அத்தியாயம் 20
அஜய் தன் போனை பார்த்து ஆயிரமாவது முறையாக சலித்துக் கொண்டான்.. நேற்றிலிருந்து ரூபாலி அவனுக்கு தொடர்ந்து போன் அடித்துக்கொண்டேயிருக்க.. இவன் கட்செய்துக்கொண்டிருந்தான்…
அவனுக்கு நன்றாகத் தெரியும் இந்நேரம் சிற்பிகா ரூபாலியிடம் அனைத்தையும் கூறியிருப்பாள்.. அதனால் தான் இந்த தொடர் போன் படையெடுப்பு..
அஜய்க்கு இப்பொழுது மனதில் ஏகப்பட்ட குழப்பம்.. சிற்பிகாவைப் பார்த்தால் சந்தோஷமாக வாழ்வது போலதான் தெரிகிறது.. ஆனால் அதே சமயம் அபய் சிற்பிகாவை பார்வையால் மிரட்டியது.. அவள் தோளை அழுத்தியது என அனைத்தும் நினைத்துப் பார்த்தவனுக்கு.. அபய் சிற்பிகாவை கொடுமை செய்வதாய் தோன்றியது…
என்ன செய்வது.. என தலையை பிடித்துக்கொண்டவன்.. ” டேய் அஜய் உனக்கிந்த வேலை தேவையாடா.. ஊரை சுத்துனமா நாலுபிகர சைட் அடிச்சோம்மான்னு இல்லாம.. உதவிய செய்றேன்.. காப்பாத்துறேன்னு தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுளைச்சுருக்க.. அவ புருஷன் வேற பல்கா ஒரே நேரத்துல பத்து பேர அடிக்கிற மாதிரி இருக்கான் என்னாகப்போகுதோ… நாளைக்கு சிற்பிகாவ பார்த்து அவ சந்தோஷமா இருக்காளான்னு நல்லா கேட்டு தெரிஞ்சதுக்கு அப்புறம்.. மறுபடியும் லண்டன்க்கு எஸ்ஸாகிடனும்.. ரூபாலி ராட்சசிக்கிட்ட மாட்டினோம் நம்ம நிலை கந்தரகோலம் தான்.. என தெளிவாய் ஓர் முடிவெடுத்த பிறகுதான் அவன் மனம் நிம்மதியானது…
******************
இரவு முழுதும் ஒரு பொட்டுத் தூக்கமில்லாமல்.. இருந்த சிற்பிகாவின் விழிகள் இரண்டும்.. சிவப்பேரி கிடந்தது..
இரவு கணவன் வந்து கோபப்பட்டால்க்கூட.. பொறுமையாக அஜய்யை பற்றி கூற வேண்டும்.. என நினைத்து.. அவள் காத்திருக்க.. விடிந்தும் அவன் வந்தப்பாடில்லை..
அவள் மனம் நிறைந்த துக்கத்துடன்.. கீழே சென்ற பொழுது தான்.. இரவே அபய் வெளியே சென்றது தெரியவர.. அவனவள் மொத்தமாய் சோர்ந்துவிட்டாள்..
இன்று அவள் தாயின் நினைவு நாள்.. அன்றைய தினத்தில் குறைந்தது மூன்று மணிநேரமாவது கடவுளின் சன்னதியில் அமர்ந்து.. தன் மன வேதனையை ஆற்றிக்கொள்வாள்..
ஆனால் இன்றைய பொழுது.. அபயின் நெஞ்சத்தில் சாய்ந்து.. அவளின் தாய் இறந்த முதல் இப்பொழுது வரை தான் அனுபவித்த துக்கம் பரிதவிப்பு பயம் அனைத்தையும் அவனிடத்தில் கூறி.. அவன் விரல் கொண்டு வருடும் ஸ்பரிசத்திலும்.. அவன் இடும் ஒற்றை நெற்றி முத்தத்திலும் அவள் ஆறுதல் காண காத்திருக்க அனைத்தும் கானல் நீராகி போனது..
கண்ணில் உடைப்படத் துடிக்கும் நீரையும்.. உள்ளுக்குள் பொங்கும் வேதனையையும் கஷ்டப்பட்டு அவள் விழுங்க.. அதன் கணம் தாங்காமல் தொண்டை வலித்தது… அதனைக் கண்டுகொள்ளாது கோவிலுக்கு செல்ல ஆயத்தமானாள்…. அங்கு தனக்கு காத்திருக்கும் ஆபத்தை பற்றி எதுவுமறியாது.. பெண்ணவள் நிம்மதி தேடி செல்ல.. கிடைக்க போவது என்னவோ…?
******************
பெங்களூரின் நடுநாயகமாக விளங்கும் பசவனகுடியில்.. பெங்களூரின் பண்டைய அடையாளமாக விளங்கும் நந்தி கோவில் அமைந்துள்ளது…
பண்டைய பெங்களூரு மாநகரின் புறநகரில் அமைந்துள்ள பசவனகுடியைச் சுற்றி குட்டஹள்ளி, மாவள்ளி, தாசரஹள்ளி ஆகிய இடங்கள் உள்ளன. 600 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் வாழ்ந்து வந்த விவசாயிகள், சுற்றியிருந்த விளைநிலங்களில் நிலக்கடலையைப் பயிரிட்டு வந்துள்ளனர். நிலக்கடலை வேர்ப் பிடித்து நன்றாக வளர்ந்து காய்த்து அறுவடைக்கு தயாராகிவரும் போது, இரவு நேரத்தில் யாரோ நிலக்கடலை பயிரைத் தின்று தீர்த்திருப்பதை விவசாயிகள் கண்டுணர்ந்தனர். ஆனால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் அச்சத்தில் வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்தில் இரவு நேரத்தில் நிலக்கடலையைப் பறித்து தின்பது பசவா என கன்னடத்தில் அழைக்கப்படும் நந்தி (காளை மாடு) என்பதை அறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் நந்தியிடம் முறையிட்டு, அறுவடை செய்யும் முதல் விளைச்சலை நந்திக்கு படையலிடுவதாக உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து, சில நாள்களுக்கு பின்னர் பசவனகுடியில் இருக்கும் கற்பாறை குன்றின் மேல் நந்தி சிலை காணப்பட்டுள்ளது. அது முதல் விவசாயிகள் நந்தியை பூஜித்து வழிபட தொடங்கினர். கைலாசத்தில் இருந்து வந்திறங்கிய சிவபெருமான், நந்தி உருவமெடுத்து சுயம்புவாக குன்றின் மீது தோன்றினார் என்று நம்பப்படுகிறது. நந்தி சிலை நாளுக்கு நாள் பெருத்து வருவதைத் தடுக்க முடுவெடுத்த விவசாயிகள், அந்த சிலையின் உச்சி பாகத்தில் பெரிய ஆணியை அடித்து வைத்தனர். அதன் பிறகு நந்தி சிலை வளரவில்லை என்று நம்பப்படுகிறது. அந்த ஆணி திரிசூலம் போல இன்றும் காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குள் நந்தி பெருத்திருந்தது. அதனால் பெரிய நந்தி என்றழைக்கப்படுகிறது. நந்தி சிலை 15 அடி உயரம், 24 அடி அகலம் கொண்டதாக அமைந்துள்ளது. நந்தியின் கால் பகுதியில் தாமரை ஒன்று உள்ளது. அதன் கீழ்ப் பகுதியில்தான் பெங்களூரில் பாய்ந்தோடும் ரிஷபாவதி நதியின் ஊற்று இருப்பதாக நம்பப்படுகிறது. நந்தியின் கால் பகுதியில் வீணை உள்ளது. அந்த வீணையை மீட்டி சிவபெருமானை நந்தி துதிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். நந்தியை வணங்கத் தொடங்கிய பிறகு தங்கள் நிலக்கடலை விளைச்சல் பெருகி வளம் பெற்றதாக விவசாயிகள் மகிழ்ந்திருந்தனர்.
சிற்பிகாவின் மாளிகையிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் தான் இந்த நந்தி கோவில் அமைந்துள்ளது… இன்று திங்கள் கிழமை நந்தி கோவிலில் விஷேஷ நாள் கூட.. அதனால் அஜய் அவள் இந்த கோவிலுக்கு தான் வருவாள் என அனுமாணித்து வந்திருந்தான்.. நேரம் தான் போனதே தவிர.. சிற்பிகா வந்தப்பாடில்லை.. அஜய் சலிப்பாக.. அவன் சாய்ந்திருந்த தூணின் மீது தன் சிரத்தை சிறிது மோதி… கிளம்பத்தயாராகும் போது.. சிற்பிகா கோவிலின் உள்ளே நுழைந்து அவன் எதிர்ப்பக்கம் மக்கள் அதிகம் இல்லாத இடத்தில் அமர்ந்தவள்.. பக்கவாட்டில் இருந்த தூணில் விழி மூடி தலைசாய்த்தாள்…
அஜய் சிற்பிகாவைக் கண்டு முதலில் மகிழ்ந்தாலும்.. பின் அவளை நன்றாக கூர்ந்து கவனித்தான்.. மனசோர்வால் அவளின் உடலும் சோர்ந்திருக்க.. விழிகளின் கீழேயிருந்த கருவளையம்.. அவளின் சந்தன நிறத்திற்கு எடுப்பாய் தெரிய.. பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் காட்சியளித்தாள்..
அஜயின் மனம் அவளின் நேற்றைய தோற்றத்தையும் இன்றைய தோற்றத்தையும் ஒப்பிட்டு பார்த்து.. அதில் தெரிந்த வித்தியாசத்தில் வருந்தியது… இதற்கு காரணம் அபயா இல்லை தன் வரவா என மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தியவன்.. அவளிடம் அனைத்தையும் கேட்டுவிடலாம் என அவளை நோக்கி சென்றான்…
தன் முகத்தில் படிந்த நிழலில் சிற்பிகா.. விழி திறக்க.. அஜய் அவளைப் பார்த்து சிரித்தான்.. அவளோ அவனை கோபமாய் பார்த்தாள்..
அதனை கவனியாதவன் போல்.. சிற்பி.. நீ என் மேல கோபமா இருப்பேன்னு தெரியும்.. ப்ளீஸ் இருந்தாலும் நான் சொல்றத கொஞ்சம் கேளு.. அப்போதான் நான் உனக்கு நல்லது தான் பன்றேன்னு புரியும்.. என மெதுவாக அவன் பேச்சை ஆரம்பிக்க.. அவன் தோளை வேகமாய் ஓர் கரம் திருப்பியது..
யாருடா அது என ஸ்லோ மோஷனில் திரும்பியவன்.. அங்கு பத்ரகாளியாய் நின்றிருந்த ரூபாலியைக் கண்டு திகைத்தான்…
சிற்பி நேற்று போன் செய்து பேசியதிலேயே.. ரூபாலியின் மனம் மிகவும் வேதனையுற்றது.. அவளுக்கு தெரியும் நாளை அவள் தாயின் நினைவு நாள்.. அந்நாளில் அவள் எப்படி கஷ்டப்படுவாள் என்பதும் அவள் அறிந்ததே.. அப்படியிருக்கும் போது.. அஜயும் அவளுக்கு புதிதாக பிரச்சனை கொடுப்பதை நினைத்து கோபம் கொண்டவள்.. அவனுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.. தொடர்ந்து நான்கு மணிநேரம் விட்டு விட்டு போன் செய்தும் அவன் எடுக்கவில்லை..
சிற்பிக்கு துணையாகவும்.. அஜயை ஒருவழியாக்கவும் பெங்களூர் வந்துவிட்டாள்.. விடிகாலையில் பெங்களூர் வந்தவள்.. ஹோட்டல் அறையில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு.. காலையில் சிற்பிகாவைக் கூட்டிக்கொண்டுதான் கோவிலுக்கு வந்தாள்.. வீட்டிலிருந்து அழைப்பு வந்ததால் முதலில் சிற்பிகாவை அனுப்பி வைத்து அவள் பின்னே வர.. அஜய் மாட்டிக்கொண்டான்…
அதிர்ச்சியில் ஓர் வினாடி அஜய் ஸ்தம்பித்தாலும்.. தன் பக்கத்தை கூற முற்பட்டு.. ரூபி நான்.. என்றுதான் தொடங்கியிருப்பான்.. ரூபாலி அடித்த அறையில் மறுவார்த்தை வாய்க்குள்ளேயே நின்றது..
டேய் பேசாத.. கொன்றுவேன்.. நான் உன்கிட்ட என்னடா சொன்னேன்.. சிற்பிய பத்தி இனி பேசாதேன்னு சொன்னேல.. ஆனா நீ அவ உன் காதல அக்ஸ்ப்ட் பண்ணலைன்றதுக்காக அவள பழி வாங்க வந்துருக்க.. ச்ச உன்கிட்டயிருந்து இப்படியொரு செயல நான் எதிர்பார்க்கல அஜய் என்ற ரூபாலியில் குரலில் சொல்ல முடியாதளவு வேதனையிருந்தது..
அஜய்க்கும் ரூபாலியின் வேதனையைக் கண்டு மனதுக்குள் மெல்லிய வலி தோன்றியது.. ரூபி நீ என்ன புரிஞ்சுக்கிட்டது இவ்வளவு தானா.. நான் சும்மா ஜாலிக்காக சைட் அடிச்சாலும்.. தப்பான கண்ணோட்டத்துல எந்த பொண்ணையாவது பார்த்துருக்கேனா.. என கண்களில் நிறைந்த வலியுடன் கேட்டவன்.. ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கூற.. பெண்களிருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்..
ஏன் நீரஜாவிற்கு என் மீது இவ்வளவு வன்மம்.. நான் என்ன செய்தேன்.. சிறு வயதிலிருந்து இப்பொழுது வரை தேளாய்க் கொட்டும் நீரஜாவின் குணத்தை நினைத்துப் பார்த்தாள்.. அப்பொழுதெல்லாம் சிறு பெண்.. தாய் மற்றும் மாமனின் சொல்லைக் கேட்டு இவ்வாறு நடந்துக்கொள்கிறாள் என எண்ணியது தவறோ.. அவளும் அபிராமி ராஜாங்கம் இருவரின் மறுபிம்பம்தான் என இப்பொழுது புரிகிறது… சிற்பிகா இங்கு அவள் எண்ணத்தில் இருக்க.. அஜய் மீண்டும் வாயை விட்டு ரூபாலியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான்..
சிற்பிகாவ அவ கொடுமைக்கார புருஷன்கிட்டயிருந்து காப்பாத்ததான் வந்தேன்.. வேறெந்த நோக்கமும் இல்லை.. இப்போ சொல்லு ரூபி.. நான் பண்ணது தப்பா சரியா.. என ரோஷமாக கேட்டான் அஜய்.. முன்பு ஒரு அடியோடு விட்ட ரூபாலி.. இப்போது தலைக்கேறிய கோபத்தில் பக்கத்திலிருந்த மலர் மாலையை எடுத்து.. அது நார் மாலையாக மாறும் வரை விலாசித்து தள்ளினாள்…
ரூபி.. ரூபி என்ன பண்ற.. அய்யோ வலிக்குதுடி.. ஆ…. என துள்ளிக்குதித்து அலறினான் அவன்..
அறிவுக்கெட்ட மூதேவி.. அவ ஒரு ஆளுன்னு அவ சொன்னத நம்பி இவ வாழ்க்கைய கெடுக்க வந்தியேடா.. என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருந்தா இப்போ இவ்வளவு பிரச்சனை வந்துருக்குமா.. ஏண்டா இப்படி பண்ண.. அவ ஆத்தாக்காரி தன் அக்கா பொண்ணுன்னு கூட பார்க்காம பதினாறு வயசுல இருந்தே இவள விக்கப்பார்த்தா.. இப்போ தான் இவ அதிலருந்து மீண்டிருக்கா.. அது பொருக்காம இப்போ அவ மகக்காரி ஆரம்பிக்குறாளா.. என ரூபாலி ஒரு ஆட்டம் ஆட.. இப்பொழுது அதிர்ச்சியாவது அஜயின் முறையானது..
” என்ன ரூபி சொல்ற.. ”
என்ன நொன்ன ரூபி.. எத்தனை தடவை போன் போட்டேன்… ஒரு தடவையாவது அட்டென் பண்ணி இதுதான் பிரச்சனைன்னு சொல்லலாம்ல.. என ஆதங்கமாய் கேட்ட ரூபாலி.. சிற்பியின் டீனேஜிலிருந்து பெங்களூரில் அவளை ஐந்து கோடிக்கு ஆறுமாதம் விற்க முயன்றது வரை அனைத்தும் கூற.. அஜய்க்கு பேச்சே வரவில்லை… சொந்த அக்கா மகளுக்கு யாரேனும் இவ்வளவு கொடுமை செய்வார்களா என மலைத்துப் போனான்…
சாரி ரூபி.. என்ன ஏதுன்னு தெரியாம நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.. நானே அபய் சார்க்கிட்ட பேசுறேன்.. எல்லாத்தையும் சொல்லலாம்..
ஹ்ம்ம்ம் ஆமா அஜய்.. இனிமே நான் அவங்க யாரையும் சும்மா விடுறதா இல்லை… நான் அபய் அண்ணா பத்தி சொல்லி மிரட்டியும் இப்படி பன்றாங்கன்னா.. அவங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கனும்.. இவங்கள மாதிரி ஆளுக்கெல்லாம் அபய் அண்ணா தான் சரி.. என அஜயிடம் கூறியவள்.. சிற்பிகாவைப் பார்த்தாள்..
அவள் இன்னும் தன் எண்ணச்சுழலிலே இருக்க.. அவளை உலுக்கிய ரூபாலி ” சிற்பி.. நீ கவலைப்படாத.. அபய் அண்ணாக்கிட்ட எல்லாம் சொல்லிடலாம்.. மிச்சத்தை அவர் பார்த்துப்பார்.. என தைரியமளித்தாள்..
அஜய் ” ஆமா சிற்பி… வா நான் உன் ஹஸ்பண்ட்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுறேன்.. அப்புறம் உன்னை அவர் சந்தேகப்படமாட்டார்… ” என பரிவுடன் கூறினான்..
அவன் அவ்வாறு கூறியதும்.. உடனே அவனை வெட்டும் பார்வை பார்த்த
சிற்பிகா.. என்ன சொன்ன என் புருஷன் என்னைய சந்தேகப்பட்டாரா.. அப்படின்னு யார் சொன்னா நான் சொன்னேனா.. என கோபமாய் சிற்பிகா கேட்க.. அஜய் விழித்தான்…
நீயும் நானும் ஒரே படுக்கையில இருந்தாக்கூட என் புருஷன் என்னை சந்தேகப்பட மாட்டாரு.. நீ நேத்து பேசுனதெல்லாம் பொய்னு அவருக்கும் தெரியும்.. அவரோட கோபம் எல்லாம்… நீ பேச பேச நான் உன்னைய அறையாம.. நடுங்கி வேடிக்கை பார்த்துட்டு நின்னேல அதுக்குத்தான்.. என தன் கணவனை எண்ணி கர்வமாக கூறினாள்..
நான் அப்போ அமைதியா இருந்ததுக்கு காரணம் என் ரூபிக்காகவும் அவ உன்மேல வச்சுருக்க காதலுக்காகவும் தான்.. எப்படியும் ரூபிகிட்ட நீ நேத்து பண்ணத சொன்னா… நான் கொடுக்க வேண்டிய தண்டைக்கும் ரெண்டு மடங்கா அவளே கொடுப்பா.. அதான் நான் அப்போதைக்கு அமைதியா இருந்தேன்.. என்றாள்.
சிற்பிகா அபய் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை கண்டு வியந்துக்கொண்டிருந்த அஜய்.. அடுத்து அவள் ரூபாலி தன்னை காதலிப்பதாய் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் ரூபாலியை பார்த்தான்…
ரூபி நீ என்னைய காதலிச்சியா.. என்றான் இன்னும் அதிர்ச்சி மாறாமல்..
ஆமா.. என அசால்ட்டாய் அவள் தோளைக்குலுக்க.. அடியே அப்புறம் ஏண்டி நான் காதல் சொன்னப்போ மாட்டேன்னு சொன்ன..
டேய் பக்கிப்பயலே.. அது நான் அஞ்சாவது படிக்கும் போது.. நடந்தது.. என பல்லைக் கடித்தாள்..
எத்தனாவது படிச்சா என்னடி.. காதல் காதல் தானே என அவன் வியாக்கனம் பேச.. பெண்களிருவரும் சிரித்தனர்.. அத்தனை நேரம் அங்கிருந்த கணம் மாறி.. சூழ்நிலை இலகுவானது..
மூவரும் சாமி கும்பிட்டுவிட்டு மனம் நிறைவுடன் கோவிலை விட்டு வெளியேறினர்… கோவில் வாசலில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது… அஜய் ரூபியின் கரத்தைப்பற்றிக்கொண்டு வர.. சிற்பிகா அவர்களின் முன்னே சற்று தூரத்தில் சென்றுக்கொண்டிருந்தாள்.. மக்கள் வெள்ளம் குறைய..
சிற்பிகா வாகனங்கள் வந்து செல்லும் இடத்தில் நின்று அவர்களிருவருக்காக காத்திருக்கும் நேரம்… ஓர் குண்டு பெண்மணி அவளின் மேல் விழப்போனார்.. அதேநேரம் சிற்பிகாவின் எதிர்புறத்திலிருந்து கட்டுப்பாடிழந்த கார் ஒன்று சீறிக்கொண்டு வந்தது..
ரூபாலி தான் இதை முதலில் கண்டு அதிர்ந்து சிற்பி.. என தொண்டை கிழிய கத்திக்கொண்டே அவளை நோக்கி செல்ல முயன்றாள்.. ஆனால் விதியின் சதி வென்று.. சிற்பிகாவின் மேலிருந்து அவள் உதிரத்தின் துளிகள் கொட்டத்துடங்கியது…