“டேய் என்னடா நெனச்சிட்டு இருக்கான் உன் சார் மொத அவன்ட்ட போன குடு” கடும் கோவத்தில் ஆதவன் ஜெயனை திட்ட ஒரு வாறு அவனுக்கு ஆதியை பற்றி தெரிந்திருக்கும் என்று யூகித்தான் ஜெயன்.
“சார் மீட்டிங்ல இருக்காரு சார் எப்ப மீட்டிங்ன்னு தெரியாது”
“நைட் 2 மணிக்கு எந்த கிறுக்கண்டா மீட்டிங் வச்சிட்டு இருக்கான்? உள்ள போய் பாரு அவன் தூங்கிருப்பான்”
“சார்… இல்ல சார்… உள்ளுக்குள்ள வர கூடாதுன்னு சார் சொல்லிருக்காரு”
“டேய் அவன் எந்த கொம்ப வச்சு முட்டுறான்னு நானும் பாக்குறேன். ஆமா ஆதி பின்னாடி உன் ஆளுங்கள ஏவி விட்ருப்பானே இன்னேரம்… எங்க இருக்கான் ஆதி?” அவன் குரலில் இருந்த இறுக்கமும் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த ஹார்ன் சத்தமும் அவனது கோவத்தை கூற உண்மையை கூற தயங்கினான் ஜெயன்.
ஜெயனின் அமைதியே அவனுக்கு உண்மை தெரியும் என்று கூற நிதானமான குரலில், “அப்ப அவன் எங்க இருக்கான்னு உனக்கு தெரியும்… சரி எங்க இருக்கான் ஆதி?”
“உதய் சார் கிட்ட பேசிட்டு சொல்றேன் சார்” என்றவன் ஆதவனிடம் பேசியபடியே உதய்யின் அறையை நோக்கி சென்றான்.
கதவிற்கு அருகில் வந்ததும் அதை தட்ட பயத்துடன் வெளியே நின்றிருக்க காதில் கத்திக்கொண்டிருந்தான் ஆதவன், “டேய் என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க என் ப்ரண்ட? மவனே நேர்ல வந்தேன் கொன்னு பொதச்சிடுவேன் உன்னயும் அவனையும். அவனுக்கு மட்டும் எதாவது ஒன்னு ஆகிருந்துச்சு இந்த ஆதவன் யாருன்னு உன் ஆளுங்களுக்கு தெரியும்” ஆதவனின் பொறுமையின்மையை பார்க்க எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை என்று உணர்ந்த ஜெயன் கைகள் தானாய் உதய்யின் கதவினை தட்டினான்.
“சார் நாங்க ஒன்னும் பண்ணல சார்… சுச்சுவேஷன் அப்டி உதய் சார் மாமா…” மாதவனுக்கு புரியவைக்கும் எண்ணத்தோடு கூற விளைய,
“மாமா என்ன பண்ணாரு?” மிடுக்காக வந்தது உதய்யின் குரல்.
ஜெயன் காதில், “அந்த ஆளு என்ன மயிரை இங்க கிளிக்கிறான்…” இன்னொரு பக்கம் ஆதவன் கத்தினான்.
இருவரில் யாருக்கு பதில் கூற வேண்டும் என்று தெரியாமல் விழிக்க அவன் கையில் இருந்த அலைபேசியை தா என்று உதய் கேட்டான். யோசிக்காமல் அவனிடம் நீட்ட அதில் இருந்த ஆதவனின் எண்ணை பார்த்து ஒரு யோசனையுடன், “இந்த நேரத்துல எதுக்குடா கால் பண்ணுன தூங்கலையா?”
அவன் கேள்வியில் பதில் கூற விருப்பம் இல்லாமல், “ஆதி எங்கடா?” என்றான் வறண்ட குரலில்.
“அவன் எங்க இருக்கான்னு எனக்கு எப்பிடிடா தெரியும்?” சிறு சிரிப்புடன் கேட்க ஆதவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது.
“செத்துட்டானா இல்ல உயிரோட இருக்கானா?”
உதய்க்கு அதுவரை இருந்த அமைதியான மனநிலை மாறி மீண்டும் வெறுமை குடிகொண்டது அந்த கட்சியை நினைத்தால் கூட இதயம் நின்று விடும் போன்ற எண்ணம்.
“ஆதவா…” பல்லை கடித்து எச்சரிக்கை செய்தான்.
“டேய் சும்மா என் பேர ஏலத்துல விடாம உனக்கு நேர்ல நிக்கிறவன்கிட்ட ஆதி எங்கன்னு கேளுடா” என்றான் எரிச்சலுடன். ஜெயனை பார்க்க அவன் விழிகளில் தயக்கமும் பயமும் குடிகொண்டிருந்தது.
“ஆதி எங்க?” ஜெயனிடம் விழுந்தது கேள்வி
“சார் ஏதோ டிரக் கேஸ்ல அவரை…” கண்களை இருக்க மூடி கோவத்தை கட்டுப்படுத்தியவன், “ஆதி எங்க?” என்றான் கண்களில் கோவத்தை தேக்கி வைத்து.
“K4 போலீஸ் ஸ்டேஷன்ல” அவ்வளவு தான் அவ்விடத்தை விட்டு தன்னுடைய அறைக்குள் மீண்டும் அடைந்தான்.
செல்லும் வழி எல்லாம் நண்பனுக்காக நண்பனிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டே சென்றான் ஆதவன், ‘ஆதி எந்த தப்பும் பன்னிருக்காதடா’
“டேய் இந்த பால் நல்லா இருக்கா பாருங்க” ஒரு அழகான பொம்மை படம் நிறைந்த கால்பந்தை எடுத்து ஆதியிடமும், உதய்யிடமும் முகத்தில் கொள்ளை இன்பத்துடன் கேட்டார் காயத்திரி, உதய்யின் அம்மா.
அவர் கையில் இருந்ததை வாங்கி பார்த்தவன், “என்ன காயத்திரி நான் என்ன இன்னும் கை சூப்பிட்டு இருக்க குழந்தையா ஹி-மேன் படம் போட்டதை எடுத்துட்டு வந்துருக்கீங்க”
“ஏண்டா இந்த பந்துல என்ன குறைய கண்டுட்ட நீயி” சுற்றமும் பார்க்காமல் அவனுடன் சண்டைக்கு வந்தார் அவர்.
அவருடைய முகத்தை பார்த்து சிரித்தவன், “என்ன குறையா? அட காயுமா இத வச்சுக்கிட்டு நா வெளிய விளையாட போனேன்னு வைங்க அப்றம் அமுட்டு பயலுகளும் என்ன சீண்டுவானுக. இதோ இங்க நிக்கிறான் பாருங்க உங்க புள்ளைக்கு வாங்கி குடுங்க” உதய்யை கை நீட்டி கூறினான்.
“ம்ம்ம் நீயும் என் புள்ள தா நியாபகத்துல வச்சுக்கோ அத” என்றவர் கண்டிப்புடன் அவனை பார்த்து முறைத்து அவனிடம் அவர் தேர்தெடுக்க பந்தினை குடுத்து வேறு பக்கம் சென்று விட்டார்.
அவரை நினைத்து சிரித்தவன் உதய்யின் புறம் திரும்ப அவன் ஆதியை தான் முறைத்து நின்றிருந்தான், “எப்பா சாமி தெரியாம சொல்லிட்டேன் ஒடனே குடும்பமே கெளம்பி வந்துறாதீங்க. போன வாரம் தான் விவேகானந்தர் (உதய்யின் அப்பா) வந்து போதிச்சிட்டு போனாரு இன்னைக்கும் அனுப்பி விற்றாத டா. தண்ணி கூட குடிக்காம மனுஷன் தம் கட்டி பேசுறாரு இப்டியே பேசிட்டு இருந்தா மனுஷன் வேகமா போய் சேந்துருவாரு சொல்லி வைங்க” என்க உதய் அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
“அறிவு கெட்டவனே எப்படி தான் இப்டி லூசா இருக்கியோ. வேற பால எடு”
“தோ பார்றா துறை சொல்லிட்டாரு இந்த பொம்மை கூட நல்லா தான் இருக்கு நான் இதையே எடுத்துக்குறேன்” என்றான் ஆதி.
அவனை உதய் முறைக்க, ‘இதுக்குமேல இங்க நின்னா கண்டு புடிச்சிடும் பயபுள்ள’ என்று காயத்திரி சென்ற திசையில் அவரை சமாதானம் செய்ய சென்றான் ஒன்றும் தெரியாதவன் போல்.
ஆனால் அவனுக்கு தெரியும் உதய் தன்னை இன்னேரம் அறிந்திருப்பான் என்று. இன்றோடு ஆதியின் தாய் தந்தை இறந்து இரண்டு மாதங்கள் ஆகிற்று. வீட்டினுள் ஒன்றரை மாதங்களாய் அடைந்து கிடந்தவனை கடந்த ஒரு வாரமாக தான் அவன் நண்பர்கள் வெளியில் இழுத்து வந்தனர். அவனது கவனத்தை முழுவதும் திசை திருப்பும் திறன் இந்த கால் பந்திற்க்கு மட்டுமே என்றறிந்து கயாத்திரியும் உதய்யும் அவனை இங்கு அழைத்து வந்தது.
இங்கு வந்தும் எந்த பொருட்களையும் வாங்காமல் இருந்தவனுக்கு தானே முன் வந்து பொருட்களை தெரிந்தெடுக்கு கொடுக்கும் பணியை செய்தார் காயத்திரி. ஆனால் அவர் எதை எடுத்தாலும் அதன் விலையை பார்த்து நிராகரித்தவன் அந்த கார்ட்டூன் பந்தை வாங்கி கொள்வதன் காரணம் அதன் விலை மலிவு என்பதால் மட்டுமே.
ஆதி சென்றதும் நல்ல கால்பந்தை எடுத்து உதய் பில் போட குடுக்க அதை ஆராய்ந்த ஆதி, “டேய் பரவால்லயே நீயும் நல்லா தான் சூஸ் பண்ற. எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்” என்றான்.
“ம்ம்ம் அப்றம் நீ அடிக்கிற அடிக்கு இது தான சரி வரும்”
சட்டென அவன் கூறியது புரிய கோவம் கண்ணை மறைத்தது ஆதிக்கு, “என்னடா இரக்கப்பட்டு பிச்சை போடுறியா?”
அவனது ஆத்திரத்தை புரிந்து நிதானமாக, “பிச்சை இல்ல இத்தனை வருஷம் எனக்காக இந்த ஒடம்பு தான ரத்தம் சிந்துச்சு அத தான் இப்டி கடன் அடக்கிறேன்” தீர்க்கமாக உதய்யை பார்த்து முறைத்து அவன் கையில் இருந்த பந்தை வாங்கி வெளியே சென்று விட்டான்.
அவன் சென்ற திசையிலேயே பார்த்து நின்ற உதய்யின் பின்னால் இருந்து வந்தது கயாத்திரியின் குரல், “டேய் உதய் இத பாரேன் உன் தம்பிகளுக்கு இது புடிக்குமான்னு?” கையில் இரண்டு பந்துடன் வந்து நின்றார் கயாத்திரி, இந்த இரண்டும் பொம்மை போட்டவையே.
அவரை பார்த்து சிரித்தவன், “மா நீங்க சின்ன புள்ளையா இல்ல அவனுக சின்ன பசங்களான்னு எனக்கு தெரியல. இப்ப எதுக்கு அவனுகளுக்கு? போன வாரம் தான அப்பா வாங்கிட்டு வந்தாங்க?”
“ம்ம்ம் எல்லாம் இந்த ஆதிய…” என்று நிறுத்தியவர் ஆதியை உதய்யின் பின்னால் தேடினார், “என்னப்பா ஆதி எங்க?”
“வெளிய நிப்பான் மா”
“ம்ம்ம்ம் அவனை சொல்லணும் நேத்து வீட்டுக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் குப்பை தொட்டிலை இருந்து தூக்கிட்டு வந்தாங்கனு ஹரி, விஷ்ணுகிட்ட சொல்லிட்டு போய்ட்டான். அந்த ரெண்டு வாண்டும் நம்பிருச்சு. ஒரே அழுகை நேத்து. நான் தான் பந்தும், கலர் கோழியும் வாங்கி தரேன்னு சொல்லி சமாளிச்சு வச்சிருக்கேன்”
ஆதியின் சேட்டையை கேட்டு வாய் விட்டு சிரித்து விட்டான் உதய். இது தான் உதய். அவனை சுற்றி என்ன நடந்தாலும் அவன் எண்ணம் முழுதும் ஆதியிடமே வந்து நிற்கும் இறுதியில். அதுவே ஆதியின் உலகிலும் விடியலும் இரவும் உதவியுடன் தான் நேரம் அனைத்தையும் செலவிடுவான்.
ஆனால் அன்று பந்தை வாங்கி சென்றவன் அடுத்து இரண்டு நாட்கள் உதய்யின் கண்ணில் படவே இல்லை. நண்பர்கள் நால்வரும் அவனை தேடாத இடம் இல்லை… தெரு தெருவாக தேடினர் அவர்கள் வழக்கமாக செல்லும் இடம் இல்லாமால் மற்ற இடங்களுக்கும் சென்றனர். சிறு வயது என்பதால் பெரியவர்களிடம் கூறும் எண்ணம் கூட எழவில்லை. ஒரு புறம் அவன் உயிரை எடுத்திருப்பானோ என்ற எண்ணம் கூட உதித்தது. ஆனால், உதய் அதில் தெளிவாக அவன் செய்திருக்க மாட்டான் என்று இருந்தான்.
நேரம் செல்ல செல்ல மனதில் பயம் எழ உதய் அவன் மாமாவிடம் அடைக்கலம் தேட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டான். அவன் நம்பிக்கையை வீணாக்காமல் அவன் இருக்கும் இடம் உதய்யின் தாய் மாமன் மூலம் உதய்க்கு நள்ளிரவில் தெரிந்தது. ஆனால் அந்த இடத்தை கேட்டு மனதில் உடைந்து போனான் உதய்.
“மாப்பிள்ளை நீ இரு… நா ஆள வச்சு கூட்டிட்டு அவன் வீட்டுல விட்றேன்” என்றார் ஈஸ்வரன்
“இல்ல மாமா நா அவனை பாக்கணும். நீங்க இடத்தை மட்டும் சொல்லுங்க” அழுத்தமாக அவன் கேட்க வேறு வழி இல்லாமல் அவனிடம் இடத்தை கூறி அவர் ஆட்களை அவனுக்கு துணைக்கு அனுப்பி வைத்தார்.
அவர் கூறிய இடத்திற்கு தனது சைக்கிள் மூலம் வந்தவன் அதை அந்த தெருவின் கோடியில் நிறுத்தி ஒரு வித அச்சத்துடன் சென்றான். முதல் முறை வருகிறான் இதுவே இறுதி முறையாக இருக்கவும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டே சென்றான். அந்த கடையை நெருங்க நெருங்க வயிற்றில் ஏதோ புரட்டுவது போன்ற பிரம்மை.
அந்த இடத்தின் வாசனை உவப்பாய் இருந்தாலும் உள்ளே தன்னை மறந்து மதுபானத்தில் மயங்க போகும் நண்பனை அதிலிருந்து விடுவிக்க ஐம்புலன்களையும் அடக்கி மெதுவாய் உள்ளே சென்றான். அவன் செல்கையில் அவனை தாண்டி சென்ற இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தள்ளாடிய நிலையிலும் உதய்யை பார்த்து உறவு காரனை பார்த்து சிரிக்கும் சிரிப்பை உதிர்க்க ஆதி மேல் அவனுக்கு கோவம் கூடியது.
உதய்க்கு ஓரளவிற்கு விவரம் தெரிந்ததுமே காயத்திரி அவனுக்கு மதுபானத்தின் வீரியத்தை கூறி இருக்கிறார். அந்த கொடிய பானத்தால் அவருடைய தந்தையின் இல்லபை எவ்வளவு வலியுடன் அவர்கள் கடக்க வேண்டி இருந்தது என்று அவனுக்கு கூறி கூறி வளர்த்ததால் அவனுக்கு அதன் மேல் பதின் பருவத்திலும் என்றும் நாட்டம் இருந்தது இல்லை. ஆனால் இன்று தெரு முழுவதும் தன்னை மறந்து ஆங்காங்கே கிடக்கும் ஆண்களை பார்க்க சிறிதும் ஜீரணிக்க இயலவில்லை.
நடுங்கிய கால்களுடன் அந்த டாஸ்மார்க் உள்ளே சென்றவன் கண்கள் அந்த களைந்து கிடந்த அரை முழுதும் நோட்டம் விட அங்கு எங்கும் ஆதி இல்லை. வேகமாக அவனுக்கு தெரிந்த கதவின் வழியில் செல்ல ஆதியின் குரல் அந்த பெரிய காலி இடத்திலிருந்து வந்தது. அரை இருளில் முழுவதும் அவன் உருவம் தெரியவில்லை என்றாலும் ஆதி தரையில் கிடப்பது தெரிந்தது. அதுவும் ஒருவனின் காலை பிடித்து கெஞ்சி கொண்டிருந்தான்.
பதட்டத்தில், “ஆதி” என்று அழைத்தான் உதய்.
உதய்யின் பேச்சு ஆதியின் காதில் விலவே இல்லை, “அண்ணா குடுங்க ண்ணா நான் எப்டி நாலும் காசு தந்துருவேன். ஆனா, அந்த செயின மட்டும் குடுத்துருங்க ண்ணா”
தான் பார்ப்பது ஆதி தானா என்ற சந்தேகம் அவனுள் வேரூன்றியது… எப்பொழுதும் வயது பாராமல் சண்டைக்கு செல்பவன் இன்று ஒருவன் காலடியில் கெஞ்சிக் கொண்டிருப்பது ஏதோ உயிரின் ஒரு பகுதியை பிசைவது போன்று இருந்தது.
வேகமாக அவனை நோக்கி சென்று அவன் தோளை புடித்து பின்னால் இழுத்தான், “டேய் ஆதி என்ன டா பண்ற நீ” என்று.
அவனை துளியும் சட்டை செய்யாமல் உதய்யின் கையில் இருந்த அவன் சைக்கிள் சாவியை பிடிங்கி அவனுக்கு எதிரில் இருந்த நபரிடம் கொடுத்து, “இந்தாங்க இததத… வச்சி…வச்சிட்டு எனக்கு அந்த செயின் தா…ங்க”
ஆதி சுத்தமாக சுயநினைவில் இல்லை… ஆனால் ஆதியின் கழுத்தில் எப்பொழுதும் இருக்கும் வெள்ளி செயின் அவன் கழுத்தில் இல்லை. அது உதய், ஆதியின் கடந்த வருட பிறந்த நாளிற்கு பரிசளித்தது. இதற்காகவா எவனோ ஒருவன் காலில் விழுந்து கிடக்கிறான்?
நண்பனின் நிலை பார்க்க முடியாமல் சினம் தலைதூக்க,“டேய் இப்ப நீ எந்திரிகல உன்ன கொன்னு போட்டுருவேன்” என்று அவனை மீண்டும் அந்த மனிதனிடமிருந்து பிரித்தெடுக்க போராடினான்.