஷ்.
“அப்பா அதெல்லாம் மரியாதை தெரிஞ்சவங்களுக்கு இவங்களுக்கு நீங்க டியூஷன் எடுத்தாலும் அது புரியாது என்றவன் .
“உங்க பையன ஏன் அடிச்சேன்னு கேட்டிங்கல… தோ இப்படி ஓடி வந்து நிக்குறீங்களே, அந்த மாதிரி அவளுக்கு யாரும் வர மாட்டாங்கன்னு உங்க எல்லார்க்கும் ஒரு நினைப்பிருக்கு”.
“அது இனிமே அப்படி இல்லனு உங்களுக்கும் உங்க வீட்ல இருக்கவங்களுக்கும் தெரியுனுமே அதுக்குதான் , அதும் உங்க பையனா போய்ட்டதால மட்டும் ஒரு அடியோடு போச்சு” என்றான் ஹரியை தீர்க்கமாக பார்த்துக்கொண்டே.
ஜெகனின் மடியில் சுகமான நித்திரையில் இருந்தாள் கார்த்தும்பி, பெரிதாக பாதிப்பு இல்லை ஒரு வாய் மட்டுமே குடித்ததால் தேங்காய் பால் மற்றும் இளநீர் அன்று முழுதும் கொடுக்க நன்றாகவே தேறிவிட்டாள்.
மாதவிடாயின் சோர்வோடு இதும் சேர அவன் அருகாமை அனைத்தையும் மறக்கடித்தது , அவன் கைகளை பற்றிக்கொண்டே நிம்மதியாக உறங்கினாள்.
அன்று முழுதும் கால்களை பிடித்துக் கொடுத்தும் தலை வருடியும் அவள் அருகிலே இருந்தான் ஜெகன் விடியும் வரை.