அத்தியாயம் 1
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ
என்ற பாடல் அரங்கம் முழுக்க ஒலிக்க அதற்க்கேற்றார் போல் நடனமாடிய அந்த அழகிய சிற்பத்தை கண்டு அங்குள்ளவர்களின் மனமும்.. அலை பாய்ந்தது..
அதுவும் அவள் நீள் விழிகளில் தெரிந்த நேசம் பார்ப்பவரை பரவசம் கொள்ள செய்தது…
நிலைபெயறாது சிலைபோலவே நின்று.. நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக
வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே
கண்ணா ஆ ஆ
தெளிந்தநிலவு
பட்டப்பகல்போல் எாியுதே
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே
திக்கைநோக்கி
என்புருவம் நெறியுதே
என்று அபிநயத்தவளின் விற்புருவங்கள்.. மேலே ஏறி இறங்க.. அரங்கத்தினர் கண் இமைக்க மறந்தனர்…
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே கனிந்த உன்
வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
என்று பாடியவளின் விழிகள் காதல் மயக்கத்தில் சொருக.. அங்கிருந்த ஆடவர்களின் மனம்.. அவ்விழிகளின் மயக்கம் தனக்காக இருக்க கூடாதா என்று ஏங்கியது..
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
என்று காணம் முடிய.. அப்பொழுது அந்த சிற்பத்தின் விழிகளில் தெரிந்த அந்நேசம் கருநீல கண்ணனுக்காகவா இல்லை.. அவள் மனதில் புதைத்து வைத்திருந்த கண்ணனுக்காகவா என்று அவள் மட்டுமே அறிவாள்..
தன்னவனை நினைத்து கிறங்கி நின்றிருந்தவளை கரகோசங்களின் ஒழி கலைக்க.. தன்நிலை வந்த சிற்பிகா.. அரங்கத்தினர் முன்பு வணங்கிவிட்டு தன்னறை நோக்கி நகர்ந்தாள்.. ஆம் அந்த ஐந்தரையடி சிற்பத்தின் பெயர் சிற்பிகா.. அதற்க்கு சிற்பங்களின் சோலை என்று பொருள்.. இவளின் தாய் துர்கா முதல் முறை இவளை தன் கரத்தில் ஏன்ற பொழுது அவளுக்கு இப்பெயர் தான் நியாபகத்திற்கு வந்ததாம்.. அதனால் அதனையே வைத்து விட்டனர்..
தன்னறைக்கு வந்தவளை வேகமாய் கட்டியணைத்த அவளின் தோழி ரூபாலி.. ”செம்மடி செல்லக்குட்டி.. என்னால உன் மேலேயிருந்து கண்ண எடுக்க முடியலை.. நான் மட்டும் இந்நேரம் ஆம்பளையா பிறந்திருந்தா.. உன்னை அப்படியே அள்ளிக்கிட்டு போயிருப்பேன்.. ” என எப்பொழுதும் போல் கூற.. அந்த பதுமையின் முகம் மென்னகை சிந்தியது..
கண்ணாடி முன்னின்று தன் அலங்காரங்களை அவள் கலைக்க முற்பட.. அப்பொழுது.. ” கண்ணு பெரிய டிவி சேன்னல்ல இருந்து உன்னை பேட்டி எடுக்க வந்துருக்காங்க.. கொஞ்ச நேரம் வந்துட்டு போயேன்..” என தேன் குழைத்த குரலில் கூறினார்.. ராஜாங்கம்.. அவளின் தாய்மாமன்..
அதுவரை நீரோடை போல் தன் தோழியுடன் சலசலத்துக் கொண்டிருந்த ரூபாலி அவரை முறைப்பாய் பார்த்து.. ” என்ன பேசுறீங்க நீங்க.. அவ இப்போ தான் வந்துருக்கா.. அவளுக்கு டயர்டா இருக்காதா.. போங்க இப்போதைக்கு எந்த பேட்டியும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க..” என வெடுக்கென்று கூற.. ராஜாங்கத்தின் முகம் மாறியது..
ஆனால் முகமாற்றத்தை குரலில் கொண்டு வராது.. ” இல்லை ரூபா கண்ணு.. நம்ம பாப்பாக்கு அடுத்த வாரம் ஏதோ விருது கொடுக்க போறாங்கள்ல அத பத்திதான் பேட்டி எடுக்க வந்துருக்காங்க.. ஒரு பத்து நிமிஷம் தான் ” என்றார்.. முன்னிலும் இனிய குரலில்..
அங்கு நடப்பவையை தன் உணர்ச்சி துடைத்த முகத்தால் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவள்… மறுப்பு கூற வந்த தோழியின் கரத்தை தடுத்து.. தன் மாமனிடம்.. உடை மாற்றியவுடன் வருவதாய் கூறினாள்..
அவளின் சம்மதம் கிடைத்தவுடன்.. வாயெல்லாம் பல்லாக ராஜாங்கம் வெளியேற.. ரூபாலியின் முறைப்பை சட்டை செய்யாது.. அவளையும் பேட்டி எடுக்கும் இடத்திற்கு இழுத்துக் கொண்டு சென்றாள்.. சிற்பிகா..
அங்கோ பத்துநிமிடம் என்று கூறிவிட்டு.. அரைமணிநேரம் ஆக்கிவிட.. பெண்ணவள் முற்றிலும் சோர்ந்து போனாள்…
ரூபாலி அந்த நான்கு சக்கிர மகிழுந்தை தேர் போல் ஒட்டிக்கொண்டிருக்க.. அவளின் அருகில் சிற்பம் போல் துயில்க் கொண்டிருந்தாள் சிற்பிகா.. ரூபாலியும் சிற்பிகாவும் பால்ய சிநேகிதிகள்.. இருவரின் அன்னைமார்கள் தொடங்கிய நட்பை இப்பொழுது இவர்கள் தொடர்கின்றனர்.. இருவருக்குள்ளும் ரகசியம் என்பதே கிடையாது..
ரூபாலி சிற்பிகாவின் பாதுகாப்பு வளையம் என்றும் சொல்லலாம்.. ஏனெனில் சிற்பிக்காவை சுற்றியுள்ள விஷப்பாம்புகள் அவளை தீண்டாதவாறு பார்த்துக் கொள்வதே ரூபாலிக்கு மிகப்பெரிய வேலையாகும்.. ரூபாலி அரசியல் செல்வாக்கு பெற்ற பெற்றோரின் ஒற்றை மகள்.. அதனால் தான் அந்த விஷப்பாம்புகளால் ரூபாலியையும் ஒன்றும் செய்ய முடியவில்லை… அவளின் பாதுகாப்பிற்குள் இருக்கும் சிற்பிகாவையும் ஒன்றும் செய்ய முடியவில்லை..
********************************************
ரோஸ் ப்ளூ பப்.. வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாகவும் அமைதியாகவும் இருந்தாலும்.. உள்ளே நுழைந்தால் காதை செவிடாக்கும் வண்ணம் ராக் மியூசிக் அதிர்ந்துக் கொண்டிருக்கும்.. ரோஸ் ப்ளூ ஹோட்டல் ரெஸ்டாரெண்ட் மற்றும் பார் வசதி கொண்டது.. பெரிய பணக்காரர்கள் கூட தங்களின் பார்ட்டிகளையும் கல்யாணம் நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளை இங்கு நடத்துவதற்கு ஆறு மாதம் முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்.. இந்தியாவில் உள்ள பெரிய தலைநகரங்களில் யாவும் இந்த ரோஸ் ப்ளூ ஹோட்டல் நிறுவப்பட்டுள்ளது..
அந்த ஹோட்டலின் பன்னிரெண்டாம் மாடியில்.. ஒரு மினி வீடு போல் இருக்கும் அந்த அறை முழுவதும் குளிரூட்டப்பட்டு இருந்தாலும்.. அதன் மத்தியில் அரைகுறை ஆடையுடுத்தி நின்றிருந்த அந்த அதிநவநாகரிக யுவதியின் உடலும் முகமும் வியர்வையில் நனைந்திருந்தது.. கை கால்களின் நடுக்கமும் அப்பட்டமாய் தெரிந்தது..
அவளது விழிகளோ தன்னெதிரில் ராட்ஷசன் போல் ஓங்கு தாங்காய் வளர்ந்து.. முறுக்கேறிய உடலுடன் கால் மேல் கால் போட்டு ராஜ தோரணையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவனையே.. வெறித்துக் கொண்டிருந்தது.. நிச்சயம் அவ்விழிகளில் தெரிந்ததெல்லாம் பயம் மட்டுமே..
ஒரு கட்டத்திற்கு மேல் அவள் நிற்கமுடியாமல் அவனெதிரே மண்டியிட.. அவனோ.. எதையும் அறியாதவனாய் தன் மதுக்கோப்பையினுள் மூழ்கியிருந்தான்..
அபய் சார்.. நான் எந்த தப்பும் பண்ணல சார்.. யாரோ உங்ககிட்ட என்னைய பத்தி தப்பா சொல்லியிருக்காங்க.. என திக்கித் திணறி கூறினாள்.. அப்பொழுது அபயின் கரங்கள் ஒரு நொடி நிற்க.. அதே நேரம் அப்பெண்ணின் செவுள் பிய்யும் அளவிற்கு ஓர் அறை விழ.. அப்பெண் துடிதுடித்து போனாள்..
விழுந்த அடி.. அவளின் சர்வத்தையும் நடுங்க செய்தது.. கண்கள் சொருகி கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்றவளுக்கு நினைவு திரும்ப கிட்டதட்ட பத்து நிமிடம் பிடித்தது.. தன்னை யார் அடித்தது என தெரியாமல் விழி உயர்த்தியவள்.. ராட்சஷன் அருகே ராட்ஷசியாய் அமர்ந்திருந்தவளைக் கண்டதும்.. அவள் இதயம் ஒரு நொடி துடிப்பதை மறந்துவிட்டது..
*****************************************
பங்களா அமைப்பிலான வீட்டின் முன் ரூபாலி தன் காரை நிறுத்தினாள்.. கார் நின்ற ஓசையில் தன் இமைகளை விலக்கி விழி திறந்த சிற்பிகா.. அவ்வீட்டை கண்டு வெறுமையாய் புன்னகைக்க.. ரூபாலி மனம் கணமானது..
” காலைல பார்க்கலாம் ரூபி.. நானே உங்க வீட்டுக்கு வரேன்.. நீ என்ன பிக்கப் பண்ண வரவேணாம்.. ”
” ஹ்ம்ம் பிரேக் பர்ஸ்ட் அங்கதான் சாப்பிடனும்.. சோ சீக்கிரம் வரப்பாரு.. அப்புறம் எதையும் போட்டு மனசுல குழப்பிக்காம நல்லபடியா தூங்கு.. அண்ட் மோர் ஓவர் கதவ தாழ் போட மறந்துடாத..” என மெல்லிய குரலில் கூற.. சிற்பிகாவின் இதழ்கள் விரக்தியான புன்னகையை சிந்தியது.. அதைக் கண்டு ரூபாலி மனம் வருந்தினாலும்.. எதுவும் கூற இயலாமல் தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினாள்..
பத்தடி தூரத்தை பத்து நிமிடமாக நடந்தவள் ஹாலில் குழுமியிருந்த யாரையும் கண்டுக்காது.. பூஜை அறையினுள் நுழைந்தாள்.. அங்கு அவள் தாய் துர்கா சந்தன மாலையிட்ட போட்டோ பிரேமில் தெய்வீகமாக காட்ச்சியளித்தார்.. முழுதாய் ஐந்து நிமிடம் அவரையே வெறித்தாள்..
சிற்பிகா தன் பத்து வயது வரை அன்னை தந்தையின் சிறகுக்குள் எவ்வித பாதிப்புமின்றி மகிழ்ச்சியுடன் வளர்ந்தாள்.. ஆனால் எப்பொழுது அவள் தன் அன்னையை சாலை விபத்தில் பறிக்கொடுத்தாளோ.. அன்றே அனைத்தும் அவளைவிட்டு நீங்கிவிட்டது.. தாய் இல்லாத நிலை.. தந்தை இருந்தும் இல்லாத நிலை..
சிற்பிகாவின் தந்தை லிங்கேஸ்வரன் துர்காவின் அழகிலும் அவள் நடனத்திலும் மயங்கி அவளை திருமணம் செய்துக் கொண்டார்.. அவருக்கு மனம் என்ற ஒன்று பெரிதல்ல.. துர்காவின் அழகே அவருக்கு பெரிது.. துர்கா சாலை விபத்தில் இறந்தவுடன் அனைவரும்.. அவரை வேறு திருமணம் செய்ய சொல்ல.. அவரும் ஒப்புக்கொண்டார்..
திருமணம் நடந்த ஒரே மாதத்தில் கணவனை இழந்து.. கைம்பெண்ணாக இருந்த தன் மற்றொரு தங்கை அம்பிகாவை.. ராஜாங்கம் லிங்கேஸ்வரருக்கு திருமணம் செய்து வைத்தார்.. லிங்கேஸ்வரரும் அம்பிகாவுடன் தன் இல்லற வாழ்வை நல்லபடியாக வாழ்ந்தார்.. சிற்பிகாவை தாங்கவும் இல்லை.. வெறுக்கவும் இல்லை… ஒரு தந்தைக்குரிய அனைத்துக் கடமையையும் செய்தார்.. ஆனால் அம்பிகா அதற்கு நேர்மாறாக சிற்பிகாவை மிகவும் அன்பாக நடத்தினார்.. பாசத்தை பொழிந்தார்.. ஆனால் சிற்பிகா தன் தாய்க்குரிய இடத்தை வேறு யாருக்கும் கொடுக்கவில்லை.. அனைவரிடத்திலும் ஒரு எல்லையுடன் பழகினாள்..
துர்கா அவளுக்கு பரதம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.. அவர் போன பிறகும் தன் தாயின் ஆசைக்கிணங்க பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.. ஆனால் அதுவே பின்னாளில் தன் வாழ்வையும் தன் உயிரினும் மேலான பெண்மையையும் இக்கட்டான நிலைக்கு இழுத்துச் செல்லும் என அறிந்திருந்தால்.. பரதத்தை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள்..
ஹாலில் அமர்ந்திருந்த ராஜாங்கமோ கோபத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்.. குள்ளநரித்தனமும் சூழ்ச்சியும் நிறைந்த இவருக்குள் மருந்திற்கும் தன் தங்கையின் மகள் மேல் பாசமுமில்லை அன்புமில்லை.. அவரைப் பொறுத்தவரை சிற்பிகா ஒரு பொன் முட்டையிடும் வாத்து அவ்வளவே..
தன் இரு தங்கைகளின் அழகிலும் மயங்கி பெரிய பணக்காரனாக சிக்குவான்.. அவனை நன்றாக வளைத்து விட வேண்டுமென்பதே அவரின் இளமைக்கால திட்டம்.. அதனால் தன் தங்கைகளுக்கு அன்பான அண்ணன் போல் நாடகமாடி துர்கா அம்பிகா இருவரையும் தன் பாசமெனும் வலைக்குள் வைத்திருந்தார்.. துர்கா நடனம் பயில ஆசைப்பட.. அதற்கும் ஒப்புக் கொண்டார்.. இதை வைத்து மேலும் கறக்கலாம் என்பது அவர் எண்ணம்.. ஆனால் துர்க்கவோ கோவில்களில் மட்டும் தான் நடனம் ஆடினாள்.. வேறெங்கும் ஆட அவள் ஒப்புக்கொள்ளவில்லை..
ராஜாங்கத்தின் எண்ணப்படி துர்காவை பெரிய ஜவுளிக்கடை ஓனரான லிங்கேஸ்வரன் பெண் கேட்க.. வாயெல்லாம் பல்லாக துர்காவை கட்டிக் கொடுத்தார் ராஜாங்கம்.. ஆனால் லிங்கேஸ்வரின் பெற்றோர் ராஜாங்கத்தின் குள்ளநரித்தனத்தை ஓரளவு அறிந்து வைத்திருந்ததால்.. அவரை சற்று விலக்கியே வைத்தனர்.. ராஜாங்கமும் அடக்கி வாசித்தார்..
பிறகு அம்பிகாவிற்கும் பெரிய இடத்திலிருந்து வரன் வந்தது.. மாப்பிளை பெரிய பணக்காரன் ஆனால் தீவிர இருதய நோயாளி என்று தெரிந்தும் அம்பிகாவை திருமணம் செய்து வைத்தார்.. விளைவு ஒரு மாதத்திலே அவன் இறந்துபோக.. சொத்தெல்லாம் அம்பிகாவிற்கு வந்தது.. மாமனார் மாமியாரும் மகன் இறந்த துக்கத்தில் அடுத்தடுத்து இறந்து விட… ராஜாங்கம் அங்கு தன் ராஜாங்கத்தை நிறுவினார்..
துர்கா இறந்ததும்.. அம்பிகாவை லிங்கேஸ்வரனுக்கு கட்டிக் கொடுத்தவர்.. அவர் பெற்றோர் இறந்தவுடன் அங்கும் தன் நிலையை சிறிது சிறிதாக நிலை நாட்டினார்.. சிற்பிகா நடனம் பயிலும் போதே துர்கா மூலம் அடையாத புகழையும் பணத்தையும் சிற்பிகா மூலம் சாதித்துக் கொண்டார்.. சிறு வயதிலிருந்தே தங்கை மகளின் நடனத்தை அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார்..
சிற்பிகாவின் பதினான்காவது வயதில் ஆரம்பித்த அரங்கேற்றம் அவளின் இருபத்தைந்து வயது வரையிலும் தொடர்கிறது..
பூஜை அறையினுள் இருந்து வெளிவந்தவளை கண்ட அம்பிகா.. பாப்பா உனக்கு பிடிச்ச சப்பாத்தியும் பட்டாணி குருமாவும் சமைச்சு வச்சுருக்கேன்.. சாப்பிட வாடா..
இல்லை சித்தி.. ரூபாலியும் நானும் வரும் வழிலயே சாப்பிட்டோம்.. நீங்க சாப்பிடுங்க.. என மெல்லிய குரலில் கூறியவள்.. அவர் அடுத்து கூறுவதற்குள் தன்னறைக்குள் நுழைந்துக் கொண்டாள்..
அம்பிகா.. சிற்பிகாவையே கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க.. அவரின் மகள் நீரஜா ” அம்மா போதும்.. அவ எப்பயோ போயிட்டா.. நீங்கதான் அவகிட்ட தங்கம் வைரம்ன்னு கொஞ்சிக்கிட்டு நிக்குறீங்க.. ஆனா அவ உங்கள ஒரு மனிஷியா கூட மதிக்க மாட்டேங்குறா.. ” என தன் கீச்சுக் குரலால் கத்தினாள்..
லிங்கேஸ்வரர் அம்பிகாவிற்கு பிறந்த நீரஜா.. குணத்தில் ராஜாங்கத்தை கொண்டிருந்தாள்.. பதினான்கு வயதான இவளுக்கு தன் மூத்த சகோதரியின் அழகிலும் புகழிலும் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது.. சிற்பிகாவை பார்க்கும் போதெல்லாம் ஏதேனும் கூறி அவள் மனதை ரணமாக்காமல் விடமாட்டாள்.. அதனாலேயே சிற்பிகா இவள் கண் முன் வராமல்.. சொந்த வீட்டில் அகதி போல் தன்னறைக்குள்ளையே முடங்கியிருப்பாள்..
அம்பிகா ” ப்ச்.. நீரு உனக்கு எத்தனை தடவை சொல்றது.. அவ உன் அக்கா.. ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு… ” என கண்டிப்புடன் கூற.. சின்னவள் கோபமாய் தன்னறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்தினாள்..
அம்பிகாவிற்குத்தான் கவலையோடு தலைவலியும் சேர்த்துக் கொண்டது.. ராஜாங்கம் வழக்கம் போல் தன் பசப்பு வார்த்தைகளால் அவளை சமாதானம் படுத்தி விட்டு.. தன் அறைக்கு சென்றுவிட்டார்.. அம்பிகா திருமணம் முடிந்தவுடன்.. ராஜாங்கமும் அவர் பக்கத்திலியே ஒரு வீட்டை வாங்கி குடிவந்துவிட்டார்.. லிங்கேஸ்வரர் தொழில் நிமித்தம் வெளியூர் செல்லும் பொழுது.. தங்கை பாதுகாப்பு என்ற போர்வையில் இங்கு வந்துவிடுவார்.. இன்றும் அதே கதைதான்..
இங்கு தன் அறையில் படுத்திருந்த சிற்பிகாவோ.. வெளியில் நடந்த கலவரங்களை கண்டுகொள்ளாது தன் மன்னவனின் நினைவில் மூழ்கியிருந்தாள்.. கரத்திலோ அவள் மனம் கவர்ந்தவனின் ஓவியம் இடம் பெற்றிருந்தது..
சிற்பிகா தன் பதினேழாம் வயதில் தன்னை சுற்றியுள்ள கோரமுகத்தை அறிந்துகொண்ட அந்த அவலநிலையில் தான்.. தன் நாயகனை சந்தித்தாள்.. அவனை மானசீகமாக நேசிக்கவும் ஆரம்பித்தாள்.. ஒன்பது வருடமாய் யாரிடமும் பகிராது தன் மனமென்னும் கருவறைக்குள் அவனை ஆராதித்துக் கொண்டிருக்கிறாள்..
ஆனால் அவள் ஆராதிக்கும்.. அக்கள்வனோ தன் முன்னால் அரைகுறை ஆடையுடன் பயத்தில் முகம் வெளிறி நின்ருந்தவளின் முன் ஆங்காரமாய் நின்றுக்கொண்டிருந்தான்.. பெண் என்றால் பேயும் இறங்கும் என்ற பழமொழியெல்லாம் அவனிடத்தில் செயல்படாது.. எதிரியோ துரோகியா ஆண் பெண் பேதமில்லாமல்.. அரக்கனை போல் தண்டனை கொடுப்பான்.. அத்தகையவனைத்தான் பெண்ணவள் ஆராதித்துக் கொண்டிருக்கிறாள்..