அத்தியாயம் 14
உந்தன் காந்த கண்களும்
சுந்தர புன்னகையும் தான்
ஏழாவது அதிசயமா டி பெண்ணே!!!
சுற்றி இருந்த அனைவரும் அவர்கள் திருமண விஷயம் கேட்டு சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் மணமக்களைத் தவிர. அவர்களுக்கும் சந்தோஷம் இல்லை என்று சொல்ல முடியாது. உள்ளுக்குள் குதூகலமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் தனித் தீவுகளாய் இருந்தார்கள்.
தீபக்க்கு அவளுடன் திருமணம் முடிவானதும் அவன் காதல் நிறைவேறிய சந்தோசத்தில் பறந்தான். ஆனால் அதை அவளிடம் அவன் காட்டவே இல்லை. ஆபீஸில் வைத்து எப்போதும் போல் அவளிடம் பேசினான்.
ஆனால் அவன் பேச்சு ஒரு காதலனாகவோ, வருங்கால கணவனாகவோ இல்லாதது வருத்தத்தைக் கொடுத்தது காயத்ரிக்கு. இரு வீட்டினரும் கல்யாண வேலைகளை சந்தோஷமாக பகிர்ந்து செய்தார்கள்.
ஒரு நாள் “டேய் தீபக் காயத்ரி வீட்ல பத்திரிக்கை புரூப் வாங்கிட்டு வா டா. சம்பந்தி ரெடி பண்ணி வச்சிட்டேனு சொன்னார். அவங்களுக்கும் சேத்து நாமளே அடிச்சிருவோம். அப்புறம் அவங்க சொந்த பந்தம் எல்லாம் அவங்க மேல கோபமா இருக்காங்கலாம். ஆனா நாம அவங்களையும் கூப்பிடணும். அது தான் முறை. உங்க கல்யாணத்துக்கு வந்தா மீண்டும் உறவுகள் புதுப்பிக்க படும்”, என்றார் ராகவன்.
காயத்ரியை பார்க்க ஆவல் இருந்ததால் இது தான் வாய்ப்பென்று தீபக்கும் “சரிப்பா வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு காயத்ரி வீட்டுக்கு சென்றான்.
அப்போது முருகேசனும் கலாவதியும் ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தார்கள். சௌமி மற்றும் காயத்ரி இருவர் மட்டும் வீட்டில் இருந்தார்கள்.
திடீரென்று வந்து நின்ற அவனை அக்கா தங்கை இருவருமே எதிர் பார்க்க வில்லை. இருவரும் வீட்டில் இருப்பதால் ஏனோ தானோ என்று தான் இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு சங்கோஜமாக இருந்தது. அவனைக் கண்டதும் வரவேற்று அமர வைத்து விட்டு சௌமி அவர்களுக்கு தனிமை கொடுக்க பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டாள்.
ஹாலில் அமர்ந்திருந்தான் தீபக். அவனுடன் சாதாரணமாக பேச முயன்றாலும் முடியாத படி தயக்கத்துடன் நின்றாள் காயத்ரி. இருவர் மட்டும் அங்கே தனியே இருப்பது இருவருக்கும் பதட்டத்தையும் தடுமாற்றத்தையும் கொடுத்தது.
அவனுக்கோ அவளுடைய இரவு உடை மிகுந்த சலனத்தைக் கொடுத்தது. ஒரு பக்கம் தன் முன் அவள் இயல்பாக இருப்பது சந்தோஷமான உணர்வைக் கொடுத்தது. மறு பக்கம் அவளை நெருங்க அவன் மனம் ஆசை கொண்டது.
“இங்க இருக்குறது டேஞ்சர் டா. கிளம்பிரு கிளம்பிரு”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தான்.
ஆனாலும் அவளுடன் நேரம் செலவழிப்பது அவனுக்கு பிடிக்கவும் செய்தது. இருவேறு பட்ட உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருந்தான் தீபக்.
அவளுக்கோ இதயம் மத்தளம் வாசிக்கும் உணர்வு. யாருமற்ற தனிமை, மனதுக்கு நெருக்கமானவனின் அருகாமை, அவனுடைய ரசிக்கும் பார்வை, அவன் பார்வை போகும் இடங்கள் என அவளை திண்டாட வைத்தது. உணர்வுக் குவியலாக இருந்தாள் காயத்ரி.
இத்தனைக்கும் அவன் வேறு யாரும் அல்ல. அவளுடன் நன்கு பேசிப் பழகிய நண்பன் தான். அவனுடன் உரிமையுடன் சண்டை போட்டிருக்கிறாள்.
இப்போதும் அந்த உரிமை இருந்தாலும் வார்த்தைகள் தான் வெளியே வந்து தொலையவில்லை. அவனை ஆசையாக பார்க்க அவளுக்கும் ஆசை தான். அவன் பார்க்கும் காதல் பார்வைக்கு அவளுக்கும் பதில் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது தான்.
ஆனால் அப்படி கண்களில் காதலைக் காட்டினால் முன்பு ஒரு நாள் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நடந்தது போல நடந்து விடுவோமோ என்று பயமாக இருந்தது. இப்போது அப்படி நடந்தால் என்ன செய்ய முடியும் என்று அவளுக்கு திகைப்பாக இருந்தது.
கூடவே அவன் தன் மீது கோபமாக இருப்பதால் அப்படி நெருங்க மாட்டான் என்ற நம்பிக்கையும் இருந்தது.
இருவருக்கும் இருந்த அமைதியை முதலில் உடைத்தது காயத்ரி தான். அவளுக்கு தற்போதைக்கு அவன் கண் முன்னிருந்து அகல வேண்டும் என்று ஆசை.
அதனால் “நீ டீவ் பாத்துட்டு இரு, நான் டீப் போட்டுக் கொண்டுர் வரேன்”, என்று சொல்லி அங்கிருந்து செல்லப் பார்த்தாள் காயத்ரி.
“இல்லை வேண்டாம். நான் பத்திரிக்கை புரூப் வாங்க தான் வந்தேன். மாமா ரெடி பண்ணி வச்சிருக்காங்கன்னு அப்பா சொன்னாங்க. அதை எடுத்துக் கொடு. இப்ப பெரியவங்க யாரும் வீட்ல இல்லை. நான் இங்க இருந்தா ஏதாவது தப்பா ஆகிரும். நான் கிளம்புறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டான் தீபக்.
அவளுக்கோ அவன் இங்கிருந்து சென்று விட வேண்டும் போலவும் இருந்தது. போகக் கூடாது என்றும் இருந்தது. அவளுமே இருவேறு பட்ட மனநிலையில் தான் இருந்தாள்.
“அப்பா புரூப் ரெடி பண்ணி வச்சிட்டாங்க. உங்க வீட்ல இருந்து ஆள் வந்தா கொடுக்கச் சொன்னாங்க. இந்தா”, என்று சொல்லி ஒரு பேப்பரைக் கொடுத்தவள் “இப்ப இங்கிருந்து எதுவும் சாப்பிடாம நீ போனா அம்மா அப்பா கண்டிப்பா என்னைத் திட்டுவாங்க. ஏதாவது சாப்பிட்டுட்டு போ”, என்றாள்.
அந்த பேப்பரை எடுக்கும் போது அவள் குனிந்ததால் அவன் கண்ட காட்சி அவனை பைத்தியம் பிடிப்பது போல் ஆக்க “இல்லை வேண்டாம்”, என்று மறுத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தும் என்று வெளியே சென்று விட்டான்.
அவன் பின்னேயே ஓடி வந்தவள் “கொஞ்ச நேரம் இரேன். அம்மா அப்பா இப்ப வந்துருவாங்க. அவங்களைப் பாத்துட்டு போ”, என்றாள்.
“இல்லை, இன்னொரு நாள் வரேன்”
“ஏன் தீபு இப்படி பண்ணுற? நாம சாதாரணமா பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? தப்பு என் மேலன்னு நீ நினைச்சா நான் உன் காலுல விழுந்து கூட மன்னிப்பு கேக்குறேன்”
“இல்லை இல்லை. தப்பு என் மேல தான். நானே உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்”
“என்ன?”
“அன்னைக்கு நான் பண்ணினதுக்கு சாரி”
“என்ன?”, என்று கேட்டவளுக்கு அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை.
அவள் என்ன அவனிடம் இருந்து எதிர் பார்த்தாளோ அதை அவன் சொல்லியே விட்டான். அவனுடைய தவறை அவன் உணர்ந்து கொண்டானா என்று அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
“நான் உன்னோட மன நிலைல இருந்து யோசிச்சிருக்கணும் காயு? அன்னைக்கு எதுவுமே தெளிவா பேசாம ரொம்ப தப்பா நடந்துகிட்டேன். அது உனக்கு பிடிக்காம இருக்கலாம்னு நான் யோசிச்சிருக்கணும்”, என்று அவன் சொன்னதும் “உன் தலை, எனக்கு பிடிக்கலைன்னு நான் சொன்னேனா டா?”, என்று நினைத்தவளுக்கு அவன் சட்டையைப் பிடித்து உழுக்கும் ஆவல் வந்தது.
இப்போதாவது அவனிடம் தெளிவாக அனைத்தையும் பேசி விடலாம் என்று எண்ணியவள் அவனிடம் எதையோ சொல்ல ஆரம்பிக்க “நான் பேசி முடிச்சிறேன் காயு. அன்னைக்கு என்னோட உணர்வுகளை உன்கிட்ட காட்டின நான் உன்னோட உணர்வுகளை யோசிக்காம போயிட்டேன். நீ அப்படி ஒரு வார்த்தை சொன்ன அப்புறம் தான் உனக்கு நான் செஞ்சது பிடிக்கலைன்னே எனக்கு புரிஞ்சது. அப்பவே நான் சாரி கேட்டுருக்கணும். ஆனா என்னோட மனநிலை அப்ப அதை கேக்க விடலை. இப்ப வரைக்கும் கூட நான் உன் பக்கம் யோசிக்கவே இல்லை. நம்ம ரெண்டு பேருக்கும் இடையே இருந்த தூரம் அதிகரிக்க அதிகரிக்க தான் தப்பு என் மேலயோன்னு யோசிச்சேன். நான் அன்னைக்கு உன்னை தொட்டுருக்க கூடாது. சாரி”, என்று அவன் சொன்னதும் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.
அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவள் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவனை பேச விடாமல் செய்தது. அவள் முகத்தில் இருந்த உணர்வுகளை கண்டு அவனால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளவே அவனால் முடியவில்லை. அவளை இறுக அணைக்க அவனுக்கு ஆசையாக இருந்தது.
தன்னுடைய தவிப்பை அவன் பார்வையால் வெளியிட அதை புரிந்தவளுக்கோ “ஏண்டா இப்படி தவிக்கிற? நான் எப்ப டா உன்னோட அருகாமை எனக்கு பிடிக்கலைன்னு சொன்னேன்?”, என்று அவனிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவளால் நேரடியாக அதை கேட்க முடியவில்லை.
அதே நேரம் அவன் வருந்துவது புரிய அனைத்தையும் சொல்லி விட வேண்டும் என்று எண்ணி “எனக்கு…. நீ…”, என்று ஆரம்பித்தாள்.
“அதை விடு காயு. எனக்கு சாரி கேக்கணும் போல இருந்துச்சு. அதான் கேட்டேன். எனக்கு அப்ப என்ன நடந்ததுன்னு புரியவே இல்லை. நீ கிட்ட இருக்கும் போது மட்டும் நான் நானா இருக்க மாட்டிக்கிறேன். இப்ப இந்த நிமிஷம் கூட எனக்கு உன்னை கிஸ் பண்ணனும் போல தான் இருக்கு. நீ என் கிட்ட இருந்தாலே எனக்கு அப்படித் தான் தோணுது. உன்கிட்ட மட்டும் தான் இப்படியான உணர்வுகள் வருது காயு. அதை என்னால கட்டுப் படுத்தவே முடியலை. என்னால உன்கிட்ட நடிக்க முடியலை. அதே நேரம் என்னால என்னோட உணர்வுகளை உன்கிட்ட வெளிப்படுத்தவும் முடியலை. எனக்குள்ளே செத்துட்டு இருக்கேன் டி. அன்னைக்கு
ஒரு நாள் நான் என்னோட பீலிங்க்ஸை வெளிப் படுத்துனதுக்கே நீ செத்துருவேன்னு எல்லாம் சொல்லிட்ட. அது எனக்கு எவ்வளவு வலிச்சதுன்னு உனக்கு தெரியாது காயு. இன்னொரு தடவை எனக்கு அந்த வலி வேண்டாம். உன்னோட வெறுப்பை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்லை. மாமா அத்தை வந்தா சொல்லிரு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்று விட்டான்.
போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம். நிமிர்ந்து பார்த்திருந்தால் அவளுடைய கண்ணீர் அவனுக்கு தெரிந்திருக்கும். அவளுக்கும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள ஆசை தான். அதே போல தானே அவனுக்கும் இருக்கும் என்று எல்லாம் புரிகிறது.
ஆனால் அன்று அவள் ஒன்றும் அவனைப் பிடிக்காமல் அந்த வார்த்தையை சொல்லலையே. யாராவது வந்து விடுவார்களே என்ற பயத்தில் தானே அவனை அப்படிச் சொல்லி விலக வைத்தாள். இதை எப்படி அவனுக்கு புரிய வைக்க என்று தெரியாமல் தடுமாறினாள்.
அன்று இரவு முழுவதும் அவளால் உறங்க முடியவில்லை. அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். அவன் வெளிப்படையாக உணர்த்தி சென்ற வார்த்தைகள் அவள் காதுக்குள் ரீங்காரமானது.
அதே நேரம் தன்னுடைய மனதில் என்ன இருக்கிறது என்று சொல்ல விடாமல் தடுக்குறானே என்று கோபமும் வந்தது.
“நான் எப்படி டா நீ தொடுறது எனக்கு பிடிச்சிருக்குன்னு நேரடியா சொல்ல முடியும்?”, என்று மனதுக்குள் எண்ணி மருகிக் கொண்டிருந்தாள்.
பின் திருமணம் ஆனதும் அவன் தன்னருகே தானே இருப்பான். அப்போது சொல்லிப் புரிய வைக்கலாம் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் நாட்கள் நகர்ந்தது. காயத்ரி வேலைக்கு லீவ் போட்டு விட்டதால் அவளால் தீபக்கை பார்க்க முடியவில்லை.
அதன் பின் பத்திரிக்கை அடித்து அதை கொடுக்க தீபக் வந்த போது தான் அவனைப் பார்த்தாள் காயத்ரி.
அப்போது வீட்டில் அனைவரும் இருக்க அவனை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை உபச்சாரம் அதிகமாக இருந்தது.
சிறிது நேரம் இருந்து விட்டு “நான் கிளம்புறேன் மாமா”, என்று எழுந்தான் தீபக்.
“என்ன அதுக்குள்ள கிளம்புறீங்க? நைட் சாப்பிட்டு தான் போகணும். கலா டிஃபன் செய்”, என்றார் முருகேசன்.
“இல்லை வேண்டாம் மாமா”
“அதெல்லாம் கிடையாது. நீங்க சாப்பிட்டு தான் போகணும். கலா…”
“நான் செஞ்சிட்டு தாங்க இருக்கேன். காயு, மாப்பிள்ளையை உன்னோட ரூமுக்கு அழைச்சிட்டு போய் பேசிட்டு இரு. நான் நைட் டிபன் முடிச்சிட்டு கூப்பிடுறேன்”, என்றாள் கலாவதி.